387
விண்ணப்பஞ் செய்யத் தமிழ் மன்னர்கள் நிறுவிய அறக்கட்டளை (நிபந்தங்கள்) பற்றிய கல்வெட்டுச் செய்திகளால் நன்கு வலியுறுதல் காணலாம்.
புறச்சமய இருள்நீக்கித் தமிழ் மக்களது தெய்வ வழிபாட்டினை நிலை நிறுத்தும் நோக்குடன் பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையை யடைந்த திருஞான சம்பந்தர், திருஆலவாய்ப் பெருமானைப் பரவிப் போற்றும் நிலையில் அமைந்த திருப்பாடல்,
'நீலமாமிடற்று, ஆலவாயிலான்
பால தாயினார், ஞாலமாள்வரே'
என்பதாகும்.
"மன்னுயிர்கள் உய்தல் வேண்டி ஆலகாலமாகிய நஞ்சினைத் தன் மிடற்றில் அடக்கிய பேரருளாளனாகிய இறைவனது திருவருளின்வழி ஒழுகுவோரே இவ்வுலகத்தை ஆட்சி புரிவதற்கேற்ற பேராற்றல் படைத்தவர் ஆவர்" என்பது இத்திருப்பாடலின் பொருளாகும்.
இத்திருப்பாடல் பாடப் பெற்ற காலச் சூழ்நிலையினைக் கருத்திற் கொண்ட அருட்பிரகாச வள்ளலார், இப்பாடல், அயலவர் ஆட்சியுட்பட்டு அல்லற்படும் தம் காலச் சூழ்நிலைக்கும் ஏற்புடையதே எனத் தெளிந்தார். அத்தெளிவின் பயனாகத் தம் நெஞ்சத்துக்கு அறிவுறுத்தும் நிலையில் திருவொற்றியூர்ப் பெருமானைப் போற்றிப் பாடிய திருப்பதிகம், 'நெஞ்சொடு நேர்தல்' என்னும் தலைப்பில் அமைந்ததாகும். அப்பதிகத்தின் இரண்டாம் பாடல்,
ஒடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்