பல்லவர் வரலாறு/11. பரமேசுவரமன் - (கி.பி. 610-685)

விக்கிமூலம் இலிருந்து

11. பரமேசுவரவர்மன்
(கி.பி. 670-685)[1]

இரண்டாம் மகேந்திரவர்மன் (668-670)

இவன் நரசிம்மவர்மன் மகன். இவன் வரலாறு கூறும் பட்டயம் ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. ‘இவன் அவ்வவ் வகுப்பார் நடக்க வேண்டும் முறைகளைக் கூறும் அறநூல்வழி ஆண்டான்’ என்று மட்டுமே வேலூர் பாளையப் பட்டயம் கூறுகிறது. இவன் நெடுங்காலம் ஆண்டனன் என்பது தெரியவில்லை. இவனுக்குப் பின் வந்த பரமேசுவரவர்மன் காலம் கி.பி. 670-685 என்னலாம்.

பல்லவர் - சாளுக்கியர் போர்

பரமேசுவரன் காலத்தில் சாளுக்கிய அரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆவான். அவன் சிறந்த போர்வீரன். அவன் தன் தந்தை அடைந்த இழிவையும் தலைநகரம் அடைந்த அழிவையும் போக்கிக்கொள்ள அவாவிப் பல்லவநாட்டின் மீது படையெடுத்தான். இப் படையெடுப்பைப் பற்றிச் சாளுக்கியர் பட்டயங்களும் பல்லவர் பட்டயங்களும் குறிப்புகள் தருகின்றன. அவ் விரண்டையும் ஆராய்ந்து முடிவு காணலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) முதலாம் விக்கிரமாதித்தன் வெளியிட்ட ‘கர்நூல்’ பட்டயம் கூறுவது: “விக்கிரமாதித்தன் தன் தந்தையின் பட்டத்தைத் தன் வலிமையால் அடைந்தான்; மூன்று கூட்டரசரை வென்று தன் உரிமையை நிலைநாட்டினான்; தன் பகைவரைப் பல நாடுகளில் வென்று தன் உரிமையைப் பெற்றான்,” என்பது.

(2) இவனே வெளியிட்ட ‘கத்வல்’ பட்டயம் கூறுவது: “ஸ்ரீ வல்லபனாகிய விக்கிரமாதித்தன் நரசிம்மவர்மனது பெருமையை அழித்தான், மகேந்திரன் செல்வாக்கை அழித்தான், ஈசுவர போத்தரசனை (பரமேசுவரவர்மனை) வென்றான். இவன் மகாமல்லன் மரபை அழித்தமையால், இராச மல்லன் என்னும் விருதுப் பெயரைப்பூண்டான். இவன் (பரம) ஈசுவர போத்தரசனைத் தோற்கடித்தான்; தென் நாட்டின் ஒட்டியாணமாக விளங்கும் காஞ்சியைக் கைப் பற்றினான். அதன் பெரிய மதிற்கூவர் ஏற முடியாததும் உடைக்கக் கடினமானதும் ஆகும். அம்மதிலைச்சுற்றித் தாண்ட முடியாத ஆழமான அகழி இருந்தது,” என்பது.

(3) விநாயதித்தன் வெளியிட்ட ‘சோரப்’ பட்டயம் கூறுவது; “பல்லவர் கோவைத் தோற்கடித்த பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சியை அடைந்தான்."[2] என்பது. ‘கேந்தூர்ப்’ பட்டயம். “தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்,” என்று கூறுகிறது.[3]

பல்லவர் பட்டயங்கள்

(1) பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயம் கூறுவது: “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல இலக்கம் வீரரைக் கொண்ட விக்கிரமாதித்தனை, கந்தையைச் சுற்றிக் கொண்டு ஓடும்படி செய்தான்,”[4] என்பது.

(2) இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘உதயேந்திரப்’ பட்டயம் உரைப்பது; “பரமேசுவரவர்மன்பெருவளநல்லூரில் நடந்த பெரும் போரில் வல்லபன் (விக்கிரமாதித்தன்) படையை முறியடித்தான்,”[5] என்பது.

(3) மூன்றாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘வேலூர் பாளையப்’ பட்டயம் பகர்வது; பரமேசுவரவர்மன் தன் பகைவர் அகந்தையை அடக்கியவன். அவன் சாளுக்கிய அரசனது பகைமையாகிய இருளை அழிக்கும் பகைவனாக இருந்தான்,”[6] என்பது.

ஆராய்ச்சி

இருதிறத்தார் பட்டயங்களும் வெற்றி ஒன்றையே குறித்தல் காண முடிவு கூறல் கடினமாக இருக்கின்றது. ஆயினும், இரண்டு சிறப்பு மொழிகளை இங்குக் காணல் வேண்டும்: (1) சாளுக்கியர் காஞ்சியைக் கைப்பற்றியது:

(2) பல்லவர் பெருவள நல்லூரில் சாளுக்கியரைத் தோற்கடித்தது. இரண்டும் உண்மையாகவே இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவை இரண்டும் ஒரே படையெடுப்பில் வெவ்வேறு காலத்தில் உண்டானவை எனக் கொள்ளின் உண்மை புலனாகும்.

விக்கிரமாதித்தன் முதலில் பல்லவனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினான். பிறகு நேரே (‘கத்வல்’ பட்டயம் கூறுமாறு) சோழ நாட்டில் உள்ள உரகபுரத்தை (உறையூரை)[7] அடைந்து தங்கினான், பல்லவர் பட்டயம் கூறும் பெருவள நல்லூர் திருச்சிராப்பள்ளிக்கு 12கல்தொலைவில் உள்ளது. எனவே,அஃது உறையூருக்கும் அண்மையதே ஆகும். விக்கிரமாதித்தன் தோல்வியூற்ற இடம் பெருவள நல்லூர் ஆகும். எப்பொழுதும் தான் தோற்ற செய்தியை எந்த அரசனும் தன் பட்டயத்தில் கூறான் அல்லவா? ஆதலின், காஞ்சியை இழந்ததாகப் பல்லவர் பட்டயங்கள் கூறவில்லை. பெருவள நல்லூரில் தோற்றதாகச் சாளுக்கியர் பட்டயங்கள் கூறவில்லை. இங்ஙனம் காணின், முதலில் வெற்றி கொண்ட சாளுக்கியன் முடிவில் இழிவான தோல்விபெற வேண்டியவன் ஆயினான் என்பது பெறப்படும்.

போர் நடந்த முறை

இப் போரைப்பற்றிச் சிறந்த அறிஞரான ஈராஸ் பாதிரியார் பின்வருமாறு கூறுகிறார்: “பல்லவர் படை வழக்கம் போலக் காஞ்சிக்கு அண்மையிலேயே இருந்திருக்கலாம்; சாளுக்கியர் படை முன்னதைத் தோற்கடித்திருக்கலாம். தோற்ற படை கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது. உடனே சாளுக்கியர் படை அரிதின் முயன்று அகழியைக் கடந்தது ஏறமுடியாத மதில் மீது முயன்று வருந்தி ஏறியது; மதிலைத் துளைத்தது; இறுதியிற் காஞ்சியைக் கைப்பற்றியது... பரமேசுவரவர்மன் தப்பி ஒடிவிட்டான். அதனால் எதிர்ப்பவர் இன்றிச் சாளுக்கியன் தன் பெரும்படையுடன் பல்லவநாடு முழுவதும் கற்றுப்போக்குச்செய்து, இறுதியில் காவிரிக் கரையில் உறையூரில் வந்து தங்கினான். அவன் அப்பொழுதுதான் தான் அடைந்த வெற்றிக்கறிகுறியாகக் ‘கத்வல்’ பட்டயம் (25-4-674 இல்) வெளியிட்டான்.

“இதற்கு இடையில் பரமேவரவர்மன் ஆந்திர நாடு சென்று, பெரும்படை திரட்டித் தெற்கே வந்து, தன் வெற்றியில் வெறி கொண்டிருந்த சாளுக்கியனைத் திடீரென எதிர்த்தான்; போர் பெருவள நல்லூரில் கடுமையாக நடந்தது. (இப்போரின் கடுமையைக் கூரம் - பட்டயம் தெளிவாக விளக்குகிறது) போர் பல நாட்கள் நடந்தன. இறுதியில் பல்லவப்பேரரசன்வெற்றிபெற்றான். இருதிறத்தார்க்கும் கடுமையான இழப்பு (நட்டம்) உண்டானது. சாளுக்கிய மன்னன் புறங்காட்டிஓடி ஒளிந்தான்.”[8]

கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று “பரமேச்சுரன் வாதாபியை அழித்தான்’ எனக் கூறலால், ‘இவன் விக்கிரமாதித் தனைத் துரத்திச் சென்று, நரசிம்மனைப் போலவே சாளுக்கியர் தலைநகரையும் அழித்து மீண்டான்’ என்பதை அறியலாம்.[9]

போர் வருணனை

இப் போரைப்பற்றிக் கூரம்-பட்டயம் வருணித்தல் காண்க: “கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் நடந்து சென்றமையாற் கிளம்பிய துளி கதிரவனை மறைப்பக் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் மங்கியது. முரசொலி இடியோசைபோல அச்சமூட்டியது. உறையில் இருந்து வெளிப்பட்ட வாட்கள் மின்னல்போலக் கண்களைப் பறித்தன. கரிகள் கார்மேகங்கள்போல அசைந்தமை கார்காலத் தோற்றத்தைக் காட்டியது. போரில் உயர்ந்த குதிரைகள் நின்றிருந்த காட்சி கடல் அலைகள் போலத் தோன்றியது. அவற்றின் இடையில் கரிகள் செய்த குழப்பம் கடலில் அச்சுறுத்தும் பெரிய உயிர்கள் வரும்போது உண்டாகும் சுழலை ஒத்திருந்தது. கடலிலிருந்து சங்குகள் புறப்பட்டாற் போலச் சேனைக் கடலில் இருந்து வீரர் சங்கொலி எங்கும் பரப்பினர். கத்தி, கேடயம் முதலியன பறந்தன. பகைவர் போரிட்டு வீழ்ந்து கிடந்த நிலைமை, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் வீழ்ந்து கிடக்கும் நிலையை ஒத்திருந்தது. போர் வீரர்கள் நாகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்த காடுகளை ஒப்ப அணியணியாக நின்றனர். வீரர் வில்லை வளைத்து அம்பை விடுத்தபோது உண்டான ஓசை, காட்டில் காற்றுத் தடைப்பட்ட காலத்தில் உண்டாகும் பேரோசையை ஒத்திருந்தது. கரிகள் ஒன்றோடொன்று பொருதபொழுது தந்தங்கள் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன. குதிரை வீரர், வாட்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு எடுக்க முடியாமல் நின்றனர். சிலர் மயிர் பிடித்து இழுத்துச் சண்டையிட்டனர். ‘கதைகள்’ ஒன்றோடு ஒன்று மோதின. செந்நீரும் கரிகளின் மதநீரும் நிலத்தில் தோய்ந்து பரந்த காட்சி, தரையில் மஞ்சள் பூசினாற்போல ஆயிற்று. வீரர்களுடைய, கரி-பரிகளுடையதலைகளும் கைகளும் கால்களும் தொடைகளும் பிறவும் வெட்டுண்டு சிதறுண்டன. இருதிறத்தாரும் முன்னும்பின்னும் அலைந்து, ஒடிச்சண்டையிட்டனர். யாறாக ஓடின் இரத்தத்தின் மேல் பாலமாக அமைந்த யானை உடலங்கள் மீது வாள்வீரர் நின்று போரிட்டனர். அப்பொழுது நெற்றி அணங்கு வெற்றி என்னும் ஊஞ்சலில் இருந்து ஆடினாள். இறந்த வீரர் கைகளில் வாள்முதலியன அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். அவர் கண்கள் சிவந்திருந்தன. பெருவீரர் அணிந்திருந்த அணிகள் யாவும் பொடியாகிக் கிடந்தன. பேய்கள் முதலியன செந்நீர் குடித்துமதி மயங்கின. முரசுக்கேற்ற தாளம்போலத்தலை அற்ற முண்டங்கள் கூத்தாடின. பல நூறாயிர வீரருடன் வந்த விக்கிரமாதித்தன், தனியனாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடி ஒளிந்தான். இப்போரில் சண்டையிட்ட ரமேசுவரவர்மனது போர்ப்பரியின் பெயர் அரிவாரணம்; குதிரையின் பெயர் அதிசயம்.’[10]

சாளுக்கியர் - பாண்டியர் போர் (கி.பி. 674-675)

‘விக்கிரமாதித்தன் உறையூரில் தங்கிய பிறகு பாண்டிய நாட்டைத் தாக்கினான். பாண்டியன் நெடுமாறன் மகனான கோச்சடையன் அவனை எதிர்த்து மங்கலாபுரத்தில் முறியடித்தான் என்று வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர்.[11] இது தவறு. என்னை? கோச்சடையன் மங்கலாபுரத்தில் மகாரதரை[12] வென்றான் என்று பட்டயங்கள் பகர்கின்றனவே அன்றி வேறில்லை ஆதலின் என்க.

விக்கிரமாதித்தனை நெல்வேலியில் வென்றவன் நெடுமாறனே ஆவன் என்பதை, “வில்வேலிக் கடல்தானையை நெல்வேலிச் செருவென்றும்” எனவரும் வேள்விக்குடிச் செப்பேட்டு அடி, குறிப்பாக உணர்த்துகிறது. ‘வில்வேலி என்பவன் சாளுக்கியன் படைத்தலைவனாக இருக்கலாம். “வில்லவனை நெல்வேலியிற் புறங்கண்ட பராங்குசன் என்பது சின்னமனூர்ச் செப்பேட்டு அடி ‘வில்வேலி, வில்லவன்’ என்பன ‘வல்லபன், வல்லவன்’ என்பவற்றின் திரிபாகலாம். வல்லபன் என்பது சாளுக்கியர்க்கு இருந்த பொதுப் பெயர் ஆகும். தென்னாட்டில் அக்காலத்தில் ‘கடல் போன்ற தானை உடைய பேரரசர் வேறு இல்லை. பல்லவர் படை எனின், பட்டயங்கள் வெளிப்படையாகக் குறித்திருக்கும். விந்த மலைக்குத்தென்பால் அந்நாளில் இருந்த பேரரசுகள்-கடல் போன்ற தானை உடையவை இரண்டே யாகும். ஒன்று பல்லவ அரசு; மற்றொன்று சாளுக்கிய அரசு. அத்தகைய பெரும் படையையுடைய பேரரசனை வென்றமையாற்றான். நெடுமாறனுக்கு இரண்டு நூற்றாண்டுகட்குப்பின் இருந்தவரான சுந்தரர்,

‘நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்”209[13]

என்று தமது திருத்தொண்டத் தொகையுட் கூறியுள்ளார். இதனால், நெடுமாறன் பெற்ற வெற்றிகள் அனைத்திலும் நெல்வேலியில் பொருது பெற்ற வெற்றியே பெருஞ் சிறப்புடையது என்ற கருத்துக் கி.பி.9ஆம் நூற்றாண்டு மக்களின்டப் பரவி இருந்தது என்பது நன்கு தெரிகிறது. ஆதலின், நெல்வேலிப் போர் எளிதானதன்று. அங்குப் பாண்டியனை எதிர்த்தவன் பெரு வேந்தனாக இருத்தல் வேண்டும்: போர்கடுமையாக நடந்திருத்தல் வேண்டும்; இறுதியில் நெடுமாறன் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். இன்றேல், பிற போர்களை விட்டு நெல்வேலிப் போரைச் சுந்தரர் போன்றார் குறித்திரார்.

இக் கருத்துகளுடன், வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் போன்றோர் கூறும் சாளுக்கியர் பாண்டியர் போர், அவர்கள் கூறும் கோச்சடையன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளாமல் நெடுமாறன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளின், நெல்வேலிப் போர் நெடுமாறன் - விக்கிரமாதித்தன் போராகவே முடிதலைக் காணலாம். சிறிது பொறுமையும்நடுவுநிலைமையும்கொண்டுகேந்தூர்க்கல்வெட்டுக்’ 210[14]கூற்றையும் நோக்கி ஆராயின், இஃது உண்மை என்பது தோற்றும்.

ஈராஸ் பாதிரியார் கூறுமாறு, எதிர்ப்பவர் இன்றி உறையூர்வரை (பல்லவநாட்டின் தென் எல்லை முடிய) வந்த சாளுக்கிய மன்னன் வீணாக அங்குப் பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்தான் என எண்ணுதலோ-தன்னைத் திடீரெனப் பல்லவன் பெருஞ்சேனை யுடன் தாக்க வரும்வரை உறையூரில் இன்பமாகப் பொழுது போக்கினன் என எண்ணுதலோ தவறாகும் அன்றோ? ஆராய்ச்சி உணர்வுடையார் இங்ஙனம் எண்ணார். மேலும், பரமேசுவரவர்மன் ஆந்திர நாடு சென்று பெருஞ்சேனை திரட்டிக்கொண்டு திடீரென வந்து தாக்கச் சிறிதுகாலம் ஆகி இருத்தல் வேண்டும். பேரரசனான பல்லவனை எதிர்த்து முறியடித்த பெருவேந்தன், அவனுக்கு அடுத்தபடி இருந்த பாண்டியனை எதிர்த்தல் இயல்பேயாம். இவற்றைஎல்லாம் நன்கு எண்ணின், இப்பொழுதுகுறித்துக் காட்டக் கடினமாகவுள்ள - பட்டயங்களில் கூறப்பெற்ற ‘நெல்வேலி’[15] என்னும் இடத்தில், வெற்றியில் ஆழ்ந்து கிடந்த விக்கிரமாதித் தனுக்கும் சிவபத்தியில் ஆழ்ந்து கிடந்த நெடுமாறனுக்கும் போர் நடந்தது; முடிவில் நெடுமாறன் வெற்றி பெற்றான் என்பவற்றை ஒருவாறு ஊகிக்கலாம்.

பெரியபுராணம் பாடியசேக்கிழார்பிற்காலச்சோழருள் ஒருவனான இரண்டாம் குலோத்துங்கன் அரசியல் உயர் அலுவலாளராவர். அவர் பல்லவர் பட்டயங்களை நன்றாகப் படித்து நூல் செய்தவர் என்பது-பூசலார் (இராசசிம்மன் காலத்து நாயனார்) புராணத்தாலும் கழற்சிங்க நாயனார் புராணத்தாலும் சிறுத்தொண்டர் புராணத்தாலும்[16] பிறவாற்றாலும்[17] சிறப்புறஉணரலாம். ஆகலின் சேக்கிழார் கி.பி. 12ஆம் நூற்றாண்டினர் ஆயினும், அவர் வரைந்துள்ள நூலில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் அந்தந்த அரசர் முதலியோர் காலத்தனவாகவே இருத்தல் காணத்தக்கது. சேக்கிழார் பிறரைப்போல வாயில் வந்ததைப் பாடிச்செல்பவர் அல்லர். இதனை நன்கு உணரின் நெடுமாறன் நெல்வேலியில் யாருடன் சண்டையிட்டான்? - எப்படிச் சண்டையிட்டான்? - எப்பொழுது சண்டையிட்டான்? என்பன நன்கு விளங்கும்; ‘புரியவில்லை புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று வரலாற்று ஆசிரியரால் கைவிடப்பட்ட நெல்வேலிப்போரின் விவரங்கள் அத்துணையும் தம் காலத்துக் கிடைத்த தக்க சான்றுகளைக் கொண்டு சேக்கிழார் பெருமான் விளக்கி இருத்தல் தெளிவுற விளங்கும்.

நெல்வேலிப் போர்

“நெடுமாறன் சம்பந்தரால் சைவனாக்கப்பட்ட பிறகு, சேயபுலத் தெவ்வர் (நெடுந் தூரத்திலிருந்து வந்த பகைவர்) தம் கடல்போன்ற கரிகளுடனும் பரிகளுடனும் வீரருடனும் அமர் வேண்டிப் (தாமாகவே) பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் அவர்களை நெல்வேலியில் எதிர்த்தான்,” என்று தொடங்கிய சேக்கிழார், 5 பாக்களில் இருதிறத்தாரும் போரிட்டத்தை அழகாக விளக்கியுள்ளார். அப்போர் இருபெருவேந்தர் போராகவே காண்கின்றது. மேலும் அந்த வருணனையைப் பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயத்தில் காணப்படும் பெருவன நல்லூரில் நடந்த போர் வருணனையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பெருஞ்சுவை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இங்ஙனம் போர் வருணனை செய்த பெரும்புலவர் இறுதியில், “பாண்டியன் படைக்கு ஆற்றாமல், வடபுலத்து முதல் மன்னர் (First rate King of the north) படை சரிந்தது; நெடுமாறன் வாகை புனைந்தான் என்று கூறி முடித்துள்ளார்.[18]

இப் போரில் நெடுமாறனுக்குத் துணையாக அவன் மகனான கோச்சடையன் சென்றிருக்கலாம்; அல்லது அவனே தலைமை பூண்டு போரை நடத்தியிருக்கலாம்; ‘ரண ரசிகன்’ எனப்பட்ட விக்கிரமாதித்தனை வென்றமையால் தன்னை ‘ரண தீரன்’ என அழைத்துக் கொண்டிருக்கலாம். இங்ஙனமே விக்கிரமாதித்தனை வென்ற பரமேசுவரவர்மன் தன்னை ரணசயன் என்றும், (அவனுக்கு உதவியாகச் சென்ற) அவன் மகனான இராசசிம்மன் தன்னை ‘ரணசயன்’ என்றும் கூறிக்கொண்டனர் என்பது இங்கு அறியற்பாலது. இங்ஙனம் ஒரே காலத்தில் போரில் சம்பந்தப்பட்ட (பிற்காலச்) சத்யாசிரயனும் அவன் சிற்றரசனான குந்தமரசனும் தம்மைத் ‘திரிவுளமாரி’ (தமிழர்க்குக் கொள்ளைநோய் போன்றவர்) எனக் கூறிக்கொண்டனர் என்பது மேலைச் சாளுக்கியர் கல்வெட்டுகளால் அறியலாகும்.

இங்ஙனம் நெடுமாறனோடு போரிட்டுத்தோற்ற சாளுக்கியனைப் பின்னர்ப் பரமேசுவர்மன் பெருவள நல்லூரில் வன்மையுற எதிர்த்துத் தோல்வியுறச் செய்தானாதல் வேண்டும். ‘தமிழரசர் அனைவரும்கூடி விக்கிரமாத்தித்தனை எதிர்த்தனர்’ என்னும் கேந்தூர்ப்பட்டய மொழியும் இங்குக் கருதற்பாலது. இதுகாறும் கூறிய நெல்வேலிப் போரைப் பற்றிய செய்திகளை நடுவுநிலைவழாத வரலாற்று ஆசிரியம்மார் நன்கு ஆராய வேண்டுகிறோம்.

பல்லவர்-கங்கர் போர்

பரமேசுவரன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் பூவிக்கிரமன் (கி.பி.650-670); அவன்பின் முதலாம் சிவமாறன் (கி.பி.679-726) அரசன் ஆனான். இவருள் பூவிக்கிரமன் ‘விழிந்தம்’ முதலிய பல இடங்களில் பல போர்கள் பல்லவனோடு செய்ததாகக் கூறப் படுகிறது;[19] ஆயின், பல்லவர் பட்டயங்களில் இவை குறிக்கப் பெற்றில்.

கூரம்-கோவில் (முதற் கற்கோவில்)

பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றுரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் ‘பரமேசுவர மங்கலம்’ எனத் தன் பெயர் பெற்ற சிற்றுரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுரவ க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.[20]

இப்பொழுது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவன் காலத்திலும் நடந்து வந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். கோவிலில் பாரதம் சொல்லச் செய்த அரசன் இவன், கூரம் பட்டய முதல் இரண்டு சுலோகங்கள் பரமேச்சுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன.

மகாபலிபுரம்

இவன் மகாமல்லபுரத்தில் கணேசர் கோவில் ஒன்றை ஒரு கல்லால் அமைத்தான்; இராமநுசர் மண்டபம் என்பதையும் அமைத்தான்; தர்மராசர் தேரின் மூன்றாம் அடுக்கை முடித்தான்; அந்த அடுக்கில், ‘ரணசயன் (ரண ரசிகனானா விக்கிரமாதித்தனை வென்றவன்), ‘அத்யந்தகாமப் பல்லவேசுவர க்ருகம் என்பவற்றை வெட்டுவித்தான். இவற்றால், இவன் ‘ரணசயன்’ ‘அத்யந்தகாமன்’ என்னும் பெயர்களைத் தரித்தவன் என்பது புலனாகிறது. இவன் கணேசர் கோவிலில் வெட்டுவித்த 11 வடமொழிச் சுலோகங்கள் படித்து இன்புறத்தக்கவை. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும்படி சிலேடையாக அமைந்தவை. அவற்றுட்சில கீழே காண்க:

சிறந்த சிவபத்தன்

(1) காமனை அழித்த சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் காரணன்; இவன், அகாரணனான அத்யந்தகாமனுக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பானாக.

(2) கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம்வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீநிதி (தலைமேல்) வைத்துள்ளான். (பரமேசுவரன் சிவனைத் தலையில் தாங்கியுள்ளான்.)[21]

(3) பத்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும் கைம்மீது அழகிய நகைபோல நீலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக.

(4) பகைவர் நாட்டை வென்று ரனஜயன் என்றுபெயர் பெற்ற அத்யந்தகாமராசன் இந்தச் சம்பு (சிவன்) கிருகத்தைக்[22] கட்டுவித்தான்.

(5)-(6) அத்யந்தகாமன் தன் பகைவர் செருக்கை அழித்தவன். ஸ்ரீநிதி, காமராகன், ஹராராதனத்தில் ஆஸக்தி உடையவன்; சிவனுடைய அபிடேக நீரும் மணிகளால் ஆன தாமரைகளும் நிறைந்த மடுப்போலப் பரந்த தனது தலைமீது சங்கரன் எப்போதும் குடிகொண்டிருக்கப் பெற்றுள்ளான்.[23]

(7) அரசன் சங்கரனை அடைய விரும்பி, இந்தப் பெரிய சிவ மந்திரத்தை (கோவிலை)த் தன் குடிகளின் அவா முற்றுப் பெறக் கட்டுவித்தான்.[24]

(8) தீயவழியில் நடவாமல் காக்கும் சிவன் எவனது உள்ளத்தில் இரானோ, அவனுக்கு ஆறுமுறை திக் (சாபம்) அத்யந்த காம பல்லவேஸ்வரக்ருஹம்.[25]

இவற்றால், பரமேசுவரவர்மனுடைய வீரமும், சிவபக்தியும் நன்கு புலனாகும்; இவனுக்குச்சித்ரமாயன், குணபாசனன், அத்யந்தகாமன், ஸ்வஸ்தன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்பதும் விளங்குகிறது. தருமராசர் மண்டபம். கணேசர் கோவில், இராமாநுசர் மண்டபம் என்பன யாவும் சிவன் கோவில்களே என்பது இவ்விடங்களில் உள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.

இவனுடைய கல்வெட்டுகளால், இப்பெரு வேந்தன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவனாக இருந்தான் என்பது பெறப்படும் (சிலேடைப் பொருளில் செய்யுள் செய்விக்கும் அறிவு புலமையறிவன்றோ?) கண்மணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவாக அமைக்கப்பட்ட முடியைத் தலையில் தரித்திருத்த இப் பேரரசனது சிவபக்தியை என்னென்பது!

இவன் காலத்து அரசர்

கங்க அரசர் பூவிக்கிரமன்: முதலாம் சிவமாறன், என்பவனும், சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி.655-680) என்பவனும் பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி. 540-680) என்பவனும் இவன்காலத்து அரசராவர்.


  1. அடுத்த பகுதியில் கூறப்படும் சீனச் செய்தியைக் கொண்டு பரமேசுவரன் ஆட்சி ஏறத்தாழக் கி.பி. 685உடன் முடிந்ததாகக் கொள்ளப் பட்டது.
  2. Heara’s “Studies in Pallava History’ pp.40-41.
  3. Ep.Ind Vol. IX, p.205 200.
  4. S.L.I.Vol. I. p.154
  5. Ibid II p.370
  6. Ibid II. p.511
  7. Dubreull’s ‘The Pallavas’ p.43.
  8. Vide his “Studies in “Pallava History pp.44-47.
  9. C.S.Srinivasacharl’s “History and Institution of the Pallavas’ p.15.
  10. S.I.I. Vol.1, pp.153-154.
  11. PTS. Iyengars “Pallavas part II, pp.57-58.
  12. K.A.N. Sastry’s “Pandyan Kindom,’ p.55-56.
  13. 209. இவன் சிறந்த சிவனடியான் என்பதை, .....(1) ‘நறையாற்றகத்து வென்றான் முடிமேல் நின்றான் மணி கண்டம்போல்” (செ.256). (2) ‘விழிளுத்து வென்ற வல்லியல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார்சடையன் (செ279) எனப் பாண்டியக் கோவைப் பாக்களாலும் அறியலாம்.
  14. 210. Ep. Ind. Vol.Dx.p.205.
  15. ‘நெல்வேலி’ என்பது புதுக்கோட்டைச் சீமையில் உள்ள நெல்வேலி என்னும் ஊராகம். ஆழ்வார்கள் காலநிலை. பக்.101. இவ்வூர் பாண்டிய நாட்டிற்கு வடக்கே பல்லவ நாட்டுத் தென் எல்லையில் இருந்திருத்தல் வேண்டும். அரசியல் சிறப்புப்பெற்ற இந்த இடத்தில் பாண்டியர் பலர் போரிட்டனர் என்பதைப் பாண்டியர் பட்டயங்கள் உணர்த்துகின்றன. ‘சோழ மண்டலத்தில் தென்கரைப்பனையூர் நாட்டைச் சேர்ந்த நெல்வேலி நாட்டு நெல்வேலி’ எனவரும் பட்டயத்தொடர் காண்க. 276 ணிஞூ 1916.
  16. சேக்கிழார் கல்வெட்டுகளையும் செப்புப் பட்டயங்களையும் நன்றாகப் படித்தறிந்தே வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறு களைக் குறித்துள்ளார் என்பதை மெய்ப்பிக்க விரிவான நூல் ஒன்று பெரிய புராண ஆராய்ச்சி என்னும் பெயருடன் விரைவில் எம்மால் வெளியிடப் பெறும்.
  17. Dr. S.K.Aiyangars “Manimekalai in its Historical setting p.46. 214.
  18. நெடுமாறர் புராணம் செ:3-7
  19. M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.48.
  20. C.Srinivasachari’s History & Institutions of the Pallavas p.15.
  21. கண்மணியாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்திருந்தான் என்பது பொருள், P.T.S.Aiyangar’s “Pallavas’ Part.II. P.68.
  22. இப்பொழுதுள்ள கணேசர்கோவில் என்பது சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது.
  23. இதன் பொருள் சென்ற பக்கத்து அடிக்குறிப்பிற் காண்க.
  24. இதனால் குடிகட்கிருந்த சைவப்பற்றை நன்குணரலாம் அன்றோ? மந்திரம் - கோவில்.
  25. P.T.S. Aiyangai’s “Pallavas’ Part II.pp.66-68.