பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

23

கொண்டு அருணகிரியும் ஒரு வாரம் எங்களுடன் இருக்கட்டுமே,” என்று சம்மதம் கேட்டார்.

அருணகிரியும், ‘அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாளோ,’ என்று ஆவலோடு தன் தாயின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வை அவளை நோக்கிக் கெஞ்சுவது போலிருந்தது.

பாவம் அருணகிரியும் இப்படி யார் கூட இருந்திருக்கிறான். அவனும் ஆசைப்படுகிறான் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தாள்.

வள்ளி மறுத்துப் பேசாமல் தலையசைத்தாள். பாபுக்கு ஒரே மகிழ்ச்சி. அருணகிரிக்கு தன் அம்மா இப்படி உடனே சம்மதித்தது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும இருந்தாலும்: அந்த மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் நிலைக்கவில்லை.

பாபுவோடு சேர்ந்திருப்பதில் உள்ள மகிழ்ச்சியை விட- தன் தாயைத் தனியே அனுப்புவது அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

அம்மா பஸ்ஸையோ வண்டியையோ பிடித்து ஊர் போய்ச் சேர்வதற்குள் இருட்டினாலும் இருட்டிவிடும். அப்பா மீட்டிங் முடிந்து வந்ததும், என்னை எங்கே என்று கேட்பார். இதற்காக அம்மாவை ஒருவேளை கோபித்தாலும் கோபிக்கலாம்-என்றெல்லாம் எண்ணிப் பார்த்தபோது அருணகிரிக்கு, “நான் வரவில்லை!” என்று சொல்லி விட்டு அம்மாவுடனேயே போய் விடலாம் என்றே ஒரு தடவை தோன்றியது