பக்கம்:உத்திராயணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 லா. ச. ராமாமிருதம் 



வண்ணமே கன்னத்தில் போட்டுக்கொள்கிறாள். உண்மையிலேயே பக்தி சுபாவம் உள்ளவள்தான். அதுவும் இது போன்று நோகாமல் புண்ணியம் சம்பாதிப்பதில் பலே கெட்டிக்காரி.

காலைக்கும் மதியத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்!

இங்கேயே தெளித்தாற்போல் எட்ட எட்டத்தான் வீடுகள். மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு வீடு கட்ட இன்னும் வசதி கிட்டவில்லை, உச்சிவெய்யிலில் பூமி பாளம் பாளமாக வெடித்திருக்கிறது. தூரதூரக் கட்டடங்கள் கானலில் நடுங்குகின்றன. இதுவரை இரண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக்கொண்டாச்சு. காய்ஞ்சாச்சு, ஆனால் உடல் வாணலியாய்ப் பொரிகிறது. இனிமேல் ஈரம் பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசுதான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?

அந்தந்த நாளுக்கு அதன் போக்கை நடாத்த தேவதை உண்டோ? உண்டெனில் அவள்தான் இன்று காலை எனக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டனளோ?

சூரியனிடமிருந்து லகானை வாங்கிக்கொண்டா? பிடுங்கிக்கொண்டா? ரதத்தை அவள்தான் நடத்துகிறாளோ? இவன் பொக்கை வாயை இளித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருப்பான். ஒருவேளை, இந்த வேளைக்கு ட்யூட்டி மாறி, தேவதையே வேறோ? நமக்குத்தான் காலடி யில் இடறும் கூழாங் கல்லெல்லாம் சாமியாச்சே! அதனால்தான் வெய்யில் இப்படிக் காய்கிறதோ? இல்லை. நான் தப்பாய் நினைக்கிறேன். காயத்தானே வெய்யிலே,

வாழையடியில் ஒரே அமளி எட்டிப் பார்க்கிறேன்.

இரு கழுத்துகளும் ஒரு கழுத்தாய்ப் பின்னிக்கொண்டு ஈருடல் இரு தலையில் ஒரு புதுப்பட்சியை உருவாக்கிக் கொண்டு இரு வான்கோழிகள் சண்டையில் உருள்கின்றன. கழுத்துகளை லேசில் விடுவித்துக்கொள்ள முடியவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/16&oldid=1148974" இலிருந்து மீள்விக்கப்பட்டது