பல்லவர் வரலாறு/9. மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630)

விக்கிமூலம் இலிருந்து

9. மகேந்திரவர்மன்
(கி.பி. 615 - 630)[1]

முன்னுரை

சிம்மவிஷ்ணு மகனான மகேந்திரவர்மன் கிட்டத்தட்டக் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ அரியணை ஏறினான். (1) இவனது அரசியலின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது; பிற்பகுதியில் சைவம் உயர்நிலைக்கு வந்தது. இவனே, சமணத்தினின்று சைவத்திற்கு மாறினான். (2) குகைகளைக் கோவில்களாகக்குடைந்தவன் இவனே: பாறைகளைக் கோவில்களாக மாற்றியவனும் இவனே. (3) இவன் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது.அப்போராட்டம் இவனுக்குப்பின் 150 ஆண்டுகள் வரை ஓய்ந்திலது. (4) சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் இவனது ஆட்சியில் வளர்ச்சியுற்றன. இவன் காலத்தவரே அப்பர் சுவாமிகள்.

இரண்டாம் புலிகேசி

இவன் சாளுக்கியப் பேரரசன்: கி.பி. 610 இல் சாளுக்கிய அரியணை ஏறினான். இவன் கதம்பர். கங்கர், ஆளுயர். மயூரர் முதலிய சிற்றரசரை அடக்கிப் பேரரசை நிலைநாட்டச் சில ஆண்டுகள் ஆயின. இவன் தம்பி விஷ்ணுவர்த்தனன் ‘நாசிக்’ (அசலபுரம்)கைத் தலைநகராக் கொண்டு சாளுக்கிய நாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தான்; அப்பொழுது ‘இளவரசன்’ என்ற பெயருடனே இருந்தான். அவன் அங்குக் கி.பி.614 முதல் ஆளத்தொடங்கினான் என்னலாம். புலிகேசி வெளியிட்ட ‘ஆய்ஹொளே’ கல்வெட்டுக் கி.பி. 634-635க்குரியது. அதனில், தான் வேங்கியை வென்று, (பிறகு) பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் குறித்துள்ளான். படையெடுப்பு

புலிகேசி படையெடுப்பைப் பற்றி, மேற்சொன்ன அய்ஹொளே கல்வெட்டு, “அழுக்கற்றவெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்க வந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரும் படைக் கடலைக் கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்”[2] என்று கூறுகிறது. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது.[3]

காசக்குடிப் பட்டயம் சாளுக்கியர் பெயரைக் குறிப்பிடாவிடினும், வரலாற்று ஆசிரியர் அனைவரும் ‘பகைவர்’ என்றது சாளுக்கியரை என்றே கொண்டுள்ளனர். எனவே, காசகுடிப்பட்டயத்தில் கூறியுள்ள செய்தி மகேந்திரன்-புலிகேசி போரேயாகும் என்பதில் ஐயமில்லை.

இப்பட்டயங்களில் ஒவ்வொன்றும் தன் அரசன் வென்றதாகவே கூறுகிறது. ‘இஃது எங்ஙனம் பொருந்துவது’ என்பதே ஆராயத்தக்கது: புலிகேசியினது பட்டயத்தில், ‘பல்லவ அரசன் ஒளிந்துகொண்டான்’ என்பது கூறப்பட்டுள்ளதே அன்றி, அவன் தோற்றது அல்லது காஞ்சியைச் சாளுக்கியர் கைப்பற்றியது குறிக்கப்படவில்லை. மேலும், புலிகேசியினது ஆட்சியில் பல்லவநாடு அவன் கைப்பட்டதாகவும் தெரியவில்லை. மேற்கூறிய சாளுக்கியன் கல்வெட்டு, “துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற்கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பணியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” என்று கூறுகிறது. இதனால் மகேந்திரவர்மன் புலிகேசியுடன் போர்புரிய முடியாமல் ஒளிந்து கொண்ட செய்தி அவன் பகைவராகிய தமிழ் வேந்தரை மகிழச் செய்தது என்பது தெரிகிறதே அன்றி, சாளுக்கியன் பல்லவனைத் தோற்கடித்தான் என்பது தெரியவில்லை. காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினானாதல் வேண்டும்.போர்நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. அது வரை பகைவர் படையை வரவிட்டமையே தனக்கொரு வெற்றியாகப் பல்லவன் நினைத்தான் போலும் தன்நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றி வளைத்துக் கொண்டான் போலும்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருத்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான். இதுவே நடந்த செய்தி என்பதை இரண்டு பட்டயங்களையும் கூர்ந்து கவனிப்பவர் நன்குணரலாம். மேலும் மகேந்திரன் மகனான நரசிம்மவர்மனது ஆட்சியில் இப் புலிகேசியே இரண்டாம் முறைபடையெடுத்து வந்தான் என்பது காணப்படுகிறது. மகேந்திரன் காலத்தில் அவன் வெற்றிபெற்றது உண்மையாயின், நரசிம்மவர்மன் காஞ்சியில் அரசனாக இருந்தான் என்பதோ அவன்மீது புலிகேசி படையெடுத்தான் என்பதோ பொருத்தமற்றது அல்லவா?[4]

‘புள்ளலூர்’ என்பது பல்லவர் பட்டயத்தில் வருதல்போலச் சாளுக்கியர் கல்வெட்டில் வருதல் இல்லை. ஆனால், கங்க அரசனான துர்விநீதன்[5] கல்வெட்டில், அவ்ன அந்தரி, ஆலத்தூர், போலுளரே (புள்ளலூர்), பேர்நகர (பெருநகரம்) இவற்றில் நடந்த போர்களில் வென்றான் என்பது கூறப்படுகிறது. எனவே, துர்விநீதனும் புலிகேசியுடன் சேர்ந்து (பகைவர் என்று பல்லவர் பட்டயம் கூறுமாறு) மகேந்திரனுடன் போரிட்டனன் என்பது புலனாகிறது. கங்கன் போரிடக் காரணம் என்ன? இதற்கு விடை கங்கர் கல்வெட்டே கூறுகிறது. ‘துர்விநீதன் காடு வெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுகட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா'வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர் செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்”[6] என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத்தம்பிமகன்; கங்க -துர்விநிதனுக்குமகள்வயிற்றுப்பேரன். ஆதலின்.அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும் அப்பொழுது நடந்தபோர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப்பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.

சமணமும் சைவமும்

மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவன் ஆனவன் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனையே அவனது திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டும் கூறுகின்றது. அது, ‘லிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயர் கொண்ட அரசன் இந்த லிங்கத்தினால் புறச்சமயத்திலிருந்து திரும்பிய ஞானம், உலகத்தில் நீண்டநாள் நிலைநிற்பதாக’[7] எனக் கூறுகின்றது. 146. , 147. இவன் வல்லம், தனவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோயில்களையும், மகேந்திரவாடியில் பெருமாள் கோவிலையும் அமைந்துள்ளான். இவை அனைத்தும் இவன் சமனானாக இருந்து செய்திருத்தல் இயலாது. இவ்வேலை நடைபெறச் சில ஆண்டுகள் ஆகி இருக்கலாம். எனவே, இவன்சுமார், கி.பி. 620 இல் சமணத்தை விட்டுச் சைவனாகி இருக்கலாம். இவன் சமணனாக இருந்தபொழுது சமணர் சொற்கேட்டு அப்பர்க்குப் பலகொடுமைகள் இழைத்தான். இறுதியில் இவன்சைவன் ஆனதும், குடிகள் சைவராக மாறியதில் வியப்பில்லை அன்றோ? எனவே, தொண்டை நாட்டில், அதுகாறும் உயர்நிலையில் இருந்த சமணம் இழிநிலை உற்றது: சைவ சமயம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. அரசனே திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து. அக் கற்களைக் கொணர்ந்து திருவதிகையில் ஒரு சிவன் கோவிலைக் கட்டி, அதற்குத்தன் பெயரால் குணபரம் ஈச்சரம்[8] என்று பெயரிட்டு வழங்கினான் எனின். மகேந்திரன் காலத்தில் தொண்டை நாட்டுச் சைவநிலையை என்னென்பது மகேந்திரன் ஆட்சிதொண்டை நாட்டோடு நின்றதில்லை அன்றோ? அது புதுக்கோட்டைவரை பரவி இருந்ததால்,பல்லவ நாடு முழுவதும் சைவ சமய வளர்ச்சி. வெளிப்படையாகத் தோன்றியது.

இவன் காலத்தரசர்

பல்லவர்க்குக்கொடிய பகைவரான மேலைச் சாளுக்கியர் கிருஷ்ணையாறு வரை ஆண்டு வந்தனர். சாளுக்கியர் படையெடுப்பால் நாட்டை இழந்த கதம்பர் சிற்றரசராக இருந்தனர். இவர்கட்குத் தெற்கே இற்றை மைசூர்ப் பகுதியைக் கங்கர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகரம் தழைக்காடு என்பது. வடக்கே கோதாவரிக்கும் கிருஷ்ணையாற்றிற்கும் இடையில் கீழைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். தெற்கே பாண்டியர் வன்மையுடன் ஆண்டு வந்தனர். பாண்டிய நாடடிற்கும் பல்லவர் நாட்டிற்கும் இடையே சோழர், களப்பிரர் என்போர் சிற்றரசர்களாக இருந்து சில ஊர்களை ஆண்டு வந்தனர். களப்பிரர் ஒருகால் பல்லவரையும் மற்றொருகால் பாண்டியரையும் தழுவிக் காலத்திற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து வந்தனர். சோழருள் ஒருபிரிவினர் பல்லவர் துணையால் வடக்கே சென்று கடப்பை கர்நூல் தோட்டங்களைச் சிற்றரசராக இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் தம்மை ரேநாண்டுச் சோழர்கரிகாலன் மரபினர் என்று கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டனர்.[9]

ஆந்திர அரசர் தெலுங்கு நாட்டின் சில பகுதிகளை ஆண்டனர். குண்டுர்க் கோட்டத்தையும் அதற்கு வடக்கே உள்ள கடற்கரை வெளியையும் பீமவர்மன் மரபினர் ஆண்டு வந்தனர். இங்ஙனம் சிற்றரசர் பலர் மகேந்திரன் நாடடில் இருந்தனர்.

மகேந்திரன் அமைத்த கோவில்கள்

இம் மன்னன் பல்லாவரம், சீயமங்கலம், திருவல்லம், திருக்கழுக் குன்றம், மண்டபப்பட்டு, மாமண்டூர், தளவானுர், சிங்கவரம், மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் முதலிய இடங்களில் உள்ள மலைகளை வெட்டிக் குடைந்து கோவில்களை அமைத்தான். இவற்றுள்.(1) மாமண்டுர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் குடையப்பட்டடவை பெருமாள்கோயில்கள்ஆகும்; (2) சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப் பள்ளி என்னும் இடங்களில் குடையப்பட்டவை சிவன் கோயில்கள் ஆகும்; (3) மண்டபப் பட்டில் மும்மூர்த்தி கோவிலும், (4) சித்தன்னவாசலில் சமணர் கோயிலும் குடையப்பட்டன.

கோவில் அமைப்பு

மகேந்திரன் கோவில்களைக் கண்டவுடன் எளிதில் இவை மகேந்திரன் கட்டியவை எனக் கூறிவிடலாம். இக்கோவில்கள்

அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து தஅமைத்தவை. இவை மலை உச்சியினும் இரா, அடியிலும் இரா, இடையிற்றான் இருக்கும். இத்தகைய இடத்தில் ஒரு கோவிலைக் குடையும்பொழுது, ஆங்குத் துண்களையும் சுவர்களையும் மூர்த்தங்களையும் செய்வதற்காக இடம்விட்டு, மிகுந்த இடமே குடையப்பட்டிருக்கும். தூண் கீழும் மேலும் சதுரமானது; நடுவில் மூலை செதுக்கப்பட்டது.தூணின் முழு உயரம் ஏழு முழம்; மேற்சதுரமும் கீழ்ச்சதுரமும் இரண்டிரண்டு முழம் உயரம் இருக்கும். சதுரத்தில் தாமரை மலர் செதுக்கப்பட்டிருக்கும். தூண்களின் புறங்களில் மகேந்திரன் பட்டப்பெயர்கள் பல செதுக்கப் பட்டிருக்கும். துணின் போதிகை சதுரக் கற்பலகையால் இயன்றது. கோவிற் சுவர்களின் மீது சித்திர வேலை காணப்படும். கோவில் நடுவில் இறையகம் (கர்ப்பக் கிருகம்) இருக்கும். அதன் இரு புறங்களிலும் வாயிற் காவலர் (துவாரபாலகர்) உருவங்கள் அமைந்திருக்கும். அக்காவலர் பாகை உடையவர். அவர்தம் வலக்கை இடக்கை மீது இருக்கும். இடக்கைஒருதடியைப் பிடித்திருக்கும். அக் காவலர் தடிமீது முன்புறம் சிறிது சாய்ந்த படி பார்பவரை அடிக்க முயல்பவரைப்போலக் காணப்படுவர். கோவிற்கவர்கள் மீது புராணக் கதைகளைக் குறிக்கும் அழகிய சிலைகள் செதுக்கப் பட்டிருக்கும். கோவிற் சுவராகிய பாறையிலேயே (பெருமாள் கோவிலாயின்) விஷ்ணு வடிவம் செதுக்கப்பட்டிருக்கும். இக் கோவில்கள் பலவற்றில் மகேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் இருக்கும். அவை வடமொழியிலும் தென்மொழியிலும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

(1) பல்லாவரம் குகைக்கோயில்

சென்னைக்கடுத்த பல்லாவரம் என்னும் புகைவண்டி நிலையத்துக்கு எதிரே பல குன்றுகள் லாடம் போன்ற அமைப்பில் இருக்கின்றன. அவற்றின் இடையே பல சிற்றுர்கள் இருக்கின்றன. அவற்றுட்பெரியது ‘ஜமீன் பல்லாவரம்’ என்பது. அந்த ஊரில் உள்ள குன்றில் இன்று முஸ்லீம் தொழுகை இடமாக அமைந்துள்ள மண்டபமே மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோவில் ஆகும். இது

மலைச் சரிவில் குடையப்பட்டுள்ளது. ஏறக்குறைய 24 அடி நீளமும் 12 அடி அகலமும் உள்ளது; 5 கற்றுண்களை உடையது; முன் மண்டபத்திற்குள் 5 சிறிய உள் அறைகள் உள்ளன.அவ்வறைகளில் சிலைகள் வைக்க மேடைகள் இருக்கின்றன. அங்கு ஐந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தனவாதல் வேண்டும். இப்பொழுது நடு அறையுள் முஸ்லிம் ‘பீலி’ வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இரு பக்க அறைகள் வெறுமையாக இருக்கின்றன. கடைசிப் பக்க அறைகள் இரண்டும் கதவு அமைந்து பூட்டப்பட்டுள்ளன. குகைக்கோயில் முழுவதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது. மேல் விட்டம் முழுவதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆயின், இன்று அவை படிக்க இயலாத நிலையில் சுண்ணாம்பு படிந்துள்ளன. கற்றுண்கள் மேலே குறிக்கப்பட்ட அளவுள்ளன. இக் குகைக் கோயிலில் உள்ள ஐந்து உள் அறைகளை மகேந்திரன் காலத்துச் சிலைகள் அங்கு இல்லாத பிற்காலத்திற் கண்ட பல்லவபுர மக்கள், உண்மை அறியாது இக் கோவிற்குப் ‘பஞ்ச பாண்டவர் கோவில்’ என்று பெயரிட்டனர். அப்பெயரே இன்றளவும் வழங்கி வருகின்றது. கல்வெட்டுகளில் மகேந்திரன் விருதுப் பெயர்கள் வடமொழயிலும் தெலுங்கிலும் உள்ளன.

(2) பல்லவபுரம்

இக் குகைக் கோவிலுக்கு எதிரே சுற்றிலும் காணப்படும் மலைகளுக்கு இடையில் பழைய பல்லவபுரம் இருந்திருக்க வேண்டும். தெருக்களின் பழையபெயர்களும், சிதைந்த பல கோவில்களின் காட்சியும், பல தெருக்கள் ஆங்காங்கே சிதைந்து இருந்தாலும், தோண்டும் இடங்களில் எல்லாம் உறை கிணறுகளும் மட்டாண்டச் சிதைவுகளும் பழங்காலத் தாழிகளும் இன்ன பிறவும் கிடைத்ததும், மலைகட்கு இடையே அமைந்த இப் பெருவெளி மகேந்திரன் காலத்தில் இயற்கை அரண் கொண்டமுதல்தர நகரமாக இருந்திருத்தல் வேண்டும் - பல்லவனால் அமைந்தமையின் பல்லவபுரம் எனப் பெயர் பெற்றதாதல் வேண்டும் என்னும் செய்திகளைநன்கு உணர்த்தும்.'பல்லவபுரம் என்னும் பெயர் இன்று

‘பல்லாவரம்’ எனவும் லால்குடி தாலுகவில் உள்ள பல்லவபுரம் ‘பல்லவரம்’ எனவும் வழங்குகின்றன.

(3) வல்லம்

வல்லம் என்பது செங்கற்பட்டிற்குக் கிழக்கே திருக்கழுக் குன்றத்திற்குப் போகும் சாலையில் இரண்டு கல் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு சிறிய குன்று இருக்கிறது. அக் குன்றில் மூன்று குகைகள் இருக்கின்றன. நடுக்குகை பெரியது. அதன் வாயில் உள்ள இரண்டு தூண்களில் ஒரு கல்வெட்டுத் தமிழில் உள்ளது. இது.

“பகாப்பிடுகு லளிதாங்குரன்
சத்துரு மல்லன் குணபரன்
மயேந்திரப் போத்தரசன் அடியான்
வயந்தப்பிரிஅரசர் மகன் கந்தசேனன்
செய்வித்த தேவ குலம்”

என்பது.

அஃதாவது, ‘மகேந்திரனதுசிற்றரசனான வசந்தப்பிரியன் மகனான கந்தசேனன் குடைவித்த கோவில்’ என்பது பொருள். அதனால், இக் கோவில் ‘வசந்தேசுவரம்’ எனப் பட்டது. இது சிறிய உள்ளறையையும் முன் மண்டபத்தையும் வலப்பக்கம் ஜேஷ்டாதேவியின் சிலையும் இடப்பக்கத்தில் பிள்ளையார் சிலையும் இருக்கின்றன. உள்ளறையில் லிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த லிங்கம் வட்ட வடிவினது. உள்ளறையின் இருபக்கங்களிலும் வாயிற் காவலர் நிற்கின்றனர். அவர்கள் நேரே பார்க்கின்றனர். கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குறுக்கிட்டுள்ளன. அவர் தலையில் இரண்டு கொம்புகள் இருக்கின்றன. அவர் கைகள் தடிமீது பொருந்தி இருக்கின்றன.

(4) மாமண்டூர்

இது கச்சிக்குத் தெற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள ஒரே சிறிய குன்றில் நான்கு கோவில்கள் உள்ளன.

அவற்றில் மாமண்டூர்ச்சிற்றுரை நோக்கியுள்ள இரண்டு குகைகளில் ஒன்று மகேந்திரன் கல்வெட்டைப் பெற்றுள்ளது. அஃது இவன் புகழைப் பலவாக விரித்துக் கூறுகின்றது. அக்கோவில் தூண்களும், அவற்றில் உள்ள தாமரை மலர்களும் மகேந்திரவாடியில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்துள்ளன. உள்ளறையில் சிலை இருந்திருத்தல் வேண்டும். இங்கும் ஓர் ஏரி மகேந்திரனால் வெட்டப்பட்டது.

(5) மகேந்திரவாடி

இவ்வூர் அரக்கோணத்திற்கு அணிந்தாயுள்ள சோழ சிங்கபுரம் (சோளிங்கர்) என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே மூன்றுகல் தொலைவில் உள்ளது. ஊருக்குக் கிழக்கே உள்ள வெளியில் ஒரு குன்று இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு சிறிய குகைக்கோவில் இருக்கின்றது. இக் கோவில் வல்லத்துக் கோவிலைப் போன்றே காணப்படுகின்றது. தூண் நடுவில் பட்டயங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களால் அழகு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டில் அரசன் குணபரன் எனப்பட்டுள்ளான். கல்வெட்டுப் பகுதி ‘கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பின் கீழ்க் காண்க. இது பெருமாள் கோவில்: ‘மகேந்திர விஷ்ணு கிரஹம்’ என்னும் பெயருடையது. இங்கிருந்த ஏரி மகேந்திரன் வெட்டியதாகும்.

(6) தளவானூர்

இது தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ளது; ‘பேரணி’ என்னும் புகைவண்டி நிலையத்துக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே, ‘பஞ்ச பாண்டவர் மலை’ இருக்கின்றது. அதன் தென் பக்கத்தில் மகேந்திரன் குடைவித்த கோவில் இருக்கிறது. அது “சத்துரு மல்லேஸ்வராலயம்’ என்னும் பெயர் கொண்டது. அக்கோவிலின் உள்ளறை குகைவாயிலை நோக்காது இடப்புறமாக இருக்கின்றது. அஃதாவது குகை தெற்கு முகமாக இருக்கிறது; உள்ளறை கிழக்கு நோக்கி

இருக்கிறது. இடப்புறமுள்ள வாயில் காவலர் வணக்கம் தெரிவிப்பவர் போல ஒரு கையைத் தலைக்குச் சரியாகத் தூக்கி நிற்கின்றனர். வலப்புறக் காவலர் தடிமீது கைவைத்து நிற்கின்றனர். உள்ளறையில் லிங்கம் இருக்கின்றது.

துரண்கள் மகேந்திரவாடியில் உள்ளவற்றை ஒத்துள்ளன. தூண்கள்மீது ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அது ‘திருவாசி’ எனப்படும். அஃது இருபக்கங்களிலும் உள்ள மகர மீன்களின் வாய்களிலிருந்து கிளம்பி நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம் மேடைமீது சிறிய இசைவாணர் (கந்தவர்வர்) இருக்கின்றனர்; மகரமீன்கள் கழுத்துமீதும் இசைவாணர் இருக்கின்றனர். திருவாசியில் இரண்டு வளைவுகள் இருக்கின்றன. அவற்றால் அஃது ‘இரட்டைத் திருவாசி’ எனப்படும். இங்குள்ள கல்வெட்டில் ஒரு பகுதி தமிழ்ப் பாட்டு; மற்றது வடமொழிப் பாட்டு. கோவில் உள்ள இடம் அக் காலத்தில் ‘வெண்பட்டு’ எனப்பட்டது போலும்!

(7) சீயமங்கலம்

இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் வந்தவாசிக் கூற்றத்தில் தேசூருக்கு ஒரு கல்தெற்கே இருக்கின்றது. இது சிம்ம மங்கலம், அஃதாவது சிம்மவிஷ்ணு ‘சதுர்வேதி மங்கலம்’ என்னும் பெயர் பெற்றிருந்திருக்க வேண்டும். அது மருவிச் ‘சீயமங்கலம்’ ஆயிற்றென்னலாம். இங்குள்ள கோவில், பல இருட்டறைகளைத் தாண்டி அப்பால் இருக்கிறது. இங்குள்ள தூணில், “அவனிபாஜனப் பல்லவேஸ்வரம் என்னும் இக் கோவில், லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது,” என்னும் கல்வெட்டுக் காணப்படுகிறது. உள்ளறைலிங்கமும் வாயிற்காவலர் உருவங்களும் வல்லத்தில் இருப்பனபோன்றே அமைந்துள்ளன. இக் குகையின் இரு பக்கங்களிலும் சில சிலைகள் காணப்படுகின்றன. அவை இருக்கும் மாடங்களின் உச்சியில் ‘இரட்டைத் திருவாசி’ என்னும் தோரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

(8) மண்டபப்பட்டு

இது புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. கல்வெட்டு குகைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே, ‘கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல் பல்லவன் கோவில் அமைத்தான் என்பதை உணர்த்தும் கல்வெட்டாகும். எனவே, இக் கோவிலே மகேந்திரன் அமைத்த முதல் கோவிலாக இருக்கலாம்.

இக் கோவிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. அவை பிரமன், திருமால், சிவன் என்னும் மூவர்க்கும் உரியன. காவலர் தடிகளில் பாம்புகள் சுற்றிக் கொண்டிருப்பதாகச் செய்துள்ளது கவனித்தற்குரியது.

(9) திருச்சி மலைக்கோவில்

திருச்சிராப்பள்ளிக் குன்றின் நடுவில் குடைந்து அமைத்த சிவன் கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டதாகும். இதன் மேல்புறச் சுவரில் ஏழடிச் சதுரமுள்ள இடத்தில் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பதுமைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நடுவணது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிற்கும் நிலையும் காணத்தக்கவை. கங்கை அணிந்த சிவபெருமானே எதிரில் நிற்பது போன்ற காட்சியை அச் சிலை அளித்து நிற்றல் வியப்பினும் வியப்பே! அச் சிலை, சிவபிரானது சடையிலிருந்து விழும் கங்கையை வலக்கையில் தாங்கியும் பூணுலாகப் போட்டுள்ள பாம்பின் தலையைப் பிறிதொரு வலக் கையால் பிடித்தும், கண்மணிமாலையை இடக்கை ஒன்றில் பிடித்தும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் நிற்கின்ற காட்சி கண்டுகளிக்கத் தக்கதாகும். இச்சிலையின்வலக்காலின்கீழ் முயலகனைக்குறிக்கும் சிறிய கற்சிலை ஒன்று இருக்கிறது. சிவனைச் சுற்றிலும் அடியார் நால்வர் வணங்குதல் போலவும், மேலே யாழோர் (கந்தர்வர்) இருவரும் சிறிய மனிதன் ஒருவனும் மிதத்தல் போலவும் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இச் சிற்றுளி வேலைப்பாட்டைக் கண்டு வியவாத ஆராய்ச்சி அறிஞர் இல்லை. “இக் கோவிலை ‘சத்யசந்தன், சத்ருமல்லன், குணபரன்’ என்னும் விருதுகள் பூண்ட அரசன் அமைத்தான்.” என்று இங்குள்ள கல்வெட்டுக் குறிக்கிறது.

(10) நாமக்கல் மலைக்கோவில்

இங்குள்ள அரங்கநாதன் மலைக்கோவில் மகேந்திரன் அமைத்தாகும். இங்குள்ள பள்ளிகொண்டபெருமான் உருவம் சிறந்த செதுக்கு வேலை வாய்ந்தது. இதுபோன்ற வேலைப் பாடு உலகில் எங்குமே இல்லை என்னலாம். கோவிலும் அற்புத அமைப்புப் பெற்றது. முன் மண்டபத்துக்கு வெளியிடம் மூங்கிலால் செய்த தாழ்வாரத்தைப் போல மலையைக்குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழகையும் வேலைத்திறத்தையும் நேரிற் காண்பவரே உணர்வர் எழுத்தால் உணர்தலோ - உணர்த்தலோ இயலாது! இயலாது!! கோவிற் சுவர்களில் திருமால் அவதாரக் கதைகள் அழகொழுகும் சிலைகள் வாயிலாக உணர்த்தப்பட்டுள்ளன.[10]

இதுகாறும் கூறிவந்த செய்திகளால் கீழ் வருவனவற்றைச் சுருக்கமாக உணரலாம்:

1. உள்ளறையில் லிங்கம் வைத்த கோவில்கள் பல. அந்த லிங்கங்கள் உருண்டை வடிவின; பட்டை வடிவின அல்ல.

2. வாயிற்காவலர் நேர்ப்பார்வை உடையவர். அவர் கையை உயர்த்தி வணக்கம் தெரிவிப்பவராக அல்லது தடிமீது கைவைத்தவராக இருப்பர்.

3. தூண்கள் எல்லா இடங்களிலும் சதுரத் தூண்களாகவே இருக்கின்றன. கீழும் மேலும் நான்கு முகங்களையும் இடையில் எட்டு முகங்களையும் உடையன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களைக் கொண்டிருக்கும்.

4. மாடங்களில் மேல் உள்ள தோரணங்கள் ‘இரட்டைத் திருவாசி'யே ஆகும்.

5. பெரும்பாலும் தூண்களில் கல்வெட்டுகள் காணப்படும்; அரசன் பட்டப் பெயர்களும் பிற செய்திகளும் பொறிக்கப் பட்டிருக்கும்.

மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும்

மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் பழைமையான அமைப்பு உடையவை ஆதிவராகர் கோவில் ஆகும். அதனைச் சிம்மவிஷ்ணு அமைத்தான் என்று பலர் கூறுவர். அதனை அமைத்தவன் மகேந்திரவர்மனே என்பர் சிலர் அதற்கேற்ற காரணமுங் கூறுவர்.[11] மகாபலிபுரத்தில் உள்ள கோவில்கள் நரசிம்மன் அமைத்தவையே என்பர் பலர். ஆயினும், அவற்றை நன்கு சோதித்துப் பார்ப்பின், தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மன் காலத்தவை என்பதை நன்குணரலாம். “தருமராசர் மண்டபம் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் மண்டபப் பட்டில் உள்ள மகேந்திரவர்மன் அமைத்த கோவிலைப் போன்ற வேலைமுறை கொண்டதாகக் காண்கிறது. முன்னதில், பின்சுவரில் வெட்டப்பட்டுள்ள (பிரமன், விஷ்ணு, சிவன் இவர்க்காக) மூன்று உள்ளிடங்கள் இருத்தல் போலவே, தருமராசர் மண்டபத்திலும் இருத்தல் கவனித்தற்குரியது. கொடிக்கால் மண்டபம் மகேந்திரவாடியில் உள்ள பெருமாள் கோவிலின் அளவு, வேலைப்பாடு முதலியவற்றைக் கொண்டதாகும். வாயிற்காவலர் நிலையிற்றான் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மகேந்திரவாடியில் உள்ள வாயிற்காவலர் இரண்டு கைகளை உடையவர்; நின்ற நிலையினர்; முன்புறம் நோக்கியவர். கொடிக்கால் மண்டபத்தில் உள்ள வாயிற் காவலர் பெண்கள்; என்னை? அக் கோவில் துர்க்கையின் கோவிலாதலால் என்க. எனினும், அப் பெண்களின் பிற அமைப்புகள் (ஆண்) வாயிற்காவலர் அமைப்புகளையே ஒத்துள்ளன. ஒருவர் கையில் தடியும், மற்றவர் கையில் வில்லும் இருக்கின்றன. ஆனால் இருவரும் முன்புறம் நோக்கியே இருத்தல் கவனித்தற்குரியது. பிற்காலப் பல்லவர் அமைத்த வாயிற்காவலர் உருவங்கள் பக்கங்களில் பார்வையைச் செலுத்தியபடி இருத்தலைக் காணலாம். கொடிக்கால் மண்டபக் கூரையைத் தாங்கியுள்ள கற்றுண்கள் இரண்டும் மகேந்திரவர்மன் காலத்து வேலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இறை உறை உட்கோவிலின் தரை, மண்டபத்தரையை விட இரண்டடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளை உடையது. முதற் படிக்கட்டு மகேந்திரவாடியில் உள்ள கோவிற் படிக்கட்டைப்போல அரைமதி அளவினதாக இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களின் எல்லாக் குறிப்புக்களையும் ஒத்திட்டுப் பார்ப்பின், இவை இரண்டும் ஒரே அரசன் காலத்தில் குறிப்பிட்ட கல் தச்சரைக் கொண்டே அமைக்கப் பட்டவை என்பது தெளிவாகும்.[12]

“மகாபலிபுரத்தில் மகேந்திரன் காலத்துக் கோவில்களே இல்லை. எல்லாம் அவன் மகனான நரசிம்மவர்மன் என்னும் மகாமல்லன் அமைத்தவையே என்று ஆராய்ச்சியாளர் பலர் நன்கு ஆராயாது கூறிவிட்டனர். பல்லாவரத்திலிருந்து புதுக்கோட்டை வரை பல இடங்களில் குகைக் கோவில்களை அமைத்த மகேந்திரவர்மன், காஞ்சிக்கு அண்மையில் உள்ள மகாபலிபுரத்தைக் கவனியாது இருந்திருத்தல் முடியுமா என்பதை அவர்கள் எண்ணிப்பார்த்திலர். இதுகாறும் கூறிய ஒப்புமைச் செய்திகளால், தருமராசர் மண்டபமும் கொடிக்கால் மண்டபமும் மகேந்திரன் காலத்தன என்பதை நன்குணரலாம் அன்றோ?[13]

இக் கோவில்கட்கு மூலம்

கிருஷ்ணையாற்றங் கரையில் விதுகொண்டாவைத் தலை நகரமாகக் கொண்டு கி.பி. 450-620 வரை ஆண்டவிஷ்ணு குண்டர் என்னும் மரபினர் பெசவாடா, மொகல்ராசபுரம், உண்டவல்லி, சித்தநகரம் முதலிய இடங்களில் குகைக்கோவில்களை அமைத்தனர். அவர்கள் நாடு கி.பி. 610க்குப் பிறகு சாளுக்கியர் ஆட்சிக்குட்பட்டதால், அவர் தம் கோவில்கள் சிலவே ஆயின. அக் கோவில்களை மகேந்திரவர்மன் பார்த்து மகிழ்ந்தவன் ஆதலின், அவற்றைப் போலவே தன் நாட்டிலும் பல குகைக் கோவில்களை அமைத்தான்.[14] திருச்சிராப்பள்ளி, வல்லம், மாமண்டூர் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்கள் உண்டவல்லியில் உள்ள குகைக் கோவில்களைப் போலவே அமைக்கப்பட்டவையாகும்.[15] கிருஷ்ணையாற்றங்கரையில் உள்ள குகைக்கோவில்களைப் பார்த்த பிறகு மகேந்திரன் அமைத்த முதல் குகைக்கோவில்- சுண்ணாம்பு, செங்கல் முதலியன இல்லாமல் அமைத்ததமிழ் நாட்டு முதற் குகைக் கோவில் - மண்டபப் பட்டில் உள்ள கோவிலே ஆகும். இவனுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தில் கற்கோவில்கள் இல்லை என்பது இவனது மண்டபப்பட்டுக் கல்வெட்டால் நன்கறியலாம். சாருதேவி காலத்துப் பெருமாள் கோவிலும், இரண்டாம் கந்தவர்மன் காலத்துத் திருக்கழுக்குன்றக் கோவிலும் மண்ணாலும் மரத்தாலும் கட்டப்பட்டவை. ஆதலால், அவை அழிந்துபோயின. என்றும் அழியாமல் இருக்கத்தக்க நிலையில் கோவில்களைக் கற்களைக் கொண்டு- பாறைகளைக் கொண்டு-மலைகளைக் குடைந்து அமைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கே உரியதாகும். தமிழ்நாட்டு ஒவிய சிற்பக் கலைகட்குக் கற்கள் வாயிலாகப் புத்துயிர் தந்து நிலைக்கச் செய்தவன் இப்பெருந்தகையே ஆவன்.[16]

மகேந்திரன் கல்வெட்டுகள்

இப்பேரரசன் கல்வெட்டுகளுள் பெரும்பாலன இவன் அமைத்த கோவில்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டே இவன் வரலாறு, சமயம், திருப்பணி முதலியவைபற்றி அறிய இடம் உண்டாகிறது. ஆதலின் அவற்றுட் சில காட்டாக ஈண்டுத்தருதும்:

(1) திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் கல்வெட்டுகள்:

(1) யாற்றை விரும்பும் இறைவன்-தோட்டங்களையும் விரும்பத்தக்க குணங்களையும் உடைய காவிரி யாற்றைக் கண்டு, அவள்மீது காதல் கொள்வான் என்று மலையரையன் மகள் ஐயமுற்றுத் தான் பிறந்தகத்தை விட்டு, இம் மலைமீது நின்று கொண்டு. ‘இவயாறு பல்லவனது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

(2) குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன் ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்து திரும்பிவந்த அவனது அறிவு (இக் கோவிலில் அவன் வைத்துப் பூசித்த) லிங்கத்தால் உலகெலாம் பரவட்டும்.

(2) சீயமங்கலக் கல்வெட்டு: அவனிபாஜன பல்லவேசுரம் என்னும் இக் கோவிலை லளிதாங்குர மன்னன் தன் உள்ளத்தைப் பேழையாகவும் நன்மையை அதனுள் வைக்கும் அணியாகவும் கொண்டு அமைத்தான்.

(3) மகேந்திரவாடிக் கல்வெட்டு: நல்லவர் அனைவரும் மிகப் புகழ்வதும் மக்கட்கு இன்பம் பயப்பதும் ஆகிய அழகிய ‘மகேந்திர விஷ்ணுக்ருகம்’ என்னும் முராரியின் பெருங்கற்கோவிலை மகேந்திரனது பேரூரில் மகேந்திர தடாகத்தின் கரையில் பாறையைப் பிளந்து குணபரன் அமைத்தான்.[17]

மகேந்திரன் பட்டப் பெயர்கள்

இப் பெருந்தகைக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. அவற்றுள் சில வருமாறு: குணபரன், அவனிபாஜனன், லளிதாங்குரன், புருஷோத்தமன், சத்திய சந்தன், விசித்திர சித்தன்,[18] நரேந்திரன், சேத்தகாரி,[19] போத்தரையன், சத்துரு மல்லன், மகாப்பிடுகு[20] நயபரன், விக்ரமன், கலகப் (போர்) பிரியன், மத்தவிலாசன், அநித்தியராகன்[21] சங்கீரண சாதி, நரவாகனன். உதாரசித்தன், பிரகிருதிப் பிரியன், அலுப்தகாமன்.[22] நிரபேக்ஷன் (ஆசையற்றவன்) முதலியன. பல தெலுங்குப் பட்டங்கள் இருத்தலையும் குண்டுர்க் கோட்டத்தில் ‘சேஜர்லா’ என்னும் இடத்தில் இவன் கல்வெட்டுக் காணப்படலையும் நோக்க, இவன் கிருஷ்ணையாறுவரை ஆண்ட பேரரசன் என்பது நன்கு விளங்குகிறது.

மகேந்திரன் வளர்த்த கலைகள்

மகேந்திரவர்மன் நாகரிகக் கலைகளான இசை, நடனம், சிற்பம், ஒவியம், நாடகம் இவற்றை நலமுற வளர்த்தவன், புதுக்கோட்டைச் சீமையில் உள்ள இவன்கல்வெட்டுகளே இவற்றை விளக்கவல்லன. சித்தன்னவாசல் குகைக் கோவில் இவன் காலத்தது. அதில் உள்ள காரைச் சுவர்க்கோலங்கள் (Farcoes) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டு ஓவியக் கலையை உலகிற்கு உணர்த்தும் ஆற்றல் பெற்றுள்ளன. அவற்றைக்கண்டு வியவாத ஆராய்ச்சியாளர் இல்லை; ஒவியத்திறவோர் (நிபுணர்) இல்லை. அங்கு ஓவியக் கலையில் நடனக்கலையை உணர்த்தலே பின்னும் சிறந்ததாகும். யாழோர் (கந்தருவ) நடனமாதர் இருவர் நடிப்பைக் குறிக்கும் ஓவியங்களே கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பனவாகும். அக் கோவில் சமணர் கோவிலாதலின் தீர்த்தங்கரர் உருவச் சிலைகள் காண்கின்றன. அவற்றால் அக் காலச் சிற்பக்கலை உணர்வை நன்குணரலாம். இங்ஙனம் சித்தன்னவாசல் குகைக்கோவில் ஓவியம், சிற்பம், நடனம் என்னும் மூன்று சிறந்த கலைகளைத் தெளிவாக உணர்த்தும் கலைக்கூடமாக விளங்குகிறது. இதன் விளக்கம் “இசையும் நடனமும்,” “ஒவியமும் சிற்பமும்” என்னும் பகுதிகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக் காண்க.

நடனத்தில் விருப்புடையவர் இசையில் விருப்புடையராகவே இருப்பர் என்பது உறுதி. ஆதலின், மகேந்திரவர்மன் இசைநுட்பம் உணர்ந்தவனாதல் வேண்டும். இதற்குத் தக்க சான்று புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்த குடுமியா மலையில் உள்ள கல்வெட்டே ஆகும். ‘இந்தக் கல்வெட்டு இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்த உருத்திராச்சாரியார் என்பவர் மாணவனான அரசன் கட்டளைப்படி வெட்டப்பட்டது.’ என்பதே அக் கல்வெட்டின், சாரம், மாமண்டூரில் உள்ள ஒரு கல்வெட்டில் உள்ள புகழ்ச்சி மொழிகளையும் அதில் சுரம் (ஸ்வரம்) வர்ணம் இவற்றை வகுத்த வான்மீகியாரைப் பற்றிக் காணப்படும் குறிப்பையும், மத்தவிலாசப் பிரகசனம் பற்றிய குறிப்பையும், குடுமியாமலைக் கல்வெட்டிற்கும் திருச்சிராப்பள்ளியில் உள்ள குகைக் கோவில் கல்வெட்டிற்கும் உள்ள ஒருமைப்பாட்டையும் கண்டு வியந்த ஆராய்ச்சியாளர், ‘குடுமியாமலைக் கல்வெட்டு மகேந்திரன் கட்டளையாற்றான் வெட்டப்பட்டது. அவன் இசையில் வல்லவனாக இருத்தல் வேண்டும்’ என்று அழுத்தமாகக்[23] கருதுகின்றனர்.

மகேந்திரன்-நாலாசிரியன்

மாமண்டூர்க் கல்வெட்டில் குறிக்கப்பட்ட மத்தவிலாசப் பிரகசனம்[24] என்னும் நூல் சில ஆண்டுகட்கு முன்னரே திருவிதாங்கோட்டில்[25] வெளிடப்பட்டது. இந்நூல் வடமொழியில் வரையப்பட்டது. மகேந்திரவர்மன் வடமொழிப் புலவன் என்பதை இந்நூல் மெய்ப்பிக்கிறது. இது, கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்தியதை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. காபாலிக சமயத்தவன் ஒருவன் ஒழுக்கம் கெட்ட காபாலினி[26] ஒருத்தியுடன் குடித்து மயங்கிக் கிடத்தல், அப்பொழுது அவன் கையில் இருந்த காபாலத்தை (பிச்சைப் பாத்திரம்) ஒரு நாய் கவர்ந்து செல்லல், அதனை அறியாத காபாலிகள் அவ்வழியே சென்ற பெளத்த துறவியை மறித்துப் பூசல் இடல், இப் பூசலைத் தீர்க்க ஒழுக்கம் கெட்ட பாசுபத சமயத்தான் ஒருவனைக் காபாலிகள் அழைத்தல், இறுதியில் வெறியன் ஒருவனிடமிருந்து காபாலத்தைப் பெறுதல் ஆகிய செய்திகளை விளங்கக் கூறும் சிறுநூலே மத்தவிலாசப் பிரகசனம் என்பது. இந்நூலில் மகேந்திரன் சிறப்பும்-சத்ரு மல்லன், அவநிபாஜனன், குணபரன், மத்த விலாசன் என்னும் விருதுப்பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால் அறியப்படுவன

மகேந்திரவர்மன் காலத்தில் பெளத்தம், காபாலிகம், பாசுபதம் முதலிய சமயங்கள் இருந்த நிலையை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது. (1) பிராமணனுக்குப் பூணுல் எத்துணைச் சிறந்ததோ அத்துணைச் சிறந்தது காபாலிகனுக்குக் காபாலாம். அவன் அதனை இழந்தால் குறித்த காலத்திற்குள் அதனை அடைந்து தீரவேண்டும் என்பது விதி. அவன் தன் உடம்பெங்கும் சாம்பல் பூசிப் பார்வைக்கு அருவருப்பாக இருப்பான், மண்டை ஒட்டில் மதுவை அருந்துவான். அவன் மாட்டுக் கொம்பொன்றையும் ஏந்தித் திரிவான்; வழிபாட்டின் போது அதனை ஊதுவான். அதனில் நீர் அருந்துவான். காபாலிக ஆடவர் காபாலிகப் பெண்டிருடன் கள்ளங் கவடில்லாமல் பழகி வந்தனர். (2) பெளத்த துறவிகள் ஊன் உண்டுவந்தார்கள்; பல பெளத்தப் பள்ளிகளை (விகாரங்களை) நடத்திக் கொண்டு இன்பமாகக் காலங்கழித்து வந்தனர்; தங்கள் சமயக் கட்டளைகளை மீறி வந்தனர்; தங்கள் குறைகளை மறைக்கவே உடலை மூடித் திரிந்தனர். அவர்கள் தலைவரான புத்தர், வேதங்கள், மகாபாரதம் இவற்றிலிருந்தே தம் சமயக் கொள்கைகளைத் திருடினார் என்பது காபாலிகள் பெளத்தர் மீது கூறும் குறைபாடு ஆகும். இச் செய்தியிலிருந்து மகேந்திரன் காலத்தில் காஞ்சியில் பல புத்தப் பள்ளிகள் இருந்தன என்பது தெளிவாகிறது. இவனுக்குப் பிறப்பட்ட நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிக்கு வந்த இயூன்-சங்[27] காஞ்சியில் பல பள்ளிகள் இருந்தமைபற்றி எழுதியுள்ள குறிப்பு இத்துடன் ஒன்றுபடுதல் கவனிக்கத்தக்கது.

நால் எழுதப்பெற்ற காலம்

இந்நூலுட் சமணரைப்பற்றியும் ஓரளவு இழித்துக் கூறலால் இது, மகேந்திரன் சைவனாக மாறிய பிறகே செய்யப் பட்டதாக இருக்கலாம். திருச்சிராப்பள்ளியில் லிங்க வழிபாட்டை உயர்த்திக் கூறிய இவன்-சமணத்தை விட்டுச் சைவனாக இவன்-சைவனான பிற்காலத்தில் இதனை எழுதினான் என்பது இதனை ஒருமுறை வாசிப்பின் நன்கு விளங்கும். இவன் சமணத்தை விட்டபொழுதே பல்லவ நாட்டில் சமணம் வீழ்ச்சியுற்றது: சைவம் ஓங்கலாயிற்று. சமண பெளத்தர் பழக்க வழக்கங்கள் இழிந்த நிலைக்கு வரலாயின. அவற்றைக் கண்ட தமிழ்மக்கள் அச் சமயத் துறவிகளை வெறுக்கலாயினர். இவ்வுண்மையை அப்பர், சம்பந்தர் ஆழ்வார்கள் இவர்தம் அருட்பாடல்களில் நன்கு காணலாம். சங்ககாலத்திற் சிறப்புற்று நல்ல உரிமையோடு இருந்த சமண பெளத்த சமயங்கள், பிற்காலத்தில் அவற்றைச் சேர்ந்தவருடைய தீய பழக்க வழக்கங்களால் இழிநிலையை அடையலாயின என்பதே இதன் கருத்தாகும்.

சிறந்த குணங்கள்

மகேந்திரவர்மனைப் பற்றிய கல்வெட்டுகளிலிருந்து, ‘இவன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன், இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன் சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன். போரிற் சிறந்தவன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் செய்த மத்த விலாசத்திலிருந்து, ‘இவன் தந்தை பால் மிக்க மதிப்புடையவன்; தன் நாட்டுப் பல சமயங்களை ஆராய்ந்து அறிந்தவன். கலாவிநோதன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் எச்சமயத்தில் இருப்பினும், அதனைப் பழுதற உணர்ந்தவன் என்பதற்குச் சித்தன்னவாசல் (சமணத்தைப் பற்றிய) சித்திரங்களும் திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் (சைவத்தைப் பற்றிய) கல்வெட்டும் தக்க சான்றாகும்.


  1. Vide Dr. N. Venkataramamayya’s article on “Mahendravarmanan Pulikesin II’.
  2. Epigraphia Indica, VI, p. 11 143.
  3. S.I.I. II, p.356.
  4. Heras’s “Studies in Pallava History’, pp.32-33
  5. Epigraphia Carnataca, Vol.VIII, No.35.
  6. Mysore Archaeological Report, 1923, p.83.
  7. S.I.I. Vol. I, p.29.
  8. குணபரன் - மகேந்திரவர்மன் - திருநாவுக்கரசர் புராணம், செ.146.
  9. K.A.N. Sastry’s Cholas, Vol.I p. 122.
  10. P.T. Srinivasa Iyengar’s “Pallavas’ PII,pp.9,10.
  11. Heras’s “Studies in Pallava History’, pp.71-75.
  12. Longhurst, “Archaeological Survey of India, Memoir No.33, pp.10-13.
  13. Heras’s “Studies in Pallava History’,pp.77,78.
  14. Durbruell’s “The pallavas’, p.35.
  15. R. Gopalan’s “Pallavas of Kanchi’ p.161.
  16. Heras’s “Studies in Pallava History’, p:81,82.
  17. S.I.I. vol.I, pp.29,30,40.
  18. சிற்ப ஓவியக் கலைஞன்.
  19. கோவில்கள் அமைத்தவன்.
  20. பகைவர் மேல் இடிபோலப் பாய்பவன்.
  21. நடன இசைக் கலைகளின் அறிஞன்.
  22. 'கலப்புப் பிறவியுடையவன்-தந்தை பல்லவன், தாய்தமிழ்ப் பெண் ஆக இருக்கலாம்’ என்பவர் திரு. பி.டி. சீனிவாசா ஐயங்கார் Vide his"pallavas’ part II, p.13. இது தவறு. ‘சங்கீரணம்’ என்னும் தாளவகைகளைப் புதியனவாகக் கண்டுபிடித்தவன் என்பதே இதன் பொருள்.
  23. Prof. J. “Durbrueil's, “Pallavas.’ p.23, இசையைப் பற்றிப் பிற்பகுதியிற் காண்க
  24. இதன்தமிழ் மொழிபெயர்ப்பைச் ‘செந்தமிழ்ச்செல்வி'யிற் காண்க.
  25. திருவிதாங்கோடு என்பதே பழைய பெயர்.
  26. சாதவாகனர் காலத்திலும், காபாலினியர் தெலுங்க நாட்டில் இருந்தனர் & Dr. K.Gopalachari’s “Early History of the Andhra Country,’ p.123.
  27. Beal’s Records, Vol.II p.229