தலைக்குனிவு127
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு சேகர் மனைவியின் நச்சரிப்புக்குத் தாளாதவன்போல், மிஸ்டர் பாஸ்கரன் ‘வீட்டுப் பேமிலி’யோடு போனான். ஞாயிற்றுக்கிழமை காலை, மிஸ்டர் பாஸ்கர் சனிக்கிழமை மாலையிலேயே ‘கேம்ப்’ போய்விட்டாராம். ரமா தலையை உலர்த்திப் போட்டபடி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். வலது பக்கமாய் சற்று ஒயிலாகத் தலையைச் சாய்த்து இடதுகையால் கூந்தலை ஆட்டி ஆட்டி, அவள் கேசத்தை உலர்த்திய விதத்தில் சேகர் ராட்டினத்தில் சுற்றுவதுபோல் கிறுகிறுப்பானான். அவர்களைப் பார்த்ததும் அவள் எழுந்து கூந்தலுக்கு ஒரு முடிச்சுப் போட்டாள். முடிச்சுக்குக் கீழே தொங்கிய முடிக்கற்றை ஸ்டாண்டில் பொருத்தப்பட்ட மெல்லிய ஊதுபத்தி கொத்துபோல் தோன்றின. அவை, அவள் போட்டிருந்த சிவப்பு ஜாக்கெட்டில் தொட்டு எரிந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றியது. இப்படி கூந்தலை முடிச்சுப் போட்டுவிடும் பெண்களை பின்பக்கமாக ‘டை’ கட்டுபவர்கள் என்று முன்பு கணவன் தன்னிடம் சொன்னதை நினைத்து மிஸஸ் சேகர்—அதுதான் லட்சுமி. இப்போது சிரித்தாள். ரமா... குதூகலமாகக் கூவினாள்.
“வாங்கோ! வாங்கோ!”
“அடடே... மிஸ்டர் பாஸ்கர் இல்லியா?”
“நேற்று டூர் போயிட்டார்.”
“ஏய் லட்சுமி! இதை என்கிட்டே சொல்றது என்ன?”
“சும்மா பிகு பண்ணாமல் உட்காருங்க ஸார். லட்சுமி! ஒங்களோட ‘ஹிப்பியை’ ரொம்பதான் டாமினேட் பண்ணவிட்டிருக்கீங்க.”
லட்சுமி ஏதாவது பேசினால் அது மூதேவித்தனமாக இருக்கும் என்று நினைப்பவள்போல், சேகர் எடுத்த எடுப்பிலேயே பதிலளித்தான்.
“ஒங்க வீட்ல எப்படியோ.”