இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"நீண்டநாள் செய்தி மன்றல்;
நீர்குறுக் கிடாதீர்!’ என்றே
வேண்டிய மட்டும் நீயே
விளக்கமாய்த் தாய்தந் தைக்குத்
தோன்றிடச் சொல்வாய்; உன்றன்
துயர்சொல்வாய்; கேளா விட்டால்
மீண்டிடு வீட்டை விட்டே!'
என்றனள் தமிழ மின்னாள்27
"எப்படித் தந்தை தாயை
இழந்துநான் செல்வேன்? ஊரார்
செப்பிடு பழியேற் பேனோ?
திக்கற்றுப் போமே; அன்பால்
கப்பிய குப்பன் ஊரைக்
கடந்துபட் டாளம் சென்றான்!
எப்படி எதிர்ப்பேன்? ஒன்றும்
இயலா(து)" என் றாள்பாப் பாத்தி.28
பாப்பாத்தி கையி ரண்டும்
தமிழச்சி பற்றிச் சொல்வாள்:
"காப்பாற்று வேன்நான் உன்னைக்;
கலங்காதே கோழைப் பெண்ணே!
சாப்பிடப் பிறந்த தன்றித்
தன்மானம், உரிமை காவாப்
பாப்பாக்க ளாலே பெண்கள்
பாழானார்; அடிமை யானாா்!29
11