டாக்டர். மா. இராசமாணிக்கனார்
347
சோழர் - தெலுங்கர் உறவு: வீரசோமேசுவரன் பாண்டியனை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதால், இராசேந்திரன் ஹொய்சளர்க்குப் பகைவரான தெலுங்குச் சோடரை நட்புக் கொண்டான். அக்காலத்தில் நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோடர் வன்மை மிக்கிருந்தனர். அவரது ஆட்சி நெல்லூர் முதல் செங்கற்பட்டு வரை பரவி இருந்தது. அவர்கள் நீண்டகாலமாகச் சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசராக இருந்தவர்கள். திக்கன் என்ற கண்டகோபாலன் என்பவன் அப்பொழுது இருந்த சோழ அரசன் ஆவன். இவன் சாம்புவராயர், சேதியராயர், காடவராயர்களை வென்று தன் பேரரசை ஒப்புக்கொள்ளச் செய்தவன்; இவ்வெற்றியால் கோப்பெருஞ் சிங்கன் சூழ்ச்சிகளை ஒடுக்கினவன். இவன் தொண்டை மண்டலத்தில் பெரும் பகுதியைச் சோழப் பேரரசிற்கு அடங்கியே ஆண்டு வந்தான்.[1] இங்ஙனம் பாண்டியற்கு ஹொய்சளன் உதவியாக இருந்தாற்போலச் சோழற்குத் தெலுங்குச் சோடன் உதவியாக இருந்தான்.
சோழ பாண்டியர் போர் : இராசராசன் ஆட்சியில் இருமுறை சுந்தரபாண்டியன் படையெடுத்துவந்து சோணாட்டை அலைக்கழித்து அவமானப்படுத்தியதற்குப் பழி வாங்கத் துணிந்த இராசேந்திரன், தெலுங்கர் நட்பைப் பெற்ற பிறகு, பாண்டி நாட்டின்மீது படையெடுத்தான்; வலியற்ற இரண்டாம் சுந்தரபாண்டியனை வென்றான்: அவனது முடியைக் கைப்பற்றி இராசராசனிடம் தந்து பாண்டி நாட்டைக் கொள்ளையடித்தான். ஆனால் இந்த வெற்றி மூன்று ஆண்டுகளே நிலைத்திருந்தது.[2] அதற்குள் வீரசோமேசுவரன் சோழனைத் தாக்கிப் போரில் முறியடித்தான்; மற்றொரு பக்கம் கோப்பெருஞ் சிங்கன் சோழனைத் தாக்கினான். இந்த இருவரையும் சோழன் நண்பனான கண்டகோபாலன் தாக்கினான். இவர்