1. காலத்தின் இன்றியமையாமை
ஒருவினையைத் தொடங்குவதற்கும், அவ்வினை பழுத்து வருவதற்கும்,அது கனிந்து முற்றுப் பெறுவதற்கும் காலம் மிகவும் இன்றியமையாததென்பதை அனைவரும் அறிவர். அடுத்து, முயன்றாலும் ஆகுநாள் அன்றி, எடுத்த கருமங்கள் ஆகா என்பது வாக்குண்டாம் செய்யுளடி எச்செயலும் பருவத்தால் அன்றிப் பழா என்பது, அது கூறும் முடிவு. 'கண் இலான், மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே, ஆம் காலம் ஆகும், அவர்க்கு' என்று நல்வழி நவில்வதும் அதுவே.
பொருள்கருவி காலம் வினை இடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
(675)
என்று திருக்குறள், காலத்திற்கு மூன்றாவது முகாமை தருவது பற்றி முன்னரே கண்டோம்.
காலம் அறிந்தாங் கிடமறந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து மேலுந்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப்படும்.
என்பது குமர குருபர அடிகளின் நீதிநெறிவிளக்கம்.
திருக்குறளிள் 'காலம் அறிதல்' என்பது மிக நுட்பமான ஓர் அதிகாரமாக இடம் பெறுகிறது.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்
(484)
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
(485)
என்னும் குறள்களில் காலம் கருதிச் செய்தால் இவ்வுலகையும் விலைக்கு வாங்கலாம் என்பார் திருவள்ளுவப் பேராசான். ஒருவன் தக்க கருவி 'கொண்டு, காலத்தை அறிந்து செயல்படுவானாயின், உலகில் செய்வதற்குக் கடினமான வினை என்பதே ஒன்றுமில்லை.