மகாபாரதம்-அறத்தின் குரல்/6. மாயச் சூதினிலே!

விக்கிமூலம் இலிருந்து

6. மாயச் சூதினிலே!

‘சூதாடுவதற்குச் சம்மதம்’ என்று தருமன் கூறிய வார்த்தை அந்த அவையிலிருந்த பெரியோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீட்டுமன், விதுரன் முதலிய முதியோர்களும் பிறரும் ‘இறுதி வரை தருமன் சூதாட்டத்திற்கு சம்மதிக்க மாட்டான்’ என்றே எண்ணியிருந்தனர். அவன் திடீரென்று அதற்குச் சம்மதித்தது கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். துரியோதனன் தருமனிடம் சூதாட்டத்துக்குரிய நிபந்தனைகளைக் கூறலானான். “இந்தச் சூதாட்டத்தில் உன் பங்குக்காக வைத்து ஆட வேண்டிய பந்தயப் பொருள்களை நீயே வைத்து ஆட வேண்டும். சகுனியின் பங்குக்குரிய பந்தயப் பொருள்களை நான் கொடுப்பேன்.”

“சரி, சம்மதம்” -தருமன் இதற்கு இணங்கினான்.

‘விதிக்கு முழு வெற்றி. தருமனுக்குப் படுதோல்வி. தருமனும் சகுனியும் சூதாடும் களத்தில் எதிரெதிரே ஆசனங்களில் அமர்ந்தனர், மாயச் சூது தொடங்கியது. காய்கள் உருண்டன். அழகிலும் ஒளியிலும், விலை மதிப்பிலும் தனக்கு இணையில்லாத முத்துமாலை ஒன்றைத் தருமன் பந்தயமாக வைத்தான். அதற்கு இணையான மற்றோர் மாலை சகுனியின் சார்பில் துரியோதனனால் வைக்கப்பட்டது. சகுனிக்குச் சூதாட்டத்திலுள்ள எல்லாத் தந்திரங்களும் நன்றாகத் தெரியும். ‘என்ன மாயம் செய்து அவன் எப்படிக் காயை உருட்டுகிறான்?’ என்றே விளங்கவில்லை. வெற்றி அவன் பக்கமே சேர்கிறது. முதல் ஆட்டத்திலேயே தருமனுக்கு தோல்வி! முத்து மாலை தருமனிடமிருந்து சகுனியின் கைகளுக்கு மாறியது. இரண்டாவது பந்தயமாகக் கண்ணபிரானால் தனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட தேர் ஒன்றை வைத்து ஆடினான் தருமன். சூதாட்டக் காய்களைச் சகுனி மந்திரம் கூறி வசியப்படுத்திவிட்டானோ என்று கூறும்படி இரண்டாம் பந்தயத்திலும் வெற்றி. சகுனியின் பக்கமே விளைந்தது. கள்ளைக் குடிக்கக் குடிக்க அதுகாரணமாக எழுகின்ற வெறியைப் போன்றது சூதாட்டத்தில் ஒருவருக்கு உண்டாகும் ஆசை ‘இழந்த பொருள்களை மீட்க வேண்டும்’ என்ற ஆசையினால் மீண்டும் மீண்டும் இழந்து கொண்டே போவது சூதாட்டத்தில் தோற்றவர்களின் இயல்பு. இந்த நிலையில் தருமனுடைய மன இயல்வும் இதே விதிக்கு உட்பட்டுத்தான் இருந்தது. தருமன் தன்னுடைய நால்வகைப் படைகளில், யானைப்படை, குதிரைப்படை முதலியவற்றை வைத்துத் தோற்றான். அரண்மனை உபயோகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தேர்களை வைத்து இழந்தான். நாடுகள், அரசு, அரசாள்கின்ற உரிமை, அழகிலும் கலைகளிலும் சிறந்த உரிமை மகளிர் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வைத்துப் பறி கொடுத்தான். சகுனி சிரித்துக் கொண்டே ஆடினான். துரியோதனன் கர்ணன், துச்சாதனன் முதலியவர்களும் சிரித்துக் கொண்டே பார்த்தார்கள். தருமனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. தானும் தம் தம்பியர்களும், திரெளபதியும்தான் இப்போது தருமனின் உடைமைகள், அடுத்து என்ன செய்வது? எதைப் பந்தயமாக வைத்து ஆடுவது? என்று தெரியாமல் கலங்கிய மனத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்த தருமனைச் சகுனி வலுவில் தானாகவே வம்புக்கு இழுத்தான்.

“ஏன் தயங்குகிறாய் தருமா? உன்னையே ஓர் ஆட்டத்துக்குப் பந்தயமாக வைத்து ஆடேன்! நீயும் தோற்றுவிட்டால் உன் தம்பியர் நால்வரையும் அதற்கு அடுத்த ஆட்டத்திற் பந்தயமாக வைக்கலாமே!” -இப்படிக் கூறிய சகுனியைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கி விடுவது போலப் பார்த்தனர், வீமனும் அர்ச்சுனனும். ஆனால் விளையாட்டு வெறியில் மூழ்கிக் கிடந்த தருமனுக்குச் சிந்தனை செய்ய மனம் இருந்தால் தானே? சகுனியின் கூற்றையே யோசனையாக ஏற்றுக் கொண்டு அடுத்த ஆட்டத்தை உடனே ஆரம்பித்தான் அவன்.

“சகுனி! இந்த ஆட்டத்திற்கு என்னையே பந்தயமாக வைக்கிறேன். விளையாடு பார்க்கலாம்...”

சகுனி தன் சொல் உடனே பலித்ததை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டே காய்களை உருட்டினான். காய்கள் அவனை ஏமாற்றவில்லை. அவன் சொற்படியே உருண்டன்! தருமன் தன்னையே தோற்றுக் கொண்டு விட்டான். தானே தன் தலையில் நெருப்பை அள்ளி வைத்துக் கொண்ட மாதிரி தன்னைத் தோற்ற ஏமாற்றச் சாயை நெஞ்சில் அழிவதற்கு முன்பே, “என் தம்பிமார் நால்வரையும் பந்தயமாக வைக்கிறேன். இந்த ஆட்டத்திற்குக் காய்களை உருட்டுக” என்று கூசாமல் கூறினான் தருமன். அவனுக்குச் சூதாட்ட வெறி பிறந்துவிட்டது. விதியின் கைக் கருவிகள் தாமே அந்தச் சூதாட்டக் காய்கள்? அவை வழக்கம் போலவே சொல்லி வைத்தாற் போலச் சகுனிக்குச் சாதகமாக உருண்டன. தருமனுக்கு அதே நிலையில் அப்படியே சுவாசம் நின்றுவிடும் போல ஆகிவிட்டது. திக்பிரமை பிடித்துப் போய்ச் சிலையாக உட்கார்ந்து விட்டான்.

“என்ன தருமா! எல்லாவற்றையும் தோற்றாகிவிட்டது. இனிமேல் தோற்பதற்கு ஒரு பொருளும் இல்லை போலிருக்கிறது?” -வெந்த புண்ணில் புண்ணுக்கு மருந்திட வேண்டிய மருத்துவனே வேலை நுழைத்தாற் போலச் சகுனி கூறினான். இதற்குள் துரியோதனனும் கர்ணனும் சகுனியைத் தங்கள் அருகில் அழைத்து அவன் காதோடு காதாக ஏதோ கூறினார்கள். சகுனி அவர்களுக்குத் தலையசைத்து விட்டுச் சிரித்துக் கொண்டே மீண்டும் தருமனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்தான். தருமன் சகுனியிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை . துயரம், ஏமாற்றம், ஏக்கம், கழிவிரக்கம் ஆகிய எல்லாத் துன்ப உணர்ச்சிகளும் அவனுடைய முகபாவமாகத் திரண்டிருந்தன. எங்கோ சூனியத்தை நோக்கி இலக்கற்றுப் போய் இலயிப்பின்றி நிலைத்துக் கிடந்தது அவன் பார்வை.

“நான் சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ளக் கூடாது தருமா! உண்மையில் உன்னுடைய நன்மைக்காகத் தான் நான் இதை உனக்குச் சொல்கிறேன்”... தன் குரலில் தருமனுக்குப் பரிவோடு யோசனை கூறுகிற அக்கறை இருப்பது போலப் பாசாங்கு செய்தான் சகுனி. தருமன் மெல்லத் திரும்பிச் சகுனியின் முகத்தைப் பார்த்தான்.

“நீ இதுவரை என்னிடம் தோற்றுப் போய் இழந்த எல்லாப் பொருள்களையும் திருப்பிப் பெற வேண்டுமானால் என்னுடைய இந்த யோசனையை நீ புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.”

“என்ன யோசனை அது?. அதைத்தான் சொல்லேன்” -தருமன் ஆவலோடு கேட்டான்.

“ஒன்றும் பெரிய யோசனை இல்லை. சாதாரணமானது தான்!... உங்கள் மனைவி திரெளபதியைப் பந்தயமாக வைத்து இன்னும் ஒரே ஓர் ஆட்டம் ஆடினால், ஒவ்வொன்றாக இழந்த பொருள்களை மீண்டும் பெற்று விட முடியும்...”

அவையிலிருந்த அத்தனை பேருக்கும் தலையில் ஆயிரமாயிரம் மலைகளின் சிகரங்கள் தவிடுபொடியாகிப் பாறைகள் விழுந்து அமுக்குவது போலிருந்தது. செவிகளிலே நெருப்புக் கங்குகள் நுழைந்தாற் போல இந்தச் சொற்கள் புகுந்தன. வீமன் முதலிய நால்வருக்கும் சகுனியை அறைந்து கொன்றுவிடலாம். போலக் கைகள் துறுதுறுத்தன. “இந்த உலகத்தில் தருமத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கலி புருஷன் சகுனி, துரியோதனன் முதலியவர்களின் உருவத்தில் பிறந்திருக்கிறான்” -என்று பெரியவர்கள் வருத்தத்தோடு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு முற்றிய பிறகும் கூட அவையில் எல்லோரினும் முதியவனாக இருந்த திருதராட்டிரன் அனுதாபத்தையும் வெளிப்படுத்தாமல் வாயையும் திறவாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

இதை முதலிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த விதுரனுக்கு அடக்க முடியாத சினம் உண்டாகிவிட்டது. அவன் திருதராட்டிரனை நோக்கிக் குமுறியெழுந்தான். அவன் விழிகள் சிவந்திருந்தன. உதடுகள் துடிதுடித்தன, “அண்ணா! உனக்குக் கண்கள் மட்டும் இல்லையா? அல்லது செவிகளும் கூட இல்லையா? இந்த அநீதியை, அக்கிரமத்தைச் செவிகளில் கேள்விப்பட்ட பின்பு கூட நீ பிடித்து வைத்த மண் பொம்மை போல இப்படி வாயையே திறக்காமல் உட்கார்ந்திருக்கலாமா? துரியோதனாதியர்களைப் போலவே பாண்டவர்களும் உனக்கு மக்கள் முறை உடையவர்கள் தாமே? உன் சொந்த மக்கள் பாண்டவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு அவர்களுக்கு இவ்வளவு தீமைகளைச் செய்வதை நீ கண்டிக்க வேண்டாமா? இம்மாதிரி வஞ்சகச் செயல்கள் எல்லாம் குருகுலத்தின் மேன்மைக்குப் பொருந்துமா? இரு சாரார்க்கும் தந்தை முறை கொண்டு முதன்மை பூண்டிருக்கும் நீயும் இவர்களுடைய சூழ்ச்சிகளுக்கெல்லாம் உடந்தையா? புறக் கண்களைப் போலவே அகக் கண்களும் குருடாகி விட்டனவா உனக்கு? ‘திரெளபதியைப் பந்தயமாக வை’ -என்று கூசாமல் வாய் திறந்து சொல்கிறான் இந்தச் சகுனி. அதை ஆமோதிப்பது போல நீயும் மௌனம் சாதிக்கிறாய். வேண்டாம் இந்தப் பழி. உடனே இந்த சூதாட்டத்தைத் தடை செய்து பாண்டவர் பொருள்களை எல்லாம் அவர்களுக்கு வாங்கிக் கொடு. இல்லையேல் குருகுலத்தின் மானம், பெருமை, புகழ் எல்லாம் இன்றே செத்துப் போய்விட்டன என்று எண்ணிக் கொள்!” தன் ஆத்திரம் முழுவதையும் பேச்சில் கொட்டி விட்டான் விதுரன்.

ஆனால் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டிருந்த திருதராட்டிரன் விதுரனுடைய பேச்சை இலட்சியம் செய்யாமலே இருந்து விட்டான். கண்களை இழந்த அவன் இப்போது பேசுவதற்கு இயலாமல் வாயையும் இழந்து ஊமை ஆகிவிட்டானோ? -என்று கண்டோர் எண்ணுமாறு தோன்றியது அவனுடைய குரூரமான அந்த மெளனம். இனியும் இவனை வேண்டிக் கொள்வதில் பயனில்லை. எல்லாம் ஊழ்வினைப்படியே நடக்கட்டும்! விதியைத் தடுக்க நாம் யார்? -எண்றெண்ணி மனம் அமைந்தான் விதுரன்.

சகுனி கூறிய ஆசை வார்த்தையில் மயங்கிப் போன தருமன், ‘திரெளபதியையும் ஒரு பந்தயமாக வைத்துத் தான் பார்ப்போமே’ -என்று எண்ணத் தொடங்கி விட்டான். ‘இழந்த பொருள்களை எல்லாம் மீண்டும் பெறலாம்’ -என்ற நம்பிக்கையால் இந்தத் துர் எண்ணம் விநாடிக்கு விநாடி பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது. தருமனுடைய அறப்பண்பு, சத்தியம், ஒழுக்கம் எல்லாம் அந்த விநாடி அவனை விட்டு இலட்சோப இலட்சம் காத தூரம் விலகி ஓடிப் போய்விட்டன. சூதுவெறி அவன் பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளியது.

“சரி திரெளபதியே பந்தயம். இறுதியாட்டம் இது தான்! விளையாடு” -தருமனுடைய வாயிலிருந்து சொற்கள் வெளிவந்து முடியவில்லை. சகுனி மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இறுதி ஆட்டத்திற்காகக் காய்களை ஊருட்டிவிட்டான். பொல்லாக் காய்களும் உருண்டன. மனிதர்களில் நல்லவர்கள் உண்டு. தீயவர்கள் உண்டு! நல்லவைகள் உண்டு, தீயவைகள் உண்டு. நேர்மை நீதிகள் உண்டு! வஞ்சகம் வம்புகள் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டு இருக்கிறோம். கேவலம் மரத்தினால் செய்த சூதாட்டக் காய்களிலுமா அப்படி உண்டு? வஞ்சகத்தைக் குணமாகக் கொண்டே சகுனியின் மனத்தைப் போலவே அந்தக் காய்களைத் தச்சன் செய்திருந்தானோ என்னவோ? காய்கள் இந்த இறுதி முறையிலும் தருமனைக் கைவிட்டு விட்டன. தருமன் திரெளபதியையும் தோற்றுவிட்டான். தோற்கக் கூடாத பொருளைத் தோற்றுவிட்டான். விதிக்கும் கெளரவர்களுக்கும் வெற்றி. சத்தியத்துக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு சோதனை.

‘திரெளபதியையும் தோற்றுவிட்டோம்’ என்றெண்ணும் போது ஒரு சில கணங்கள் அவன் உள்ளம் தளர்ந்தது. ஒடுங்கியது, விம்மியது, உணர்வுகள் குழம்பின. அவன் கலங்கினான். மிக விரைவிலேயே அவனுடைய இயற்கைக் குணமாகிய, சாந்த குணம், கை கொடுத்து உதவியது. தருமன் கலக்கமின்றி இருந்தான்.