பாற்கடல்
9
“என்னமாதிரி கதை வேண்டும்? எத்தனை பக்கங்களில்? ரெடி...”
செருப்புக்கேற்றபடி காலை வெட்டு.
வாரப் பத்திரிகைகள் மலிந்துவிட்டன. (விலை அல்ல) ஒவ்வொன்றில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தொடர்கதை, தவிர மாதப் புத்தகங்கள். வாராவாரம் விமர்சனக் கடிதங்களுக்கு வாசகர்களுக்கு இடம். கேள்வி பதில் என்கிற முறையில் வேறு வாசகர்கள். தங்கள் அபிப்ராயங்களை விசிறிக்கொள்ள வழி.
இது சாக்கில் எனக்கொரு கதை ஞாபகம் வருகிறது. கதையல்ல குடும்ப சம்பவம்தான்.
என் சிறிய பாட்டனார் மகன், எனக்கு ஒன்று விட்ட சித்தப்பா முறை ஆகிறது அல்லவா? செல்வ மகன். செல்ல மகன். புத்திசாலி; ஆனால் படிப்பு ஏறவில்லை. படிக்கவில்லை, ஏறவில்லை அவ்வளவு தான். அந்த நாளிலேயே அடங்காத பிள்ளை என்று பேர் வாங்கிவிட்டார். ஆனால் இன்றைய நடப்புக்குச் சித்தப்பாவைக் கோயிலில் வைத்துக் கும்பிடவேணும். நிற்க,
அந்த நாளில் இம்பொஸிஷன் என்று ஒரு தண்டனை உண்டு.
"வகுப்பு நேரத்தில் பக்கத்துப் பையன்களுடன் இனிப் பேசமாட்டேன்." நாற்பது தடவை. மறுநாள் வாத்தியாரிடம் காண்பித்தாக வேண்டும்.
ஒரு சமயம் (எத்தனையோ சமயங்களில் ஒன்று) வாத்தியார் வீட்டுக் கணக்கை இனி தவறாமல் செய்து