பக்கம்:உத்திராயணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 லா. ச. ராமாமிருதம்


முடியை அள்ளிச் செருகிக்கொண்டு சாந்தா முகத்தில் தான் இன்று முதல் முழி, வெட்டுக்கிளிபோல் லேசாக ஆகாயத்தைப் பார்த்து அஞ்சலி செய்யும் நாசி நுனியில்,குந்துமணி,மண்ணைப் பிசைந்தவன் கிள்ளியெறிந்துவிட்டதால் மூக்கு சற்று மொண்ணை. முகத்தில் வெண்ணெய் பளபளக்கிறது. அவளும் பாவம் மாற்றி மாற்றிச் சந்தனத்தை அரைத்துப் போடுகிறாள். மனமில்லாமல் மஞ்சளைப் பூசிக் கொள்கிறாள். விக்கோ-டர்மரிக் கிளியர்ஸில் அப்பப்போ வர்த்தக ஒலிபரப்பில் என்னென்ன விளம்பரம் கேட்கிறாளோ அத்தனையும் வாங்கியாகிறது. இன்று அமுங்கினாற்போல் இருந்தது. நாளைக் காலை எழுந்து கண்ணாடியில் பார்த்தால் கிளைத்திருக்கிறது: உடனே உற்சாகம், அடுத்து உடனே அயர்வு கொஞ்ச நாட்களாய் அவள் காலம் இப்படித்தான் தள்ளுகிறது. ஆயினும் பரந்த முகத்தில் பேரழகு ஒன்று உண்டு.

விடிவேளையின் அயர்த்தலில் கண்டது தோற்றம்!

இதன் தெளிந்த நிழல்தானோ?

கையை ஆட்டிவிட்டு சாந்தா இறங்கிப் போயாச்சு,

கீழ்வானத்தில் பெரிய யாகம் நடந்துகொண்டிருக்கிறது, மேகப் பாறைகள் நெகிழ்ந்து உடைந்து கரைந்து ஆஹூதியில் கவிழ்கின்றன. தழல் ஆட்டம், வான் பூரா பரவுகிறது. சூடு உரைக்கவே நானும் எழுந்து இறங்குகிறேன்.

ஏணியிலிருந்து கால் தரையிலிறங்கினதுமே 'சுருக்' பல்லுக்கிடையில் தோன்றிய சாபத்தைக் கடித்து விழுங்குகிறேன். சேகரின் உபயம் பொழுது போகவில்லை. சொல்லச் சொல்ல வேளையோடும். வேளையில்லாமலும் முள் வேலிக்கு முடிவெட்டி (அவன் முடி சொல்லச் சொல்லத் தோளில் புரள்கிறது) மீசை ஒதுக்கி, வெட்டி வீழ்த்திய முள்ளை வென்னீரடுப்புக்காக, ஏணியடியில் சுவரோரம் சேர்த்து வைத்திருக்கிறான். வெய்யிலில் காய்வதற்காகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/12&oldid=1155005" இலிருந்து மீள்விக்கப்பட்டது