பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

செயலும் செயல் திறனும்



துன்பம் முதலிய அகப்புறத் தாக்கங்களே காரணங்கள் ஆகும். இவற்றுள்ளும் இல்லாமையென்னும் வறுமையால் ஏற்படும் துன்பமே அனைத்துக் குற்றங்களுக்கும் தலையாய காரணமாக இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

வறுமைத் துன்பம் இருவகையானது. இல்லாமல் துன்பப்படுவது; இருந்து இழந்து துன்பப்படுவது இவ்விரண்டுள்ளும் கூட இல்லாமைத் துன்பத்தைவிட இருந்து இழக்கும்துன்பமே மாந்தனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது.

ஒரு குழந்தை தன்னிடம் இல்லாத ஒரு பொருளுக்காக வருந்துவதில்லை. அதனிடம் ஒரு பொருளைக் கொடுத்து விட்டுப் பின்னர் அதை வாங்கும்பொழுது, அதன் இழப்பை அதனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அந்தப் பொருளே வேண்டுமென்று அழுகிறது; அடம் பிடிக்கிறது; சினம் கொள்கிறது. வேறு பொருள்களைக் கொடுத்தால் அவற்றைத் தூக்கி எறிகிறது. அல்லது சேதப்படுத்துகிறது. மாந்த மனம் இத்தகையதுதான்.

ஒருவர் ஒரு செயலை ஊதியத்துக்காகச் செய்ய முற்படுகிறார். (ஊதியம் என்பது பொருள், பதவி, புகழ் ஆகிய மூன்றையுமே உள்ளடக்கியது.) அச்செயலால், தமக்கு ஊதியம் வரவில்லையாயால் மனம் சோர்வடைகிறது. இனி அதைவிட இழப்பு ஏற்படுமானால் அவரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்த நிலையில் மனம் அவ்விழப்பை எவ்வகையிலேனும் ஈடுசெய்ய விரும்புகிறது. அதனால் பின்னர், தனக்கோ பிறர்க்கோ வரும் கேடுகளை எண்ணிப் பாராமல், தனக்கேற்பட்ட இழப்பைச் சரி செய்ய விரும்புகிறது. இத்தகைய நிலைதான் நம்மில் பெரும்பாலார்க்கு ஏற்படுகின்ற கோணலான போக்குக்குக் காரணமாகிறது.

நமக்கு ஏற்படுகின்ற துன்பத்தை இடர்ப்பாட்டை இழப்பை சறுக்கலை ஈடுகட்டிக் கொள்ள உடனே ஒரு வழியைக் கடைப்பிடிக்கத் துடிக்கிறோம்; விரைவுப்படுகிறோம். அந்தத் துடிப்பிலும் விரைவிலும் நாம் அச்சூழ்நிலையை வென்றெடுக்கக் கடைப்பிடிக்கப் போகும் வழி, சரியானதா - தவறானதா பழிவாங்கக் கூடியதா - குற்றம் தரக்கூடியதா என்றெல்லாம் ஆராய முற்படுவதில்லை. அதற்கென எண்ணிப் பார்க்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் பொறுமையும் அமைவும் நமக்கு இருப்பதில்லை. உடனே நமக்குட்பட்ட, அல்லது நம் நண்பர்கள் கூறுகின்ற வழியைப் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.