பல்லவர் வரலாறு/13. புதிய பல்லவர் மரபு

விக்கிமூலம் இலிருந்து

13. புதிய பல்லவர் மரபு

சில செய்திகள்

இரண்டாம் பரமேசுர வர்மனுடன் சிம்மவிஷ்ணு மரபு முடிந்து விடுகிறது. இரண்டாம் பரமேசுவர வர்மனுக்குப் பின் புதிய மரபைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மன் என்பவன் பட்டம் பெற்றதாகச் சில பட்டயங்கள் பகர்கின்றன. உதயேந்திரப் பட்டயம், இரண்டாம் பரமேசுவரவர்மனுக்குச்சித்திரமாயன் என்னும் மைந்தன் இருந்தான்; அவனுக்குப் பட்டம் கிடைக்கவேண்டுமென்று தமிழ் அரசர் முயன்றனர் என்று கூறுகிறது. கொற்றங்குடிப் பட்டயம், இரண்டாம் நந்திவர்மனுக்கு முன் இரண்யவர்மன் என்பவன் ஆண்டதாகக் கூறுகிறது. ஆனால், தண்டந் தோட்டப் பட்டயம் இதனைக் கூறாமல், இரண்யவர்மன் உலக நன்மைக்காகப் பிறந்தான் தன் பகைவரைக் காட்டிற்கு விரட்டினான்; குடிகளைச் செம்மையுறப் பாதுகாத்தான் எனக் கூறுகிறது. இந்த இரண்யவர்மன் யாவன்? கீழே உள்ள அரச மரபைக் காண்க:

சிம்மவர்மன்
சிம்மவிஷ்ணு பீமவர்மன்
மகேந்திரவர்மன் 1 புத்தவர்மன்
நரசிம்மவர்மன் 1 ஆதித்தவர்மன்
மகேந்திரவர்மன் 2 கோவிந்தவர்மன்
பரமேசுவரவர்மன் 1 இரண்யவர்மன்
நரசிம்மவர்மன் 2
பரமேசுவரவர்மன் 2
(சித்திரமாயன் - சிறுவன்?) நந்திவர்மன் 2


வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள்

காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள வரிசை வரிசையான சிற்பங்கள் இக்கால நிலையைப் பெரிதும் விளக்குகின்றன. அவற்றின் கீழ்ச் சில செய்திகள் செதுக்கப் பட்டுள்ளன. முதற் சிற்பம் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறப்பைக் குறிக்கிறது. அங்கு அமைச்சர், கடிகையார், மூலப்பிரகிருதி, இரண்யவர்மன் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.நான்காம் சிற்பத்தில் ஸ்ரீமல்லன், இரண்மல்லன், சங்கிராம மல்லன், பல்லவ மல்லன் இந்நால்வரும் இரண்ய வர்மன் பிள்ளைகளாகக்

குறிக்கப்பட்டுள்ளனர். அங்குப் ‘பரமேசுவரன் நான் போவேன் என்று தொழுது நின்ற இடம்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது. பிறகு இரண்யவர்ம ராசனும் தரணி கொண்ட போசரும் நகரத்தாரும் காடக முத்தராயரும் குறிக்கப்பட்டுள்ளர்; பின்னர் இளம் பல்லவ மல்லன் ‘நந்திவர்மன்’ என்னும் பெயரால் அபிடேகம் செய்யப்பெற்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.[1]

இச் சிற்பங்களை ஒன்று முதல் இறுதிவரை நன்கு கவனிப்போமாயின், பல்லவர் மரபை முதலிலிருந்து நன்கு விளக்கிச் செல்லலைக் காணலாம். இவற்றைப் பதிப்பித்த ஆராய்ச்சியாளர் வரைந்துள்ளதைக் கீழே காண்க:- “இரண்டாம் பரமேசுவர வர்மன் இறந்த பிறகு கடிகை யாரும் மூலப்பிரகிருதியாரும் அமைச்சரும் இரண்ய வர்ம மகாராசனைக் கண்டனர்; தமக்கோர் அரசனைத் தர வேண்டினர். உடனே இரண்யவர்மன் தன் மைந்தர் நால்வரையும் அழைத்து, ‘யார் அரசராக விரும்புகிறீர்?’ என்று கேட்டான். முதல் மூவரும் மறுத்தனர். பன்னிரண்டு வயதுடைய பல்லவமல்லன்தான் அரசனாக விழைவதை வணக்கத்தோடு கூறினான். தரணிகொண்ட போசர்[2] தனது இசைவைத் தருமாறு இரண்யவர்மனை வற்புறுத்தினார். பிறகு தந்தையும் தரணிகொண்ட போசரும் தந்த கைப்படைகளையும் தாண்டிக் காஞ்சிக்குவந்தான். அவன் வருதலை அறிந்த பல்லவடி அரையன் பெருஞ்சேனையுடன் எதிர்கொண்டு அவனை யானைமீது அமர்த்திஅழைத்து வந்தான். பல்லவ மல்லனை நகரச் செல்வரும் ‘காடக முத்தரையர்’ முதலிய சிற்றரசரும் பிறரும் வரவேற்று அபிடேகம் செய்தனர்; நந்திவர்மன் என்னும் பெயரை அபிடேகப் பெயராகச் சூட்டினர். விடேல் விடுகு, கத்வாங்கதான், ரிஷபலாஞ்சினன் என்னும் பட்டத்திற்குரிய விருதுப் பெயர்களை வழங்கினர். நந்திவர்மன் அரசன் ஆனான்.[3]

இரண்யவர்மன்

கொற்றங்குடிப்பட்டயம், இரண்யவர்மன் அரசனாக இருந்தான் என்று கூறலும், தண்டன் தோட்டப் பட்டயம் இரண்யவர்மன் பெருவீரன் - பகைவரை விரட்டியவன் என்று பலபடக் கூறி, அவன் அரசன் எனப் பொருள்படுமாறு கூறலும் ஆராயற்பாலன. ஆனால், பல்லவர் வழிமுறை கூறும் பல பட்டயங்கள் அவன் பெயரை (அரசனாக)க் குறிக்கவில்லை. எனவே, இவ் விருவகைப் பட்டயங்கட்கும் மதிப்பைத் தந்து நோக்குழி, ‘இரண்யவர்மன்’ தன் மகனான (பன்னிரண்டு வயதுடைய) பல்லவ மல்லன் பட்டம் பெற்ற கால முதல் வயது வரும் வரை அவன் சார்பாக நின்று, பல்லவ நாட்டைப் பாதுகாத்தான் எனக் கோடலே பொருத்தமுடையதாகும்.

புதிய மரபு ஏன் வந்தது?

சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மன். பீமவர்மன் மரபில் வந்தவன் இரண்யவர்மன். இரண்யவர்மன் மகன் பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மன். இம் மரபினரே 8, 9ஆம் நூற்றாண்டுகள் முடியப் பல்லவ நாட்டை ஆண்டனர். சிம்மவிஷ்ணு மரபினர் ஆட்சி இரண்டாம் பரமேசுவர வர்மனோடு முடிவுற்றுவிட்டது. அவனுக்குச் ‘சித்திரமாயன்’ என்னும் மைந்தன் இருந்தான். ஆயின் அவன் அரசனாகப் பொதுமக்கள் விடவில்லை. ஏன்? பல்லவ நாட்டிற்கு வடமேற்கே பிறவிப்பகைவராக இருந்த சாளுக்கியர் எந்த நிமிடத்திலும் படையெடுக்கலாம் என்னும்பெருங் கவலை இருந்தது. அத்துடன், தெற்கே பெருவீரராக இருந்து நாடு கவரும் வேட்கையில் பாண்டியர் முனைந்திருந்தனர். இங்ஙனம் வடக்கே சாளுக்கியர் அச்சமும் தெற்கே பாண்டியர் அச்சமுமே அமைச்சர் முதலிய பொறுப்புள்ளவர் மனத்தைக் கலக்கிக்கொண்டிருந்தது. இரண்டாம் பரமேசுவர வர்மனே போரில் இறந்தான் என்பது எண்ணவேண்டு வதாக இருக்கிறது.[4] காலஞ் சென்ற அரசனின் மகனான ‘சித்திரமாயன்’ குழந்தையாக அல்லது சிறுவனாக, அல்லது பொறுப்பற்ற வாலிபனாக இருந்திருக்கலாம். மிகப்பெரிய பேரரசிற்கு அவன் தகுதியற்றவன் என்று அரசியல் தலைவர்கள் கருதினர் போலும் மேற்சொன்ன இரு பேரரசரான சாளுக்கியரையும். பாண்டியரையும் எதிர்த்து நிற்கும் மன ஆற்றல் பெற்ற அரசனே தமக்கு வேண்டும் என்று எண்ணிய அத்தலைவர்கள், அரசியல் அறிவும் ஆண்மையும் படைத்த இரண்யவர்மனை அரசனாகுமாறு தூண்டினர். அவன் மறுத்துத் தன் வீரமகனை அரசு கட்டிலில் அமர்த்தினான் போலும்!

பன்னிரண்டு வயதுடைய இளைஞனான பல்லவ மல்லன் நான் அரசனாவேன் என்று தந்தையிடம் கூறினது நோக்கற்பாலது. தனக்கு முன்னோர் மூவரும் மறுத்ததை அருள் நோக்கங் கொண்ட அவன் தன் இளமையும் கருதாமல் ஏற்றது. அவனது பெருந்தன்மையையும் அரசியல் பொறுப்புணர்ச்சியையும் உணர்த்துகிறது. அவன் பிறர்க்கு உரிய பட்டத்தை வலிதிற் கவரவில்லை; தானாக வந்ததைச் சிறுவயதில் ஏற்றுங்கொண்டான். அவன் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாலும் கடமை உணர்ந்த குடிமக்களாலும் பல்கலை விற்பன்னரான கடிகையாராலும் பேரரசைப் பண்பட நடத்திய அமைச்சராலுமே தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இப்புதிய பல்லவ மரபரசர் இவராவர்:

இரண்டாம் நந்திவர்மன்[5]

(கி.பி. 710-775)
|
தந்திவர்மன்
(கி.பி.775-825)
|
மூன்றாம் நந்திவர்மன்
(கி.பி.825-850)
|
பிற்பட்ட பல்லவர்

(கி.பி. 850-893)

  1. S.I.I. Vol. IV pp. 10-12
  2. மாகாணத்தலைவர்(Governor) Dr.K.Gopalachari’s Early History of the Andhra Country. pp.75-77.
  3. Ep. Indica, Vol. XVIII, p.177
  4. Dr. N. Venkataramanayya’s article on the Date of Pallava Malla in J.O.R. Madras.
  5. இவன் கி.பி. 726இல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் கூறுவர். Vide. Dr. N.R. Ramanayya’s article on “The Date of Pallava Malla’.