எனது நாடக வாழ்க்கை/கலைவள்ளல் காசிப்பாண்டியன்

விக்கிமூலம் இலிருந்து
கலைவள்ளல் காசிப் பாண்டியன்

காசிப் பாண்டியன் அவர்களைப்பற்றி இங்கே சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது எட்டப்பர் பரம்பரை என்று நாம் எல்லோரும் பேசி வருகிறோம். அதே நேரத்தில் அந்தப் பரம்பரையில் பின்னால் தோன்றிய பல ஜமீன்தார்கள், தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைக்கும் செய்துள்ள சிறந்த சேவையை நாம் நன்றி யுணர்வோடு போற்றவும் கடமைப் பட்டிருக்கிறோம். இராமநாதபுரம் சேதுபதி மன்னார்கள், தமிழ்ப் புலவர்களை ஆதரிப்பதில் எவ்வாறு முன்னணியில் நின்றார்களோ, அதேபோன்று கலைஞர்களை ஆதரிப்பதில் காசிப் பாண்டியன் அவர்களும், அவரது முந்திய பரம்பரையினரும் முன்னணியில் நின்றார்கள் எனக் கூறுவது சிறிதும் மிகையாகாது. இசை, நடனம், நாடகம், சிற்பம், சித்திரம் ஆகிய நுண்கலைகளையெல்லாம் நமது தமிழ் மன்னார்கள் ஆதரித்து வளர்த்தார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கக் கூடியவர் காசிப் பாண்டியன் அவர்கள். காசிப் பாண்டியன் சித்திரக் கலையில் வல்லவர். புகைப்படம் எடுப்பதில் நிபுணர். இசைக் கலையிலே தேர்ந்தவர். இவரது அரண்மனையில் எப்போதும் இன்னிசை முழங்கிக் கொண்டே இருக்கும். இவரது கையால் வரைந்த அற்புதச் சித்திரங்கள் சுவரை அழகுபடுத்தி நிற்கும். இசைக் கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கிய பெரு வள்ளல் என இவரைக் கூறலாம். இவரது அரண்மனையே ஒரு காட்சி சாலையாக விளங்கியது. இவர்கள் தந்த பரிசுகளும், காட்டிய ஆதரவும் எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க இடம் பெறக்கூடியவையாகும்.

எட்டையபுர அரசரின் அழைப்பு எங்களுக்கு எல்லா வகை யிலும் சிறப்பாக அமைந்தது. மற்றும் சில நாடகங்களை நடித்து விட்டு மதுரைக்குத் திரும்பினோம்.

தீ விபத்து

மதுரையில் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரத்தில் - நாடகம் தொடங்குவதாக ஏற்பாடு. இராமநாதபுரத்தில் அப்போது கொட்டகையில்லாததால் சொந்தத்தில் கீற்றுக் கொட்டகை போட்டார்கள். எட்டையபுரம் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரம் போவதாக இருந்ததால், கம்பெனியின் காட்சிச் சாமான்களும் இராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டன. நாங்கள் மதுரைக்குத் திரும்பியதும் திடுக்கிடத்தக்க செய்தி கிடைத்தது. இராமநாதபுரம் கொட்டகையும் அதிலிருந்த சாமான்களும் யாரோ வைத்த தீயால் எரிந்து சாம்பலாகி விட்டதாக அறிந்தோம். சின்னையாபிள்ளை அலறியடித்துக் கொண்டு இராமநாதபுரத்திற்கு ஓடினார்.

எட்டையபுரம் நாடகத்திற்காக உடைகளைக் கையோடு வைத்திருந்ததால் அவை மட்டும் விபத்துக்கு இரையாகாமல் தப்பின. இராமநாதபுரம் சென்றிருந்த சின்னையாபிள்ளை துயரத்தோடு திரும்பினார். அப்போது; பிரபல ஓவியர் கொண்டையராஜு கம்பெனியில் இருந்தார். அவரைக் கொண்டு புதிய சாமான்கள் எழுதத் திட்டம் போட்டார்கள். மதுரையிலேயே மேலும் சில நாடகங்கள் நடத்திவிட்டுத் திருநெல்வேலிக்குப் பயணமானோம்

பழனியாபிள்ளை விலகினார்

திருநெல்வேலி மனோரமா தியேட்டரில் நாடகங்கள் நல்ல வசூலுடன் நடைபெற்றன. ஒவியர் கொண்டையராஜு புதிதாகச் சாமான்கள் எழுதத் தொடங்கினார். இந்த நிலையில் பழனியா பிள்ளைக்கும் சின்னையாபிள்ளைக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது. ஆதிமுதலே உண்மையாக உழைத்து வந்தவர் பழனியாபிள்ளை. அவர் பணம் எதுவும் போடாதவர். உழைப்புப் பங்காளி. புதுக் கோட்டை, காரைக்குடி, மதுரை ஆகிய இடங்களில் வசூல் மிகவும் லாபகரமாக இருந்தது. அந்தச் சமயத்தில்கூட பழனியா பிள்ளைக்குப் பங்கு எதுவும் கொடுக்கவில்லை. எனவே பழனியா பிள்ளை கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவர் தொடர்ந்து கம்பெனியில் உழைத்து வந்தவரானதால் எல்லோ ருக்கும் அவரிடம் மதிப்பும் அனுதாபமும் இருந்தன. பிரிந்துபோன அவர் உடனடியாகச் சொந்த கம்பெனி துவக்க ஏற்பாடு செய்வ தாகவும் அறிந்தோம். அவர்மீது பற்றுக் கொண்ட சில நடிகர்கள் கம்பெனியை விட்டுச் சொல்லாமலேயே விலகி அவரிடம் போய்ச் சேர்ந்தார்கள். வேறு சில முக்கியமான தொழிலாளர் களும் அவருக்காக விலகினர்கள். திருநெல்வேலி நாடகம் முடிந்து நாகர்கோவிலுக்குச் சென்றோம்.