பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இலங்கு பூண் மார்பிற்
கணவனை இழந்து
சிலம்பின் வென்ற
சேயிழை நங்கை
கொங் கைப் பூசல்
கொடிதோ வன்றெனப்
பொங்கேரி வானவன்
தொழுதனர் ஏத்தினர்.’

தாங்கள் துன்பமுறும்பொழுது, கண்ணகியின் கொள்கை,நியாயம் என்பதை உணர்ந்து அவர்கள் நகரம் பற்றி எரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்: அக்கினிக் கடவுளை வணங்குகிறார்கள்.

அறத்திற்காகப் போராடி உயிர் நீத்த கண்ணகியை சேர நாட்டின் குறவர்கள் போற்றுகிறார்கள். அவர்களது வாழ்க்கையும், பண்பாடும் காவியத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. வீரபத்தினிக்குக் கோவில் கட்டி வழிபட்ட சேரன் செங்குட்டுவனது வெற்றி வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது. இவ்வாறு அக்காலத்திய தமிழ் நாட்டு வாழ்க்கையின் கண்ணாடியாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது.

பதிகத்தில் கூறிய மூன்று நோக்கங்களும், இப்பொது நோக்கத்துக்கு உட்பட்டவையே. அவற்றை மட்டும் காவியத்தின் நோக்கமாகக் கொள்வது காவியத்தின் முழுமையான நோக்கத்தைக் காண்பதாகாது. காவியத்தின் முழுமையான நோக்கம் தமிழகத்தின் வாழ்க்கை முழுவதையும், சித்திரமாகத் தீட்டிக் காட்டுவதே ஆகும். சிலப்பதிகாரத்தைப் பற்றி இளங்கோவடிகள் கருத்து இதுவே.


95