பல்லவர் வரலாறு/17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882)

விக்கிமூலம் இலிருந்து

17. பிற்பட்ட பல்லவர்
(கி.பி. 850 – 882)

நிருபதுங்கவர்மன்

நிருபதுங்கவர்மன் மூன்றாம் நந்திவர்மனுக்கு மகன். இவன் இரட்டிரகூட அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்கா என்பவளுக்கும் மூன்றாம் நந்திவர்மனுக்கு பிறந்தவன் ஆதலின். பாட்டன் பெயரைப் பெற்றவன். இவன் சற்றேறக்குறையக் கி.பி. 850 இல் பட்டம் பெற்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆண்டான்.

பல்லவர்-பாண்டியர் போர் 1

நிருபதுங்கவர்மன் காலத்தில் பாண்யராக இருவர் இருந்தனர். முதல் அரசன் சென்ற பகுதியிற் கூறப்பட்ட சீமாறன் சீவல்லபன் (கி.பி.830 - 862) அவனுக்குப் பின் அவன் மகனான இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 862 முதல் 880 வரை அரசாண்டான். எனவே, நிருபதுங்கள் காலத்தின் முற்பகுதியில் சீமாறனும், பிற்பகுதியில் வரகுணனும் பாண்டி மன்னராக இருந்தனர் என்பது நினைவுகூர்தற்குரியது. சீமாறன் தெள்ளாற்றுப்போரில் தோல்வியுற்ற பிறகு பல ஆண்டுகள் கழித்துத்தான் குட மூக்கில் (கும்பகோணத்தில்) பல்லவரையும் அவருக்குத் துணையாக வந்த வரையும் வென்றதாகக் கூறியுள்ளார்கள். நிருபதுங்க பல்லவன் பாகூர்ப் பட்டயத்தில் ‘பாண்டியனிடம் முன் தோல்வியுற்ற பல்லவர் படை, அரசன் அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) அவனையும் பிறரையும் அரிசில் ஆற்றங்கரையில் முறியடித்தது’ என்பது காணப்படுகிறது. இவ் விரண்டையும் ஒப்புநோக்கி ஆராயின். (1) பாண்டியன் மூன்றாம் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் அல்லது நிருபதுங்கன் ஆட்சித் தொடக்கத்தில் பல்லவரைக் குடமுக்கில் வென்று இருத்தல் வேண்டும். (2) பிறகு நிருபதுங்கன் பெரும் படையுடன் சென்று அரிசில் ஆற்றங்கரையில் சீமாறனை வென்றிருத்தல் மீண்டும் என்பன நன்கு விளங்கும்.

குடமூக்குப் போர்

மூன்றாம் நந்திவர்மன் பாண்டியநாட்டு எல்லைவரை சென்றதாக முன்பகுதியிற் கூறினோம் அல்லவா? பல ஆண்டுகட்குப்பின் அந்த இழிவை நீக்க, சீமாறன் பெரும் படை திரட்டிப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்திருத்தல் வேண்டும். அப்போது நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்ற பாண்டியனை எளியனாக எண்ணி, தான் போகாமல், பாண்டியனை எதிர்க்கும்படி தன் சேனைத்தலை வனையே படையுடன் அனுப்பி இருக்கலாம். அப்பொழுது நடந்த குடமூக்குப் போரில் பல்லவர் படைதோற்று மீண்டிருக்கலாம். இந்த

வெற்றியைப் பாண்டியன் பட்டயம் கூறுகிறது போலும்! இப் போரி கங்க அரசனான பூதுகனும் பல்லவன் சார்பில் நின்று தோற்றான்.[1]

பல்லவர்-பாண்டியர் போர் 2

நிருபதுங்கன் பட்டம் பெற்றபிறகு பெரும்படை திரட்டி பாண்டியனை ஒழிக்க முற்பட்டான். அப்பொழுது அரிசிலாற்றங் கரையில் கொடும் போர் நடந்தது. அம் முறை பல்லவன் வெற்றி பெற்றான். அதனாற்றான் பாகூர்ப் பட்சியம். “முன் ஒருமுறை பாண்டியர்க்குத் தோற்ற பல்லவப் படை இப்பொழுது அரசனது அருளால் (நிருபதுங்கவர்மன் செலுத்தியதால்) வெற்றி பெற்றது” என்று கூறுகின்றது.

இச் செய்திகளால், (1) பல்லவர் நாட்டின் தென்பகுதியே குழப்பமான நிலையில் இருந்தது. (2) பாண்டியன் பல்லவரிடம் இருமுஜற தோற்றதால் பாண்டியன் பேரரசு நிலை தளர்ந்தது என்பன நன்குணரலாம்.

ஈழ நாட்டுப் படையெடுப்பு

பாண்டிய நாட்டில் கலாம் விளைத்துச் சீமாறனுக்கு எதிரியாக மாய பாண்டியன் என்பவன் ஒருவன் தோன்றினான். அவனைச் சீமாறன் தோற்கடித்து விரட்டினான். ஒடிய மாய பாண்டியன் ஈழத்து அரசனிடம் சரண் புகுந்தான். ஈழத்தரசன் பெரும் படை திரட்டிப் பாண்டிய நாட்டின்மேல் படையெடுக்க சமயம் பார்த்திருந்தான். அதனை உணர்ந்த சீமாறன், தன் பகைவனாக இருந்து தன்னை அரிசிலாற்றங்கரையில் தோற்கடித்த நிருபதுங்கனிம் நட்புக் கொண்டு அவனது கடற்படைத் துணையால், ஈழத்தின்மேல் படையெடுத்து வென்றான் என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.[2]

திருப்புறம்பியப் போர்[3]

சீமாறன் சீவல்லபன் மகனான இரண்டாம் வரகுணன் (கி.பி. 862. 880) ஏறத்தாழக் கி.பி. 880இல் பல்லவர்மீது படையெடுத்தான். இவன் கி.பி. 868இல் திருவதிகையில் உள்ள கோவிலுக்குத் தானம் செய்தாக நிருபதுங்கனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.[4] இதனால், இவன் நிருபதுங்களிடம் முதலில் நண்பனாக இருந்தான் என்பதை நன்கறியலாம். இவன் படையெடுத்தபோது நிருபதுங்கன் முதியவன் ஆதலின், இளவரசனான அபராசிதனே போருக்குச் சென்றான். அவனுக்குத் துணையாக அவனின் பாட்டனும் கங்க அரசனுமான முதலாம் பிருதி வீபதி என்பவன் தன் படையுடன் சென்றான். இந்த நிலையில் விசயாலயன் (கி.பி. 850-870) மகனான ஆதித்தசோழன் (கி.பி. 870 - 907) பல்லவருடன் சேர்ந்து கொண்டான். இம் மூவரும் பாண்டியனைத் திருப்புறம்பியம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) என்னும் இடத்தில் எதிர்த்துப் பொருதனர். கடும்போர் நடைபெற்றது. அதில் பிருதிவீபதி இறந்தான்.[5] ஆயினும், பாண்டியன் தோற்று ஓடினான். அபராசிதன் வெற்றி பெற்று மீண்டான். எனினும் அவனுடன் இருந்த ஆதித்த சோழனே நன்மை அடைந்தவன் ஆனான். அவன் சோழநாடு முழுவதும் தனதாக்கிக் கொண்டான். பின்னர்க் கி.பி.882இல் நிருபதுங்கன் இறந்தவுடன்,

ஆதித்த சோழன் செங்கற்பட்டு வரையுள்ள தொண்டைநாட்டைக் கவர்ந்துகொண்டான். இங்ஙனம் தொண்டைநாடு சோழர்ஆட்சிக்குத் சென்ற ஆண்டு ஏறத்தாழக் கி.பி. 890 என்பர் ஆராய்ச்சியாளர்.[6]

எனவே, அபராசிதவர்மன் ஆட்சி கி.பி. 890 உடன் முடிந்ததால் வேண்டும். ஆனால் அவனது 18 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கிடைக்கின்றன. அவற்றைக்கொண்டு நோக்கின், அவன் கி.பி 872 முதல் கி.பி 890 வரை ஆண்டிருத்தல் வேண்டுமென்று கூறவேண்டிவரும். ஆயின் கி.பி.882 வரை நிருபதுங்கன் அரசனாக இருந்தமைக்குச் சான்று இருத்தலால் இந்த முடிவு கொள்ளல் தவறு. ஆதலின், அபராசிதன் தந்தையின் முதுமைப் பருவத்தில் தானே நாட்டை ஆண்டு வந்தான் எனக்கோடலே பொருந்துவதாகும். மேலும், அபராசிதன் காலத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் செங்கற்பட்டு, சித்துர் ஆகிய இரண்டு கோட்டங்களிற்றாம் காணப்படுகின்றன. ஆதலின், நிருபதுங்கர்வமனது ஆட்சி முடிவிலேயே பல்லவப் பேரரசின் பெரும் பகுதி சோழர் கைப்பட்டதென்னலாம்; அபராசிதன் ஆட்சியோடு பல்லவர் பேரரசு முடிவுற்றது என்னலாம்.[7]

பழிக்குப் பழி

ஏறக்குறைய கி.பி. 250இல், சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டைநாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றிக்கி.பி. 890 வரை, அஃதாவது ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ் நாட்டை ஆண்டனர். அதன் பிறகு அச் சோழ மரபினரே பல்லவரைப் பழி தீர்த்துக் கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆயிற்று. என்னே உலகப் பேரரசுகளின் தோற்றமும் மறைவும்!

கோவில் திருப்பணிகள்

நிருபதுங்ன் காலத்தில் பல கோவில்களில் புதிய கல்வெட்டுகள் தோன்றின. பல திருப்பணிகள் செய்யப்பட்டன. காடவன் மகாதேவியார் 108 கழஞ்சு பொன் திரு ஆலங்காட்டுக் கோவிலுக்கு அளித்தார்.[8] நந்திநிறைமதி என்பார் ஒருவர் கூரம் கைலேசுரவரர்க்குத் திரு அமுதுக்காக 11 கழஞ்சு பொன் கொடுத்தார்.[9] ஒருவர் திருக்கோவிலுர் திருவீரட்டானேசுவரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தார்.[10] பல்லவ அரசியார் ஒருவர் திருக்கடை முடி மகாதேவரது கோவிலுக்குப் பொன் அளித்ததாகத் திருச்சன்னம் பூண்டிக் கல்வெட்டுக் கூறுகிறது.[11] ஒருவர் திருக்கண்டியூர்க் கோவிலுக்கு நிலம் அளித்தார்.[12] ஒருவர் திருத்தவத்துறை (லால்குடி)யில் உள்ள சப்தரிஷிசுவரர் கோவிலில் விளக்குக்காகவும் திரு அமுதுக்காகவும் பொன் அளித்தார்.[13] அப் கண்டி பெருமானார் என்பவர் திருமுக்கூடல் வெங்கடேசரி பெருமாள் கோவிலுக்குப் பொன் தானமாக உதவினார். அதனை ஊர் அவையார் ஏற்று நடத்த ஒருப்பட்டனர்.[14] ஒருவர் ‘அவனி நாராணச் சதுர்வேதி மங்கலம்’ எனப்படட் காவேரிப்பாக்கம் வரதராசப் பெருமாள் கோவிலுக்குப் பொன் தந்துள்ளார்.[15] இங்ஙனம் நிருபதுங்கன் ஆட்சியில் நடைபெற்ற கோவில் அறப்பணிகள் பல ஆகும். பழந்தமிழர் காலத்துப் பாடல் பெற்ற கோவில்கட்கும் பல்லவ வேந்தர் புதிதாக்க கட்டிய கோவில்கட்கும் இவன் காலத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் பலவாம்.

இக்குறிப்புகளால், நாயன்மார், ஆழ்வார் இவர்தம் பாடல் பெற்ற தலங்களுக்கு அக்காலத்திலே இருந்த மதிப்பு நன்கறியலாம்: சிறப்பாக அப்பொழுதிருந்த தமிழ் மக்களின் சமயப் பற்றும் வெள்ளிடை மலைபோல் விளக்கமுறும்.

பிருதிவீ மாணிக்கம்

இது நிருபதுங்கன் மனைவிபெயர். இப்பெயர்கொண்டஅளவை ஒன்று நிருபதுங்கன் ஆட்சியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறியலாம். இவள் ‘பிருதிவி கங்க அரையர்’ என்றும் முதலாம் பிருதிவீபதி என்றும் கூறப்பட்ட கங்க அரசன் மகள் என்னலாம். இவள் பெற்ற மைந்தனே அபராசிதவர்மன். அதனாற்றான் திருப்புறம்பியப் போரில், பாட்டானான பிருதி வீபதி பெயரனான அபராசிதனுக்கு உதவியாகச் சென்றான் எனக் கொள்ளலாம். வேறொரு கல்வெட்டில், ‘தேவியார் வீரமகாதேவியார்’ என்பது காணப்படுகிறது. இவள் நிருபதுங்கனுக்கு மற்றொரு மனைவி போலும் ‘பிருதிவீ மகாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்றொரு சிற்றுாரின் பெயரும் கல்வெட்டில் காண்படுகிறது. இது நிருபதுங்கன், தன் மனைவி பெயரை இட்டுக் குறிப்பிட்ட சிற்றுார் ஆகும். இவள் ‘தாயார் பானுமாலி’ என்பவள். இந்தப் பிருதிவீ மாணிக்கமே உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டியவள் என்னலாம்.[16]

மாதேவி அடிகள்

இவள் அபராசிதன் மனைவி, இவன் தமிழ் நாட்டுப் பெண்மணி ஆதல் வேண்டும். இவள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சு பொன் கொடுத்தவள்.[17]

நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்

புதுக்கோட்டைச் சீமையில் உள்ள பழியிலி ஈச்சுரம் என்ற கோவில், பல்லவ அரசனாகிய நிருபதுங்க வர்மன் காலத்தில் குடையப்பட்டது என்பது அக்கோவில் கல்வெட்டினால் அறியப்படுகிறது.

திருத்தணிகைக் கோவில்

இஃது அபராசிதவர்மன் காலத்தில் ஏறத்தாழக் கி.பி. 890இல் கட்டப்பட்டது. இதில் இவனது 18ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் கிடைத்தமையால் இக் கணக்குத் தரப்பட்டது. இக் கோவில் இராசசிம்மன் கோவிலுக்கும் பிற்காலச் சோழர் கோவிலுக்கும் இடைப்பட்ட வளர்ச்சி உடையது. இதில் கோபுரம் இல்லை. கும்பம் வேறு. கோபுரம் வேறு என்பது இல்லை. கும்பத்துக்குள் உள்ளறையும் முன் மண்டபமுமே உண்டு. கும்பத் தோற்றம் யானையின் பாதியாக இருக்கும். இத்தகைய கும்பம் மாமல்லபுரத்தில் உள்ள சகாதேவன் தேரிலும் கூரம் கோவிலிலும்[18] காணலாம். தூண்கள்மீதுள்ள போதிகை உருண்டது. இந்த அடையாளம் நினைவிற்கொள்ளின், பிற்காலப் பல்லவர் கோவில்கள் இவை எனக் கூறிவிடலாம். பிற்காலச்சோழர்போதிகை கோணங்கள் உள்ளதாக இருக்கும். இந்தத் திருத்தணிகைக் கோவிற் சுவர்களில் உள்ள நான்கு புரைகளில் தென்முகக் கடவுள், பிரமன், கொற்றவை (துர்க்கை). திருமால் இவர்தம் சிலைகள் இருக்கின்றன. இவ்வழகிய கோவிலைக் கட்டியவன் நம்பி அப்பி என்பவன்.[19] இந்தக் கோவிற் கல்வெட்டிற் காணப்படும். வெண்பா ஒன்று அபராசிதவர்மன் பாடியதாகக் கூறப்படுகிறது.[20]

அபராசிதன் காலத்துத் திருப்பணிகள்

இவன் காலத்திலும் பல திருப்பணிகள் நடைபெற்றன: கச்சிப்பேட்டைச் சேர்ந்த மாங்காட்டு ஈசர்க்கு விளக்கெரிக்கப் பொன் தரப்பட்டது.[21] ‘பெருநங்கை’ மகனான வாண கோவரையர் கூத்தியான ‘அமத்தி’ என்பவள் திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரேச்சுரர் கோவிலில் விளக்கெரிக்க 30 கழஞ்சு ஊர்காற் செம்பொன் (உருகாச் செம்பொன்? செம்பொற் கட்டி?) தந்தனன். அதனை அமிர்த கணத்தார் ஏற்றுக் கொண்டனர்.[22] இவனுடைய வேறொரு கூத்தி ‘பத்திரதானி’ என்பவள் அதே கோவிலில் விளக்குக்காக 30 கழஞ்சு பொன் தந்தாள்.[23]

திருவொற்றியூரில் உள்ள அபராசிதனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு வெற்றிலை, இளநீர், ஆணைந்து (பஞ்ச கவ்யம்). சந்தனம், கற்பூரம் என்பனவாங்க உண்டாகும் செலவிற்காக ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது.[24] குமராண்டி குறும்பர் ஆதித்தன் என்னும் தலைவன் சத்தியவேட்டில் உள்ள மதங்ககேசுவரர் கோவிலுக்குத் துறையூர் என்னும் சிற்றுரையும் அதன் வருவாயையும் விட்டமை தெரிகிறது.[25] காடுபட்டிப் பேரரையன் மனைவியான போற்றி நங்கை என்பவள் திருவொற்றியூர் மகா தேவர்க்கு விளக்கெரிக்க 100 ஆடுகளை அளித்தாள்,[26] மேற்சொன்ன கோவிலிலே இரண்டு விளக்குகள் இட மகேசுவரர் மரபினர் பொன் தந்துள்ளனர்.[27] இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல இடங்களில் குறைவின்றி நடந்தன.

இக்காலத்து அரசர் (கி.பி. 850-890)

இக்காலத்துக் கங்க அரசர் முதலாம் பிருதிவீபதி (கி.பி. 853-880) இரண்டாம் பிருதிவீபதி (கி.பி. 880-925) என்போர்: இராட்டிரகூட அரசர் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814-880), இரண்டாம் கிருட்டினன் (கி.பி. 880-912) என்போர்; பாண்டியமன்னர் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862), வரகுண வர்மன் (கி.பி. 862-880), பராந்தக பாண்டியன்[28] (கி.பி. 880-900) என்பவர்.

பல்லவ மரபினர்

கம்பவர்மன் என்பவனைக் குறிக்கும் கல்வெட்டுகள் வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் இருபதுக்குமேல் கிடைத்துள்ளன. சிலர் இவன் நிருபதுங்கனுடன் பிறந்தவனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இவன் காலத்தில் ஒலக்கூர் என்னும் இடத்தில் போர் ஒன்று நடந்துள்ளது. அங்கு இறந்த வீரன்பொருட்டு வீரக்கல் நடப்பட்டுள்ளது. அஃது, அந்த ஊர் அழிவுற்றபோது போரிட்டு இறந்தவனது வீரக்கல் என்பது தெரிகிறது.கம்பவர்மன் அறங்கள் பல செய்துள்ளான்.

சந்திராதித்தன் விசய நரசிம்மவர்மன், விசய ஈசுவரவர்மன் என்பவர் தம் கல்வெட்டுகள் சிலவும் கிடைத்துள்ளன. இவர் அனைவரும் நிருபதுங்கள் காலத்தில் கோட்டங்கட்குத் தலைவர் களாக இருந்த பல்லவ அரச மரபினர் என்று அறிஞர் கருதுகின்றனர்.

பிற்காலப் பல்லவர்

பிற்காலத்தில் நுளம்ப-பல்லவர் என்பவர். பல்லாரிக்கோட்டமும் மைசூரின் ஒரு பகுதியும் சேர்ந்த நுளம்ப பாடியைக் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆதித்த சோழன் வழிவந்த பேரரசர்களுடன் ஓயாது போர் நடத்திவந்தனர்; பலர் சிற்றரசராகியும் அரசாங்க அலுவலாளராகியும் இருந்தனர். அவர்கள் இங்ஙனமே மேலைச் சாளுக்கியரிடமும் வேலை பார்த்தனர். அவர்கள், ‘காஞ்சிப் பல்லவர் மரபினர்’ என்று தம்மைக் கூறிக்கொண்டனர். ஆதலின், காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஒழிந்தவுடன், பல்லவ அரச மரபினர் தமது பழைய இடத்திற்குச் சென்று, குறுகிய நிலப்பகுதியை ஆளலாயினர் என்பது தெரிகிறது.[29] வேறு பலர் சோழப் பேரரசிற் கூடலூர், சேந்த மங்கலம் முதலிய இடங்களில் சிற்றரசராகவும் தானைத் தலைவராகவும் வளநாட்டுத் தலைவர்களாகவும் இருந்து வந்தனர்.


  1. M.A.R. 1907, p.63
  2. Ep. Indica, Vol XVIII, p.13, Dr. C. Minakshi’s “Ad and S.Life under the Păllavas, pp. 162-163.
  3. இப்போர் அபராசிதன் ஆட்சியில் நடந்ததாக இதுவரை வரலாற்று ஆசிரியர் வரைந்து வந்தனர். ஆயின் அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை நோக்க, இப் போர் நிருபதுங்கள் காலத்திலேயே நடந்தது’ என்பது உறுதிப்படுகிறது. ஆதலின் இஃது இங்குக் குறிக்கப் பெற்றது. 1. “The Chronology of the Latter Pallavas” - Mr. M.S. Sarma’s article on in Ramamurthi Pantulu Commemmoration Vol. p. 142. 2. Mr. M.S. Sarma’s Note on Nirupatunka J.O. O.R. Vol.VIII part 2, p.165.
  4. No. 360 of 1931.
  5. இப்போரில் இறந்த முதலாம் பிருதிவீபதியின் கோவில் ஒன்றும் உதிரம் படிந்த தோப்பு ஒன்றும் திருப்புறம்பியத்தில் இன்றும் இருக்கின்றன. TVS Pandarathar’s “Pandyar Varalaru'p.34.
  6. K.A.N. Sastry’s “Cholar,’ Vol. I. pp.133-136.
  7. Dr. C. Minakshi’s “Ad. and S. Life under the Pallavas’ p.5.
  8. 460 of 1905.
  9. 257 of 1912.
  10. 277 of 1892
  11. 300 of 1901.
  12. 17 of 1895
  13. 84 of 1902.
  14. 179 of 1915
  15. 397 of 1905.
  16. Dr. Minakshi’s Ad. and S.I. life under the Pallavas p.4. 161
  17. 162 of 1912.
  18. சென்னைக்கடுத்த கோவூரிலும் காணலாம்.
  19. P.T.S. Iyengar’s “Pallavas,’ part III, p.77; 435 of 1005 343.
  20. inscription No.433 of 1905. இவன் ‘வெண்பாப் பாடினான் என்பதை நோக்க, இவனுக்கு முற்பட்ட ஐயடிகன் காடவர்கோன் நாயனார் என்பவர் ஒருவர் க்ஷேத்திர வெண்பா என்னும் சிறுநூல் பாடினார் என்பது இங்கு நினைக்கத்தக்கது.
  21. 351 of 1908
  22. 158 of 1912
  23. 161 of 1912
  24. 159 of 1912
  25. 31 of 1912
  26. 32 of 1912
  27. 90 of 1912
  28. R. Gopalan’s “Pallavas of Kanchi, pp.143,144.
  29. L. Rice’s “Mysore and Goorg from Inscriptions’ pp.55-59.