உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம்

விக்கிமூலம் இலிருந்து

38. நாகரிகம்

ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும்.

- எமர்ஸன்

நாகரிகம் உடையவர் யார்? தமக்கு உடை செய்யவும் வயிறு நிரப்பவும் உடலை அலங்கரிக்கவும் அடிமைகள் உடையார் நாகரிகம் இல்லாதவர். தம் அத்யாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யமட்டும் சேவகர் வைத்துக் கொண்டு அவர்க்கும் சுகவாழ்வு அளிப்பவரே நாகரிகம் உடையவர்.

-ரஸ்கின்

நம்மிடையிலும் இன்னும் நாகரிக தசையடையாத காட்டுமிராண்டிகள் பலர் இருக்கவே செய்கின்றனர்.

-ஹாவ்லக் எல்லிஸ்
மனிதர் இருதயத்தின் குணாதிசயங்களை எள்ளளவும் மதிப்பதில்லை. அறிவு, உடல்-இரண்டிலொன்றின் ஏற்றத்தையே போற்றுகின்றனர்.
-லா புரூயர்

ஜன சமூகங்கள் வாழலாம், அல்லது வாழாமல் மடியலாம். ஆனால் நாகரிகம் மட்டும் ஒருநாளும் மறைந்து விடாது.

-மாஜினி

ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும்.

-விக்டர் ஹூகோ

நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே.

-எமர்ஸன்

நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம்.

-எமர்ஸன்
காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன்.
-நீட்சே

சமூகத்தின் நாகரிகம் சமூகத்தை வைத்தன்றிச் சான்றோரை வைத்தே மதிக்கப்பெறும். சான்றோர் இல்லையெனில் நாகரிகமும் இல்லை.

-பழமொழி

★ ★ ★