இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
118 தமிழ் அங்காடி
- "வெற்றியே பெறுக, தோற்க,
- வீக, வீயாது வாழ்க
- பற்றுதல் அன்றி உண்டோ
- புகல் எமைப் பகர்கின்றானை” (106)
இறந்த நாள் - இருந்த நாள்
மேலும் இராமன் கூறுகிறான். தன்னைப் புகலடைந்த புறாவுக்காகத் தன் தசையை அரிந்து தந்து பின் துலைத் தட்டில் ஏறிய சிபிச் சோழனை, மக்கள் தாம் பிறந்தநாள் முதல் வாழ்த்துதல் இன்றி மறந்த நாள் உண்டோ? (இல்லை) எனவே, புகல் என வந்தவனைத் துறந்த நாளைக் காட்டிலும், அவனது வஞ்சனையால் இறக்க நேரிடின், இறந்த நாளே உயிரோடு இருந்த நாளாகும்:
- "பிறந்தநாள் தொடங்கி யாரும்
- துலைபுக்க பெரியோன் பெற்றி
- மறந்தநாள் உண்டோ? என்னைச்
- சரணென்று வாழ்கின் றானைத்
- துறந்தநாட்கு இன்று வந்து
- துன்னினான் சூழ்ச்சி யாலே
- இறந்தநாள் அன்றோ என்றும்
- இருந்தநாள் ஆவ தென்றான்” (108)
சிபி மன்னனின் சிறப்பை யாரும் மறக்கவில்லை என்பதைப் புறநானூற்றில் உள்ள-
- "கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்
- தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
- தபுதி அஞ்சிச் சீரை புக்க
- வரையா ஈகை உரவோன் மருக” (43)
- "புறவின் அல்லல் சொல்லிய......
- கோனிறை துலாஅம் புக்கோன் மருக” (39)
என்னும் பாடல்களாலும், சிலப்பதிகாரத்திலுள்ள