பக்கம்:நூறாசிரியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

163


பெரும்பாலும் மிகு காலையில் எழும்போது நிற்கும் உள்ள உணர்வே அன்றைப் பொழுது முழுவதற்கும் அடிப்படையாக அமைவதாகலின், ஒருவரைத் துயிலினின் றெழுப்புகையில் மற்றவர் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் என்னும் குறிப்பை உணர்க.

அமைய விதவி - அவரவர் பணிகளில் அமைதியுடன் உதவியாக நின்று.

இமையும் ஓயாது- இமைப் பொழுதும் ஒய்விலாது.

அடுக்களை வெம்பணி -. சமையலறையில் வெப்பம் நிறைந்த பணி.

அலர்முகத்து அலைந்து - மலர்ந்த முகத்துடன் அலைவுற்று. வெப்பம் மிகுந்த சூழலிலும் தன் மலர் முகம் வாடாது கடமையாற்றும் அவள் மனப்பாங்கை வியந்தது.

வெளிற்றி - அன்றாடம் அழுக்கடைந்த உடைகளைத் துவைத்து வெளுத்து.

பீறல் ஒட்டி - சிறு சிறு கிழிசல் அடைந்த உடைகளைத் தைத்து இணைத்து தையலை நூலால் ஒட்டுதலால் ஒட்டி எனப்பெற்றது.

சாயல் ஞான்று - சாயுங்காலப் பொழுதில், ஒளியேற்றி - விளக்கம் ஏற்றி. உண்டு உவந்து - உண்டு முடித்து அன்றாடப் பணிகளால் மனந்திரிபுறாது, எல்லாருடனும் இணைந்து மகிழ்ந்து.

பாயல் வீழ்ந்து எமைப் பற்றியோளே! - அவள் படுக்கையில் சேர்வதற்கு முன்பே தலைவன் அதில் படுத்திருந்தது, வீழ்ந்து எமைப் பற்றினாள் என்னும் குறிப்பால் உணர்த்தப் பெற்றது. தலைவனைத் தலைவி பற்றுதல் காதற்குறிப்பாய் அமைந்தது.

பற்றியோள் யாங்கு ஒய்வாளோ என்று இணைக்க

இப்பாடலைத் தலைவன், தலைவி தன்னை இராப்படுக்கையில் பற்ற வந்த நேரத்து, அவளை அன்பூற ஆறுதலுடன் அனைத்தவாறு நினைத்துக் கொண்டதாகக் கொள்க.

“நேற்று இராப்பொழுது என்னோடிருந்து, யான் தூங்கியபின் தூங்கி, வைகறையில் எனக்கு முன்னரே எழுந்து தலைவியாக நின்று, இல்லறப் பணிகளில் மலர்ந்த முகத்துடன் அலைவுற்றுத் தாயாகி என்னையும் மக்களையும் புரந்து பேணி, மீண்டும் இவ்விராப்பொழுதில், இளமைக் காலத்தின் காதல் குறையாத உள்ளத்துடன் வந்து என்தோளைப் பற்றுகின்ற இவள்தன் பணிகளுக்கிடையில் எவ்வாறு எவ்விடத்து ஒய்வாக அமர்கின்றாள்? இல்லையே” என்று வியப்போடு இரக்கமுற்றுப் பெருமிதத்துடன் அனைத்துக் கொண்டான் தலைவன் என்க.

இது முல்லைத் திணையும், கற்புக் காலத்துத் தலைவியை வியந்து தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிய தென்னுந்துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/189&oldid=1220696" இலிருந்து மீள்விக்கப்பட்டது