வெட்சி
இக்சோரா காக்சினியா (Ixora coccinea, Linn.)
புறத்திணை இலக்கணம் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியனார், அகத்திணைகட்குரிய புறத்திணைகளை ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ (தொல். புறத். 2:1) எனத் தொடங்கி ஏழு புறத்தினைகளை வகுத்துரைத்தார். பிற்காலத்தில் இவை பன்னிரண்டாயின. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஒதுக்கியவை போக புறத்திணை ஒழுக்கங்களும் அவற்றிற்குரிய பூக்களும் எட்டாகக் கூறப்படுகின்றன. இவற்றைப் பட்டியலிட்டுக் காண்போம்.
எண். | அகத்திணை | புறத்திணை | புறத்திணை ஒழுக்கம் | சூடும் பூ |
1. | குறிஞ்சி | வெட்சி | ஆநிரை கவர்தல் | வெட்சி |
2. | „ | கரந்தை | ஆநிரைகளை மீட்டல் | கரந்தை |
3. | முல்லை | வஞ்சி | போருக்கு முனைந்து எழுதல் | வஞ்சி |
4. | பெருந்திணை | காஞ்சி | தாக்கியோரை எதிர்த்தல் | காஞ்சி |
5. | மருதம் | உழிஞை | முற்றுகையிடல் | உழிஞை |
6. | „ | நொச்சி | முற்றுகையைத் தகர்த்தல் | நொச்சி |
7. | நெய்தல் | தும்பை | கைகலந்து போரிடல் | தும்பை |
8. | பாலை | வாகை | வெற்றி | வாகை |
தும்பைப் பூவைப் போர் நிலைக்கேற்ப வெட்சிப்புறத்துத் தும்பை, வஞ்சிப்புறத்துத் தும்பை, உழிஞைப் புறத்துத் தும்பை என்று பிரித்து உரை கூறுகின்றார் நச்சினார்க்கினியர்.
இனி, புறத்திணை மலர்களைத் தரும் தாவரங்களை முறைப்படி ஒவ்வொன்றாகக் காணலாம்.
‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ என்று கூறும் தொல்காப்பியம் (புறத். 2:1) பகை அரசரது ஆநிரையைக் கவரும்