எனது நண்பர்கள்/பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார்

விக்கிமூலம் இலிருந்து

பேராசிரியர்
கா. நமச்சிவாய முதலியார்

“50 ஆண்டுகட்கு முன்பு எனது பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் இல்லத்தில் ஒரு திருமணம். அத்திருமணத்தில் ஒடி ஆடி திருமண வேலைகளைச் செய்து கொண்டிருந்த ஒருவரை ‘யார்’ என்று விசாரித்தேன். ‘அவர்தான் கி. ஆ. பெ. விசுவநாதம் என்று ஒருவர் அறிவித்தார்” ஏன்று சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார்.

அவ்வளவு தொடர்பு பேராசிரியர் நமச்சிவாய முதலியார் அவர்களிடத்தில் எனக்கு உண்டு. அவரது. தமிழ்ப்பற்றும், தமிழ்த்தொண்டும் என்னை அவர் பக்கம் இழுத்து இருக்கிறது.

திரு. நமச்சிவாயர் அவர்கள் சென்ற நூற்றாண்டுப் புலவர். 1876-இல் பிறந்தவர். இந்த ஆண்டு (1976) அவரது நூற்றாண்டு விழா ஆண்டு.

இவரது தந்தை திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். தந்தையிடமே கல்வி பயின்று, பதினாறு வயதிலேயே ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தவர். மகாவித்வான் சண்முகம்பிள்ளை அவர்களிடம் பல ஆண்டுகள் தமிழ் நூல்களைக் கற்றுத் தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தார். பிறகு பல உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகத் திகழ்ந்து, 1914இல் மேரிராணி கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். 1920 முதல் 14 ஆண்டுகள் அரசாங்கத் தமிழ்க் கல்விக்குழுவின் தலைவராகப் பணிபுரிந்தவர். அக்காலத்தில்தான் திரு. வி. க. அவர்களோடு சென்று முதல் முதலாக அவர்களைக் கண்டு பேசி மகிழ்ந்தேன்.

அவரது அமைதியான வாழ்க்கையும், அன்பு கலந்த இனிய சொல்லும், எவரையும் தன் வசம் இழுத்துவிடும். அவர் எழுதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்று வந்தன. மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வந்தன.

இதுவன்றி, நூல்கள் பலவும் எழுதித் தமிழ்மக்களுக்கு வழங்கியவர். இவற்றுள் குறிப்பிடத் தக்கவை கீசகன், பிருதிவிராஜன், ஜனகன், தேசிங்குராஜன் என்னும் நூல்களாகும். எல்லாவற்றையும்விட ஐனவிநோதினி’ என்ற திங்கள் இதழில் அவர்கள் எழுதிவந்த கட்டுரைகள் பல தமிழ் மக்களைத் தட்டி எழுப்பின; அவ்வாறு உணர்ச்சி ஊட்டி எழுப்பப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

ஒழுக்கத்திற்கு மதிப்பளிக்கும் ஆத்திச்சூடி, வாக்குண்டாம் நல்வழி, நன்னெறி முதலிய நீதி நூல்களைப் பெரிதும் போற்றியவர். அவைகளுக்கு உரை எழுதி மக்களுக்கு வழங்கித் தமிழ் மக்களுடைய ஒழுக்கத்தை வற்புறுத்தி வளர்த்தவர். அவ்வுரைகள் எனக்குப் பெரிதும் பயன்பட்டன.

“தொல்காப்பியப் பொருளதிகாரம்'”, “தஞ்சை வாணன் கோவை”', “இறையனார் களவியல்” ஆகிய பெருநூல்களைப் பதிப்பித்து, அவர் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

தை முதல் நாளை தமிழ் மக்கள் தமிழ்த் திருநாளாக, திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கண்டு, தோற்றுவித்து. கட்டளையிட்டு நடத்திக் காட்டி நிலைநிறுத்தி மறைந்தவர். அப்பணியை அவர் வழியில் நான் இன்றளவும் நடத்தி வருகிறேன். நான் மட்டுமல்ல தமிழ்த் திருநாளையும் திருவள்ளுவர் திருநாளையும் கொண்டாடுகின்ற தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அவரை நினைத்து போற்றி வணங்கியாக வேண்டும்.

அவர் ஒரு புலவர் மட்டுமல்ல; புரவலர் ஆகவும் திகழ்ந்தவர். பல புலவர்களுக்குப் பொருளுதவி செய்து மகிழ்ந்தவர். இவரது இல்லம் சென்னை சாந்தோம் கடற்கரையருகில், “கடலகம்” என்ற பெயரில் அழகுற அமைந்து, தமிழ் அன்பர்க்கும், தமிழ் பயில்பவர்க்கும் ஒரு கலைக் கூடமாகவே திகழ்ந்தது.

அவரிடம் வருகிறவர்களுக்கு அவர் சொல்லும் போதனைகளில் “சாதிச் சண்டைகளில், சமயப் பிணக்குகளில், அரசியல் கிளர்ச்சிகளில் தலையிட்டு வாழ்நாளை வீணாக்காதீர்கள்’’ என்பதும் ஒன்று. அதுவும் சும்மாவல்ல; காப்பி, தேநீர், பால் அல்லது மோருடன்.

மறைமலையடிகளும், திரு.வி.க. அவர்களும், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், பொறியியல் வல்லுநர் பா. வே. மாணிக்க நாயகர் அவர்களும், திரு. முதலியார் அவர்களைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுவதைப் பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

47 ஆண்டுகளுக்கு முன்பு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்கள் நிகழ்த்திய தலைமை உரையில், “தமிழுக்குத் தெய்வத் தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறுகின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை. தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன” என்று கூறினார். இது அக்காலத்தில் உள்ள சைவத் தமிழ்ப் புலவர்கள் சிலருக்கு திரு. முதலியார் நாத்திகரோ என்ற ஐயத்தை உண்டாக்கிவிட்டது. இதையறிந்த பேராசிரியர் அவர்கள், சென்னையில் நடந்த தமிழ்த் திருநாள் கூட்டத்தில், ‘தமிழுக்குத் தெய்வத் தன்மையை வைத்துச் சிறப்புக் கூறுவது தெய்வத்திற்குச் சிறப்புக் கூறுவதாகுமே தவிர, தமிழுக்குச் சிறப்பு கூறுவதாக இராது. தமிழுக்கே உள்ள தனித் தன்மையை எடுத்துக் கூடறுவதே தமிழுக்குச் சிறப்பு கடறுவதாகும்” என விளக்கினார். இதை என் உள்ளம் ஒப்பியது மட்டுமல்ல, “தமிழின் சிறப்பு” என்னும் நூலை நான் எழுதுவதற்கு இது அடிப்படையாகவும் அமைந்து விட்டது.

திரு முதலியார் அவர்கள் ஒரு புலவர் மட்டுமல்ல, அவர் ஒர் பெருஞ் செல்வர் என்பதை நீலகிரி, உதக மண்டலத்திலுள்ள அவரது இரு மாளிகைகளும், அதில் மொய்த்துக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களின் கூட்டமும் காட்டும்.

பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்கள் நல்லாசிரியராக இருந்து துணைவேந்தர் நெ. து. கந்தர வடிவேலு, நிதி அமைச்சர் சி. கப்பிரமணியம், தலைமை நீதிபதி பி. எஸ். கைலாசம், இந்தியப் பேரரசின் முன்னாள் அமைச்சர் ஒ. வி. அளகேசன் முதலியவர்களையெல்லாம் மாணவராக ஏற்று, தகுதியுடையவர்களாக ஆக்கித் தமிழகத்திற்கு உதவியவர்.

இத்தகைய ஒரு நல்லறிஞரைத் தமிழகம் இழந்து விட்டது. இது தமிழுக்கும் தமிழருக்குப் பேரிழப்பாகும். அவர் இன்று இல்லாவிட்டாலும் அவரது தொண்டு என் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது. துணை வேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு, சென்னை நக்கீரர் கழகச் செயலாளர் திரு. சிறுவை மோகனசுந்தரம் போன்ற பல நல்லறிஞர்களின் உள்ளத்திலும், அவர் நின்று நிலவி வருகிறார். இது போதாது. தமிழும் தமிழரும் தமிழகமும் உள்ளவரை அவரது புகழ் நின்று நிலைத்திருக்க வேண்டும்.