55
'மூணு மாசமா சம்பளப் பாக்கி நிக்குதுங்களே? பத்து ரூபாயாவது கொடுங்க!"-இது கம்பாசிட்டரின் குரல்.
'முனுசாமிக்கு நாலு மாசச் சம்பளம் நிக்குதய்யா!' அவன் வாயைத் திறந்து கேட்கிறான், பார்த்தாயா? என் குணம் தெரியும் அவனுக்கு. உனக்கு வேலை வேணுமா, பணம் வேணுமா?".
"ரெண்டும்தான்!”
"ரெண்டுக்கும் ஆசைப்பட்டா எப்படிய்யா முடியும்? ஆவட்டும் போ, நானே கூப்பிட்டுத் தரேன்!”
கம்பாசிட்டர் உள்ளே சென்றதும் பேப்பர் கடை குமாஸ்தா வந்தார். பத்திரிகை முதலாளி சுருட்டை ஊதிக் கொண்டே, "வாய்யா, ராமானுஜூலு! காப்பி சாப்பிடறயா? எங்கே இவ்வளவு தூரம்?" என்றார்.
"உங்களைப் பார்க்கத்தான்; எங்க முதலாளி பார்த்துட்டு வரச் சொன்னாரு!”
"என்னய்யா, விஷயம்? அதுதான் செக் கொடுத்துட்டேனே?"
"அதை நீங்க போடச் சொன்ன தேதிக்கு ரெண்டு நாள் கழிச்சே போட்டோம்; பாங்கிலேருந்து திரும்பி வந்துட்டுது!"
"அதான் தப்பு! அதையெல்லாம் சொன்ன டயத்துலே போட்டு வாங்கிடணும்யா! பிசினெஸ்னா அப்படித்தான். சரி' அந்தச் செக்கைக் கொண்டா, இப்படி இருநூறு ரூபாதானே? நாலு நாளில் நானே பணத்தை அனுப்பி வைக்கிறேன்!”
"மறந்துடாதீங்க!" 'மறக்கிறதாவது? நீ போய் வாய்யா!'
அன்றைய நிலைமையைச் சமாளித்துவிட்ட திருப்தியுடன், மணியார்டரில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தார் அவர்.
அப்போதுதான் அவருக்கு எதிரேபோய் நின்றான் சுந்தரம்.