பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

189


“அதுகூட வேண்டாம். நிறுத்திப்பிடு...என் பேப்பர்லியே நான் இராஜிநாமா பண்ணினேன்னு நீ நியூஸ் போட்டு ஊர் உலகத்துக்கு அனுப்ப வேணாம். ‘மேக்அப்’– ஆனவரை விட்டுட்டு ஆபீஸை க்ளோஸ் பண்ணி கம்பாஸிடர்– மெஷின்மேன், ஃபோர்மேன்– எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடு...”

“சரி சார்...!”

கமலக்கண்ணன் ஃபோனை வைத்தார். விரக்தியின் எல்லையில் ஒர் பயங்கர நாச வேலைக்காரனுடைய மனப்பான்மை இருந்தது அவருக்கு. இந்த விநாடி வரை ஒரு ஏழாந்தர எட்டாந்தரத் தொண்டன் கூட அவருக்கு ஃபோன் செய்து அவரது இராஜிநாமாவுக்காக வருந்தவோ, இரங்கவோ இல்லை என்பது அவருக்கு ஏக்கத்தை அளித்தது. ஒரு பதவியை அடையும் போது அனுதாபமும் ஆதரவும் காட்டுகிறவர்களின் துணை இல்லாமல் கூட அடையலாம். ஆனால் விலகும் போது அனுதாபமும் ஆதரவும் இல்லாத நிர்த்தாட்சண்யத்துக்கு இடையே விலகுவது மிகமிகப் பரிதாபகரமானது. அந்தப் பரிதாபத்தை உலகுக்கு மறைக்க அவர் ஆத்திரமாகவும் விரக்தியாகவும் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் அவர் மனத்தில் நிரம்பியிருந்ததென்னவோ வேதனையும் புழுக்கமும் தான். கோடீஸ்வரனாகவும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேண்டிய ஆள்கட்டுள்ளவனாகவும் இருந்த தான் ஏன் இந்தப் பதவிக்குப் போய் இப்படிச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டோம் என்று நினைப்பதற்கே வேதனையாயிருந்தது அவருக்கு.

எடுத்ததற்கெல்லாம் தேடி வந்து கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு நிற்கும் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் கூட அன்று தேடி வரவில்லை. வேண்டுமென்றே யாவரும் தன்னைத் தேடிவராமல் புறக்கணிப்பது போலக் கமலக்கண்ணனுக்கு அன்று ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/191&oldid=1049518" இலிருந்து மீள்விக்கப்பட்டது