பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 தமிழர் நாட்டுப் பாடல்கள் கலாம், அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம். இவையாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக்கடவுளரின் சிவன், நாராயணன் முதலியோரை பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும், அவர்கள் வீர சைவர் களோ, வவீர வைணவர்களோ அல்ல. லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்காலம் முதல் தமிழ் நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமரமக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத

வணக்கமாக இருக்கலாம்.

பெளத்த, சமணச் சிறு தேவதைகளும் அம்மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியவையாயின. ஆனால் அவை உருமாறி இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று. வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலை களை அகற்றி விட்டுப் பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக் கூற்றை மெய்ப்பிக்கும் சான்று. 'சாஸ்தா சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெய ரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்கு பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம். பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்க ளால் கருதப்படவில்லை. மனிதனைவிடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லு வதுபோல சத்தியலோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சக்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள். இத்தொகுப்பில் சில தெய்வ வணக்கப் பாடல்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அவற்றின் முன்னுரையில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.