தாவரங்கள்
539
இகன் முகை விரிந்தால் இதழ்கள் வட்டமாக நல்ல வெண்மையுடன் பால் பெய்த வட்டக் கிண்ணத்தை ஒத்திருக்கும் என்பார் கயமனார்.
“. . . . . . . . . . . .பேரிலைப்
பகன்றை வால்மலர் பனிநிறைந் ததுபோல
பால்பெய் வள்ளம் சால்கை பற்றி”-அகநா. 219 : 3-5
மேலும், இப்பூ வெண்மையான புத்தாடைக்கு உவமிக்கப்படுகிறது.
“போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்று மடிகலிங்கம் உடீஇ”-புறநா. 393 : 18-19
இவ்வாறு எல்லாம் கூறப்படும் பகன்றைப்பூ நறுமணமில்லாதது. மேலும், கடுங்கள்ளின் அறுமணம் போன்று மூக்கை அறுக்கும் மணத்தை உடையது இப்பூ. இதனை ‘மணமிலகமழும்’ என்று மிக நயமாகக் கழார்க்கீரன் கூறுவார்.
“. . . . பகன்றைப் பொதியவிழ் வான்பூ.
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்”-குறுந் 330 : 4-5
நறுமணமின்மையால் சூடப்படாமல் விடுக்கப்பட்டமையின், இப்பூவைப் பிறர்க்கு ஒன்று ஈயாது வீழும் உயிரினத்திற்கு ஒப்பிடுகின்றார் புலவர் ஔவையார்.
“பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே”-புறநா: 235 : 18-19
இருப்பினும், இதன் மிக வெள்ளிய நிறங்கருதிப் போலும் கள் விற்கும் மகளிர் இதனைக் கண்ணியாகச் சூடிக் கொள்வர் என்று கூறும் மலைபடுகடாம்.
“பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்”-மலைபடு. 459
நறுமணங் கமழாத இம்மலரையும் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் சேர்த்துள்ளார் .
“பகன்றைப் பலாசம் பல்பூம் பிண்டி” -குறிஞ். 88
பகன்றை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae) பாலிமோனியேலீஸ் (Polymoniales) |