பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

53

மழையே வரவில்லை என்றால் அதற்காக 'மழையே வருக’, ‘மழையே வருக' - என்று மந்திரம் ஓதிக் கொண்டிருந்தால், மழை வந்துவிடுமா? இதெல்லாம் உண்மையா? இதெல்லாம் நடக்குமா? - அப்படியிருந்தால் எத்தனை விளைவுகளை இந்த உலகத்திலே உருவாக்கிக் கொள்ள முடியும்

தெய்வ நம்பிக்கையும் இனவிடுதலைக்குப் பயன்பட்டுவிடாது:

அங்கிருக்கின்ற தமிழினம் - தமிழீழத்திலே அழிக்கப்படுகின்றபோது, அவர்களெல்லாம் 'தமிழ் மக்களே அழிந்து போங்கள்' - என்றா சொல்லிக் கொண்டிருப்பார்கள், 'கடவுளே காப்பாற்று' எங்களையெல்லாம். 'காப்பாற்று' என்றுதான் கையைப் பிசைந்து கொண்டிருப்பார்கள். அல்லது கோயிலிலே இருக்கின்ற மணிகள் எல்லாம் எரிந்துபோக வேண்டும் என்றா ஆட்டிக் கொண்டிருப்பார்கள். 'ஐயோ, தெய்வமே! எங்களைக் காப்பாற்று' என்றுதான் அலறிக் கொண்டிருப்பார்கள். ஏன் அவர்கள் காப்பாற்றப்படவில்லை? எண்ணிப் பார்க்கவேண்டும். வெறும் தெய்வ இயல் கூறுகளால் மட்டுமே இந்த உலகியலிலே பலவகையான செயல்களைச் செய்து விளைவித்து விடமுடியாது. (தெய்வ இயல் என்பது) ஏதோ ஒரு மாந்த நிலையிலே, உயிரியல் தன்மையிலே, ஒரு வலுவான உணர்வைத் தருகிறது. என்றாலும்,ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது என்றாலும், ஒர் உறுதிப்பாட்டை நமக்கு விளைவிக்கிறது என்று சொன்னாலும், அதுவே நம் செயலுக்குப் பயன்பட்டு விடும் என்று சொல்லிவிட முடியாது- என்பதை அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலேகூட விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் வேறு எப்பொழுது விளங்கிக் கொள்வார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/63&oldid=1163406" இலிருந்து மீள்விக்கப்பட்டது