உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம்

விக்கிமூலம் இலிருந்து

24.வஞ்சகம்

மனிதர் பிறப்பது மெய்யராக, ஆனால் இறப்பதோ வஞ்சகராகவே.

-வாவனால்கூஸ்

அற உடை அணிந்த மறத்தைப்போல அபாயகரமான்து கிடையாது.

-பப்ளியஸ் ஸைரஸ்

நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான்.

-எமர்ஸன்

சூதிற்கும் அறிவிற்குமுள்ள வேறுபாடு குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு போலாகும்.

- பென்

வஞ்சக நடை என்பது மறம் அறத்திற்குச் செய்யும் மரியாதையே யாகும்.

-ரோஷிவக்கல்டு

நம்மிட முள்ளதாக நாம் பாசாங்கு செய்யும் குணங்களைப் போல், நம்மிடம் உண்மையாகவேயுள்ள குணங்கள் ஒரு பொழுதும் நம்மை நகைப்பிற் கிடமாக்குவதில்லை.

-ரோஷிவக்கல்டு

உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான்.

-மில்ட்டன்

வேஷம் போட்டு வெகு காலத்துக்கு ஏமாற்ற முடியாது. உண்மை இல்லாத இடத்தில் இயற்கை தலை காட்ட முயன்று கொண்டிருக்கும். என்றேனும் ஒருநாள் வெளிப்படுத்தியே விடும்.

-பிஷப் ஹால்
எல்லோரிலும் யாரை எளிதாக ஏமாற்ற முடியும்? தன்னைத்தான்.
-புல்வெல் லிட்டன்

உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர்.

-ஷேக்ஸ்பியர்

ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்!

-ஸ்காட்

தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

-ஸெனீக்கா

என்ன அழகான பழம்-இதனுள்ளே அழுகல்-பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது

-ஷேக்ஸ்பியர்

வஞ்சக நடையுள்ளவன் இயற்கையான அயோக்கியத் தனம், செயற்கையான ஏமாற்றுக்குணம் ஆகிய இரண்டு சரக்குகளைக் கொண்டு செய்து தங்க நிறம் கொடுத்த மாத்திரை யாவான்.

-ஓவர்பரி

★ ★ ★