இந்தியப் பெருங்கடல்/பயன்கள்

விக்கிமூலம் இலிருந்து

5. பயன்கள்

திட்டமிட்டுத் திண்ணிய முறையில் செயற்படுத்தப்படுவது இந்தியக் கடல் ஆராய்ச்சி. ஆகவே, அதனால் உண்டாகக்கூடிய சிறந்த பயன்கள் பலவாகும். அவை யாவை என்பதை இறுதியாகக் காண்போம்.

பொருள் வளம்

இந்தியாவின் பொருள் வளம் இந்தியக் கடல் ஆராய்ச்சியினால் பெருக வழிகள் பல உள்ளன. இந்தியக் கடலின் உயிர்கள் யாவும் முறையாக ஆராயப்படுமானல், அதனால் இருவகையில் நன்மைகள் கிட்டும். முதலாவதாகக் கடல் உயிர்களின் அறிவு பெருகும். இதனால் கடல் உயிர் நூல் வளரும். இரண்டாவதாக உண்ணத்தக்க மீன் வகைகள் முழு அளவுக்குப் பயன்படுத்தப்படுமானல், பொருள் வளமும் பெருகும். உணவுப் பற்றாக்குறையும் நீங்கும்.

இந்தியக் கடலின் அருகில் வாழும் நாடுகளிலுள்ள மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் கால் பங்கு ஆகும். இவர்களது உணவுப் பற்றாக்குறை நீங்கிப் பொருள் வளம் பெருக, இந்தியக் கடலின் மீன்வளம் நன்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு விஞ்ஞான முறைகளில் மீன்பிடித்தல் நடைபெறுதல் வேண்டும். மீன் பண்ணைகளையும் அவ்வாறே அமைக்க வேண்டும். மீன் தொழில் விஞ்ஞானக் கலையாகவே மாற வேண்டும்.

இந்தியக் கடலின் கனி வளங்களைத் தீர ஆராய்ந்து, அவற்றைப் பயன்படுத்த, இந்தியாவின் பொருள் வளம் பெருகும். இதற்கு இந்தியக் கடல் ஆராய்ச்சி வழிவகை செய்யும் என நாம் நம்பலாம். உண்மையில் இந்தியக் கடலின் கனி வளங்கள் அளவிடற்கரியனவாகும். சிக்கனப் பயண வழிகளை இந்தியக் கடலில் மேற்கொள்வதால், அதிகமாகும் பணச் செலவை எல்லா நாடுகளும் ஓரளவுக்குக் குறைக்கலாம்.

கடல் அறிவு

இந்தியக் கடலைப் பொறுத்தவரை கடல் நூல் அறிவு பல வழிகளிலும் பெருகும் என்பதில் ஐயமில்லை. இந்தியக் கடலை ஆராய்வதால் பெறும் அறிவை, பசிபிக், அட்லாண்டிக் கடல்கள் முதலிய மற்ற கடல்களை ஆராய்வதற்கும் பயன்படுத்தலாம்.

பல சிக்கல்களுக்குத் தீர்வுகள் காணலாம் இந்தியக் கடலில் மீன்கள் அதிக அளவுக்கு மடிகின்றன. உயிர் நூல் விஞ்ஞானிகளுக்கு இது பெரும் புதிராகவே உள்ளது. அவ்வாறு இறத்தல் அதிகமாக மீன்கள் உண்டாவதா அல்லது வேறு காரணங் குறித்தா என்று அறியலாம்.

இந்தியக் கடலின் நீரோட்டங்கள் பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் உள்ளது போன்று. அவ்வளவு வலுவுள்ளவை அல்ல. அவை பசிபிக், அட்லாண்டிக் கடல்களின் நீரோட்டங்களிலிருந்து வலுவிலும் விரைவிலும் அதிகமாக வேறுபடுகின்றன.

இந்தியக் கடலின் மேற்பரப்பு கிழக்காகச் சாய்ந்துள்ளது. அதன் மேற்பரப்புச் சாய்விற்கும் அதில் வலுவான புதை நீர் ஓட்டங்கள் இல்லாததற்கும் தொடர்பு இருக்கலாம்.

மேற்கூறிய இரு உண்மைகளும் தற்காலிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் செய்யப்படும் ஆராய்ச்சிகளால் அவை உறுதி செய்யப்படும்.

1959-61இல் இந்தியக் கடலில் சோவியத்து விஞ்ஞானிகள் இரு பயணங்களை மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் பயணங்களில் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு :

இந்தியக் கடலுக்கு அடியிலுள்ள நிலவுலக முடியின் தடிமன், அமைப்பு, தணிவு ஆகியவை முதன் முதலாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு அதன் தணிவை ஆராய்ந்த பொழுது, இதுவரை அறியப்படாத மலைகளும் மலைத் தொடர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் எரிமலைத் தோற்றங்கொண்ட பாறைகள் அதிக அளவுக்கு உள்ளன.

இந்தியக் கடலின் அடியின் இயைபையும் அமைப்பையும் ஆராய்ந்தபொழுது, அதன் தென் பகுதியில் இரும்பு, மாங்கனிஸ் தாதுக்கள் அதிக அளவுக்கு இருப்பது தெரியவந்தது. இத்தாதுக்களில். 5 பங்கு அளவுக்கு நிக்கல், கொபால்ட் முதலிய உலோகங்கள் உள்ளன.

இந்தியக் கடலின் இயைபை ஆராய்ந்ததிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாவது : இந்தியக் கடலிலுள்ள மீன்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் போதுமான ஆக்சிஜன் என்னும் உயிர்க் காற்று பெருமளவுக்கு உள்ளது. விலக்குகள் அரபிக்கடலும், வங்காள விரிகுடாவும் ஆகும். இங்குச் சில இடங்களில் ஆக்சிஜன் காணப்படவில்லை. இங்கு நீர் போதுமான அளவுக்குச் செங்குத்தாக ஓடாததே ஆக்சிஜன் இல்லாமைக்குக் காரணமாகும். இவ்விடங்களில், உயிர்களுக்கு ஊறுதரும் அய்டிரஜன் சல்பைடு என்னும் வாயு அதிகமாகக் காணப்படுகிறது.

பொதுவாகக் கடல் நூல் துறையில் வல்லுநர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அதை ஒருவாறு ஈடு செய்ய, திறமைமிக்க மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு, இத்திட்டம் பெருமளவில் செயற்படுத்தப்படுகிறது. அன்றியும், கடல் நூல் துறையில் பயில்வோருக்கு நிறைந்த அறிவும் போதிய பயிற்சியும் கிடைக்க இதனால் ஏதுவாகும்.

இந்த ஆராய்ச்சியினால் திரட்டப்படும் பல துறைச் செய்திகள் வகைப்படுத்தப்படும்; கண்டுபிடிப்புக்கள் தொகுக்கப்படும். இவை எல்லாம் இறுதியாக ஒரு நிலையான நூல் வாயிலாக வெளியிடப்படும். இந்நூல் சிறப்பாகக் கடல் நூலில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெரிதும் பயன்படும்.

இந்த ஆராய்ச்சியால் கடல் நூல் வளர்வது மட்டுமன்றி, அதனோடு தொடர்புடைய நில இயல் நூல், நில அமைப்பு நூல், நில நூல், உயிர் நூல், வானிலை நூல் முதலிய அறிவுத் துறைகளும் வளரும் என்பது வெள்ளிடைமலை.

இந்தியக் கடலை முழுமையாக ஆராய்வதால் வானிலை அறிவும், தட்ப வெப்பநிலை அறிவும், சிறப்பாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. இதனால் நீண்ட எல்லை வானிலை முன்னறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க இயலும். இந்தியக் கடற்பகுதிகளைச் சூழ்ந்த நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அவற்றிற்கு அப்பாலும் வானிலை முன்னறிவிப்பைத் தெரிவிக்க இயலும், உலக வானிலை முன்னறிவிப்பைத் தெரிவிப்பதில் மற்றக் கடல்கள் போன்று இந்தியக் கடலும் சிறந்த இடத்தைப்பெறும்.

உலகின் புற வெளியான வான்வெளியை அறிந்த அளவுக்கு, அதன் அக வெளியான கடலை அறியவில்லை என்பது எல்லோரும் கூறும் ஒரு பொதுக்குறையாகும். இந்தக் குறை, உலக அளவில் தீவிரக் கூட்டு முயற்சியுடன் செய்யப்படும் இந்தியக் கடல் ஆராய்ச்சியினால் அறவே நீங்க வழியுண்டு என்று நாம் எதிர்பார்க்கலாம். அன்றியும், இந்த ஆராய்ச்சி மற்றப் பெருங்கடல்களை எதிர்காலத்தில் ஆராய்வதற்கும், முன் மாதிரியாகக் கொள்ளப்படலாம் என்றும் நாம் நம்பலாம்.