பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

23



அந்நிலையில் அவன் வாயிலைத் தூதுவர் வந்து அடைந்தனர். ‘கோதை சுயம்வரம்’ அது குறித்து கொற்றவனுக்கு வந்து கூற அவர்கள் காத்திருந்தனர்.

அச்செய்தியைக் காவல் காப்போர் சென்று உரைத்தனர். அவ்வளவுதான் செய்தி கேட்டு அறியவும் முயலவில்லை. அவர்களோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே “தேரில் குதிரை பூட்டுக” என்று ஆணை இட்டான். “விதர்ப்பன் நகருக்குச் செலுத்துக” என்று செய்தி கூறினான்.

வீமன் திருமகளை அவன் தன் உயிராக மதித்தான். அந்நகரை அடைந்து அதனைக் கண்டு அதன் அழகில் ஆழ்ந்தான்.

யாழிசை பாடிச் சிவனின் சீற்றத்தைத் தவிர்த்தவன் என்ற பெரும் புகழுக்கு உரியவன்; நன்மை செய்வதில் நாட்டம் உடையவன் நாரதன்; அவன் இந்திர உலகம் சென்று இந்திரனைச் சந்தித்தான். அன்று இந்திர அவை கூடியிருந்தது.

அன்று அந்த அவையில் கூட்டம் குறைவாக இருந்தது. வழக்கமாக மண்ணுலகில் இருந்து வீரமும், ஆண்மையும் மிக்க அரசர்கள் வருவது உண்டு. அன்று அரசர்கள் என்பவர்கள் யாரும் வந்திலர்.

கூட்டம் குறைவாக இருப்பதைக் கண்ட இந்திரன், “இவர்கள் நாட்டம் எங்குச் சென்று உள்ளது? ஏன் இவர்களில் யாரும் இங்கு வந்திலர்” என்று நாலும் தெரிந்த அறிஞன் ஆகிய நாரதனைக் கேட்டான்.

தவத்திற் சிறந்த முனிவனாகிய நாரதன் “வீமன் மகள் அவள் மலர்த் தாமம் பெற வேண்டிச் சென்று உள்ளனர் அரசர்கள்; அவளுக்குச் சுயம்வரம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அச்செய்தி கேட்டு அரசர்கள் அங்குச் சென்று விட்டனர்” என்று கூறினான்.