எனது நாடக வாழ்க்கை/நாட்டுக்கோட்டை நகரத்தில்

விக்கிமூலம் இலிருந்து
நாட்டுக்கோட்டை நகரத்தில்

புதுக்கோட்டை அப்போது தனி சமஸ்தானமாக இருந்தது. பல கம்பெனிகள் புதுக்கோட்டைக்குப் போய் வசூல் இல்லாமல் சிரமப்பட்டதாக அறிந்தோம். பிரசித்தி பெற்ற நடிகராகிய மனமோகன அரங்கசாமி நாயுடுவின் நிருவாகத்தில் இருந்த ஆலந்துார் ஒரிஜினல் டிராமடிக் கம்பெனியார் புதுக்கோட்டையில் அதிகக் கஷ்டப்பட்டதாகவும், அதன்பிறகு யாரும் புதுக்கோட்டைக்கே போனதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். பல ஆண்டுகளாகப் புதுக்கோட்டையில் நாடகமே நடந்த தில்லையென்பதை அறிந்தபோது எங்களுக்கெல்லாம் அச்சமாக இருந்தது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு அந்த நாளில் லாரி வசதிகளெல்லாம் இல்லை. திருச்சி வழியாக ரயில்கூட இல்லாத காலம் அது. சாமான்களை இரட்டை மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்பிவிட்டு, நாங்கள் பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம்.

புதுக்கோட்டையில் முதல் நாடகம் தொடங்கியது. வசூல் சுமாராக இருந்தது. இரண்டாவது நாடகத்திலிருந்தது எதிர் பாராதபடி அமோகமாக வசூலாயிற்று. எங்களுக்கு ஒரே குதுரகலம். புதுகோட்டை பிரஹதாம்பாள் தியேட்டரில் வேறு எந்தக் கம்பெனிக்கும் இப்படி வசூலானதில்லையென்று எல்லோரும் அதிசயப்பட்டார்கள். நாடகம் பார்க்க வந்த ரசிகர்களில், நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் அதிகமாக இருந்தார்கள்.

சின்னையாபிள்ளையின் மனமாற்றம்

நாலைந்து நாடகங்கள் நடந்ததும் கூடலூர் கொட்டகையில் அடகுவைக்கப்பட்டிருந்த சாமான்களை மீட்டு வர, சின்னையா பிள்ளை பணத்துடன் போனார்.நான்கு நாட்களில் திரும்பினார். அடகு வைக்கப்பட்டிருந்த தவணை நாட்கள் தீர்ந்துவிட்டதால் கொட்டகைகாரர் சாமான்களையெல்லாம் விற்று விட்டதாகவும், அவற்றைத் தன் தம்பியே வாங்கியிருப்பதாகவும், தம்பியிட மிருந்து தான் வாடகைக்கு வாங்கி வந்திருப்பதாகவும் கூறினார். மற்றப்பங்காளிகளை வஞ்சிக்கும் நோக்கமுடன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்திருப்பதாக ஊகித்தோம். இவற்றை எல்லோரும் நம்பும் விதத்தில் பத்திரங்களும் தயார் செய்து கொண்டு வந்திருந்தார்.

புதுகோட்டைக்கு வந்தபின் பெரியண்ணா டி. கே. சங்கரன் கம்பெனியில் கணக்குப்பிள்ளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பட்டார். அவருக்கு இருபத்தைந்து ரூபாய் சம்பளம் போடப் பெற்றது. சின்னையாபிள்ளை கூடலூருக்குப் போகும் போது வசூலாகும் பணத்தை நடிகர்களுக்கு கொடுக்கும் படியாகப் பெரியண்ணாவிடம் சொல்லிவிட்டுப் போனார். அதன்படியே கொடுக்கப்பட்டது. திரும்பி வந்ததும் பூராப் பணத்தையும் செலவு செய்து விட்டது பற்றிக் கடிந்து கொண்டார். எங்களைப் பற்றித் தாறுமாருகத் தப்பும் தவறும் பேசியதாக மற்றொரு பங்காளியான பழனியாபிள்ளை முலம் அறிந்து வருந்தினோம். பேச்சு வார்த்தை வளர்ந்தது. இறுதியாக அந்த ஊரோடு கம்பெனியை விட்டு விலகிக் கொள்வதாகத் தெரிவித்து விட்டு வந்தார் பெரியண்ணா.

பிறகு, சின்னயாபிள்ளை அம்மாவிடம் வந்து, தான் ஒன்றுமே தவருகச் சொல்லவில்லையென்றும், யாரோ வேண்டு மென்று கோள் மூட்டியிருக்கிறார்களென்றும் கூறினார். கம்பெனிக்கு நல்ல வசூலாகி வருவதால் பாவலர் கம்பெனியில் கொடுத்து வந்த இருநூற்றி ஐம்பது ரூபாய்கள் சம்பளம் போட்டுத் தாம் தருவதாகவும் அறிவித்தார். மீண்டும் சமரசம் ஏற்பட்டுக் கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டோம். எனக்கும் சின்னண்ணாவுக்கும் ரூ. 250 சம்பளம் போடப்பட்டது.

பி. யூ சின்னப்பா

புதுக்கோட்டையில் பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற நடிகராக விளங்கிய பி. யூ. சின்னப்பா சுவாமி கம்பெனியில் நடிகராக வந்து சேர்ந்தார். அவருடைய சாரீரம் கணிரென்றிருந்தது. அவருக்கு இராஜாம்பாள் நாடகத்தில் துப்பறியும் கோவிந்தனை அடிக்கும் ரெளடிகளில் ஒருவனான ‘அம்மாவாசை’ வேடம் கொடுக்கப்பட்டது. சாவித்திரி நாடகத்தில் புண்ணிய புருஷனாக வந்து அருமையாகப் பாடினார்.

சின்னப்பா சிறுவயதில் படுசுட்டியாக இருந்தார். கம்பெனி வீட்டுக்குப் பின்புறம் பெரிய தென்னந்தோப்பு இருந்தது. சின்னண்ணாவும், சின்னப்பாவும் அவற்றில் ஏறி, இளநீர்க் குலைகளப் பறித்து, எல்லோருக்கும் தானம் வழங்குவார்கள். ஒருநாள் வாத்தியார் குற்றாலலிங்கம்பிள்ளை, சின்னப்பா தென்னைமரத்தில் இருப்பதைப் பார்த்து விட்டார். அவருக்குச் சரியான பூசை கிடைத்தது. அவ்வளவுதான். மறு நாள் சின்னப்பாவைக் காணோம். அவருடைய வீடு தேடிப் போனார்கள். பையன் அடி பட்டிருப்பதைப் பார்த்த அவரது தந்தையார், சின்னப்பாவை அனுப்ப மறுத்து விட்டதாகச் சொன்னார்கள்.

டி. பி. இராஜலெட்சுமி நாடகம்.

புதுக்கோட்டை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போனோம். அப்போது காரைக்குடியில் டி.பி. இராஜலட்சுமியின் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நானும், சின்னண்ணாவும் சிற்றப்பாவுடன் நாடகம் பார்க்கப் போயிருந்தோம். அன்று. சாவித்திரி நாடகம். எம். ஜி. நடராஜபிள்ளை சத்தியவாளுகவும். எமதர்மனகவும் நடித்தார். எஸ். வி. சுப்பையா பாகவதர் நாரதராக நடித்தார். அந்த நாளில் டி. பி. இராஜலட்சுமிக்கு, செட்டி நாட்டில் அபாரமான பேர். கடைசி நாடகமானதால் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தார்கள்.

காரைக்குடியில் அப்போதிருந்து வந்த வழக்கத்தையும், நாட்டுக் கோட்டைச் செட்டிப்பிள்ளைகள் நாடகம் பார்க்கும் முறையைப்பற்றி இங்கே சற்று விபரமாகக் குறிப்பிடவேண்டியது இன்றியமையாதது எனக் கருதுகிறேன்.

காரைக்குடி அக்காலத்தில் செல்வம் கொழிக்கும் நகரமாக விளங்கியது. மற்ற ஊர்களிலெல்லாம் இல்லாத ஒரு புதுமையைக் காரைக்குடியிலே கண்டோம். நாடகக் கொட்டகையில் முதல் வகுப்பு கான்வாஸ்சேர்-அதாவது சாய்மான நாற்காலி, ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சாய்மான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டும், சில நேரங்களில் படுத்துக் கொண்டுதான் செட்டிப் பிள்ளைகள் நாடகம் பார்ப்பார்கள். அந்த நாளில் மற்ற ஊர்களில் முதல் வகுப்பு ரூ. 1- 8.0 போடுவது வழக்கம். காரைக் குடியில் மட்டும் முதல்வகுப்பு ரூ. 2- 8.0 போடப்பட்டிருப்பதைப் .பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். சபையில் நான்கில் ஒரு பகுதியை நீளமாகத் தனியே தடுத்து அந்த இடம் பெண்களுக்காக ஒதுக்கப் பெற்றிருந்தது. முன்னால் சிறிது தூரம்வரை பாய் விரித்திருக்கும். அதற்கு எட்டணா கட்டணம். வெறும் தரையில் உட்காருவதற்கு ஆறணு கட்டணம். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், பெண்கள் யாரும் முதல் வகுப்புச் சாய்மான நாற்காலிகளில் உட்காரக் கூடாது. ஆண்களோடு பெண்களும் சரிசமானமாக இருக்கக் கூடாது என்பது அவர்கள் எண்ணம். இதை யாரும் எதிர்க்காததால் நடைமுறையில் இந்த விதி ஒழுங்காகச் செயல் பட்டு வந்தது.

ஆண் பெண்ணாண அதிசயம்

டி.பி. இராஜலட்சுமியின் நாடகத்தைப் பார்த்து நானும் சின்னண்ணாவும் பிரமாதமாக ரசித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சிற்றப்பாவோடு சாய்மான நாற்காலியில் அமர்ந்திருந்தோம், சிண்னண்ணாவுக்கு அப்போது பதினைந்து வயது. அழகிய தோற்றம்; நீளமான தலை முடி; பெண் போலவே இருப்பார். கைகளில் காப்பு, கொலுசு, சிறு தங்க வளையல்கள் எல்லாம் போட்டிருந்தார். காதில் ஐந்து கல் பதித்த கடுக்கனும் இருந்தது. எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு செட்டியார், சின்னண்ணாவை முறைத்து முறைத்துப் பார்த்தார். யாரோ ஒரு பெண்தான் வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டார். அவர் நன்றாகக் குடித்திருந்தார். அந்தப் போதையும் இப்படி எண்ணாவதற்குத் துணை செய்தது. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த மற்றொரு செட்டியாரிடம் சின்னண்ணாவைக் காட்டிப் புகார் செய்தார். அந்தச் செட்டியார், நாங்கள் மறுநாள் நாடகம் போடப் போவதை அறிந்தவர். எனவே அவர், “அது பையன்தான், பெண்ணல்ல” என்று கூறினார். நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே முதல் வகுப்பில் இது பற்றிச் சலசலப்பு ஏற்பட்டது. பெண்ணென்றே கருதிய செட்டியார், இறுதியாக நேரிலேயே கேட்டுவிட முடிவு செய்தார். மெதுவாகச் சின்னண்ணாவிடம் நெருங்கி, “பெண்கள் இங்கே உட்காரக் கூடாது” என்றார், உடனே சிற்றப்பா சிரித்துக் கொண்டே, “பெண்ணல்ல ஐயா, அவன் பையன்” என்று கூறினார். இருந்தாலும் செட்டியார் மனம் அமைதியுறவில்லை. சில நிமிடங்கள் கழித்து மீண்டும், “நீ பெண்ணா, ஆணா?” என்று சிறிது கோபத்தோடு கேட்டார். சிற்றப்பாவுக்கும் கோபம் வந்து விட்டது. அவர் ஆத்திரத்தோடு, எழுந்து, “என்னய்யா, நான்தான் பையன்என்று சொன்னேனே; ஒரு மணி நேரமாக அவதிப் படுகிறீரே ! பையனா பெண்ணா. என்று பார்க்கிறீரா?” என்று சத்தம் போட்டார். சபையில் குழப்பம் ஏற்பட்டது. அப்புறம் தெரிந்தவர்கள் சிலர் வந்து, சிற்றப்பாவையும் செட்டியாரையும் சமாதானப் படுத்தினார்கள். பிறகு இறுதிவரையில் இருந்து, நாடகத்தை நன்கு ரசித்துப் பார்த்தோம்.

அபராதக் காணிக்கை

மறுநாள் எங்கள் நாடகம் தொடங்கியது. வசூல் அமோகமாக இருந்தது. இதற்கு முன் எந்த ஊரிலும் இந்த அளவுக்கு வசூலானதில்லை. மூன்று நாடகங்கள் நடைபெற்றதும் சின்னையா பிள்ளைக்குக் கொஞ்சம் நப்பாசை ஏற்பட்டது. முதல் வகுப்பு மட்டும் இரண்டரை ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக உயர்த்தப் பெற்றது. அதற்கும் செட்டிப் பிள்ளைகள் சளைக்கவில்லை. மேலும் இரண்டு நாடகங்கள் நடைப்பெற்றன. மீண்டும் முதல் வகுப்புக் கட்டணம் மூன்றரை ரூபாயாக உயர்ந்தது. அப்போதுதான் செட்டிப் பிள்ளைகள் கட்டணம் உயருவதைக் கொஞ்சம் கவனித்தார்கள். இரண்டு நாடகங்களுக்குப் பின், முதல்வகுப்பு நான்கு ரூபாய் என அறிவிக்கப்பெற்றதும் செட்டிப்பிள்ளைகள் விழித்துக் கொண்டார்கள். அன்றும் நல்ல கூட்டம். நாடகம் தொடங்கியதும் முன் வரிசையில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கட்டணம் நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார்கள். சின்னையாபிள்ளை வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அன்றைய நாடகத்திற்கு ஆன வசூலி லிருந்து 125 ரூபாய்கள் கொப்புடையம்மன் கோயிலுக்கு அபராதக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும் என்றார்கள் சில பெரியவர்கள். சின்னையாபிள்ளை அவ்வாறே அபராதம் செலுத்தினார். அப்புறம் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. மறுநாள் முதல் - மூன்றரை ரூபாய் கட்டணத்தோடு முதலாளிதிருப்தி அடைந்தார்.

ஐநூறு ரூபாய் சம்பளம்

காரைக்குடியில் வருவாய் அதிகமாக ஏற்பட்டதும் சின்னையாபிள்ளையின் சுபாவத்திலும்பெரிய மாறுதல் ஏற்பட்டது. பெரியண்ணாவுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறுகள் நேர்ந்தன. தான் போட்ட பணமெல்லாம் புதுகோட்டை, காரைக்குடியிலேயே வந்து விட்டதாகவும், இனி யாருக்கும் பயப்படப் போவதில்லையென்றும் ஆத்திரத்தோடு பேசியதாகப் பழனியா பிள்ளை கூறினார். அம்மாவின் செவிக்கு இந்தச்செய்தி எட்டியதும் அவர்கள், உடனே நாங்கள் அங்கிருந்து விலகி, வேறு கம்பெனிக்குப் போகவேண்டுமென்று முடிவுசெய்தார்கள். இதைக்கேள்விப் பட்டதும் சின்னையாபிள்ளை மீண்டும் வந்து, தான் ஒன்றும் சொல்லவில்லையென்று சாதித்தார். நீண்ட நேரம் வாத பிரதி வாதங்கள் நடந்தன. கடைசியாக இனிமேல் கம்பெனியில் இருக்க வேண்டுமானுல் எனக்கும் சின்னண்ணாவுக்கும் ஐநூறு ரூபாய் சம்பளமும், ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுக்க வேண்டுமென்று பெரியண்ணா கேட்டார். வேறு வழியின்றி இந்தச் சம்பளத்திற்குச் சம்மதித்து முன்பணமாக ஐநூறு ரூபாய் கொடுத்தார் சின்னையாபிள்ளை.

நாங்கள் கேட்டபடி ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுத்தும் சின்னையாபிள்ளையிடம் பெரியண்ணாவுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை. கூடலூரில் அவர் தற்கொலை செய்து கொள்ளச் சித்தமாயிருந்த நிலையையெல்லாம் மறந்து விட்டார்; ஆதலால் எந்த நிமிஷத்திலும் கம்பெனியை விட்டு நிறுத்திவிடக் கூடும் என்றெண்ணினார் அண்ணா. காரைக்குடி நாடகம்முடிந்ததும் மீண்டும் புதுக்கோட்டையில் சில நாடகங்கள் நடத்தி விட்டு மதுரைக்குப் பயணமானோம்.

சொந்தக் கம்பெனிக்கு ஆயத்தம்

மதுரை வந்ததும் பெரியண்ணா கணக்கர் வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அண்ணாவும் மாமாவும் கலந்து யோசித்தார்கள். எதிர்பாராது கம்பெனியில் தகராறு ஏற்படுமானால் உடனே சொந்தமாகக் கம்பெனி தொடங்குவதற்கான ஆயத் தங்களைச் செய்தார்கள். ஒரு தையற்காரரை வீட்டிலேயே அமர்த்தி, நாடகங்களுக்கு உடைகள் தயாரிக்க ஏற்பாடு செய்தனார். வெல்வெட், சரிகை முதலியவைகள் வாங்கப்பட்டன. எனக்கும் சின்னண்ணாவுக்கும் எல்லா நாடகங்களுக்கும் உடைகள் தயாராயின.

இந்த விபரத்தை அறிந்த சின்னையாபிள்ளை பெரிய அண்ணாவைக் கூப்பிட்டுக் காரணம் கேட்டார். “தங்களுடைய மனநிலை எப்படியெல்லாம் மாறுமென்று எங்களுக்குப் புரிய வில்லை. எதிர்பாராத நிலையில் திடீரென்று கம்பெனியை விட்டு விலக்கி விட்டால் என்ன செய்வது? அதற்காக, முன் எச்சரிக்கையாய்த் தயாராகிறோம். தாங்கள் சரியாக நடந்து கொள்ளும் வரையில் நாங்கள் கம்பெனியிலிருந்து விலகமாட்டோம்” என்று பெரியண்ணா உறுதி கூறினார்.

உடைகள் தயாரித்தது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை யென்றாலும், பெரியண்ணாவும் மாமாவும் இந்த வகையில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் விட்டுக் கொடுத்தார். மதுரையில் நாடகங்கள் நல்ல வசூலோடு நடைபெற்றன.