பக்கம்:தம்ம பதம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 ☐ தம்ம பதம்

39. எவனுடைய சிந்தை (குற்றங்களால்) கலக்கமடையாமல் இருக்கிறதோ, எவனுடைய சிந்தை குழப்பமற்றுள்ளதோ, எவன் புண்ணியம் பாவம் (இரண்டையும்) பற்றிச் சிந்திப்பதில்லையோ, எவன் விழிப்புடன் உள்ளானோ, அவனுக்கு அச்சமில்லை. (7)

40. உடல் மட்கலம்போல் (உடைவதாக) உள்ளதை அறிந்து ஒருவன் தன் சித்தத்தைக் கோட்டைபோல் அரண் செய்து, அறிவு என்னும் ஆயுதத்தால் மாரனை எதிர்த்துத் தாக்க வேண்டும்; வென்ற பின்னும் அவனிடம் கவனமாயிருந்து வென்றதைக் காக்கவேண்டும். (8)

41. அந்தோ ; வெகு சீக்கிரத்தில், எரிந்து பயனற்றுப் போன சுள்ளிபோல் இந்த உடல் உணர்ச்சியற்று, வெறுக்கப்பட்டுத் தரைமீது கிடக்கும்! (9)

42. பகைவன் பகைவனுக்குச் செய்யும் தீமையைப் பார்க்கினும், நிந்திப்பவன் எதிரிக்குச் செய்யும் தீமையைப் பார்க்கினும், தவறான வழியில் திரும்பிய சித்தம் அதிகக் கேடு விளைவிக்கும். (10)

43. தாயும், தந்தையும், சுற்றத்தாரும் நமக்குச் செய்யும் உதவியைப் பார்க்கினும், நல்ல வழியில் திரும்பிய சித்தம் அதிக உதவியளிக்கும். (11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/22&oldid=1357506" இலிருந்து மீள்விக்கப்பட்டது