பல்லவர் வரலாறு/7. பிற்காலப் பல்லவர் - (கி.பி. 575-900)

விக்கிமூலம் இலிருந்து

7. பிற்காலப் பல்லவர்
(கி.பி. 575-900)

இக்காலச் சிறப்பு

(1) இக்காலத்தில் பெரும்பாலான நாயன்மாரும் ஆழ்வாரும் தமிழகத்தில் வாழ்ந்தனர்; சமணரோடு போரிட்டுச் சைவ வைணவ சமயங்களைப் பரப்பினர்: பேரரசர்களையும் சமயம் மாறும்படி செய்தனர். தமிழ்மக்கள் இக்காலத்தில் சிறந்த முறையில் சமயப்பற்றுடையர் ஆயினர். மக்கள் மனப் போக்கை உணர்ந்த பொறுப்பு வாய்ந்த அரசர், மக்கள் உள்ளம் உவப்பப் பல கோவில்களைக் கட்டினர்; தாமும் மெய்யான பக்தியில் ஈடுபட்டனர். இச் சமயப் போராட்டத்தில் இருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களும் தேவாரப் பாடல்களும் இக்கால அரசர்நிலை, நாட்டுநிலை, சமயங்கள் நிலை, மக்கள் நிலை முதலியவற்றை நன்கு விளக்குகின்றன. (2) இக் காலத்திலே தான் புகழ்பெற்ற பெருவீரரான பல்லவர் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் தெற்கே காவிரியாறு வரையும் வடக்கே கிருஷ்ணையாறு வரையும் மேற்கே.சாளுக்கியநாடு வரையும் தங்கள் பேரரசை விரிவாக்கி ஆண்டனர். இக்காலத்தேதான் வரலாற்றுப் புகழ்பெற்ற சாளுக்கியர்-பல்லவர் போர்களும், பாண்டியர்-பல்லவர் போர்களும், கங்கர்-பல்லவர் போர்களும், இராட்டிரகூடர் - பல்லவர் போர்களும் பிறவும் நிகழ்ந்தன. (3) இக்காலப் பல்லவர்தாம் குகைக்கோவில்களையும் மலைக்கோவில்களையும் கற்கோவில் களையும் அமைத்து அழியாப் புகழ் பெற்றவர் ஆவர். இவர்க்கு முற்பட்ட காலங்களில் தமிழகத்துக் கோவில்கள் மரத்தாலும் மண்ணாலும் செங்கற்காலுமே கட்டப்பட்டவை. அவை நாளடைவில் அழிந்துவிட்டன. (4) இக்காலத்திற்றான் பல்லவ நாட்டில் வடமொழி சிறப்பாகப் போற்றி வளர்க்கப்பட்டது. வடமொழி வல்ல மறையவர் பல ஊர்களைத்தானமாகப் பெற்றனர். வடமொழிக் கல்லூரிகள் தோற்றமெடுத்தன. புகழ்பெற்ற கிராதார்ச்சுனீயம் இயற்றிய பாரவி (தாமோதரர்)யும் காவ்யாதர்சம் செய்த தண்டி என்னும் வடமொழிப் புலவரும் பல்லவரால் பாராட்டப்பெற்றனர். (5) இக்காலத்தே தமிழ்மொழியும் ஓரளவு வளர்ந்ததென்றே கூறலாம். தேவாரத் திருமுறைகள், நாலாயிரப் பாடல்கள், நந்திக் கலம்பகம், பாரத வெண்பா முதலியன இக்காலத்த்ேதான் எழுந்தவை. இவற்றை அருளிச்செய்த அடியாரும் ஆழ்வாரும் புலவர்களும் பல்லவர் மதிப்பைப் பெற்றிருந்தனர் என்பதில் ஐயமில்லை.

இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள்

(1) இக்காலப் பல்லவர் செப்புப் பட்டயங்களையும் பெருவாரியான கல்வெட்களையும் வெளியிட்டனர். அவை தமிழ் நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. அவற்றுள் சிலவே இன்று காறும் வெளியாகி இருப்பவை: பல படித்து முடியாமலும் அச்சாகி வெளிவராமலும் இருக்கின்றன. அவை வெளிப்படுமாயின், இக்காலப் பல்லவர் வரலாறு பெரிய மாறுதலைப் பெறலாம்: இதுகாறும் உணரமுடியாத பல உண்மைகளை உணரலாம். கல்வெட்டுகள் பலவும் அரசர் அல்லது பெரு மக்கள் கோவில்களுக்கும் மறையவர்க்கும் சமயக் கல்விக்கும் நிலம் விட்டதை அல்லது பிறவகை அறச்செயல்களைக் குறிப்பிடுவாகும். இவற்றில் சிம்மவிஷ்ணு முதலாக வந்த அரசர் பரம்பரை கூறப்பட்டிருக்கும். செப்புப் பட்டயங்களிலும் அரசர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அது வெளிப்பட்டபோது இருந்த அரசன் பெயரையும் அவனது ஆட்சி ஆண்டையும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகளும் பட்ட்யங்களும் அரசர் மரபையும் அவர்தம் பிற செயல்களையும் குறிப்பிடுதல் இல்லை. கல்வெட்டுகளில் பழமையானவை முதல் மகேந்திரவர்மன் வெட்டுவித்தவையே ஆகும்; அவை தென்ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டுக் கோட்டங்களில் உள்ள குகைக் கோவில்களில் உள்ளன. மற்றவை மாமல்லபுரத்தில் உள்ள மலைக்கோவில்களிலும் பிறகோவில்களிலும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும் பிற இடங்களிலும் இருக்கின்றன. எனினும், இப் பலவகைப் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் தொகுத்து அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்யின், இக்காலப் பல்லவர் பரம்பரை, அவர் தம் வரலாறு, அவர்கால நாட்டுநிலை முதலியவற்றைப் பேரளவு அறியலாம்.

(2) இவற்றோடு, இக்காலப் பல்லவர் வரலாற்றை அறியப் பெருந்துணை புரியும் புறக்கருவிகளில் முதலிடம் பெறத்தக்கவை. இக்காலத்தே பல்லவர் நாட்டைச் சுற்றிலும் இருந்து அரசாண்ட சாளுக்கியர், இராட்டிரகூடர், கதம்பர், கங்கர், பாண்டியர், முத்தரையர், (களப்பிரர்) பாணர் - இவர் தம் பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆகும்.

(3) சைவசமய குரவர் பாடியருளிய தேவாரத் திருமுறைகளும் வைணவப் பெரியார்கள் பாடியருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாக்களும் பல்லவரைப் பற்றிய குறிப்புகள் தரத்தக்க இலக்கியங்கள் ஆகும்.

(4) கி.பி. 615-630 இல் மகேந்திரர்வமன் வெளியிட்ட மத்தவிலாசப் பிரகசனம், அவந்திசுந்தரீகதா, பாரதவெண்பா, நந்திக் கலம்பகம், பெரிய புராணம் என்பன சிறந்த வரலாற்றுக் குறிப்புகள் கொண்டவையாகும்.

(5) மகாவம்சம்- இஃது இலங்கை வரலாறு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நரசிம்மர்வர்மன் காலத்தில் இலங்கை நோக்கிப் பல்லவர் படைசென்றமை-இலங்கை அரசனை நீக்கிப்பட்டத்திற்கு உரியவனை அரசனாக்கினமை முதலிய செய்திகள் இதனிற் காணலாம்.

இத்துணைச் சான்றுகளையும் துணையாகக் கொண்டு பிற்காலப் பல்லவர் வரலாற்றை ஒருவாறு காண்போம்.

காசக்குடி, கூரம், வேலூர் பாளையப் பட்டயங்களை ஆராயின், இப் பிற்காலப் பல்லவர் பட்டியல் அடுத்த பக்கத்தில் உள்ளவாறு அமையும். இப் பட்டியல், இடைக்காலப் பல்லவர் பட்டிலைப் போல் குழப்பம் திருவதன்று; இன்னவருக்குப்பின் இன்னவர் பட்டம் பெற்றனர் என்பதை ஏறக்குறையத் தெளிவாகத் தெரிவிக்கிறது. பட்டியலைப் பார்ப்பின் சிம்மவிஷ்ணு காலுமுதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் ஒரே பரம்பரை அரசர் ஆண்டு வந்தமை தெளிவாகும். அந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பீமவர்மன் முதல் இரண்ய வர்மன் ஈறான ஐவரும் எந்நிலையில் இருந்தனர் என்பதை அறியக்கூடவில்லை. அவர்கள் மாகாணத் தலைவர்களாக அல்லது சேனைத் தலைவர்களாக இருந்திருக்கலாம். சிம்மவிஷ்ணுவுக்குத் தம்பியான பீமவர்மன் வழியில் வந்த இரண்டாம் நந்திவர்மன் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவப் பேரரசன் ஆனான். பின்னர் அவன் வழியினரே கி.பி. 900 வரை பல்லவ மன்னவராக இருந்து மறைந்தனர்.

மூன்றாம் சிம்மவர்மன்
சிம்ம விஷ்ணு பீமவர்மன்
மகேந்திரன் 1 புத்தவர்மன்
நரசிம்மர்வமன் 1 ஆதித்தவர்மன்
மகேந்திரவர்மன் 2 கோவிந்தவர்மன்
பரமேசுவர்மன் 1 இரண்யவர்மன்
நரசிம்மவர்மன் 2 நந்திவர்மன் 2
பரமேசுவர மகேந்திர
வர்மன்2 வர்மன் 3 தந்திவர்மன்
நந்திவர்மன் 3
நிருபதுங்கவர்மன்
அபராசிவர்மன்