பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ரசிகமணி டிகேசி


தாளமும் யாப்பும் தெரிகிறதுதான். ஆனால் எப்படியோ கல்தச்சன் வந்து காதில் வேலை செய்கிற மாதிரிதான் இருக்கிறது. தமிழிலோ தாளமும் யாப்பும் (சாமானிய விஷயங்களை) மாத்திரம் அல்ல இசைப்பண்பே காதுக்குத் தென்பட்டு விடுகிறது. தமிழ்ப் பாஷையும் செய்யுளும் இசையோடு ஒட்டிக் கிடப்பதால் பாட்டு இயல்பான முறையில் நடக்கிறது. நமக்கு சுகத்தை விளைவிக்கிறது. ஆனாலும் ஒன்று தமிழ் எவ்வளவு பயின்றிருந்த போதிலும் அயலார் (ஆங்கிலேயர்தான்) தமிழை அனுபவித்தோம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. சரிதான். நம்மவர்கள் ஆங்கிலக் கவியை அனுபவித்தோம் என்று சொல்லுகிறது. மயிலைத் தடவிப் பார்த்துவிட்டு "அடடா எவ்வளவு அழகாயிருக்கிறது” என்று குருடன் சொல்லுகிற கணக்குத்தான். நம்மவர்களுக்கு, நாம் குருடர்தான் என்று சொல்லிக்கொள்ள மனமில்லை. ஆங்கிலேயனும் நம்மைப் பார்த்து எல்லாம் குருடுதான் என்று சொல்லிவிட்டால் காரியம் கெட்டுப் போகுமே என்று பயப்படுகிறான். இது நம்முடைய துர் அதிர்ஷ்டம்.

ஜனவரி முதல் தேதி அன்று சிதம்பரத்தில் இருக்க நேர்ந்தது. அங்குள்ள நண்பர் கம்பராமாயண வாசிப்புக்கு இடம் பண்ணினார். வக்கீல்கள் புரோபஸர்கள் பலர் வந்திருந்தார்கள். மற்ற ஆடவரும் பெண்டிருமாக மொத்தம் முப்பது பேர். இடம் சதுரத் தொட்டிக் கட்டு. வட்டத்தொட்டியில் வாசிக்கிறது போல இருபது பாட்டு வாசித்தோம். எல்லாருக்கும் ஒரே வியப்புதான். இப்படியும் இலக்கியம் உண்டா என்று வியந்தார்கள். இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிற்றே என்றும் ஏமாற்றத்தை உற்சாகமாக வெளியிட்டார்கள். மறுநாளும் வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி என் பயணத்தை ஒற்றி வைத்தார்கள். மறுநாளும் வாசித்தேன். முந்திநாளை விட அதிகமாகவே