இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ். ஆறுமுகம்
39
ஆம்; அதோ பூபாலன் அழகாக உடை உடுத்துக் கொண்டு வந்து வணக்கம் சொல்கிறானே! என்ன விந்தை இது? அவன் எப்படி இவ்வளவு அற்புதமாக ‘பார்’ விளையாடுகிறான்? ஆஹா, அவனுடைய கழுத்தில் எவ்வளவு உரிமையோடு அந்த நாய்க்குட்டி பின்னிப் பிணைந்திருக்கிறது?
பூபாலன் அதிர்ஷ்டமே, அதிர்ஷ்டம்!
மக்களின் ஆரவாரம் மிகுந்தது; ஒரே கை தட்டல்.
ஆனால், மறுகணம்...?
நாய்க்குட்டியுடன் ‘பார்’ விளையாடிக் கொண்டிருந்த பூபாலன் அப்படியே ‘தொபுகடீர்’ என்று தாவிப் பாய்ந்தான்.
காம்பவுண்ட் சுவரைத்தாண்டி நின்ற அந்த லாரியில் அவன் நாய்க்குட்டியுடன் விழுந்தான்.
அதே சமயத்தில்...
‘டுமீல், டுமீல்!’ என்ற வெடிச் சத்தம் திக்கெட்டும் பரவியது!