123
12. ஒரு துளி விஷம்
செங்கமலத்தின் தாயார், பாலுவின் சித்தி என்னால் இதை நம்பவே முடியவில்லை. ஆனால் சம்பவம் கதையில் நடக்கவில்லையாதலால், நம்பத்தான் வேண்டியிருந்தது.
சித்தியின் அலங்கோலத்தைக் கண்டோ என்னவோ, பாலு ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டான்.
தன்னையே வைத்த கண் வாங்காமல் அவன் பார்ப்பதைக் கண்ட சித்தி புன்னகையுடன், “என்னடா, செளக்கியமா?’ என்று கேட்கிறேன், பேசாமல் நிற்கிறாயே!” என்று மறுபடியும் கேட்டாள்.
அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை; நின்றது நின்றபடி நின்றான்.
செங்கமலத்தின் தாயார் என்னை நோக்கி, ‘இவன் சின்னஞ் சிறுவனாயிருந்த போது, அவர் இவனை அடிக்கடி எங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார். சில சமயம் எங்கள் வீட்டிலேயே இவன் ஒரு வாரம், இரண்டு வாரங் கூடத் தங்கி விடுவான். அப்போதெல்லாம் இவனுக்கு நான் சூத்திரச்சி என்றும், இவனுடைய அப்பா பிராமணரென்றும் தெரியாது. ஆகவே, எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் என்னுடன் பழகுவான். செங்கமலம் இவனைப் பார்த்துவிட்டால் போதும்; ‘அண்ணா, அண்ணா!’ என்று வாய் ஓயாமல் அடித்துக் கொள்வாள். இவனும் அப்படித்தான்; எங்கள் வீட்டுக்கு வந்தால் செங்கமலத்தை விட்டு ஒரு நிமிஷங்கூடப் பிரிந்திருக்க