பக்கம்:புது வெளிச்சம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வம் எனும் அந்த மகத்தான சக்தி பொருளில் இருந்தது போலவே அறிவில் இருக்கிறார்; அவருடைய இல்லமும் அதுவே. ஆயினும் அறிவு அவரை முழுமையாக அறிந்து கொள்வதில்லை; கூடாத ஆசைகள், கோபதாபம், மயக்கநிலைகள் குணங்களாகக் கூடியுள்ள அறிவு அவரை அறிந்துகொள்ள இயலாது. தெளிந்த அறிவுக்குள்ளிருந்துதான் அவர் அந்த அறிவை ஆள்பவராகிறார். அவர்தான் ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்.

இன்னும் ஒரு உபநிசத்தை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். சிந்தித்து தெளிந்து ஓர்ந்துகொள்.

எதை நீ உன் கண்ணால் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் உன் கண்கள் பார்க்கப்படுகின்றதோ, அது பிரம்மம் என்று அறி. எதை 'இது பிரம்மம்' என்று சுட்டிக்காட்டி உபாசிக்கப் படுகிறதோ அது பிரம்மம் அன்று என்கிறது மேலும் ஒருஉபநிசத்.

இதிலிருந்து என்ன புலப்படுகிறது கடவுள் கண்ணால் பார்க்கப்படும் எந்த ஒரு பொருளும் அல்ல.

மனிதனுக்கு இன்றியமையாதனவாய் இயற்கையாக அமைந்துள்ள கண், காது, மூக்கு, வாய் உடல் (பஞ்சேந்திரியங்கள்) எனும் ஐந்தும் வெளிநோக்குடையவையாய் இருக்கின்றன. அதனால் நாம் வெளித்தோற்றங்களையே பார்ப்பவர்களாகியிருக்கிறோம். நம்மில் யாரோ ஒருசிலர் 'நான் நான்' என்று சதா சொல்லிக்கொண்டிருக்கும் அந்த நான் என்பது என்ன? அது எத்தகையது என்று கேள்வி கேட்டுக்கொண்டு உள் முகமாய்ப் பார்த்து அறிந்து கொள்கிறான். அந்த 'நான்' உடலுமல்ல உயிருமல்ல; இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டது. இந்த உடலும், உயிரும் அந்த நான் எனும் ஆத்மாவுக்காகவே உள்ளன. எனவே அழியக்கூடிய உடலுக்காகவும் உயிருக்காகவும் நான் வாழக்கூடாது. நான் அந்த ஆத்மா - அழியாத தெய்வசக்தியாய் உள்ளேன். அதற்காகவே வாழவேண்டும் என அறிபவனாகிறான்.

மனிதப் பிறப்பு மகத்தான பிறப்பு; இந்த என் உயிரோடு கூடிய உடல், "நான்" எனும் தெய்வத்திற்காக உள்ளது. இது ஒரு தெய்வ சந்நிதானம். தெய்வமாகிய நான் ஒரளவு காலம் இதில்

புது வெளிச்சம்

ᗍ 7