மகாபாரதம்-அறத்தின் குரல்/7. தருமம் காத்தது!

விக்கிமூலம் இலிருந்து

7. தருமம் காத்தது!

காட்டில் பாண்டவர்கள் நலமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் என்பதை அறிந்த போது துரியோதனாதியர் உள்ளத்தில் பொறாமை கனன்றது. அவர்களை அப்படி நலமாக வாழவிடாமல் அடிக்கடி ஏதேனும் இடையூறுகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணினர் துரியோதனாதியர். துருவாசர் என்று ஒரு முனிவர் மகாமுன் கோபி. எதற்கெடுத்தாலும் கொடிய சாபங்களைக் கொடுக்கக் கூடியவர். அந்த முனிவரையும் அவரோடு சேர்ந்த வேறு சில முனிவர்களையும், “காட்டில் போய்ப் பாண்டவர்களைச் சந்தியுங்கள்” என்று வழியனுப்பி வைத்தான் துரியோதனன். துருவாசரும் அவனுடைய சகாக்களும் பாண்டவர்களைக் காண்பதற்காகக் காட்டுக்கு வந்து சேர்ந்தனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐந்து பேரும் மிகவும் பயத்தோடு பக்தியும் விநயமும் கொண்டு துருவாசரை வரவேற்று வணங்கினார்கள். துருவாசர் பாண்டவர்களை நலம் விசாரித்து ஆசி கூறினார்.

அப்போது சரியான நடுப்பகல் நேரமாகியிருந்தது. துருவாசரும் அவரைச் சேர்ந்தவர்களும் வருவதற்கு முன்பே பாண்டவர்களும் திரெளபதியும் இருந்த உணவுப் பொருள்களை உண்டு முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்திருந்தனர்.

“பாண்டவர்களே! உங்களை இன்று சந்திக்க நேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சி. நானும் எனது நண்பர்களும் சேர்ந்து இன்று இங்கே உண்ணலாம் என்று இருக்கின்றோம். போய் நீராடிவிட்டு வருகின்றோம், உணவு தயாராக இருக்கட்டும்” என்று கூறிவிட்டு நீராடப் புறப்பட்டு விட்டனர் துர்வாசர் முதலியோர். பாண்டவர்கள் என்ன செய்வதென்றே தோன்றாமல் திகைத்தனர். வேண்டுமென்றே தங்களுக்குச் சாபத்தைப் பெறுவிக்க வேண்டுமென்பதற்காகத் துரியோதனாதியர்கள் இந்தச் சூழ்ச்சியைச் செய்திருப்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. எப்போதுமே விரைவில் ஆத்திரத்தை அடைந்து விடக் கூடிய சுபாவத்தை உடையவனாகிய வீமன் இப்போதும் அதேபோற் சினமடைந்து ‘உடனே போய்த் துரியோதனாதியர்களைத் துவம்சம் செய்து விடுகிறேன்’ என்று கிளம்பி விட்டான். “நீ கூறுவதும் செய்யப் புகும் ஆத்திரமான செயலும் சிறிதளவும் நன்றாக இல்லை வீமா! முனிவர் உண்ண வருகிறேனென்று சொல்லிவிட்டு நீராடப் போயிருக்கும் போது நீ போருக்குப் புறப்படுவது அவருடைய கடுஞ் சாபத்தை வலுவில் அடையக் காரணமாகும்” என்று கூறி அர்ச்சுனன் வீமனைத் தடுத்தான்.

“எப்படியாவது துருவாசருக்கும் மற்றவர்களுக்கும் உணவு படைத்து ஆகவேண்டும். அதற்கான வழியைக் காண முயல்வோம்” என்றான் தருமன்.

“எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் உதவிக் காப்பவன் கண்ணபிரான். அவன் துணையையே இப்போதும் நாடுவோம்!” நகுலன் கூறினான்.

“ஆம்! அதுவே சரியான வழி, கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்கு அவனைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமும் கூட நமக்குக் கிடையாது, நாம் இருந்த இடத்திலிருந்தே மனத்திலே எண்ணினால் போதும். நமக்கு உதவ வந்து விடுவான் அவன்.” சகாதேவன் அதை ஆமோதித்தான்.

சகோதரர்கள் இவ்வாறு சிந்தனையில் ஈடுபட்டிருந்த போது வாட்டம் நிறைந்த முகத்தோடு திரெளபதி அங்கு வந்தாள். “இதோ! முனிவர் நீராடி விட்டு வந்து விடப் போகிறார். என்ன செய்யலாம்?” என்றாள். உடனே தருமன் நகுல சகாதேவர்களின் யோசனைப்படிக் கண்ணனை எண்ணி மனத்தில் தியானம் செய்தான். சிறிது நேரத்தில் எல்லாம் வல்ல மாயவனாகிய கண்ணபிரான் பாண்டவர்களுக்கு முன் தோன்றினான். ஐவரும் திரெளபதியும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது தாங்கள் துருவாசருக்கு உணவு படைக்க இயலாது திகைத்திருக்கும் நிலையைக் கூறி வழி காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதவனைப் போலச் சிரித்துக் கொண்டே நின்ற அந்தப் பெருமான் அவர்கள் துன்பத்தை அப்போது தான் அறிந்து கொண்டவனைப் போல நடித்தான்.

“திரெளபதி! கதிரவன் உனக்கு அளித்திருக்கும் அக்ஷய பாத்திரத்தை இங்கே கொண்டு வா” என்று வேண்டினார் கண்ணபிரான். திரெளபதி கழுவிக் கவிழ்த்திருந்த அக்ஷய பாத்திரத்தைக் கொண்டு வந்தாள். “நன்றாகப் பாத்திரத்தைப் பார்! அதில் ஏதாவது ஒட்டிக் கொண்டிருக்கிறதோ?” திரெளபதி பார்த்தாள். ஒரே ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை அப்படியே கண்ணனுக்கருகில் கொண்டு போய்க் காண்பித்தாள். கண்ணன் அந்த ஒரே ஒரு பருக்கையைக் கொடுக்குமாறு வாங்கிச் சாப்பிட்டான். திரெளபதியும் பாண்டவர்களும் கண்ணனின் அந்தச் செயலுக்குக் காரணம் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தனர்.

“அம்மா ! திரெளபதி! துருவாசர் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்'’ என்று திரெளபதியை நோக்கிக் கூறினான். அவள் திகைத்தாள். எவருக்கும் எதுவும் புரியவில்லை. கண்ணன் உண்ட அந்த ஒரு சோற்றுப் பருக்கை துருவாசரது வயிற்றையும் அவர் கூட வந்தவர்கள் வயிறுகளையும் எப்படி நிறைத்திருக்கும் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. மாயனாகிய கண்ணன் அதன் சூக்ஷமத்தை அவர்களுக்கு விளக்கினான். அதே சமயத்தில் துருவாசர் முதலியவர்கள் நிறைந்த வயிறும் மலர்ந்த முகமுமாக அங்கே வந்து சேர்ந்தனர். எல்லாம் சர்வாந்தர் யாமியாகிய கண்ணபிரானின் திருவிளையாடல் என்பதை முனிவர் புரிந்து கொண்டார். அவர் கண்ணனை வணங்கிவிட்டுப் பாண்டவர்களை நோக்கிக் கூறினார்;

“நீங்கள் இட்ட விருந்து நன்றாக இருந்தது. வயிறு நிறைய உண்டோம். உங்கள் நல்லுள்ளத்தைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.” பாண்டவர்கள் அவரை வணங்கினர். துருவாசர் தாம் காட்டிற்கு வரநேர்ந்த உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டார்.

“நேற்றிரவு அத்தினாபுரியில் துரியோதனனுடைய அரண்மனைக்கு விருந்துண்ணப் போயிருந்தேன். அவன் அன்போடு உபசரித்து விருந்திட்டான். அவன் என்னிடம் காட்டிய பணிவும் அன்பும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. அது எதற்காக என்று இப்போது புரிந்து கொண்டேன். விருந்துண்டு முடிந்ததும் “உனக்கு வேண்டிய வரம் ஒன்றைக்கேள்!” என்று அவனிடம் கூறினேன். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் ஏனையோருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணக் கூடியவனாகிய அந்தப் பேதை உடனே, “முனிவரே! இன்று நீங்கள் என்னிடம் விருந்தினராக வந்தது. போலவே நாளை பாண்டவர்களிடம் போய் விருந்தினராக அமைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். ”அதனால் இங்கு உங்களைத் தேடி வந்தேன்.” முனிவர் தாம் வந்த காரணத்தைக் கூறி முடித்ததும் தருமன் அவரிடம் ஒரு வரம் வேண்டிக் கொண்டான்.

“துருவாசரே! துரியோதனாதியர்கள் இம்மாதிரிச் செய்து விட்டார்களே என்று அவர்கள் மேல் சினம் கொண்டு தாங்கள் சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாது என்பதே அடியேன் வேண்டுகோள். “துருவாசர் தருமனின் தன்னலமற்ற வேண்டுகோளைக் கேட்டு வியந்தார். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் பிறருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணும் துரியோதனனின் மனப்பண்பையும், தனக்கு துன்பமே விளைந்தாலும் மற்றவர்களுக்கு நன்மை விளைய வேண்டும் என்று எண்ணும் தருமனின் மனப்பண்பையும் நினைத்துப் பார்த்தார் அவர். ஒன்று மடுவாகத் தாழ்ந்திருந்தது. மற்றொன்று மலையாக உயர்ந்திருந்தது. பின்பு துருவாசரும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அவர்கள் பழையபடி கானகத்தில் கவலை மறந்து வாழலாயினர். அவ்வாறு வாழ்ந்து வரும் போது ஒரு நாள் திரெளபதி வனப்பகுதியில் உலாவி வரவேண்டும் என்ற ஆசையை அர்ச்சுனனிடம் தெரிவித்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றக் கருதிய அர்ச்சுனன் அவளை அழைத்துக்கொண்டு காட்டில் உலாவுவதற்குச் சென்றான். உலவிக் கொண்டே வரும்போது வழியோரத்தில் தென்பட்ட ஒரு நெல்லி மரத்தைத் திரெளபதி கண்டாள். அந்த வளமான நெல்லி மரத்தில் ஒரே ஒரு நெல்லிக் கனி விளைந்து முற்றித்திரண்ட வடிவோடு தோன்றியது. அதைப் பறித்து உண்ணக் கருதி அர்ச்சுனனிடம் கேட்டாள் அவள்.

அவன் உடனே சிறிதும் சிந்திக்காமல் வில்லை வளைத்துக் குறிதவறாமல் ஓர் அம்பை அந்தக் கனியின் மேல் எய்து அதைக் கீழே வீழ்த்திவிட்டான். வில்லை நாணேற்றிய ஒலியையும் அம்பு கனியை வீழ்த்திய ஒலியையும் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள ஆசிரமங்களில் வசித்து வந்த முனிவர்கள் மனம் பதறி வெளிவந்தனர். அர்ச்சுனன் நெல்லிக்கனியைக் கீழே வீழ்த்தியிருப்பதையும் திரெளபதி அவனருகே குனிந்து கனியை எடுக்க முயன்று கொண்டிருப்பதையும் கண்ட அவர்கள் விரைவாக ஓடிவந்து திரெளபதியைத் தடுத்தனர்.

“ஐயோ! அர்ச்சுனா; என்ன காரியஞ் செய்து விட்டாய்? இந்த நெல்லிக் கனி மாபெரும் முனிவராகிய அமித்திரர் உண்ணுவதற்கு உரியது அல்லவா? திரெளபதியின் பேச்சைக் கேட்டுத் தீரவிசாரித்துக் கொள்ளாமல் இதை நீ மரத்திலிருந்து வீழ்த்திவிட்டாயே. அமித்திர முனிவர் இப்போது இந்தக் கனி கீழே விழுந்திருப்பதைக் கண்டால் கடுங்கோபம் கொண்டு விடுவாரே, என்றனர். அதனைக் கேட்டு அர்ச்சுனன் என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து வருந்தினான். “எப்படியோ தவறு நேர்ந்து விட்டது, நமக்குப் பயமாயிருக்கிறது. கனியைக் கொண்டுப் போய் தருமனிடம் கொடுத்து என்ன பரிகாரம் தேடலாமென்று ஆலோசிக்கலாம்” என்று கனியுடனும் திரெளபதியுடனும் காட்டில் தாங்கள் வசிக்கும் இடத்துக்குத் திரும்பினான். அர்ச்சுனன் கனியைத் தன் கையில் கொடுத்து நடந்தவற்றைக் கூறியதும் தருமனுக்குச் சினம் தோன்றியது. ஆனால் ஒரே ஒரு கணம் தான் அந்தச் சினம் சினமாக இருந்தது. மறுகணம் அதுவே பொறுமையாக மாறிவிட்டது.

“காட்டில் அனாதைகளைப் போன்று வசிக்கின்ற துன்பம் போதாதென்று இந்தத் துன்பத்தையும் வேறு நீ கொண்டு வந்திருக்கிறாய்!” -என்று அர்ச்சுனனை நோக்கி வேதனைச் சிரிப்போடு கூறினார்.

“நமக்குள் வருந்துவது பின்பு இருக்கட்டும். அமித்திர முனிவர் மரத்தில் கனியைக் காணாமல் சினங்கொண்டு சாபம் கொடுப்பதற்குள் அவரைச் சந்தித்துப் பணிவோடு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடலாம்” என்றான் வீமன்.

“வேண்டாம். என் பொருட்டு எல்லோரும் முனிவரைச் சந்தித்து ஏன் அவருடைய கோபத்துக்கு ஆளாக வேண்டும்? நான் செய்த வினைக்கு நானே சென்று பயனை அனுபவிக்கிறேன்! உங்களுக்கு ஏன் வீணான கஷ்டம்?” என்று அர்ச்சுனன் வெறுப்பினால் தன்னைத்தானே நொந்து கொண்டான்.

“நீ பேசுவது சிறிதும் நன்றாயில்லை அர்ச்சுனா! உனக்கு மட்டும் முனிவர் சாபம் கொடுத்துவிட்டால் நாங்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? வருகிற துன்பத்தை எல்லோருமே அனுபவிப்போமே?” -என்றான் தருமன். நகுலன் கூறினான்:

“என்ன போதாத வேளையோ தெரியவில்லை. நமக்குத் துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. துருவாசர் திடீரென்று விருந்துக்கு வந்து கொடுத்த துன்பத்தைக் கூடத் தவிர்த்துவிட்டோம். இப்போது இந்தப் புதிய துன்பத்திலிருந்து தப்ப வழி தெரியவில்லை. முன்போலவே கண்ணபிரானைத் தியானம் செய்வோம். அவன் வந்து உதவினால்தான் இத்துன்பம் தீரும் போலும்.”

“இப்படிச் செய்தால் என்ன? அமித்திர முனிவர் மரத்திலிருந்து கனி வீழ்த்தப்பட்டிருப்பதை அறிந்து நம்மைச் சபிப்பதற்கு முன்னால் நாமே ஓடிச்சென்று கனியை அவர் முன்பு வைத்து வணங்கி மன்னிப்புப் பெற்றுவிட்டால் ஒரு துன்பமுமில்லையே?” -சகாதேவன் கூறினான்.

“எல்லாம் என் ஆசையால் வந்த தீவினை. நான் அந்தக் கனியைக் கேட்டிருக்கவில்லை என்றால் இவ்வளவு துன்பமும் ஏற்பட்டிருக்காது” என்று தன்னை நொந்து கொண்டாள் திரெளபதி.

கண்ணபிரானை அழைத்து உதவி வேண்டுவதைத் தவிர வேறுவழியில்லை என்று தோன்றவே தருமன் கருணைக் கடலான கண்ணபிரானை எண்ணினான். எண்ணிய அளவில் அடியார் முன் தோன்றித் துயர் தீர்க்கும் அப்பெருமான் உடன் தோன்றினான். பாண்டவர்கள் அவனை வணங்கிப் பணிவோடு தங்கள் நிலையைக் கூறினார்கள். “இப்போது என் உதவியைக் காட்டிலும் உங்கள் சொந்த தருமம் தான் உங்களைக் காக்க வேண்டும். நீங்கள் ஐவரும் திரெளபதியும் உங்கள் மனத்திலுள்ள எண்ணங்களைச் சிறிதும் மறைக்காமல் வெளியிட்டால் இந்தக் கனி ஒருவேளை தான்