பக்கம்:நூறாசிரியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

109

மையெழுதியும், உள்ளத்தே எழுந்து பொங்கும் உவகை மிகுமாறு கள்ஸ்ரீம் வாயிதழ்களைக் கனியும்படி முத்தமிட்டும், கொட்டி விளையாடிய குழவியின் பூங்தைகளைச் சுழன்று எடுத்து மலரின் மொட்டுப் போன்ற உடலைத் தாங்கித் தொட்டிலிற் கிடத்தியும், நீல நிறமான கொழுமைசேர் கண்களைப் போர்த்துள்ள இதழ்ப்போலும் நனைந்த இமைகள் பொருந்தும்படி சொல்லழகும் பொருளழகும் வாய்ந்து செழுமையுற்ற தமிழில் தாலாட்டுப் பாடியும், அவ்வாறு பாடிய ஓசைமெல்ல அடங்கவும், தொட்டிலை அசைத்த கைகள் சோர்வுறவும் அழுது அரற்றிய ஈரவாயினின்று குதலை நீர் இருபுறமும் வழியுமாறு உறக்க மயக்கங் கொள்ளுகின்ற குழந்தையின் இளமையும் மென்மையும் பொருந்திய பூப்போன்ற உடலை இடையிடையே காணித்துப் பேணியும் தன் அருள் பொருந்திய விழிகளை ஆழ்ந்து உறக்கங்கொள்ளாது மூடிக்கிடக்கும் அக்குழவியின் அன்னைக்குப், போர்த்துண்ட இருளை மெதுவாகக் கழிக்கின்ற இவ்வுலகமும் இணையற்றதே !

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது. புதல்வனைப் பயந்து பாராட்டும் தலைவியின் தாய்மைத்திறம் நோக்கித் தலைவன் அவளின் தாய்மை யுணர்வுக்கு இவ்வுலகமும் ஈடாகாது என வியந்து கூறுவதாக அமைந்ததிப்பாட்டு,

தலைவியிடத்து இதுகாறும் பெண்மை நலத்தையே கண்டும் உண்டும் வந்த தலைவன், இக்கால் தாய்மை நலத்தைக்கண்டு மதித்துப் போற்றுகின்றான்.அருள்சான்ற அவளின் தாய்மைச் செவ்விக்கு இவ்வுலகம் ஈடிறந்தது எனப் போற்றும் அவன் கூற்றில், ஒரு தாய் தன் குழந்தையின்பாற் காட்டுகின்ற அன்பும் அருளும் அக்கறையும் புலப்படுவதோடு , தலைவன் தலைவியிடத்தும் தன் குழந்தையிடத்தும் செலுத்தும் ஈடுபாடும் பின்னியிருப்பதைப் பாடல் உணர்த்தும்.

அங்கா பசி வந்து அழுமிடத்துப் புனிற்றிளங்குழவி மிழற்றும் ஓர் ஒலிக்குறிப்பு மழலைச் சொல்.

அங்காத்தல் அண்ணாத்தல்-வாயை முற்றும் திறத்தல்.

குழவி தன் பசிக்குறிப்பைத் தாய்க்கு உணர்த்த அங்கா எனும் ஒலி மிழற்றித் தன் வாயை அங்காத்தல் செய்கின்றது. அங்ஙன் வாயை அங்காத்தவாறு அழும் குழவியை இருகைகளாலும் ஏந்தி எடுத்து உங்கா என ஆறுதல் மொழி கூறித் தன்மார்பை ஊட்டக் கொடுக்கின்றாள் தாயாகிய தலைவி.

உங்கா பாலுக்குத் தாய்கூறும் ஒர் ஒலிக்குறிப்புச் சொல்.

அமிழ்து உறிஞ்ச ஊட்டி தன் மார்பினின்றுாறும் பாலைக் குழவி உறிஞ்சி அருந்துமாறு ஊட்டுதல் செய்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/135&oldid=1220757" இலிருந்து மீள்விக்கப்பட்டது