சீர்மிகு சிவகங்கைச் சீமை/இன்னலில் மறைந்த இறுதி மன்னர்

விக்கிமூலம் இலிருந்து




8. இன்னலில் மறைந்த இறுதி மன்னர்




ராணி வேலு நாச்சியாருக்குப் பதிலாக, கி.பி.1790-ல் சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர், சிவகங்கை மன்னரானார். ஓராண்டிற்கு முன்னர், ராணி வேலுநாச்சியாரையும் அவரையும் கைது செய்து சிறையிட முயன்ற அதே பிரதானிகள் இப்பொழுது அதே மன்னரை மதித்து, அவரது கட்டளைகளை பெறும் அவரது பிரதானிகளாகப் பணியாற்றினர். சீமை நிர்வாகம் சிறப்பாக இயக்கம் பெற்றது.

மக்களிடமிருந்து வசூலிக்கப் பெறும் வரிவகையறாக்களில் மன்னர் கவனம் செலுத்தினார். வானத்தை நம்பி வாழும் குடிகள் செலுத்தும் நிலத்தீர்வையும், வெளிச்சீமைகளில் இருந்து சிவகங்கைச் சீமைக்கு வந்து பண்டங்களை விற்றுச் செல்லும் வணிகர்கள் தங்களது பொருட்களுக்கு சுங்கச் சாவடிகளிலும் பேட்டைகளிலும் செலுத்தும் சுங்கமும் மகமையும்தான் அன்றைய சிவகங்கை அரசின் பிரதான வருவாய்களாக அமைந்து இருந்தன. அப்பொழுது பட்டநல்லூர், சிவகங்கை, திருப்புவனம், இவை தவிர சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் சுங்கச் சாவடிகளும், சிவகங்கை, மானவீரமதுரை, திருப்புத்துர், தேவகோட்டை, கல்லல், இளையாங்குடி ஆகிய ஊர்களில் பேட்டைகளும் அமைந்து இருந்தன.

காடுகள் மற்றும் பொது இடங்களான மந்தை, மேய்ச்சல் தரைகளில் உள்ள மரங்களில் இருந்து கிடைக்கும் மாவிடை மரவிடை, பாட்டம் ஆகிய வருமானங்களும், திருப்புத்துார், சுண்ணாம்பு இருப்பு, பிரமனுார் போன்ற பெருங்கண்மாய்களில் இருந்து கிடைக்கும் மீன் பாசி வரவுகளும் சில முக்கியமான வரவினங்களாக அமைந்து இருந்தன. இளையான்குடி எமனேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்த இருநூறு தறிகளில் இருந்து
வேங்கன் பெரிய உடையாத் தேவர்

தறிக்கடமையும் வசூலிக்கப் பெற்றன.[1]

இத்தகைய நிலையில் ஆற்காட்டு நவாப்பிற்கு ஆண்டு காணிக்கையாக (பேஷ்குஷ்) ரூபாய் மூன்று லட்சம் செலுத்த வேண்டியதாக இருந்தது.[2] நவாப்பின் மேலாண்மையை மதித்து நேசக் கரம் நீட்டியதற்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்டனை இது என்பதை மன்னர் உணர்ந்தார். அன்று தென்னகத்தில் நிலைத்து இருந்த பாரம்பரிய அரசுகளான திருவாங்கூர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய அரசுகள் அனைத்தும் இந்திய அளவில்உள்ள முகலாயப் பேரரசரின் மேலாண்மையை ஏற்று அவரது தென்னாட்டுப் பிரதிநிதி என்ற முறையில், ஆற்காட்டு நவாப்பை மதித்து, இந்த அரசுகள் வழங்கும் கண்ணியமான அன்பளிப்புத் தொகையே, ஆண்டு பேஷ்குஷ் தொகை என்பதாகும். அந்தந்த அரசுகளின் வருவாய்களின் பேரில் செலுத்தப்படும் கட்டாயத் தீர்வை அல்ல.அது. ஆதலால் ஆண்டுகாணிக்கை தொகை பற்றி மன்னர் வேங்கண் பெரிய உடையாத் தேவர் கும்பெனித் தலைமையுடன் தொடர்பு கொண்டார். அந்த தொகையினைச் செலுத்துவதில் உள்ள சிரமத்தை தெரிவித்தார். தொகையின் அளவை குறைத்து நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.[3]

கி.பி.1785-லும், 1787-லும் நவாப்பும் கும்பெனியாரும் செய்து கொண்ட உடன்பாடுகளின்படி நவாப்பிற்கு சேரவேண்டிய குறுநில மன்னர்களது இந்தக் காணிக்கையை வசூலிக்கும் உரிமையையும் அதனை வசூல் செய்வதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கும்பெனியார் நவாப்பிடமிருந்து உரிமை பெற்று இருந்தனர்.[4] அதற்காகவே கும்பெனியார் கலெக்டர்களையும் வசூல்தார்களையும் நியமித்து இருந்தனர், கும்பெனித் தலைமை சிவகங்கை மன்னரது கோரிக்கையை அனுதாபத்துடன் பரிசீலித்தனர். இதற்கு மிக முக்கியமான இன்னொரு காரணமும் இருந்தது. அன்றைய அரசியல் சூழ்நிலையில் கும்பெனித் தலைமை பாளையக்காரர்களை அடக்கி உதவுவதற்காக படையணிகளை ஈடுபடுத்திய செலவு என்ற இனத்தில் பெருந்தொகையைக் கோரி ஆற்காட்டு நவாப்பை மிகப் பெரிய கடனாளியாக மாற்றியிருந்தனர். கோட்டைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, அமைதி காத்தல் என்ற வகையிலும் செலுத்த வேண்டிய பணம் என நவாப்பின் முதுகெலும்பை ஒடித்து ஆண்டுதோறும் பழைய பாக்கிகளுக்கான ரூபாய் பன்னிரண்டு லட்சம் பகோடா பணம் (சுமார் நாற்பத்து ஏழு லட்சம் ரூபாய்) நடப்பு கணக்கிற்காக ஒன்பது லட்சம் பகோடா பணம் (சுமார் முப்பது லட்சம் ரூபாய்) நவாப்பிடமிருந்து வசூல் செய்தனர். இத்தகைய மீளாக்கடன் வலையில் சிக்குண்ட நவாப்பின் மீட்சிக்கு வழி இல்லையென்பதைத் தெளிவாக கும்பெனியார் உணர்ந்து இருந்தனர். ஆதலால் கர்நாடக ஆட்சித் தலைமையை வெகு விரைவில் கைப்பற்ற இருப்பதை எதிர்பார்த்து நவாப்பிற்கு கட்டுப்பட்ட தலைவர்கள், மன்னர்கள் ஆகிய இந்த மண்ணின் அதிபதிகளை இப்பொழுது இருந்தே இணக்கமாக வைத்துக் கொள்ள விரும்பியதே அந்த சிறப்பான காரணமாகும்.

ஆதலால் சிவகங்கை மன்னர் செலுத்த வேண்டிய ஆண்டுக் காணிக்கைத் தொகை ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து ரூபாய் ஒன்றே முக்கால்லட்சம் என குறைத்து உத்திரவிட்டது:[5]அவர்களுக்கு நவாப் செலுத்த வேண்டிய பாக்கியை இந்த தொகை நிர்ணயம் எந்த வகையிலும் பாதிப்பது இல்லையல்லவா? புதிய ஆட்சியாளர்களாக மாறப்போகும் அவர்கள் நவாப்பை விட "மிகவும் நல்லவர்கள்' என்பதை காட்டிக் கொள்ளவும் இந்த நடவடிக்கை அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது. இவ்விதம் முனைப்புடன் சீமை நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்த மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரது ஆர்வத்தை திசை திருப்பும் வழியில் மிகப் பெரிய சோதனை அவருக்கு காத்து இருந்தது. அண்மையில் பெண் குழந்தை ஒன்றைப் பிரசவித்த அவரது மனைவி ராணி வெள்ளச்சி நாச்சியார் தனது குழந்தையுடன் திடீரென மரணமுற்றார்.[6] இது ஒரு அரசியல் படுகொலை என மக்களால் கருதப்பட்டது. ராணி வெள்ளச்சி விஷமிட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக அரண்மனையில் பேச்சு எழுந்தது. என்றாலும் சோகத்தினால் துடித்த மன்னர், ராணியின் மரணம் எப்படி ஏற்பட்டது என்ற விவரங்களைப் பெறும் விசாரணையில் ஈடுபடாமல், இந்த நிகழ்ச்சியின் பின் விளைவுகளைத் தவிர்ப்பதில் ஈடுபட்டார். “பொற்றாலியோடு எவையும் போம்" என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க எழுந்த சோகச் சூழ்நிலை மன்னரது இயல்பான நடவடிக்கை அனைத்திலும் நிழலாடியது.

மறுமணம்

மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரது சொந்த நலன்களை கவனிக்கவும், அவரது சோகத்தை ஒரளவு போக்கி நிர்வாகப் பணியில் மன்னரை ஈடுபடுத்த, என்ன செய்யலாம் என பிரதானிகள் ஆலோசித்தனர். மன்னரது மறுமணம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லை! மன்னருக்கு மறுமணம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மன்னரது ஒப்புதல் பெற்ற, பெரிய மருது சேர்வைக்காரர், சில நாட்களில் தமது பெண்மக்களில் ஒருவரை மன்னருக்கு மணம் செய்து வைத்தார்.[7] செம்பி நாட்டு மறவர்கள், அவர்கள் சார்ந்துள்ள முக்குலத்தின் இன்னொரு பிரிவினரான அகமுடையாருடன் மணவினைகள் கொள்வது அன்றைய நிலையில் ஒரு அசாதாரண நிகழ்ச்சி அல்ல. ஆனால் சிவகங்கை அரசியலில் மன்னரது இந்த மறுமணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தான் சிவகங்கைச் சீமை வரலாற்றில் பிந்தைய பகுதி சுட்டிக் காட்டும் பேருண்மையாகும்.

மன்னருக்கு இந்தத் திருமணம் ஒரளவு மன ஆறுதலை அளித்தாலும், நாளடைவில் பெரும் சோதனையின் தொடக்கமாக மாறிவிட்டது. மன்னரது புதிய மாமனாரும் பிரதானியுமான பெரிய மருது சேர்வைக்காரரால் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், சின்னப் பிரதானியும், சின்ன மாமனாருமான சின்ன மருது சேர்வைக்காரரின் நடவடிக்கைகளினால் மன்னருக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவானது. கி.பி.1790-ல் கும்பெனியாரும் ஆற்காட்டு நவாப்பும் ராணி வேலு நாச்சியாருடன் சமரசம் செய்து வைத்த பொழுது அளித்த அறிவுரைகளை, அவர் பற்றி நிற்கவில்லை. அரசுரிமைக்கு முன்னர் அருகதையான குடும்ப உறவுகள் பலனற்று விடும்(Kingship knows nokinship) என்பது ஆங்கிலப் பழமொழி..ஆனால் சிவகங்கை அரசியலைப் பொறுத்தவரையில் குடும்ப உறவுகள் ஆட்சியுரிமையை விட அதிகமாக அதிகாரம் மிக்கதாக இருந்தது. இரு பிரதானிகளது மக்களும், ஆட்சியுரிமை அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இயங்கத் தொடங்கினர். தந்தையரைப் பின்பற்றுவது தனயர்களின் கடமைதானே!

சிவகங்கை மன்னரது நிலை இருதலைக் கொள்ளி போல இருந்தது. ஒருபுறம் ஆட்சிப் பொறுப்பு, மறுபுறம் முறித்துக் கொள்ள முடியாத சொந்தம். இந்த சூழ்நிலையில், அன்றாட அரசியல் பிரச்னைகளுக்கு எவ்விதம் தீர்வு காண்பது? கி.பி.1792 பிப்ரவரியில், சின்னமருது சேர்வைக்காரரது உத்திரவின் பேரில் சிவகங்கை படைகள் வடக்கே தொண்டமான் சீமைக்குள் புகுந்து கொள்ளையும் கொலையும் நடத்தியது.[8] புதுக்கோட்டை மானுவல் ஆசிரியர் மட்டுமல்லாமல் மதுரைச் சீமை வரலாறு எழுதியுள்ள நூலாசிரியரும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.[9] நல்ல வேளையாக கலெக்டரது தலையீட்டினால் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டைப் படை எடுப்பாக அல்லாமல் எல்லைத் தகராறாக முடிவு பெற்றது.

மன்னரைக் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளும் மருது சேர்வைக்காரரது தன்னிச்சையான முடிவுகள் மன்னருக்குத் தலைவலி தருவதாக இருந்தன. ராணி வேலு நாச்சியாரது ஆட்சியின் பொழுது எழுந்த அதே குழப்பமான சூழ்நிலை இறுக்கமான உறவு.அரசியலுக்குப் புதியவரான மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரால் அவரைச் சமாளிப்பது என்பது இலகுவான செயல் அல்லவே!

பக்கத்து நாடுகளான பெரிய மறவர் சீமை, தொண்டமான் சீமை சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் பிரதானி சின்னமருது சேர்வைக்காரரது செயல்பாடுகளில் நளினமும், மென்மையும் காணப்படவில்லை. மாறாக, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, உண்மைகளை மறந்த நிலையில், சிறிய பிரச்சனைகளைக்கூட பெரும் பிரச்சனைகளாகக் கருதி முடிவு செய்யப்பட்டன. மேலும், சிவகங்கைச் சீமை, இராமநாதபுரம் சீமையில் இருந்து உருவானது என்பதும் அந்தச் சீமையின் மன்னர், சிவகங்கை மன்னரது இரத்த பந்தத்தில் இணைந்த உறவினர் என்பதும் நினைவில் கொள்ளப்படவில்லை. கடந்த நாற்பது ஆண்டு கால அரசியலில், தாம் பிரதானியாக இருந்த வரை, சிவகங்கைப் பிரதானி தாண்டவராயபிள்ளை முக்கியமான அனைத்து பிரச்சனைகளிலும், இராமநாதபுரம் பிரதானிகளான வெள்ளையன் சேர்வை, தாமோதரம்பிள்ளை, பிச்சை பிள்ளை ஆகியோர்களுடன் கலந்து யோசிக்காமல் முடிவு செய்தது இல்லை. இத்தகைய முந்தைய கால கட்ட முறைகள் புறக்கணிக்கப்பட்டதால் இந்த இருநாடுகளது அரசியலில் உருவான சூடும், வெறுப்பும் தணியவில்லை. குறிப்பாக,

(1) சிவகங்கைச் சீமைத் துறைமுகமான தொண்டிச் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் சேதுபதி மன்னரது சீமையைச் சேர்ந்த திருவாடனையில் உள்ள சுங்கச் சாவடியினைக் கடந்தே செல்ல வேண்டும். அவர்கள் விதிக்கும் சுங்கத் தீர்வையைச் செலுத்த வேண்டும். ஆனால் சிவகங்கை பிரதானிகள் அந்த தீர்வையைச் செலுத்த மறுத்தனர்.[10]

2. இதனால் சினமடைந்த சேதுபதி மன்னர், சிவகங்கைச் சீமையில் பட்ட நல்லூர்பேட்டை வழியாகச் செல்லும் திருநெல்வேலி - சோழ சீமை வணிகர் பெருவழியை முடக்கி, வணிகர்கள் சேதுபதி சீமை மூலமாக சோழ சீமைக்கு செல்லுமாறு செய்து சிவகங்கை அரசுக்கு வருமான இழப்புகளை ஏற்படச் செய்தார்.[11]

3. இதற்கு பதிலடியாக சிவகங்கை பிரதானிகள் சேதுபதி சீமைக்குள் சிவகங்கைச் சீமையை கடந்து செல்லும் ஆற்றுக் கால்களை அடைத்து சேதுபதி சீமைக்கு நீர் வரத்து பெறமுடியாமல் செய்தனர்.[12] 4. இதனால் இது தொடர்பாக இருநாட்டு எல்லைகளில் சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டன.[13]

5. இதனைப் போன்றே தொண்டமான் சீமையில் பிரான்மலையை ஒட்டிய பொது மேய்ச்சல் தரை, காடு பற்றிய எல்லைத் தகராறுகள்.

6. எமனேஸ்வரத்தில் நடந்த மோதலில், இராமநாதபுரம் படைகளால் கொல்லப்பட்ட பெரிய மருது சேர்வைக்காரரது மகனது மரணத்திற்கு பழிவாங்கும் வகையில், பெரிய மருது சேர்வைக்காரரும், அவர்தம் படைகளும் பரமக்குடி மக்களில் எழுநூறுக்கும் மிகுதியானவர்களைக் கொன்று குவித்தது.[14]

7. இதனைத் தொடர்ந்து சேதுபதி மன்னரது படைகள் சிவகங்கைச் சீமைப்பகுதியான ஆனந்துர் - விசவனுர் மீது பெருந்தாக்குதல் நடத்தியது.[15]

இத்தகைய உணர்ச்சி வசப்பட்ட நிகழ்வுகளால் சாதாரண மக்களது உயிர்களும், சொத்துக்களும் மிகவும் சேதமுற்று வந்தன. பிரதானி சின்ன மருது சேர்வைக்காரரது செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த இயலாத நிலையில், மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர், கண்களை மூடிக்கொண்டு, காதுகளைப் பொத்திக் கொண்டு ஊமை போல அந்தப்புரத்தில் ஒதுங்கி இருந்தார். மன்னரது இந்த மெளனத்தினால் அந்தப் பிரதானி சிவகங்கை மன்னரை விட அதிகமான செல்வாக்குடையவராக இருப்பது போன்ற மாயத் தோற்றம் எங்கும் படிந்து இருந்தது. சிவகங்கை சீமை வரலாற்றின் இறுக்கமான இந்தச் சூழ்நிலையைப் பகுத்துணர முடியாத இன்றைய நூலாசிரியர் ஒருவர்கூட, சாதிய உணர்வின் ஒன்றுதலினால் வரலாற்றைச் சீரழிக்க முயன்று புதிய “வரலாறு” படைத்துள்ளார். இந்தப் புதிய “சிவகங்கை மன்னர் வரலாற்றிற்கு" ஆதாரமோ சான்றுகளோ தேவை இல்லை என்பது அவரது கருத்து போலும். அந்தச் சரித்திர புருஷர் மிகச் துணிச்சலாக யாரும் தெரிவிக்காத, தெரிவிக்க இயலாத உண்மைகள் பொருந்தியது அவரது நூல் அந்தப் பேருண்மைகளில் ஒன்றுதான் கி.பி.1780 முதல் 1801 வரை சிவகங்கை சீமையை தொடர்ந்து ஆண்ட பேரரசர்கள் மருது சேர்வைக்காரர்கள் என்பது. அதாவது அவர்கள் பிரதானிகளாகப் பணியேற்று இறுதியில் கும்பெனியாரால் தூக்கிலேற்றப்பட்ட காலம் வரை.

இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் அகம்படியர் சாதியினைச் சேர்ந்த மாவீரர்கள் மதிமந்திரிகளாக, தளகத்தர்களாக, பிரதானிகளாகப் பணியாற்றியுள்ளனர் என்பது வரலாறு.[16] அவர்களில் சிறப்பாக விளங்கியவர்கள் வயிரவன் சேர்வைக்காரரும், அவரையடுத்து தளகர்த்தர் பணியேற்ற அவரது மருமகன் வெள்ளையன் சேர்வைக்காரருமாவர். (கி.பி.1735-1760) இவர்களில் வெள்ளையன் சேர்வைக்காரர் மிகப்பெரிய வீரர் வல்லவர் மட்டுமல்லாமல் பேராண்மை நிறைந்தவர். மதுரைப் போர்க்களத்தில் மைசூர் படைத் தளபதி கோப்பை நேருக்கு நேர் பொருதி அழித்தவர். மதுரைக் கோட்டையை ஆக்கிரமித்து இருந்த பட்டாணியர்களை வென்று மதுரை நாயக்க அரசின் கடைசி வழியினரான விஜய குமார பங்காரு திருமலை நாயக்கரை மதுரை அரசராக முடிசூட்டியவர் [17] கோழைத்தனம் காரணமாக பங்காரு திருமலை நாயக்கர் மதுரை அரசை கைவிட்டு ஓடிவந்தபிறகு மீண்டும், மதுரையைக் கைப்பற்றி சேதுபதி மன்னர் பொறுப்பில் வைத்து இருந்தவர். திருநெல்வேலிப் பாளையக்காரர்களை கடுமையாக அடக்கியவர். சேது நாட்டின் மீது படை எடுத்து வந்த தஞ்சைப் படைகளைத் துவம்சம் செய்தவர். ஆற்காட்டு நவாப்பின் பயமுறுத்தலுக்கு அஞ்சாத சிங்கம். மிகுந்த துணிச்சலுடன் சேதுபதி மன்னரையே நீக்கி விட்டு புதியவர் ஒருவரை சேதுபதியாக நியமனம் செய்து அறிவித்தவர். அந்த அளவிற்கு சேதுபதி சீமை மக்களது ஆதரவையும் செல்வாக்கையும் பெற்று இருந்தவர்.

அவரது சாதனைகளில் மறவர் சீமை மண்ணுக்குரிய ராஜவிசுவாசமும், கடமை உணர்வும் பரிமளித்ததைத்தான் சேதுபதிகளது வரலாற்று ஆசிரியர்களும் சேதுபதி சீமை மக்களும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அந்த வீரப் பிரதானியை, சேதுநாட்டு அரசராகவோ, சேதுபதி மன்னர்களுக்கும் மேற்பட்ட மாமன்னராகவோ சித்தரித்து எழுதவில்லை என்பதை இங்கு நினைவு கூறுதல் பொருத்தமானது. மல்லிகை என்றாலே மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் அதன் மணம் நமது நினைவில் வரும்தானே. 'மலர்களின் பேரரசி' என்றால்தான் மல்லிகையின் மனத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? மல்லிகை மலர்களின் பேரரசியும் அல்லவே! உறவினர்களையும் உற்ற நண்பர்களையும் வானளாவ உயர்த்திப் பேசுவது, எழுதுவது வேறு. நாட்டின் வரலாற்று நாயகர்களை சொந்தக் கற்பனை கொண்டு உட்படுத்தி உயர்த்தி வரைவது வேறு. குறிப்பாக, இரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த அரசியல் தலைவர்களை பல்வேறு வரலாற்றுச் சான்றுகளுடன் அவர்களது ஒவியத்தைச் சித்தரித்தால்தான் அந்த தலைவர்களது அழகிய ஓவியம் உயர்வானதாகவும், மக்களது பார்வையையும் வரலாற்று ஆய்வாளர்களின் புகழ்ச்சியையும் பற்றி பிடித்தவாறு காலங்கடந்து நிற்கும். இதற்கு மாறாக, சுய நலம், சாதி அபிமானம் ஆகிய குறுகிய அளவுகோலைக் கொண்டு அளவீடு செய்வது நம்மைநாமே ஏமாற்றிக் கொள்வதுடன் மற்றவர்களையும் ஏமாற்ற முயல்வதைத் தவிர வேறு அல்ல.

இங்கே சிவகங்கை பிரதானிகளான மருது சேர்வைக்காரர்கள் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வது. இந்த வரலாற்றைத் தொடர்ந்து படிப்பதற்குத் துணையாக அமையும்.

பரங்கியரது பாசம்!

நெல்லைச் சீமை பாளையக்காரர்கள், அரியலூர், உடையார் பாளையம், பாளையக்காரர்கள், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை மன்னர்களிடமிருந்து கப்பத் தொகையைப் பெறுவதற்கும், கம்மந்தான் கான் சாகிபுடன் புரட்சியை முடிப்பதற்கும், மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு சென்னையில் இருந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரது பாதுகாப்பு அணிகளை, கூலிப்படைகளாக, ஆற்காட்டு நவாப் முகம்மது அலி பயன்படுத்தினார். மற்றும் மைசூர் மன்னர் ஹைதர் அலியுடனான போர், பிரஞ்சுக்காரர்களுடனான மோதல் ஆகியவைகளுக்கும் ஆற்காட்டு நவாப், கும்பெனியாரது கூலிப்படைகளையே நம்பியிருக்க வேண்டிய பரிதாபநிலை. அதுவரை கர்நாடகப்பகுதியில் தங்களது வணிக நலன்களை விரிவு செய்து கொள்வதற்கு ஆற்காட்டு நவாப்பின் அதிகார வரம்பிற்குட்பட்ட சலுகைகளை, எதிர்பார்த்து இருந்த கும்பெனியார்களது துப்பாக்கிக் கரங்களை எதிர்பார்க்க வேண்டிய இழிநிலை. இதன் காரணமாக, ராணுவச் செலவுகளுக்காக கும்பெனியாருக்கு நவாப் கொடுக்க வேண்டிய லக்ஷக்கணக்கான பகோடா பணம் பாக்கியாக இருந்தது. இதனை வசூலிக்கும் முயற்சியில் கும்பெனியார் நவாப்புடன் இரு உடன்படிக்கைகளை கி.பி.1787-லும் 1792-லும் செய்து கொண்டனர்.[18]

இவைகளின்படி நவாப், கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்கோடா பணத்திற்குக் கூடுதலான தொகையை தவணை நாளுக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தென்மாவட்ட பாளையக்காரர்கள் நவாப்பிற்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகையான 2,64,704 ஸ்டார் பகோடா பணத்தையும், பாளையக்காரர்களிடமிருந்து நேரடியாக வசூலித்துக் கொள்ளும் அதிகாரத்தையும் பெற்றனர்.[19] இதனால் திருச்சிக்கோட்டையைப் போல மதுரைக் கோட்டையிலும் ஆங்கிலேயர்களின் நடமாட்டம் மிகுந்தது. கோட்டையின் பெரிய அலுவலர்களும், தளபதிகளும் ஒய்வு நேரத்தையும், நாட்களையும் வேட்டையில் கழிப்பதற்கு, மதுரையை அடுத்துள்ள சிவகங்கைச் சீமைக் காடுகளை சிறந்த இடமாகக் கருதினர். வடக்கே தொண்டைமான் சீமையிலிருந்து தெற்கே மானாமதுரை வரையான சிவகங்கைச் சீமையின் அடர்த்தியான காடுகளில் அப்பொழுது வேங்கை, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகள் நிறைந்து இருந்தன. ஆதலால், வெல்ஷு, சுல்லிவன் போன்ற ஆங்கிலப் பிரமுகர்கள் சிவகங்கைச் சீமைக்காடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது எல்லாம் சிவகங்கை மன்னர் பிரதானிகளது வரவேற்பும், விருந்தோம்பலும் அவர்களுக்கு காத்து இருந்தன. நாளடைவில், இவை நல்ல நேயத்திற்கு ஆதாரமாக அமைந்தது. தளபதி வெல்ஷு பதிவு செய்துள்ள குறிப்புகள்[20] இதனை பிரதிபலிக்கின்றன.

“... அந்தச் சீமைக்குச் சென்று இருந்த பொழுது அவர் (சிவகங்கைபிரதானி) எனக்கு நண்பரானார். நான் மதுரைப் பணியில் நீடித்த பொழுது, அவர் எனக்கு உயர்ந்தரக அரிசியையும், பழங்களையும், குறிப்பாக தடித்த தோளுடைய இனிப்பான ஆரஞ்சுப் பழங்களையும் அனுப்பி வைக்கத் தவறுவதில்லை. இத்தகைய பழத்தை இந்தியாவில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. அவர்தான் எனக்கு ஈட்டி எறிந்து, வாள்வீசி தாக்குவதைக் கற்றுக் கொடுத்தவர். வேறு எங்கும் அறியப்படாத வளரியைத் திறமையுடன் கையாண்டால் நிச்சயமாக நூறு கெஜ தூரத்து இலக்கை நொறுக்க முடியும்.”

இவ்விதம் சிவகங்கைப் பிரதானியைப் பற்றி பரங்கியர் உயர்வாக மதிப்பீடு செய்து இருப்பது அவர்களது அன்பான விருந்தோம்பலில் திக்குமுக்காடி அவர்களது வீரவிளையாட்டுக்களில் மனதை பறிகொடுத்ததுதான் காரணமாகும். ஆனால் அதே நேரத்தில், சிவகங்கைப் பிரதானி, பரங்கியர் மீது உண்மையான உயர்வான நேயம் கொண்டு இருந்தாரா...? உறுதிபடக்கூற இயலாதநிலை காரணம் ஒருவர் மற்றொருவர் மீது நட்பு பாராட்டுவது என்பது ஒருவர், மற்றொருவரது அழகு, அறிவு, ஆற்றல், அருங்குணங்கள் ஆகியவைகளின் அடிப்படையில்தான் அமைய முடியும். பரங்கிகளிடம், நம்மவரிடமில்லாத, மறைந்து இருந்து பாயும் புலியின் ராஜதந்திரம் இருந்தது. ஆனால் நமது போர் மறவர்களுக்குள்ள பேராண்மையும் போராற்றலும் அவர்களுக்கு கிடையாது. துப்பாக்கி, வெடிமருந்துதுணை இல்லாமல் எதிரிகளைப் பொருதி வெல்லும் திறமும் அவர்களுக்கு கிடையாது. ஆதலால், சிவகங்கைப் பிரதானிக்கும் பரங்கியருக்கும் ஏற்பட்ட நட்பு, குணமும், குடிமையும் குன்றா குற்றமும் ஆய்ந்து அறிந்து பாராட்டிய நட்பு அல்ல. அரசியல் சார்புடைய நட்பு.

அன்றைய அரசியல் சதுரங்கத்தில், கர்நாடக அரசியலில் மேலாண்மை படைத்திருந்த ஆற்காட்டு நவாப், இயக்கமற்ற பதுமை போல இருந்தார். தென்னகத்தின் மிகச் சிறந்த சுதந்திர வீரரும் மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் மூன்றாவது மைசூர் போரில், துரோகத்திற்கு இலக்காகி, தனது நாட்டின் பெரும்பகுதியை பரங்கியருக்குத் தத்தம் செய்துவிட்டு பரிதவித்தநிலை. தெற்கே கி.பி. 1792 மே மாத இறுதியில், கும்பெனியின் மீது வெறுப்புற்ற சிவகிரி பாளையக்காரரான சின்னத்தம்பி வரகுண வன்னியன் பக்கத்து பாளையமான சேத்துர் பாளையத்தை ஆக்கிரமித்ததற்காக கும்பெனியரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டு பாளையக்காரர் உரிமை பறிபோன நிலை. ஏன்? அண்டையில் உள்ள பெரிய மறவர் சீமையையே எடுத்துக் கொள்வோம். தமது நாட்டில், பரங்கியர் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களைக் காட்டி, வலுவாக காலூன்ற முயன்ற பொழுது எல்லாம், அவர்களது மனக்கோட்டைகளை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, மண்கோட்டைகளாக்கி தவிடு பொடியாகும்படி செய்தார். மறவர் சீமையின் கைத்தறி நெசவுத் துணி வணிகத்தில் ஏக போக உரிமையை நிலைநாட்ட முன்வந்த பொழுதும், தானியங்களை இறக்குமதி செய்வதில் சுங்கவிலக்கு சலுகை கோரிய பொழுதும், சேதுநாட்டின் பாம்பன் துறையில் அவர்களது கப்பல்களுக்கு முன்னுரிமையும், சுங்கச் சலுகையும் கோரிய பொழுதும், பரங்கியரது கோரிக்கைகளுக்கு சேதுபதி மன்னர் செவி சாய்க்க பகிரங்கமாக மறுத்துவிட்டார்.[21] இதனால் ஆத்திரமுற்ற கும்பெனித் தலைமை, கயத்தாறிலிருந்த தமது படைகளை இரவோடு இரவாக இராமநாதபுரம் கோட்டைக்கு விரைந்து கொண்டு சென்று 7.2.1795-ம் தேதி பொழுது புலருவதற்கு முன்னர் இராமநாதபுரம் கோட்டையையும், அரண்மனையையும் தாக்கி மன்னரை வஞ்சகமாகக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்தது.[22]

இவைபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், பாசமும், நேசமும் பாராட்டும் கும்பெனியாரது உறவை முறித்துக் கொள்வது அறிவுடைமையாகாது என எண்ணினர், சிவகங்கை பிரதானிகள். அதனால், உறுமின் வரவு பார்த்து பொறுமையுடன் இருக்கும் கொக்கு போல அவர்கள் காத்து இருந்தனர். சேதுபதிக்கும், சிவகங்கைக்கும் உள்ள பிரச்னைகளைப் பற்றி கலந்து பேசுவதற்காக கலெக்டர் பவுனி விடுத்த சம்மனை ஏற்று மதித்து சிவகங்கைப் பிரதானி சேதுநாட்டு முத்துராமலிங்க பட்டின சத்திரம் சென்று கும்பெனிக் கலெக்டர் பவுனியை சந்தித்தார்.[23] மறவர் சீமை முழுவதும் கி.பி.1794-ல் வறட்சி மிகுந்த பொழுது, வணிகர்களான பரங்கியர் தங்களது தானியங்களை சிவகங்கைச் சீமையில் விற்பனை செய்து இலாபம் ஈட்டுவதற்கு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளித்து உதவினர்.[24]

மேலும், பரங்கியரின் சிறைக்காவலில் உள்ள சேதுபதி மன்னரை விடுதலை செய்யும் இலக்காக சேதுநாட்டின் தென்பகுதியில் கி.பி.1799 - ஏப்ரல் - மே திங்களில் வெடித்த மக்களின் ஆயுதப் புரட்சியை அடக்க முடியாமல் தவித்த கும்பெனியாரது உதவிக் கோரிக்கைக்கு இணங்கி, சிவகங்கை மறவர்களை கமுதிக்கு அனுப்பி வைத்தனர். இவ்விதம் அகத்தில் கொந்தளித்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு ஆங்கிலேயருக்கு உதவி செய்தும் என்ன பயன்? தன்னலம் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு தழைத்து ஏகாதிபத்திய விசுவரூபம் எடுத்து இருந்த கும்பெனியார், சின்ன மருது சேர்வைக்காரரது நடவடிக்கைகளையே சந்தேகப்படத் தொடங்கினர். அதில் முதலாவது துபாஷ் ரங்கப் பிள்ளை விவகாரம்.

இராமநாதபுரம் சீமை பேஷ்குஷ் கலெக்டராகப் பணியேற்ற காலின்ஸ் ஜாக்ஸன், சென்னைக் கோட்டையில் இருந்து இராமநாதபுரம் வரும்பொழுதே, துபாஷ் ரங்கப் பிள்ளை என்பவரைக் கையோடு அழைத்து வந்தார். கலெக்டரது அலுவலகப் பணியில் மட்டுமல்லாமல், தனிப்பட்டமுறையில் கலெக்டரது 'வசதிகளை' நிறைவு செய்வதற்காக. எங்கு பார்த்தாலும் கையூட்டு, இருவருக்கும் பை நிறைந்தது. வடக்கே கும்பெனியாரது கவர்னர் ஜெனரல் ஆன வாரன்ஹேஸ்டிங்க்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்களை எவ்விதம் சுரண்டுவது என்ற ஊழல் உத்தியை உலகறியச் சொல்லிக் கொடுத்து இருந்தார் அல்லவா? அரசுத் தீர்வையாக வசூலிக்கப்பட்ட நெல்லின் மதிப்பை குறைவாக மதிப்பீடு செய்து அதனை வாங்கிக் கொண்ட வியாபாரிகளிடமிருந்து கமிஷன் பெற்றார்.

இத்தகைய ஊழல்கள் பெருமளவில் நடந்து இருப்பதை, டச்சு வியாபாரி மெய்ஜி என்பவர் கும்பெனித் தலைமைக்குப் புகார் செய்த பின்னரே சென்னைக்கு தெரிய வந்தது. கீழக்கரை பெரும் வணிகர் அப்துல்காதர் மரைக்காயர், சென்னை வணிகர் ஷமால்ஜி, எட்டையாபுரம் பாளையக்காரர், சிவகங்கைப் பிரதானி ஆகியோர்களும் துபாஷ் ரங்க பிள்ளையின் திருவிளையாடலில் சிக்கியவர்கள் என்பதும் தெரியவந்தது. பேஷ்குஷ் இனத்தில், பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் செலுத்திய 18,500 பக்கோடா பணத்தையும் துபாஷ் ரங்கபிள்ளை ஏப்பமிட்டு இருந்தார்.[25] கும்பெனியாருக்குச் சேரவேண்டிய 22,285 பக்கோடா பணத்தை அவர் கையாடல் செய்திருப்பதை மட்டும் வசூலிக்க கும்பெனித் தலைமை முனைந்தது.[26] ஊழல் வேந்தன் காலின்ஸ் ஜாக்ஸனுக்குப் பதிலியாக கலெக்டர் பணியேற்ற ரம்போலா லூஷிங்டனுக்கு பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் மீதான சந்தேகம் வலுத்தது. கலெக்டர் ஜாக்சனிடம் சலுகைகள் பெறுவதற்கு பிரதானி இந்த பணத்தை கொடுத்து இருப்பாரோ என்பது லூஷிங்டனது ஐயம். அடுத்து, இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையில் விசாரணையில் இருந்து தப்பிச் சென்ற பாஞ்சலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கர் 5.6.1799 தேதி அன்று சிவகங்கைச் சீமை பழமானேரியில் சின்ன மருது சேர்வைக்காரரைச் சந்தித்துப் பேசியது கலெக்டரது சந்தேகத்தை மிகுதிப்படுத்தியது.[27]தாம் பதவி ஏற்று நான்கு மாதங்களாகியும் பாளையக்காரர் என்ற முறையில் தம்மை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்காத பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் முந்தைய கலெக்டர் மீது கொண்டிருந்த அதே குரோத மனப்பான்மையுடன் இருப்பவர், சிவகங்கை சீமை பழமானேரி சென்று சிவகங்கைப் பிரதானியைச் சந்தித்தார் என்றால், அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பது கலெக்டர் லூஷிங்டனது ஊகம். அந்த ஊகம் சரியானது என்பதை பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் புலப்படுத்தின.

கி.பி.1799 ஆம் ஆண்டின் தமிழகத்து அரசியல் வரைபடத்தை ஒருமுறை உற்றுப் பார்த்தால் தமிழக அரசியல் நிலையை அறிவதற்கு உதவுவதாக இருக்கும். வடக்கே செங்கல்பட்டு, நெல்லூர், ஜில்லாக்களை கி.பி.1781-ல் நவாப்பிடமிருந்து கும்பெனியர் பெற்று இருந்தனர். வடமேற்கே, சேலம், கோவை ஜில்லாக்களும், ஆற்காடு, திண்டுக்கல் சீமையையும், கி.பி.1792-ல் திப்புசுல்தானிடமிருந்து மூன்றாவது மைசூர் போரின் முடிவில் பறிக்கப்பட்டது. திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்கள். கி.பி.1792-ம் ஆண்டு உடன்படிக்கைப்படி பரங்கியரது வரிவசூலுக்கு கட்டுப்பட்டு இருந்தது. கி.பி.1795-ல் சேதுபதி மன்னரை சிறையில் தள்ளிவிட்டு மறவர் சீமை (இராமநாதபுரம் ஜில்லா) நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது - தஞ்சாவூர் மன்னருக்கும் கும்பெனியாருக்குமாக அர்த்த நாரீசுவர நிலையில் தஞ்சாவூர் சீமை இருந்து வந்தது. இவ்விதம், தமிழகத்தின் அனைத்துப் பகுதியும் கும்பெனியாரது கையில். தட்டிக் கேட்பதற்கு ஆள் இல்லாத தண்டல்காரனாக கும்பெனி நிர்வாகம் செயல்பட்டது. முந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விஜயநகரப் பேரரசின் மேலாண்மையின் கீழ் இந்தப் பகுதிகளில் சிற்றரசர்களாக விளங்கிய பாளையக்காரர்களை, கும்பெனியார் மிகவும் மோசமாக நடத்தினர். பொன் முட்டையிடும் வாத்துக்களாக அவர்களை நினைத்து அவர்களையும் அவர்களது குடிகளையும் கசக்கிப் பிழிந்தனர்.[28] தங்களது கஜானாக்களை நிரப்பினர். இவர்களது முகவர்களான குத்தகைதாரர்களும், கணக்கப் பிள்ளைகளும் வசூல் பணியில் செய்து வந்துள்ள திருகுதாளங்களையும் கண்டு கொள்ளவில்லை.[29] பாளையக்காரர்களது செல்வாக்கை செல்லாக்காசாக்கும் வகையில் மக்களிடம் உள்ள செல்வாக்கையும் சலுகைகளையும் நீக்க முயன்றனர். ஆண்டுக்கொரு முறை விசேஷ காலங்களில் பாளையக்காரர்களுக்கு குடிகள் அளித்து வந்த காணிக்கைகளையும் கும்பெனியாரே பெற்றுக்கொண்டனர்.[30] தவணைகளில் இத்தொகையை செலுத்தாத பாளையக்காரர்களை நீக்கி தண்டித்தனர்.[31] பாரம்பரியமாக வந்த பாளையக்காரர் பரம்பரையினருக்குப் பதிலாக அவர்களுக்கு எதிரான பாளையக்காரரது பங்காளிகளை, புதிய பாளையக்காரர்களாக நியமனம் செய்தனர். பரங்கிகளுக்கு வேண்டியது பணம்தானே!

இதே போல, குடிகளையும் கொடுமைப்படுத்தி வந்தனர். பணம் செலுத்தாத குடிகளை காவலில் அடைத்து வைத்தனர். அவர்களது ஜீவனத்திற்கு ஒருமணி கூட இல்லாமல் அவர்களது தானியங்களை பலவந்தமாக எடுத்துச் சென்றனர். ஏன் பண்ட பாத்திரங்களைக் கூட விட்டு வைக்காமல் கைப்பற்றி சென்றனர்.[32] இவைகளைக் கேட்பதற்கு எந்த நிர்வாகமும் இந்த நாட்டில் இல்லை. உயர்ந்து கொண்டே சென்ற விலைவாசிகளையும் கட்டுப்படுத்தவும் இல்லை. வெறுப்பும் வெஞ்சினமும் மக்களிடம் வளர்ந்து வந்தது.

இவ்வளவு, இக்கட்டான நிலையில் வறட்சி மிகுந்தது. கி.பி.1794-ல் ஏற்பட்டதை தொடர்ந்து கி.பி.1788-ல் தென்மாவட்டங்கள் அனைத்திலும், பஞ்சம் பரந்து, படிந்து காணப்பட்டது. பஞ்சத்தின் பயங்கரமான பார்வையில் இருந்து தப்ப, மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக கிராமங்களை விட்டு வெளியேறினர்.[33] எஞ்சி இருந்த குடிகளும் பாளையக்காரர்களும், பரங்கியரை விரட்டி அடிக்க அதுதான் தக்க தருணமாகக் கருதினர். தமிழகத்தில் பல நூற்றாண்டுகாலமாக இருந்து வந்த பழைய சமூக அமைப்பை மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பதை நிறுவுவது பற்றிச் சிந்தித்தனர். இந்த எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் கும்பெனியாரது கொடுமை மிகுந்து வளர்ந்தது.

ஏற்கனவே கிஸ்திப் பணம் கட்ட இயலாததற்காக துரத்தப்பட்ட சாப்டுர் பாளையக்காரர், கோம்பையா நாயக்கர்கள் போல இப்பொழுது கிஸ்தி கட்ட மறுத்த, பாஞ்சாலம் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன், தேவதானப்பட்டி பூஜாரி நாயக்கர் ஆகியோரையும் தூக்கில் ஏற்றினர். கட்டபொம்மனது பிரதானி சிவசுப்பிரமணிய பிள்ளையை, நாகலாபுரத்திலும், கட்ட பொம்மனது உறவினர் செளந்தரபாண்டியனை கோபாலபுரத்திலும் சிரச்சேதம் செய்தனர். கட்டபொம்மனது குடும்பத்தினரை பாளையங்கோட்டையிலும், பூந்தமல்லியிலும் சிறைவைத்தனர்.[34] கட்டபொம்மனது ஆதரவாளர்களான காடல்குடி, குளத்தூர், கோல்வார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, நாகலாபுரம், பாளையக்காரர்களது பாளையங்களை பறிமுதல் செய்தனர்.[35]அவர்களது கோட்டைகளை இடித்துவிட்டு அவர்களுக்கு பக்கபலமாக நின்று பாடுபட்ட எட்டையாபுரம், மயில்மாந்தை, மணியாச்சி, பாளையகாரர்களுக்கு அவர்களது பாளையங்களைப் பகிர்ந்தளித்தனர்.[36] இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக கும்பெனியார் கொடுரமான முறையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். என்றாலும், இன்னும் மோசமான நிகழ்வுகள் காத்து இருக்கின்றன என்பதை அவர்களால் அப்பொழுது ஊகித்துக்கொள்ள முடியவில்லை. அடுப்பில் உள்ள பானையில் கொதிக்கின்ற பால் முழுவதும் சூடேற சூடேற ஆவியாகி மறைவதில்லையே! மாறாக, கொதிக்கும் பால் பாத்திரத்தின் விளிம்பைக் கடந்து, வழிந்து அதனை சூடேற்றி கொதிக்கச் செய்த அடுப்புத் தீயில் விழுந்து அதனை அணைக்கத்தானே முயற்சி செய்கிறது!

கும்பெனியாரதும், அவர்களது குத்தகைதாரர்களாலும் அட்டுழியங்களுக்கு ஆளாகிய விவசாயி, லஞ்ச லாவண்யத்தாலும், விலைவாசி உயர்வாலும், நடை பிணமாகிவிட்ட குடிமக்கள், பாரம்பரிய உரிமைகளையும், மக்களது பேராதரவையும் இழந்து தவித்த பாளையக்காரர்கள், பெருங்குடி மக்கள், இவர்கள் அனைவரும் கொதிக்கும் பாலைப்போல ஓரணியில் கிளர்ந்து எழுந்து நிற்கத் தொடங்கினர். வீரத்தின் விளை நிலம் மானத்தின் மரபு போற்றும் சின்ன மறவரது சிவகங்கைச் சீமை மக்களும் மன்னரும் எந்த அணியில்? மக்கள் அணியிலா? பரங்கியரது கைக்கூலிகள் அணியிலா?

கும்பெனியாரை எதிர்த்து

கடந்த ஐந்து ஆண்டுகளில், கும்பெனித் தளபதிகளும் அலுவலர்களும் தம்முடன் கொண்டு இருந்த தொடர்பை சில மணித்துளிகள் நினைவு படுத்தி பார்த்தார் சிவகங்கைப் பிரதானி. அவர்கள் கொண்டு இருந்த நேயம், நகமுக நட்பு என்பதைப் பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அறிவுறுத்தின. என்ன இருந்தாலும் அவர்கள் அந்நியர்கள்தானே என்ற ஆறுதல். இந்த மண்ணின் மாண்பை அறியாதவர்கள். இந்த மண்ணின் மைந்தர்களை மதிக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள். இதனால் தான் இந்த நாட்டின் குடிதழீஇ கோலோச்சிய மன்னர்களையே மமதையுடன் நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்ட பொம்மனை அவர்கள் நடத்தியவிதம், சிவகங்கைச் சீமை காடுகளில் தஞ்சம் புகுந்தவர். தவறுதலாக தொண்டமான் சீமை எல்லைக்குள் சென்றவரைப் பிடித்து, தூக்கில் ஏற்றிய துயர சம்பவம் - சிவகங்கைப் பிரதானியின் இதயத்தைத் துளைத்து வந்தது.

இன்னும் திண்டுக்கல் சீமை, கொங்குநாடு, வயநாடு, கன்னடநாடு ஆகியவைகளில் இருந்து கிடைத்துள்ள செய்திகளும் கும்பெனியாரது கொடுமைகளுக்கு மகுடமாகவல்லவோ இருக்கின்றன[37] இனியும் கும்பெனியாருடன் நேச முறையில் நடந்து கொள்வது அவர்களது அக்கிரமங்களுக்கு உடந்தையாகிவிடும். அவர்களது அதிகாரப்பிடிப்பை எங்ங்னம் அகற்றுவது? அதற்கான வழிமுறைகள் இவைகள் பற்றிய சிந்தனைகள் தொடர்ந்தன. இதற்கிடையே விருபாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர் தொடர்பு ஏற்பட்டது.[38] மறவர் சீமையில் கும்பெனியாருக்கு எதிராக ஆயுதப்புரட்சியை ஏற்பாடு செய்த சித்திரங்குடி மயிலப்பனது நேரடியான அறிமுகமும் சிவகங்கை பிரதானிகளுக்கு கிடைத்தது.[39] கும்பெனியாரது எதிர்ப்பு அணியின் தளமாக சிவகங்கை மாறியது. தென்னாட்டு கிளர்ச்சிக்காரர்கள் அனைவரும் திண்டுக்கல் கோட்டையில் ரகசியமாகக் கூடி கும்பெனியாருக்கு எதிரான அணியொன்றை அமைத்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய சின்ன மருது சேர்வைக்காரர் பற்றிய இரகசியத் தகவல்களும் கலெக்டர் லூஷிங்டனுக்கு கிடைத்துவிட்டது.[40] சிவகங்கைச் சீமையும், கும்பெனியாருக்கு எதிர் அணி என முடிவு செய்து அவரது நடவடிக்கைகளை இரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினார்.[41]

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து ஊமைத்துரையும் அவரது தோழர்களும் 2.2.1801 தப்பி வர உதவியது. மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை சிறந்த ராணுவ தளமாகத் திகழ சிவகங்கைச் சீமை மறவர்களும் ஆயுதங்களும் பயன்பட்டன. 24.5.1801 நடைபெற்ற போரில் கும்பெனியாரது அசுர முயற்சிகளை தோல்வியுறச் செய்தன. பின்னர் 10.6.180 தேதி அரண்மனை சிறுவயலில் ஊமைத்துரை சிவகங்கைப் பிரதானிகளிடம் அடைக்கலம் பெற்றது. சிவகங்கையில் வகுத்த திட்டப்படி தளபதி மயிலப்பன் கும்பெனியார் நிர்வாகத்தில் இருந்த மறவர் சீமையில், கிளர்ச்சிகளைத் தொடர்ந்து கும்பெனி நிர்வாகத்திற்கு பெருத்த இழப்பீடுகள் ஏற்பட்டது. இவையனைத்தும் கலெக்டர் லூஷிங்டன் திரட்டிய இரகசியச் செய்திகள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரினை வெற்றிகரமாக முடித்த தளபதி அக்கினியூ, மறவர்சீமைக் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்கவும் கும்பெனித் தலைமை உத்திரவிட்டது.[42] சிவகங்கைச் சீமையின் நிலையினை நன்கு ஆராய்ந்து பெரும் போர் ஒன்றினைத் தொடர்வதற்கான திட்டத்தை புதுக்கோட்டை தொண்டமானது துணையுடன் திரட்டினான் அக்கினியூ அத்துடன், சிவகங்கைச்சீமை மக்களை பிரதானிகள் மருது சகோதரர்களது பிடிப்பில் இருந்து நீங்குமாறு செய்ய இரண்டு உத்திகளைக் கையாண்டான்.

முதலாவது, சிவகங்கை அரச குடும்பத்திற்குச் சம்பந்தமில்லாத பிரதானிகள், மருது சேர்வைக்காரர்கள், இறந்து போன மன்னர் முத்து வடுகநாதருக்குப் பின்னர் சிவகங்கை அரசியல் தலைவியாக ஒரு பெண்மணி (அவரது மனைவி ராணி வேலுநாச்சியார்) பொறுப்பு ஏற்றுள்ளதால் அவரது பணியாளர்களான மருதுசகோதரர்கள் தங்களைப் பிரதானிகளாக அறிவித்துக்கொண்டு ராணியாரையும், சிவகங்கை மக்களையும் அடக்கி ஒடுக்கி சர்வாதிகாரம் செய்வதுடன் சிவகங்கைச் சீமையை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றனர். சிவகங்கைச் சீமையின் பேஷ்குஷ் தொகையினை வசூலிப்பதற்கு சட்டப்படி உரிமை பெற்றுள்ள கும்பெனியாருக்கு எதிராக சிவகங்கைச் சீமை மக்கள், ஆயுதம் எடுக்கக் கூடாது என்றும், மருது சகோதரர்களை விட்டு நீங்கி சிவகங்கையின் முறையான ஜமீன்தார் விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற பொதுஅறிவிப்பை 6.7.1801-ல் வெளியிடச்செய்தான்.[43] இரண்டாவதாக, மருது சகோதரர்களது சூழ்ச்சியில் இருந்து தப்பி அறந்தாங்கி காட்டில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த நாலுக்கோட்டைப் பாளையத்தின் பங்காளியான படைமாத்துார் கெளரி வல்லப ஒய்யாத் தேவரை புதுக்கோட்டைத் தொண்டமான் மூலம் தேடிப்பிடித்து அழைத்து வந்து 12.9.180 தேதி சோழபுரத்தில் சிவகங்கை ஜமீன்தார் என முடிசூட்டினான்.[44]

இந்த நடவடிக்கைகளுக்கு உடனடியான பலன் ஏற்பட்டது. மருது சகோதரர்களைதங்களது மாபெரும் தலைவர்களாக மதித்துச் செயல்பட்ட மக்கள் கூட்டம், பிரித்தாளும் கொள்கையில் தேர்ச்சி பெற்ற கும்பெனியாரது உத்திகளில் சிக்குண்டு சோழபுரம் நோக்கி ஓடியது. கும்பெனிப் படைகளைச் சந்திப்பதற்கு காளையார்கோவில் கோட்டையிலும் பக்கத்துக் காடுகளிலும் உரிய ஏற்பாடுகளைச் செய்த சிவகங்கை பிரதானிகளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. என்றாலும் மனம் தளராது செப்டம்பர் 30, அக்டோபர்1 ஆகிய நாட்களில் ஒக்கூர், சோழபுரம், அரண்மனை சிறுவயல் வழியாக காளையார்கோவில் நோக்கி வந்த கும்பெனி படைகளுடன் பிரதானிகள் மோதினர். முடிவு தோல்வி.[45]

கி.பி.1801-1802ல் சிவகங்கைச் சீமையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி என்னுடைய “மாவீரர் மருது பாண்டியர்” என்ற நூலில் விவரமாக வரையப்பட்டுள்ளதால், அவைகளை மீண்டும் இங்கு விரிவாக எழுதப்படவில்லை.

எஞ்சியவர்களுடன் காட்டிற்குள் தப்பிய மருது சகோதரர்களை கும்பெனிப்படைகள் ஒக்கூருக்கும் சோழபுரத்திற்கும் இடைப்பட்ட காட்டில் 19.10.180 தேதியன்று கைப்பற்றினர்.[46] 24.10.180 தேதி காலையில் திருப்புத்தார் கோட்டையில் தூக்கில் ஏற்றி[47] சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றை முடித்தனர்.

சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர் கும்பெனியாருக்கு எதிரான நடவடிக்கை எதிலும் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லையென்றாலும், பிரதானிகளது அத்துமீறல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு. குற்றவாளிகள் அல்லாமல் குற்றமற்றவர்களும் தண்டிக்கப்படுவது உண்டு. சிவகங்கை போராளிகளைப் பொறுத்த வரையில், அவர்கள், தண்டிக்கத்தக்கவர்களா? அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு கும்பெனியாருக்கு தகுதி இருக்கிறதா? இவையெல்லாம் வேறு விஷயம். "வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பது போல அன்று கும்பெனி நிர்வாகம் “சகல அதிகாரமும் சர்வ வல்லமையும்” படைத்த வெடிமருந்து வீரனாக விளங்கியது. நேரடியாக அவர்களை எதிர்த்தவர்களை சிவகங்கைச் சீமையில் அழித்து ஒழித்த பிறகு, அவர்களது எதிர்ப்பாளர்களுக்கு உடந்தையாக ஆதரவாக இருந்தவர்கள் பட்டியல் ஒன்றை கும்பெனித் தலைமை தயாரித்தது. இதில் இராமநாதபுரம் ஜகந்நாத ஐயன் - அன்னியூர் கள்ளர் தலைவர்களான சடைமாயன், கூரிசாமித் தேவர், முள்ளுர் குமரத்தேவன், சிவகங்கை துரைச்சாமி, (சின்ன மருது சேர்வைக்காரர் மகன்) மற்றும் திருநெல்வேலிச் சீமை கிளர்ச்சிக்காரர்கள் என எழுபத்து இரண்டு பேரைக் குறித்தனர். இந்த பட்டியலின் தொடக்கமாகச் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர் பெயரை வரைந்துயிருந்தனர். 4.10.1801-ம் தேதி காளையார் கோவில் காடுகளில் அவரைக் கண்டு பிடித்து காவலில் வைத்து இருந்தனர்.[48]

இவர் சிவகங்கை மன்னராக கி.பி.1790-ல் பதவி ஏற்ற சில மாதங்களில், சிவகங்கைச் சீமை நிர்வாகத்தில் பிரதானி சின்னமருது சேர்வைக்காரரது சுயேச்சையான செயல்பாடுகள் மேலோங்கி இருப்பதை உணர்ந்து வேறு வழியில்லாமல் தமது கண்களை மூடிக்கொண்டு, காதுகளைப் பொத்திக்கொண்டு நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இருப்பினும், மிகுந்த ஆன்மிக உணர்வுடன் திருக்கோயில்கள், திருமடங்கள், சத்திரங்கள் ஆகியவைகளைச் செம்மையாகப் பராமரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். மற்றும் சமுதாயத்திற்குச் சேவை செய்யும் சான்றோர்களை ஆதரித்துப் போற்றவும் இவர் தவறவில்லை. இதற்காக இவர் பல சர்வமான்யங்களையும் தர்மாசனங்களையும் ஜீவித இனாம்களையும் வழங்கி உதவினர். கிடைத்துள்ள பதிவேடுகள், செப்பு பட்டயங்களில் உள்ள பதிவுகளின் படி அவரது அறக்கொடைகள்[49] பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விசயரகுநாத வேங்கன் பெரிய உடையாத்தேவரின் அறக்கொடைகள்

கி.பி. அறக்கொடை விவரம் அறக்கொடை பெற்ற விவரம்
1785 இல்லக்கா அழகன் குளம் சத்திரம்
ஆத்திக்குளம் நரிக்குடி சத்திரம்
நல்லூர் நரிக்குடி சத்திரம்
இடக்குழி அழகன் குளம் சத்திரம்
கருமான் ஏந்தல் (மாறநாடு வட்டம்) இராம ஐயர், ஜீவிதம் அழகன் குளம் சத்திரம்
கீழ்குடி, பொன்னி ஏந்தல் வெங்கடாசலம் ஐயர்,
விளாங்காட்டுர் தர்மாசனம்.
1786 சின்ன கடம்பங்குளம் வரிசை ஊர் (மாறநாடு வட்டம்) நாகலிங்கம் பிள்ளை, ஜீவிதம் ஊழியமான்யம்.
வலக்காணி ரங்க ஐயங்கார், லட்சுமிபதி சாஸ்திரி தர்மாசனம்.
இலுப்பக்குளம் (மாறநாடு வட்டம்) ஜீவிதம்.
நண்டுகாச்சி (பார்த்திபனூர் வட்டம்) ஊழியமான்யம்.
நண்டுகாச்சி (பார்த்திபனூர் வட்டம்) வெங்கட்ட ராம ஐயர், ஜீவிதம்.
தர்மம் (பார்த்திபனூர் வட்டம்) தர்மசாசனம்
எடுத்தான் ஏந்தல் (மாறநாடு கூட்டம்) தர்மசாசனம்
1787 நாகணி ஊழியமான்யம்
தோப்புடை இடையன்குளம் (மாறநாடு வட்டம்) சுப்பு அவதானி, தர்மாசனம்
வத்தா பேட்டை (பார்த்திபனூர் வட்டம்) ஊழியமானியம்.
1788 கார்குடி காளையார் கோவில்.
ஒச்சன்தட்டு பாசிப்பட்டணம், காசியில் உள்ள சத்திரம் இனாம்
காவதுகுடி மாங்குளம் (ஆரூர் வட்டம்) கலியனேரி சத்திரம், இனாம் பெருமாள் கோவில், மானாமதுரை.
நற்கணிக்கரை, அரும்பூர் கலியநகரி சத்திரம்.
1790 மேலச்செம்பொன்மாரி திருவண்ணாமலை மடம்,
மருதநாயகப் பண்டாரம், குன்றக்குடி மடத்திற்கு, தர்மாசனம்.
ஆலங்குளம் நரிக்குடி சத்திரம்
அயினாசேரி (மங்கலம் வட்டம்) வீரராகவ ஐயர், தர்மாசனம்.
1791 அமராவதி பன்னிவயல் வெங்கடாச்சாரியார், தர்மாசனம்
(அமராவதி வட்டம்) லெட்சுமண ஐயங்கார், தர்மாசனம்.
1791 சாத்தான் கோட்டை ஹரி நாராயண பண்டிதர்.
முடக்கண்ணு ஏந்தல் (அமராவதி வட்டம்) வேதாந்த ரகுநாத ஐயங்கார் தர்மாசனம்.
1792 தாணாவயல் நன்னிசேர்வை தண்ணிர்பந்தல், மடம்.
1793 சமையன் ஏந்தல் திருப்பதி ஐயங்கார்.
இஞ்சி வயல் (சாக்கைவட்டம்) குருஐயன், தர்மாசனம்.
இடையன்குளம் (அமராவதி வட்டம்) சேது ஐயர், தர்மாசனம்.
மாணிக்கன் ஏந்தல் (மாறநாடு வட்டம்) தர்மசாசனம்
பொன்னி (மல்லல் வட்டம்) வைத்தியம் நரசிம்ம ஐயர், தர்மாசனம்.
பாளையாரேந்தல் (பார்த்திபனூர் வட்டம்) கலுங்கடி வினாயகர் கோவில், ஊழியமான்யம்.
ஒட்டுவயல் (மாறநாடு) அழகர் சாமி.
சுண்ணாம்பூர் (திருப்புத்துர் வட்டம்) மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், சர்வமான்யம்.
வாகுடி (பார்த்திபனூர் வட்டம்) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்..
தென்வேலி தர்மாசனம்.
1796 சித்தனேந்தல் புல்வாய்நாயகி அம்மன் கோவில், பாகனேரி..
புதுக்குளம் காசி விசுவநாதர் ஆலயம்.
அரிமண்டபம் அனந்த கிருஷ்ண ஐயர், தர்மாசனம்.
சாத்தணி (எமனேஸ்வரம் வட்டம்) சத்திரம், தர்மாசனம்.
1797 சாணார் மருதங்குடி காளீஸ்வர ஐயர், வேங்கடசாஸ்திரி.
சடையனேந்தல் திருப்பதி ஐயங்கார்
சோமகிரி அருணாசலம் செட்டியார்
கல்குளம் அனந்த நாராயண ஐயர், தர்மாசனம்.
1798 கொஞ்சினி (சாக்கை வட்டம்) ரத்தின ஐயங்கார், தர்மாசனம்.
காக்கை ஏந்தல் தர்மாசனம்.
கடியவயல் (அமாராவதி வட்டம்) தர்மாசனம்.
1799 கடியவயல் காடன் செட்டி சத்திரம்,
சேந்தன் வயல் (காளையார் கோவில் வட்டம்) குன்னக்குடி ரெங்கசாமி ஐயங்கார் வகையறா தர்மாசனம்.
புளிச்சக்குளம், கானூர் இராமசாமி ஐயர், தர்மாசனம்.
ஆதியேந்தல் சுப்பிரமணிய ஐயர், தர்மாசனம்.
1799 பாப்பான் ஏந்தல் (அமராவதி வட்டம்) காடன்செட்டி சத்திரம், குன்னக்குடி.
வண்ணாரவயல் வெங்கடாசலம் ஐயர்.
வாணியங்குடி, மிளகனூர் சிவ பூஜை தர்மம், தர்மாசனம்.
பரமக்குளம் தண்ணிர்ப்பந்தல் தர்மம், தர்மாசனம்,
புளிச்சக்குளம் இராமசாமி ஐயர், தர்மாசனம்.
1800 கூரான் ஏந்தல் பட்டம்
சுந்தரசாஸ்திரி வகையறா சுந்தரம்
ஐயர், முத்து ஐயர், தர்மாசனம்.


இந்த நிலக்கொடைகள் பற்றி கிடைத்துள்ள சில செப்பேடுகளின் உண்மை நகல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

1. மச்சூர் செப்பேடு

இந்தச் செப்பேடு கி.பி. 1782ல் விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர் அவர்களால் திருப்பனந்தாள் பண்டார சன்னிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முத்து வடுகநாதத் தேவரது ஆட்சியில், காசியில் சிவகங்கைச் சீமையின் முதல் மன்னரது புண்ணியமாக மடமும் கட்டி அன்னதானக் கட்டளையினை ஏற்படுத்தினார். அந்த தர்மம் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெறுவதற்கு மன்னர்ஆணையார்கோட்டை மச்சூர் ஆகிய இரண்டு ஊர்களையும் சர்வ மானியமாக வழங்கி இருப்பதை இதைச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேடும் ராணி வேலுநாச்சியார் சார்பாக விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர் வழங்கி இருப்பதை ஊகித்து அறிய முடிகிறது.

1. ஸ்ரீ விசுவேசுவரன்னபூரணி சகாயம்
2. ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவரன்
3. அரியராய தள விபாடன் பாஷைக்கு தப்பு
4. வராத கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கெ
5. டாதான் பாண்டி மண்டல ஸ்தாபனாசாரியன் தொண்ட
6. மண்டல சண்டப் பிறசண்டன் ஈளமுங்கா
7. ங்கும் யாட்பாணராயன் பட்டணமுமெம்ம
8. ண்டமுங் கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராச
9. திராசன் ராச பரமேசுவரன் ராசமாற்த்தாண்
10. டன் ராசகுல திலகன் அரசராவணராயன்
11. அந்தம்பர கண்டன் தாலிக்கு வேலி தளஞ்சிங்கம்
12. இளஞ்சிங்கம் சேதுகா
13. வலன் சேதுமூல ரட்சா
14. துரந்தரன் தனுக்கோ
15. டிகாவலன் தொண்
16. டியந்துறை காவல
17. ன் செம்பிவளநா
18. டன் தேவை நகராதிபன் முல்லை மாலி
19. கையான் அனுமக்கொடி கெருடக்
20. கொடி புலிக்கொடியுடையான் மும்மதயானை
21. யான் செங்காவிக்குடை செங்காவிக்கொ
22. டி செங்காவி சிவிகையான் அசுப்தி கெச
23. பதி தனபதி நரபதி ரவிகுலபதி யிரணியகெற் 24. பயாசி ரெகுநாத சேதுபதியவர்கள் பிறிதிவி
25. ராச்சிய பரிபாலனம் பண்ணியருளாநின்ற
26. சாலியவாகன சகாத்தம் 1704 கலியுக
27. சாகத்தம் 4883 இதன்மேல் செ
28. ல்லாநின்ற சுபகிறது வருசம் ஆனிமாதம் 12 தேதி சுக்கிலபட்
29. சமும் ஸ்வதிவாரமும் திறையோதெசியும் அனுச நட்சத்
30. திரமும் சுபயோக சுபகரணமும் கூடின சுபதி
31. னத்தில் பாண்டி தேசத்தில் பொதியமா மலையான்
32. வைகை ஆறுடையான் அனுமக்கொடி கெருடக்கொடி புலிக்
33. கொடி கட்டிய புரவலன் மும்முரச திருமுன்றிலான் திக்கெ
34. ட்டும் ஆணை செலுத்திய சிங்கம் இரவிகுல சேகரன் ஆற்று
35. பாச்சி கடலில் பாச்சி தொண்டியந்துறை காவலன் வாசு
36. பேயான் அரசு நிலையிட்ட விசைய ரெகுனாதப் பெரியுடை
37. யாத் தேவரவர்கள் தருமபுரம் முத்துக் குமாரசுவாமி தே
38. சிகர் சீஷரான காசிவாசிக்குமரகுருபரத் தம்பிரானவ
39. ர்களுக்கு தற்ம சாதனம் தாம்பிர சாதன பட்டையங்
40. கொடுத்தப்படி தற்மம் சாதனமாவது காசியிலே கெங்கா தீத்
41. திலே பெரிய உடையாத்தேவரவர்கள் தற்மம் பிராமண
42. போசன மாஹேசுவரபூசை அன்னதானம் நடப்பிவைக்
43. குறதுனாலே இந்த தற்ம்மத்துக்கு விட்டுக் கொடுத்த கிறாம
44. மாறவது பாண்டிதேசத்தில் கீள்மங்கல நாட்டில் திருக்கானை
45. ப்பேர் கூற்றத்தில் ஆனையார்கோட்டை கிறாமத்துக்கு பெருனான்
46. கெல்கையெல்கையாவது கீழ்பாற்க்கெல்லை யெலிக்கொளத்துக்கு
47. மேற்க்கு தென்பாற்க்கெல்கை இராசக்கினிமிண்டான் கோட்டைக் க
48. ண்மாய்க்கும் கோட்டைக்காட்டு யெல்கைக்கும் வடக்கு மேல்பாற்க்கெ
49. ல்கை நேமத்து யெல்கைக்கும் விறுத வயலுக்கும் கிழக்கு வடபாற்
50. க் கெல்கை ராதாநல்லூர் முடுக்கினாங் கோட்டை துக்கினங்க
51. ரைக்கு தெக்கு இந்த பெருநான்கெல்கைக்கு உள்பட்ட ஏந்தல் புர
52. வடை நஞ்சை புஞ்சை திட்டு திடலும் இதுவும் ஒரூர் வட்டகையில்
53. மச்சூர் கிறாமத்துக்கு பெருநான்கெல்கை கீழ்பாற்கெல்கை
54. பிலாத்துக்கு மேற்க்கு தென்பாற்கெல்கை விறுசுழி ஆற்றுவட
55. கரைக்கு வடக்கு மேல்பாற்க்கெல்கை விரித்தம் வயலுக்கு கி
56. ழக்கு வடபாற்க்கெல்கை வட்டாணம் வேம்ப கண்மாய்தென்
57. ங்கரை சேதுபாதைக்கு தெற்கு இந்த பெருனாங்கெல்கை
58. க்குள்பட்ட யேந்தல் புரவடை நஞ்சை புஞ்சை திட்டு திடலும்
59. சேத்து யிந்த இரண்டு கிறாமத்து நத்தம் திருவிருப்பு மேல்னோ
60. க்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு நிதிநிட்சேப செலதரு பாஷா
61. ணம் அட்சினிய ஆகாயமியமென்று சொல்லப்பட்ட அஷ்ட்ட பே
62. கதச சுவாமியங்களும் தானாதி வினிய விக்கிறையங்களுக்கு
63. ம் யோகக்கியமாக சகல சமுதாயமும் சொர்னதாயம் குடிவார 64. க் காணிக்கை நிலவுரிமைக் கிராம கரைமணியம்பள் வரிவெள்ளைக்கு
65. டைவரி சுங்கத்தில் சேந்த ஆயக்கட்டுக்கும் வரிகாதவரியெப்
66. பேர்பட்ட பலவரியும் சறுவமானியமாக ஆசந்திராற் மாற்
67. கமாக நம்முட புத்திரபவுத்திரம் பாரம்பரியமாகவும்
68. தங்கள் சீஷ பாரம்பரியமாகவும் காசியில் விசுவேசுவரசுவா
69. மி விசாலாட்சியம்மன் அபிஷேக நைவேதனம் கெங்கா தீரத்தி
70 ல் அன்னதான தர்மத்துக்கும் இந்த இரண்டு கிறாமமும் காரா
71. தான பூறுவமாக தாம்பிர ஸாதன பட்டையம் எழுதிக்கொ
72. டுத்தபடியினாலே ஆண்டனுபவித்து கொள்ளுவாராகவும்
73. யித் தற்ம்மத்துக்கு யிதம் பண்ணினவர்கள் காசியிலே கோடி
74. சிவ பிரதிஷ்ட்டை கோடி விஷ்ணு பிறதிஷ்ட்டையும் புண்ணிய
75. த்தையுடையவராகவும் பியதற்க்கு யாதாமொருவன் அகித
76. ம் பண்ணினவன் காசியிலேயும் ராமீசுபரத்திலேயும் கோ
77. டி காரம்பசுவை கோடி பிராமனாளையும் கொன்றபா
78. வத்தையடைவாராகவும் யிந்தபடிக்கு குமரகுருபரத்தம்பி
79. ரானவர்களுக்கு விசைய ரெகுனாத பெரிய உடையாத் வே
80. ரவர்கள் யிந்தப்படி தற்ம சாதனைப்பட்டையம் எழுதிக்கெ
81. டுத்தோம் ராயசம் சொக்கப்பிள்ளை குமாரன் தற்மராயபிள்ளை
82. கை எழுத்துப்படிக்கு யிந்த தாம்பிர சாதனம் எழுதினேன்
83. சிவகங்கையிலிருக்கும் தையல்பாகம் ஆசாரி குமா
84. ரன் ஆறுமுகம் வைத்தாத்வி குணம் புண்யம் பரத
85. த்தாறு பாலனம் பரதத்தாப ஹாரேன ஸ்வத
86. த்தம் நிஷ்பலம் பலேது வெவத்தாம் பரதத்தாம்
87. வாயோ ஹரேத் வசுந்தராம் ஷ்ஷ்டி வர்ஷ
88. சகஸ்ராணி விஷ்ட்டாயாம் ஜாயதே கிரி
89. மி ஏதஸ்மிந் ரக்ஷிதே ஐந்தெள யத்ர க
90. ஸ்யாம் வயதத்தம் த்ரைலோக்ய ரட்சணா
91. த் புண்யம் யத்ஸ்யாதகஸ்யாந் நசம்
92. சய, சிவசகாயம். உ

2. திருப்பனந்தாள் செப்பேடு


இந்தச் செப்பேடும் திருப்பனந்தாள் பண்டார சன்னிதிகளிடம் கி.பி.1782 ஒச்சம்தட்டு ஆணையர் கோட்டை ஆகிய ஊர்களை தானம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. காசி மடத்து அன்னதானம் கட்டளையை திறம்பட நடத்துவதற்கு வழங்கி இருப்பவர் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள். ராணி வேலு நாச்சியாரது மருகர்.

1. ஸ்ரீகாசி விசுவேசுவர
2. ன்னபூரணி ஸ்காயம்
3. ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அரி 4. யராய தளவிபாடன் பாஷைக்கு தப்புவராய க
5. ண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொ
6. டாதான் பாண்டிமண்டல ஸ்தாபனாசாரியன்
7. சோளமண்டல பிறதிட்டாபனாசாரியன் தொண்
8. டமண்டல சண்டபிறசண்டன் ஈளமுங் கொங்
9. கும் யாட்பாணராயன் பட்டணமு மெம்மண்டலமுங்
10. கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராசாதிரா
11. சன் ராசபரமேசுபரன் ராசமாற்த்தாண்டன் ராச
12. குல திலகன் அரசராவண ராமன் அந்தம்பரற் கண்டன் தா
13. லிக்கு வேலி தளஞ்சிங்கம் இளஞ்சிங்கம் சேதுகாவல
14. ன் சேது மூல ரட்சா துரந்தரன் தனுக்கோடி காவல
15. ன் தொண்டியந்துறை காவலன் செம்பி வளநாடன் தே
16. வை நகராதிபன் முல்லை மாலிகையான் அனுமக் கொலி
17. டி கெருடக் கொடி புலிக்
18. கொடி யுடையான் மும்
19. மத யானையான் செங்
20. காவிக் குடை செங்கா
21. விக்கொடி செங்காவி
22. சிவிகையான் அசுபதி கெ
23. சபதி கணபதி நரபதி ரவி
24. பதி குலபதி யிரணிய கெற்ப
25. யாசி ரெகுநாத சேதுபதியவர்கள் பிறிதிவிராச்சிய பரி
26. பாலனம் பண்ணியருளாநின்ற கலியுக சகாத்தம் 4
27. 833 சாலியவாகன சகாத்தம் 1704 இத
28. ன்மேல் செல்லாநின்ற சுபகிறது ஸ்ரீஆனி 3 12
29. சுக்கில பட்சமும் ஸ்திர வாரமும் திறையோதெசியுமு
30. அனுஷ நட்சத்திரமும் சுபயோக சுபகரணமுங் கூடி
31. ன சுபதினத்தில் பாண்டி தேசத்தில் பொதியமா
32. மலையான் வைய்கையாறுடையான் புனப்பிரளைய னா
33. டன் குளந்தை நகராதிபன் முல்லை மாலிகையான்
34. பஞ்சகதி யிவுளியான் மும்மத யானையான் அனுமக்
35. கொடி கருடக்கொடி புலிக்கொடி கட்டிய பு
36. ரவலன் மும்முரசதிரு முன்றிலான் திக்கெங்கும் ஆ
37. ணை செலுத்திய சிங்கம் மேனாட்டுப் புலி தாலிக்குவே
38. லி தனஞ்சிங்கம் இளஞ்சிங்கம் இரவிகுல சேகரன்
39. ஆற்றுப்பாச்சி கடலில்பாச்சி தொண்டியந்துறை கா
40. வலன் வாசுபேயாகன் அரசு நிலையிட்ட விசைய ரெ
41. குனாதப் பெரியுடையாத் தேவரவர்களுக்கு திருப்பன
42. ந்தாள் குமரகுருசுவாமி தேசிகர் சீஷரான காசிவாசி
43. க்கு குமரகுருபரத் தம்பிரானவர்களுக்கு தற்ம சாத
44. னம் தாம்பிர சாதன பட்டையங் கொடுத்தபடி தற் 45. மம் சாதனமாவது காசியிலே கெங்கா தீர்த்தத்தில் பெரி
46. ரிய உடையாத் தேவரவர்கள் தற்மம் விசுவனாத சுவா
47. மி விசாலாட்சி அம்மன் அபிஷேக நெய்வேதனத்
48. துக்கும் பிராமண போசன மகேசுவர பூசை அன்
49. னதானம் நடப்பிவைக்குநதற்கு கிராமம் பாண்டி தே
50. சத்தில் திருக்கானப்பேர்க் கூத்தத்தில் கீள்மங்
51. கல நாட்டில் ஆணையாகோட்டையும் துகவூ
52. ர் கூத்தத்தில் கருத்துக்கோட்டை னாட்டில் துக
53. வூர் மாகாணத்தில் ஒச்சமதட்டும் யிந்த ரெண்டு கி
54. றாமுந்த தானபூறுவமாய் கொடுத்ததினாலே
55. ஆனையாகோட்டைகி பெருநான் கெல்லையாவது கீ
56. ள்பாற்கெல்கை எலிக்குளத்துக்கு மேற்கு தென்பாற்
57. கெல்லை ராசிக்கினிமிண்டான் கோட்டை கண்மாய்
58. க்கும் கோட்டைக்காடு யெல்கைக்கும் வடக்கு மேற்
59. பாற்கெல்லை நேமத்து எல்லைக்கும் விறுத வயலுக்
60. க்கும் கிளக்கு வடபாற்கெல்கை ராதா நல்லூர் முடுக்கினாங்
61. கோட்டை துக்கினாங் கரைக்கு தெற்கு இந்த பெருநாள்
62. கெல்லைக் குள்ளான யேந்தல் புரவடை நஞ்சை புஞ்
63. சை மாவடை மரவடைத் திட்டுத் திடலும் இதுவும் ஒச்
64. சந்தட்டுக்கு பெருநாள் கெல்லைகயாவது கீள்பா
65. ற்கெல்லை துகவூர்க் கண்மாய்க்கு மேற்கு தென்பாற்கெ
66. ல்கைக்கு பெருமாளேந்தல் தோக்கநேந்தல்
67. எல்லைக்கு கிளக்கு வடபாற்கெல்கை வள்ளக்
68. குளம் அரமணைக்கரை எல்கைக்கு தெற்கு இந்தபெ
69. ருநாங் கெல்லைக்குள்ளான யேந்தல் பிற
70. வடை நஞ்சை புஞ்சை திட்டுந்த திடலும் சேர்
71. த்து இரண்டு கிறாமமும் நத்தம் திருவிருப்பு மேல்
72. நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு பாசி படுகை
73. நிதிநிட்சேப கெல தரு பாஷாணம் அட்சினிய
74. ஆகாமியமென்று சொல்லப்பட்ட அஷ்ட்ட போ
75. காதி சுவாமியங்களும் தானாதி வினிய விக்கிறை
76. யங்களுக்கும் யோக்கியமாகச் சகல சமுதாயமும்
77. சொற்னாதாயம் குடிவாரக் காணிக்கை நிலவரி கி
78. றாமவரி கரைமணியம் பள்வரி வெள்ளைக்குடை வரி
79. சுங்கத்தில் சேந்த ஆயக்கட்டு குடிவரி சாதிவரி யெப்பே
80. ர்பட்ட பலவரியும் சறுவமானியமாக ஆசந்திராற்
81. கமாக நம்முட புத்திர பவுத்திர பாரம்பரியமாகவும் த
82. ங்கள் சீஷ பாரம்பரியமாகவும் காசியில் விசுவநா
83. த சுவாமி விசாலாட்சியம்மன் அபிஷேக நைவேதன
84. ம் கெங்கா தீரத்தில் அன்னதான தற்மத்துக்கும் இந்
85. த யிரன்கு கிறாமமும் தாராதெத்த பூறுவமாக தாம்பிர
86. ஸாதன பட்டையம் எழுதி கொடுத்தபடிஇநாலே ஆண்
87. டனுபவித்து கொள்ளுவாராகவும் யிந்த தற்மத்துக்
88. குவுயிதம் பண்ணிவர்கள் காசியிலே கோடி சிவ
89. ப் பிரதிஷ்டை கோடி பிறம்ம பிரதிஷ்ட்டையும் ப
90. ண்ணின பலனைப் பெறுவாராகவும் யிந்த தன்மத்துக்
91. கு அகிதம் பண்ணினவர்கள் காசியிலேயும் ரா
92. மீசுபரத்திலேயும் கோடி காராம்பசுவையும் கோ
93. டி பிராமாணாளையும் கொன்ற பாவத்தையடைவா
94. ராகவும் இந்தபடிக்கு குமரகுருபரத் தம்பிரானவர்களு
95. க்கு விசைய ரெகுநாதப் பெரிய உடையாத் தேவரவர்க
96. ள் தற்ம சாதன் பட்டையம் எழுதிக் கொடுத்தோம்.
97. ராயசம் சொக்கப் பிள்ளை குமரான் தற்மராய பிள்ளை லிகி
98. தப்படிக்கி யிந்த தாம்பிர சாதனம் எழுதினேன் சிவகங்கை
99. யிலிருக்கும் தையல்பாகம் ஆசாரி குமாரன் ஆறுமுகம் உ ஸ்வ
100. தத்தாத்ளி குணம் புண்யம் பரதத்தானு பாலநம் பரத
101. த்தாப ஹரேன ஸ்வத்தம் நிஷ்பலம் பலேது
102. ஸ்வத்தம் பரதத்தாம் வாயோகரேத் வ
103. சுந்தராம் சஷ்டி வர்ஷ ஷைஹ்ஹஸ்ராணி
104. விஷ்டாயாம் ஐயாயதே க்ருமி ஏதஸ்மி க்ஷதை
105. ஜமை ரெயும் சுகாஸிலாம் ப்ரயுக்தை த்ரைலோ
106. கரட்சணகாத் புண்
107 ம்யத் ஸ்யாத் தஸ்யாந்த
108. சம்சயஹ சிவ
109. சகாயம் உ.

3. காளையார் கோவில் மாலையீட்டுச் செப்பேடு

காளையார் கோவில் கோட்டைப் போரில் 25.6.1772 தியாகியான மன்னர் முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்களது அடக்கவிடமான மாலையிட்டு மடத்தைப் பராமரிப்பதற்காக கி.பி.1780-ல் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள் உருவாட்டி வட்டகையில் உள்ள குளமங்கலம் என்ற ஊரினை தானமாக வழங்கியுள்ளார். கி.பி.1790-ல் தான் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் சிவகங்கைத் தன்னரசின் நான்காவது மன்னரானார். இவர் மறைந்த முத்து வடுகநாதரது ஒரே மகளான வெள்ளச்சி நாச்சியாரை மணந்தவர். கி.பி.1780-ல் ராணி வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமையை மீட்டவுடன் தமது கணவரது பூத உடலைத் தாங்கிய புனித இடத்தைப் போற்றும் முகமாக இந்த தானத்தை தமது மருகர் மூலம் ஏற்படுத்தியுள்ளார் என ஊகித்து அறிய முடிகிறது.
இந்தச் செப்பேடு, காளையார் கோயில் மாலையீட்டு மடத்தைப் பராமரித்து வரும் அறங்காவலரிடம் இருக்கிறது.

கணபதியே நம கருவே நம சரகபதியே நம

1. ௳ ஸ்ரீராமசெயம் ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவ
2. ரன் அரிய ராயர தள விபாடன் பாஷைக்குத் தப்புவரா
3. த கண்டன் கண்டுனாடு கொண்டு கொண்டனாடு
4. கொடாதான் பாண்டிமண்டல ஸ்தாபனசாரியன்
5. சோளமண்டலப் பிறதிட்டாபனாசாரியன் யீளமு
6. ங் கொங்கும் யாட்பாரணராயன் கெசவட்டை கொ
7. ண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராசமா
8. த்தாண்டன் ராசகெம்பீரன் ராசமனோகரன் ராசகு
9. ல திலகன் அகண்ட லெட்சுமிதரன் அனும கேதன
10. ன் யாளி கேதனன் பீலி கேதனன் செங்காவிக் கு ை
11. டயான் வில்லுக்கு விசையன் சொல்லுக் கரிச்சந்தி
12. ரன் பரிக்கு நகுலன் பொறுமைக்கு தன்மர் போரூக்
13. கு வீமன் குடைக்கு கற்னன் கரிக்கு தெய்வேந்திரன் ரா
14. மனாத சுவாமி காரிய துரந்தரன் தொண்டியந்து து
15. ரை காவலன் சேது காவலன் சேது மூலா ர
16. ட்சா துரந்தரன் பரதேசி பயங்கரன் வைகை வள
17. நாடன் சேது வளநாடன் அசுபதி கெசபதி நரபதி
18. யிரணிய கெற்ப சுதாகரன் ஸ்ரீமது விசைய ரெகுனா
19. த சேதுபதி காத்த தேவரவர்கள் பிறதிவிராச்சிய ப
20. ரிபாலனம் பண்ணியருளாநின்ற பாண்டி தேசத்தில்
21. பொதியமா மலையான் வைகையாறுடையான் கு
22. ளந்தை நகராபதிபன் முல்லைத் தாருடையான் மும்
23. மத யானையான் திக்கெங்கும் ஆணை செலுத்தும் சி
24. ங்கம் யிரவிகுல சேகரன் தாலிக்கு வேலி தளஞ்
25. சிங்கம் யிளஞ்சிங்கம் வைகையா றுடையான்
26. தொண்டியந் துறை காவலன் அனுமக்கொடி
27. கெருடக்கொடி யாளிக்கொடி சிங்கக் கொடி
28. புலிக்கொடி யுடையான் சாமித்துரோகி வெ
29. ண்டயம் சேமத்தலை விளங்குமிரு தாளினான் பட்ட
30. மானங் காத்தான் பரதேசி காவலன் ருத்துராட்ச மா
31. லிகாபரணன் ஆத்துப்பாச்சி கடலில் பாச்சி அ
32. ரசு நிலையிட்ட விசைய ரெகுநாத பெரிய உடையா
33. த் தேவரவர்கள் பிறிதிவி ராச்சிய பரிபாலனத்
34. தில் சாலியவாகன சகாற்த்தம் 1701-க்கு மேல்
35. செல்லாநின்ற சாறுவாரி ஸ்ரீ தைய் மீ 10 உ
36. சுக்குறவார தினமும் அனுஷ நட்செத்திரமும்
37. தெசமியும் கூடின சுபயோக சுபதினத்
38. தில் 39. காளையார் கோயிலில் ராச விசைய ரெகுநாத
40. சசிவற்ன முத்து வடுகனாதப் பெறிய உடையா
41. த் தேவரவர்கள் மாலையீடு மடத்துக்கு நி
42. த்திய கட்டளை பூசைக்கு தாம்பிற சாதனபட்ன
43. டயம் குடுத்தோம் பட்டையமாவது உருவா
44. ட்டி வட்டகையிலே மேலை உச்சாணிக்கு தெற்
45. க்கு பொட்டக் கோட்டைக்கு மேற்கு ஒருமேனியேந்
46. தலுக்கு வடக்கு கீள்ப்புல்லாத்தனூர்க்கு கிளக்கு இன்
47. னான்கெல்லைக் குள்பட்ட குளமங்கல முழுது
48. ம் நஞ்சை புஞ்சை திட்டுத் திடல் கீள்நோக்கிய கிண
49. றும் மோனோக்கிய மரமும் வேம்பங் கோட்டை
50. யில் பதிங்கல விறையடியும் யிந்தக் கிறாமம் வ
51. ரியிறை சகலமும் சறுவமானியமாகவும் சீமை
52. யில் குடி ஒன்றுக்கு நாலு மாகாணி பிடித்த முத்
53. திரைப் படியால் ஒருபடி நெல்லும் வாங்கிக் கொ
54. ண்டு சிவந்திப் பண்டாரம் குமாரன் அண்ணா
55. மலைப் பண்டாரமும் ராமலிங்கப் பண்டாரமும் உள்
56. ளிட்டான் மாலையீடு மடமும் பூசித்துக் கொண்டு
57. நிதி நிட்சய தரு பாசானாட்சின்னியங்களும் ச
58. கலமும் ஆச்சந்திராற்க ஸ்தாயியாக கல்லு
59. ங் காவேரி புல்லும் பூமியும் புத்திறா புத்திர
60. வரைக்கும் ஆண்டனுபவிச்சுக் கொள்ள
61. க் கடவாராகவும் இந்தத் தன்மம் பரிபாலன
62. ம் பண்ணினவற்க்கு காசியில் கெங்கா ஸ்நா
63. னமான பலனும் சிவபிரதிட்டை விஷ்ணு பி
64. ரதிட்டை பண்ணின பலத்தை அடைந்து மாற்தா
65. ண்டன் ஆயுசு பெற்றுயிருக்கக் கடவாராகவும் ஆறா
66. மொருத்தற் இத்தற்மம் அகிதம் பண்ணினபேற் கா
67. சி ராமேசுபரத்தில் காராம் பசுவைக் கொன்ற
68. பாவத்தில் போவாராகவும் இந்த தற்ம சாதனம்
69. ம் யெளுதினேன் ராயசம் சொக்குப்பிள்ளை குமார
70. வீரன் பத்தர் குமாரன் சங்கர நாறாயண பத்
71. தன் சவுமிய நாறாயண வாள்மேல் நடந்தவள் ச
72. காயம் உ காளை நாயகர் துணை சொற்

73. னவல்லி அம்பாள் சகாயம் உ
4. சூடியூர் செப்பேடு


சூடியூர் சத்திரத்திற்கு சர்வ மானியமாக வழங்கிய 5 கிராமங்களுக்கான செப்பேடு இது. இதனை கி.பி.1794-ல் மன்னர் முத்து விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர் வழங்கியுள்ளார்.

1. ஸ்வஸ்திஸ்ரீ மன்மகாமண்டல லேசுவரன் அரிய ராயவி பாடன் பா
2. சைக்குத் தப்புவராயர் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு
3. கொடாதான் பாண்டிய மண்டல ஸ்தாபநாச்சாரியன் சோளமண்டல பிறதிஷ்
4. ட்டாபனாசாரியன் தொண்டமண்டல சண்டப் பிரசண்டன் ஈளமுங் கொங்
5. கும் யாள்பானமும் எம்மண்டலமும் கெசவேட்டை கொண்டருளிய ரா
6. சாதிராசன் ராசபரபரமேசுபரன் ராசமாற்த்தாண்டன் ராசகுல திலகன்சத்திய
7. அரிசந்திரன் குடைக்கு கற்னன் பொருமைக்கு தற்மபுத்திரன் அறிவுக்கு ஆதிசே
8. ஷன் தமிளுக்கு அகஸ்தியர் ஆக்கினைக்கு அக்கிறீபன் சந்திரவங்கிஷ சூரிய வங்கி ஷப்பி
9. றதாபன் அசுபதி நரபதி கெசபதி தளபதி நரசிங்கராயர் ஆனைக் கொந்தி வேங்கிடபதி
10. ராயர் மல்லிகாசுனராயர் விருபாட்சிராயர் அச்சுதராயர் விட்டலராயர் பி
11. றசனராயர் வீரவன்ராயர் பூறுவ தெட்சிண ராமறாயர் கிருஷ்ணராயர் கொட்டி
12. யம் நாகமனாயகர் விசுவனாயக்கர் சின்ன வீரப்பனாயக்கர் முத்து விரப்பனா
13. யக்கர் திருமலைனாயக்கர் சொக்கனாதனாயக்கர் முத்து விசைய ரெங்ககிருஷ்ணப்பனா
14. யக்கர் விசைய ரெங்க சொக்கனாதனாயக்கர் முசல்லி மான்களில் அசரது நவா
15. பு சாயபு அன்வர்தீகான் பக்தர் அசரது நவாபு மாபொசுகான் அவரது நவாபும்
16. முதலிகான் சாயபு அவர்கள் சேது வாதீனத்தில் குழந்தை நகராதிபன் காளைனாய
17. கர் காரியர் துரந்தரன் புலைப் பிறளய நாடன் தொண்டியந்துறை காவலன் சிறிதுற
18. கம் வனதுறகம் செலதுறக்கம் உடையான் சிவகெங்...
19. கை ராச்சிய பரிபாலகரன் காசிகோத்திரத்தில் ஸ்ரீ
20. மது அரசு நிலையிட்ட விசைய ரெகுனாதப் பெரிய உடையத் தேவரர்கள் பிறதிவிராச்சி 21. ய பரிபாலனம் பண்ணி அருளாநின்ற சாலிவாகன சாகத்தம் 1716கலிய
22. த்தம் 4895 இதன் மேல் செல்லாநின்ற ஆனந்தனாம சம்வச்சரத்தில் உத்தராய
23. னத்தில் சோபகிறிதுவில் மீனமீஉசுஉ கிருஷ்ணபச்சத்தில் தெசமியும் சோமவாரமும் உத்திராட
24. நட்சத்திரமும் பரிநாம யோகமும் பத்திரவாகரணமும் இப்படிக்கொத்த சுபயோக சுபதினத்தில்
25. ல் சேது மார்க்கத்தில் பிறதானி மருது சேர்வைக்கார் சூடியூர் சத்திரம் அன்னதான தற்மத்துக்கு
26. ஆபஸ்தம்ப சூத்திரத்தில் கவுண்டினிய கோத்திரத்தில் அசுகாத்தியங்காரன வேங்குடேசுர
27. வதானியன் குமாரன் வேங்கிடசுப்பாவதானியாருக்கு பூமித சாசனம் பண்ணிக்குடுத்த
28. கிறாமமாவது பாண்டிய தேசத்தில் தோவூர் கூத்தத்தில் மேலை மங்கல நாட்டில செய்யாளுரு
29. ம்மேலை பிடாவூர் மளவனேந்தலும் புத்தூர் தட்டில்புனல்ப்பிறளய நாட்டில் முள்ளக்குடி பாலே
30. ந்தலும் இந்த அஞ்சு சிறாமத்துக்கும் பரிணான் கெல்கை கண்டபடி செய்யாளுருக்கு பரினான்
31. கெல்லையாவது கீள்பாற்றிக் கெல்கை கம்மாகல்லுக்கும் வெள்ளையக்கோன் பேயாட்டுக்
32. க்கு மேற்கு தென்பாற்கெல்கை மாசான புஞ்சைக்கும் பிடாவூர் மணபுஞ்சைக் கல்லுக்கும் வட
33. க்கு மேற்கு தென்பாற் கெல்கை படையன் குளத்துக்கும் புதுகுளத்.... எல்கை கல்லுக்கும் பறை
34. யன் பேயாட்டுக்கும் சின்ன உடைப்பான் கரைக்கும் கண்ணப்பள்ளத்துப் புஞ்சைக்கும்
35. கிளக்கு வடபாற் கெல்கை வலையன் கண்மாய் புறக்கரைக்கு தெற்கு மேலை பிடாவூரு
36. க்கு மறவனேந்தலுக்கும் பரிநான் கெல்கையாவது கீள்பாற் கெல்கை பிடாவூர் வீரமகாளி
37. அம்மன் கோயிலுக்கும் புளிங்குளத்து எல்லைக்கும் இடையன் தாவுக்கு புல்லத்தி கண்
38. மாய் முடுக்கு கரைக்கும் மேற்கு தெற்பாற் கெல்கை வீரப்பனாயக்கன் கண்மாய் புறக்கரையில்.
39. கடைப்புளி எல்கை கல்லுக்கும் கல்லிச்சேரிக் கண்மாய் மேலக்கால் புற எல்கை.
40. க்கல்லுக்கும் வடக்கு மேல்பாற் கெல்கை மணல்புஞ்சைக்கும் வலையன கணமாய் புறக்க
41. ரைக் எல்லைக் கல்லுக்கும் கிளக்கு வடபாற்கெல்கை அத்தியபடி ஊறணிக்கும் கொத்தாம் பெட்டி 42. ல் ஊறணிக்கும் மறத்தளி எல்கைக்கும் தெற்கு முள்ளிக் குடிக்குப் ப
43. ரினான் கெல்கையாவது கீள்பாற்கெல்கை புத்துார் தனி இலுப்பைக்கும் மேற்கு தென் பாற்கெல்
44. கை பிடாரிசேரி ஆண்டியப் பிள்ளை ஊறணி வடகரையுள்பட வடக்கு மேல் பாற்கெல்கை
45. பாலேந்தல் சக்கிலியன் புளிக்கும் ஷை புஞ்சைக்கும் கிளக்கு வடபாற் கெல்கை வேளா
46. னேரி சுக்கிரன்பந்தி ஊறணிக்கும் கள்ளுப்பட்டி புஞ்சைக்கும் தெற்கு பாலேந்தல் பரினான்
47. கெல்கை கண்டபடி பரினான் கெல்கையானது கீள்பாற் கெல்கை முள்ளிக்குடி எல்லைக்கும்
49. பாதைக்கும் வடக்கு மேல்பாற் கெல்கை கரிசலூறணிக்கும் முடுவுக்குப் புஞ்சைக்கு வல்
50. லங்குடி எல்கைக்கும் கிளக்கு வடபாற்கெல்கை முள்ளிக்குடி காலுக்கும் பிறண்டை...
51. ஆலங்குளம் எல்லைக்கும் தெற்கு இந்த அஞ்சு கிராமத்து பரினான் கெல்லையுள் உள்ளபுர
52. வுக்கு உள்பட ஏந்தல் புறவடை நஞ்சை புஞ்சை திட்டுதிடல் குட்டம் குளி நத்தம் செய்த
53. தலைப் பாசி படுகை மாவடை மரவடை மேல் நோக்கிய மரங்கள் நோக்கிய கிணறு ஆத்துக்காலு
54. த்துக்கால் நிதி நிடசேப செலதரு பாஷன ஆட்சி ஆகாய சித்த பாத்திய மென்றுசொ
55. ல்லப்பட்ட அஷ்ட்ட போக தேசுவாமியங்களும் தானாதி வினிமய விக்கிறையங்களுக்குயோ
56. க்கிய மாகவும் சில்வரி பெருவரி ஏதோ... வரியும் சறுவ மானியமாக தானம் பண்ணிக்கு.
57. டுத்து பிறதானி மருது சேர்வைக்காரர் தற்மாசனத்தில் கிறையத்துக்கு வாங்கு(ன) சத்திரம் அன்ன.
58. தானத்து தானம் பண்ணிக்குடத்த சிறாமங்களில் குடியூரில் சத்திரப்பங்கு விரையடி
59. 75 இம்மனேந்தல் மறவனேந்தல் விட யருள்யும் விரையபடி 90 மானிய
60. மாகவும் மற்ற கிராமங்களுக்கு அரை வரியாகவும் கருப்புக் கட்டி தேராம பாதுகாவல் கரை
61. மீ யும் வெள்ளைக்குடை பட்டயவரி அங்க சுங்க மற்றும் சில்வரி பெருவரி ஏதோ வரியும் சத்திர
62. த்துக்கு சறுவமானியமாக தானம் பண்ணி குடுத்ததினாலே ஆசந்திராற் சஸ்தாயியாக சந்தி
63. ராத்திய சந்திரப் பிறவேசம் வரைக்கும் புத்திர பவுத்திர பாரம்பரையாக சத்திரம் அன்னதானமும் 64. நடப்பிச்சுக்கொண்டு சந்திராவுத்தமாக ஆண்ட(னு) பவித்துக் கொள்வதாகவும் இந்தத் தற்மதனை
65. த யாதா மொருவர் பரிபாலனு பண்ணின பேர் காசியிலே தனுக்கோடியிலே கோடி சிவப்பி
66. றதிட்டையும் கோடி பிறம பிறதிட்டையும் கோடி விஷ்ணு பிறதிட்டையும் பண்ணின பலத்
67. தைப் பெற்று இகத்திலே ஆயுராறோக்கியமும் புத்திரமித்திரர்கள் கிறா(யா)தியங்களுடனே தேவேந்திர ே
68. பாகமும் வா(பர)த்திலே வைகுண்ட பதவியும் அடையும் அடைந்திருப்பாறாகவும் இந்த தர்ம
69. த்தை யாதா மொருத்தர் அகிதம் பண்ண நினைத்த பேர் காசியிலே தனுக்கோடியிலே ஸ்ரீ
70. கத்தி கோகத்தி பிறமகத்தி பண்ணின தோஷத்தை அடைந்து இகத்திலே மகத்தான துன்ப
71. த்தை அனுபவித்து ஆத்தியத்திலோ சுவரவாதி நரகத்துக்கு ஏதுவாய் போவாறாகவும்
72. .....
73. இந்த தற்மசாதன பட்டையம் எழுதினேன் ராயசம் தற்மராய
74. குமரன் சொக்கு கைஎளுத்து.

5. மாங்குடி செப்பேடு

இந்த செப்பேட்டை வழங்கியவர் மன்னர் விசைய ரகுநாத பெரிய உடையத் தேவர் ஆவார். இதனை கி.பி.1796-ல் தருமபுரம் ஆதினம் சிவஞான தேசிகரது சீடரான காசிவாசி சடையப்ப தம்பிரான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காசியில் ஏற்கனவே மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவரால் நிறுவப்பட்டுள்ள மடத்தில் அன்னதானம், அபிஷேகம் மற்றும் விசுவநாத சுவாமி விசாலாட்சி அம்மன் பூஜை, நெய்வேதனம் ஆகியவற்றிற்காக துகவூர் பகுதியில் உள்ள புதுக்குளத்தையும், திருப்புத்துர் வட்டத்தில் உள்ள மாங்குடி ஆகிய இரண்டு ஊர்களை தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணம் இது.

1. ஸ்வஸ்தி ஸ்ரீமன் மஹாமண்டலேசுபரன் அரியராய தழவி
2. பாடன் பாசைக்குத் தப்புவார் கண்டன் கண்டநாடு கொண்டு
3. கொண்ட நாடு கொடாதான் பாண்டிய மண்டல ஸ்தாபனாச்சாரி
4. யன் சோழ மண்டல பிரதிஷ்ட்டாபனாசாரியன் தொண்ட
5. மண்டல சண்ட பிரசண்டன் யீளமுங் கொங்கும் யாள்ப்பா
6. ராயன் எம்மண்டலமுங் கொண்டு கெஜவேட்டை கொண்டருளிய
7. ராசாதி ராசன் ராசபரமேசுவரன் ராச மார்த்தாண்டன் ராசகு
8. லதிலகன் ராச கம்பரன் ராச கண்டரன் ராசாக்களி தம்பிரசா
9. ன் அரசராவணராமன் அந்தம் பிரகண்டன் ரத்தின கிரீடாதிபதி
10. ரத்தின சிங்காசனாதிபதி சூரிய குலதுங்கன் சந்திரகுல திலகன் 11. கிளைவாளவந்தான் கிருஷ்ணாவதாரன் குளந்தை நகராதிபன்
12. முல்லை மாலிகையான் விபூதி ருத்திராட்சமாலிகையா பரணன்
13. வீரவெண்பா மாளிகையான் சிவபூஜைக்கு குருபூஜை மறவாத வங்கி
14. ஷாதிபன் காளைநாயகர் காரிய துரந்தரன் வேதாந்த வேதியன்
15. வேதியர்காவலன் பரதநாடக விற்பன்னன் கெவு
16. ரிவிலாசன் பொதியா மாமலையான் வைகாறுடையான் புனல்
17. பிரனைதாடன் பாண்டி வளநாடன் தொண்டியன் துறைகாவலன்
18. துஷ்டரில் துஷ்டன் துஷ்ட நிட்டுரன் துஷ்ட நிக்கிர கபனிஸ்டா பாலனன் ப
19. ட்ட மானங்காத்தான் பரதேசி காவலன் பஞ்சகதி இவுளியான்
20 பஞ்ச வன்ன பாவாடையான் மும்முத யானையான் மும்முரசதிரு மு
21. ன்றிலான் திக்கெங்கும் யானை செலுத்திய கெஜ சிங்கம் மேனாட்
22. முப்புலி மலைகலங்கினும் மனங்கலங்காதான் தாலிக்கி வேலி தன்
23. டுவார் முடன் தளஞ்சிங்கம் இளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கத்து
24. ராசன் அஷ்டதிக்கு மனோபயங்கரன் யிரவி குலசேகரன்
25. யிவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் தொட்டவராயன் வலியச்
26. சருவி வழியில் கால்நீட்டி வீரதண்டை
27. சேமத்தலை விளகுமிருதாளினான புவநேத வீரன் வன்னி
28. யராட்டம் தவிழ்த்தான் ஒட்டியர்தளவிபாடணன் பஞ்சவர்ண
29. பரிராவுத்தன் கொட்ட மடக்கிய சமர கோலாகலன் சற்குண சு
30. பாஷிதன் சாடிக்காரர் கண்டன் சாமித் துரோகியன் மிண்டன்
31. படைக்கு கலங்காதான் ஏழை பங்காளன் எதிரிட்ட மருவலர்கள்
32. சிரமுரள வெட்டி நிலையிட்ட தீரன் பரராஜசேகரன் பர
33. கேசரி பாதளவிபாடன் அடியார் வேலைக்காரன் உபைய
34. காமரன் கலியுக ராமன் கன்னா கர்ணவுதாரன் கொற்றவர் திருமு
35. ராசாதிராசன் மறுவன்னியர் கெர்பம் விளங்கிய ராசன்
36. மறவன்னியர் வந்து வணங்கியபாதன் மறுமன்னியர் கேசரி ம
37. றுமன்னியர்ருசபுலி பொருமன்னர் அஞ்சிப் புகலிடம் தேட திரு
38. மலைக்காட்டிச்செயவேலெடுத்தோன் கெடி மன்னியர்காலாந்தகள் சி
39. ரிதுற்க மலைதுற்க செலதுற்க முடையான் ஆற்றில் பாச்சி
40. கடலில் பாச்சிய மதப்புலி பல மொளிவொப்பா பாச்சி பாசு பதம் சி
41. யா செகமெலாம் புகள செங்கோல் நடத்துவோன் செங்காவி
42. க்குடை செங்காவிக் கொடி செங்காவிச் சிவிகையான் அனு
43. க்கேதனன் கெருடகேதனன் வியாக்கிரம கேதனன் ஸ்ரீ மஹா கே
44. தனன் பூலோக தெய்வேந்திரன் சத்திய அரிச்சந்திரன்
45. ....... விளங்கிய தீரன் கொடைக்கு கர்ண் பொறுமைக்கு தருமபு
46. த்திரன் வில்லுக்கு விசையன் பரிக்கு நகுலன் சாஸ்திரத்துக்கு
47. சகாதேவன்தமிழுக்கு அகத்தியன் ஆக்கினைக்கு சுக்கிரீவன் அழகுக்கு
48. வாலசீவகன் திலதநுதல் மடமாதர் மடலெதும் தி
49. ருப்புயச்சிங்கன் வீரலெட்சுமி விசைய லெட்சுமி சவுபாக்கிய லட்சுமி 50. தனலட்சுமி சவுமிய லட்சுமி காருண்ணிய லட்சுமி சவுரிய லட்சுமி
51. கீர்த்திலட்சுமி அஷ்டலட்சுமி பொருந்திய வீராதி வரன் வீ
52. ரகெம்பீரன் விசைய மார்த்தாண்டன் சூராதி சூரன் சூரளி சூரன் துரைகள்
53. மணிசேது அரசு நிலையிட்டோன் சிவகங்கை ராஜ்ய ப
54. ரிபாலன் சோம வாசுபேயயாகிய காசிப கோத்திரத்தில் ஸே
55. துக்கு அரசுநிலையிட்ட விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர்ர்
56. கள் பூதான சாசனம் பண்ணிக் கொடுத்தபடி கலியுக சகாப்த
57. ம் 4867 சாலிய வாகன சகாப்தம் 1718 யிதன் மேல்
58. செல்லாநின்று நள நாம சம்வஸ்த்திரத்தில் உத்திரா வியணத்தில்
59. சுபவேளையில் புஷ்யமாசம் 3தீ குருவாரமும் சதுர்தசி
60. யும் புனர்பூச நட்சத்திரமும் சசிரநாம யோகமும் வணிக லக்
61. கிணமும் கூடிய சுபதினத்தில் சறுவ மானியமாக பூதான சாச
62. னம் பண்ணிக் கொடுத்த பூதான சாசன மாவது ஆனயிந்ததர்
63. மம் காசியில் கெங்கை தீர்த்தத்தில் விசுவநாத சுவாமி விசாலாட்சி
64. அம்மன் அபிஷேக நெய்வேத்தியத்துக்கும் சத்திரம் அன்னதான
65. தருமத்துக்கு தருமபுரம் சிவஞான சிதம்பர தேசிகர் சீஷரான கா
66. சிவாசி சடையப்ப தம்பிரான் அவர்கள் பாரிசமாக தாம்பிர சா
67. சனம் செய்து கொடுத்த கிராமமாவது பாண்டி தேசத்தி
68. ல் துகவூர் கூத்தத்தில் கருத்துக் கோட்டை நாட்டில் துகவூர்
69. மாகாணத்தில் புதுக்குளத்துக்கு பெருநான் கெல்கை கண்ட
70. படி கீழ்பார்கெல்கை துகலுர் கண்மாய் உள்வாயிற்க்கு மேற்கு
71. தென் பார்கெல்கை வடக்கு கீரனூர் எல்கைக்கும் சாலைக்கு
72. ம் மாங்குளக் காலுக்கும் வடக்கு மேல்பார்கெல்கை பெருமா
73. ளேந்தல் எல்கைக்கு கிழக்கு வடபார் கெல்கை ஒச்சந்
74. தட்டு எல்கைக்கு தெற்கு இன்னங்கெல்கைக்குள் பட்ட பு
75. துக்குளம் கிராமம் கேரள சிங்கம் வளநாட்டில் திருப்பத்
76. தூர் தாலுகாவில் கிராமம் மாங்குடிக்கு பெருநான்கெல்
77. கை கண்டபடி கீழ்பார்கெல்கை கானாயூர் புரவுக்கும் தி
78. ருவிடையாபட்டி புரவுக்கு மேற்கு தென்பார்கெல்கை நா
79. ட்டார் மங்களம் புரவுக்கும் கோட்டையிருப்பு புரவுக்கும்
80. வடக்கு மேல்பார்க்கெல்கை மணக்குடி புரவுக்கு கிழக்கு வட
81. பார்க்கெல்கை காரையூர் புரவுக்கு தெற்கு இந்நாள்கெல்கை
82. க்குள் பட்ட மாங்குடி கிராமம் இந்த ரெண்டு கிராமம் பெருநா
83. ங்கெல்கைக்குட்பட்ட கம்மாய் ஏந்தல்கள் நஞ்சை
84. புஞ்சை திட்டு திடல் குடவ்டம் குளி நத்தம் திருவிருப்பு பாசிபடு
85. கை மேல்நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு பலவரி
86. குடிவார காணிக்கை வெள்ளக்கொடை வரி கீதாரவ
87. ரி கரைமணியம் மற்ற யாதொருவஸ்து நிதி நிச்சேப ஜலதரு
88. பாஷாண சித்த சாத்திய மென்று சொல்லச்
89. செய்த அஷ்டபோக தேச்சுவாமியங்களும் சர்வமானி 90. படாக தானபூர்வமாக தாம்பிரசாதன பட்டையம் கட்டளை
91. யிட்டோம் ஆச்சந்திரார்க் ஸ்தாயி ஆக சந்திராதித்த சந்
92. திர சந்ததி பிரவேசம் உள்ளவரைக்கும் எங்கள் புத்தி
93. ர பவுத்திர பாரம்பரையாகவும் தங்கள் சிஷ்யாள்ப
94. ரம்பரையாக ஆண்டனுபவித்துக் கொண்டு தர்ம பரிபாலண
95. ம் பண்ணிக்கொண்டு வருவார்களாகவும் இந்த தர்மத்தை யாத
96. மொருதர் பரிபாலனம் பண்ணின பேர்கள் காசியிலேயு
97. ம் கங்கைக் கரையிலும் ராமேசுவரத்தில் தனுக்கோடியிலும்
98. லும் கோடி சிவலிங்க பிரதிஷ்டையும் கோடி விரும
99. ப் பிரதிஷ்டையும் விஷ்ணுப்பிரதிஷ்டையும் கோதானம்
100. பூதானம் கன்னியாதானமும் பண்ணின பலனை பெருவாராக
101. வும் இந்த தர்மத்தை யாதாமொருதர் அகிதம் பண்ணினபே
102. ர்கள் காசிராமேஸ்சுப ரதனுக்கோடி கெங்கை கரையிலும்
103. கோடி விரும சத்திய மாதா பிதாவையும் அநேகங்ககோ
104. டி காரம் பசுவையும் கொன்ற தோஷங்களில் போக கட
105. வாராகவும்
109. இந்த சாசனம் எழுதினேன் ராயசம்கு
110 மாரப்பபிள்ளை குமாரன் சொக்கு சுவஸ்தி எழுதினேன்
111. சிவகெங்கையில் இருக்கும் தையல் பாகம் ஆசாரி குமாரன்
112. ஆறுமுகம் கையெழுத்து

6. ஆண்டான் கோயில் செப்பேடு

சோழ நாட்டில் உள்ள ஆண்டான் கோயிலுக்கு சிவகங்கைச் சீமை முத்துநாட்டு மீனாபூர் என்ற ஊரினை தானமாக வழங்கியதற்கான செப்பேடு. இதனை கி.பி.1799 விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர் வழங்கியுள்ளார்.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ மன்மகாமண்டலேசுனர் அரியராய தேளவிபாடன் பாசைக்கு தப்
2. புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட
3. நாடு கொடாதான் பாண்டி மண்டல ஸ்தாபனாசாரியன் சோழமண்டல
4. ப்பிறதிஷ்டாபனாசாரியன் தொண்டமண்டலச் சண்டப்பிறசண்ட ளீளமுங் கொ
5. ங்கும் யாட்பாணராயன் பட்டணமு மெம்ம மண்டலமுங் கண்டு கெஜவேட்டை
6. கொண்டருளிய ராஜாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் ராஜகுல
7. திலகன் ராசகெம்பரன் ராஜகண்டிரவன் ராசாக்கள் தம்பிரான் அரசுரா
8. வணராமன் அந்தப்பிறகண்டன் ரற்றின கிரீடாதிபதி ரற்றினசிங்காசனா
9. திபதி சூரியகுல துங்கன் சந்திரகுலதிலகன் கிஷ்ணாவதாரன் கிளைவாள 10. வந்தோன் குழந்தை நகராதிபன் முல்லைமா லிகையான் சிவபூசை குருபூசை
11. மறவாத வங்கி ஷாதிபன் காளை நாயகர் காரிய துரந்திரன் வேதாந்த வேதிய
12. ன் வேதியர் காவலன் பரத நாடக விற்பன்ன.....சங்கீத
13. வித்யாவினோதன் கலை தெரியும் விற்பன்னன் கெவுளி விலாசன் பொதியமா
14. மலையான் வய்கையாறுடையான் புனல் பரளைய நாடன் பாண்டி வளநாடன்
15. தொண்டி(த்து)யந் துறைகாவலன் துஷ்டரில் துஷ்டன் துஷ்டநிக்கிரகன் சிஷ்ட
16. ர்பரிபாலனன் பட்டமானங்காத்தான் பரதேசி காவலன் பஞ்ச கெதியிவுளிராய
17. ன் பஞ்சவற்னன்ப் பாவாடையான் மும்மதயானையான் மும்முரச திருமுன்றிலா
18. ன் திக்கெங்கு மாணை செலுத்திய கெஜசிங்கம் மேனாட்டுப்புலி மலைகல
19. ங்கினும் மனங்கலங்காதான் தாலிக்கிவேலி தண்டுவார் முண்டன் தளசி
20. ங்க மிளஞ்சிங்கம் பகைமன்னற் சிங்கத்துரை ராசன் அஷ்டதிக்கு வி
21. சையன் யிரவிகுலகேகரன் யிவுளிபாவடி மிதித்தேருவாற் கண்டன் கொட்ட
22. வாற்ந்தவ (ஞ்)சாதான் வலியச்சருவி வழியில்கால் நீட்டி வீரதண்டை சே
23. மத்தலை விளங்குந் தாளினான் புவனே சுவீரன் வன்னியராட்டந்
24. தவிழ்த்தான் ஒட்டியற்தளவிபாடன் பஞ்ச வற்ன்ன பரி ராவுத்தர் கொ
25. ட்டமடக்கி சமரகோலாகலன் சற்குண சுபாஷிதன் சாடிககாறாகண்டன
26. சாமித்துரோகியர் மிண்டன் அடைக்கலங்காத்தான் யெழைபங்காழன் எதிரி
27. மருவலர்கள் சிரம் வெட்டி நிலையிட்ட தீரன் பரராஜசேகரன் பரராஜ கேஸரி
28. பரதளவிபாடன் அடியாற் வேளைக்காறன் உபயசாமர உல்லாசன் நளினக்காற
29. ன் கொட்டமடக்கிய வய்யாளி நாராயணன் கலியுகராமன் கற்றாவுதாரன் கெ
30. த்தவர்திருமுனிக்கி சிகராசன் மறுமன்னி
31. யகப்பம் விளங்கிய ராசன் மறுமன்னியர்
32. வந்துவணங்கியபாதன் மன்னியர்கேசரி மறுமன்னியர் கெப்புலி பொரு மன்னரஞ்
33. சிப் புகலிடந்தெடித் திருமலை காட்டில்செவ் வேலெடுத்தோன் கெடிமன்னர்கா
34. லாந்தகன் கிரிதுற்கமவ(னி)துற்கம்ஜல துற்கமுடையான் ஆற்றில் பாச்சி கடலில்
35. ப்பாச்சிய மதப்புலி பழமொழி தவ(றா)ப்பாகபத மகிமையாய் ஜெகமெல்லாம் புக
36. ழ்ச்செங்கொல் நடத்துவோன் செங்காவிக்குடை செங்காவிக்கொடி செங்கா
37. விச்சிவிகையான் அனுமகேதனன் கெருட கேதனன் ஸிம்ஹகேதனன் மீனகே
38 தனன் குக்குட கேதனன் பூலோக தெவேந்திரன் சத்திய அரிச்சந்திரன் அன்னக்கொ
39. டிவிளங்கிய தீரன் கொடைக்குக் கற்னன் பொறுமைக்குத் தற்மபுத்திரன் மல்
40. லுக்கு விமசேனன் வில்லுக்கு விசையன் பரிக்கு நகுலன் சாத்திரத்துக்கு சகா
41. தேவன் தமிழுக்(கு)கத்தியன் ஆக்கிணைக்குச் சுக்கிறீபன் அழகுக்கு வாலசீவ
42. ன் திலதனுதல் மடமார் மயலுற்று மடலெழுதும் திருப்புயசுமுகன் விரலெ
43. ட்சுமி விசையலெட்சுமி சவுபாக்கிய லெட்சுமி அஷ்டலக்ஷிமி பொருந்திய
44. வீராதிவீரன் வீரகெம்பீரன் விசைய மாத்தாண்டன் சூரநிற்குரன்துரை
45. கள் சிகாமணி சேதுவுக்கரசு நிலை(யி) ட்டோன் சிவகெங்கை ராஜ பரிபாலகரா
46. ன அசுபதி கெஜபதி தனபதி நரபதி ரவிகுலபதி அன்னதான சோமவாசலுக
47. யாகிய காசிப கொத்திரத்தில் ஸ்ரீமீது அரசு நிலையிட்ட முத்து விசையரெகு
48. நாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் பூதான சாஸனம் பண்ணிக் கொடுத்த
49. படி சாலியவாகன சகாத்த 1711 கலியுகாதி 4000 யிதின் மேல்
50. ச்செல்லா நின்ற சவுமிய நாமலம் வற்ரத்தில் உத்தராயணத்தில்
51. ருதுவில் பங்கூனி (மீஉ) யரு தீபூறுவ பட்சத்து நவமி நாழிகை 7க்கு மேல்
52. தசமியும் குருவாரமும் புனர்பூசம் யக(னாழி) மேல்ப் பூச நட்செத்திரமும் சுகற்ம நாம
53. யொகமும் கவுலவாகரணமும் யிப்படி கொற்ற சுபயொக சுபதினத்தில் பூதான
54. சாஸநம் பண்ணிக் கொடுத்தது பூதான சாஸநமாவது சொழதேசத்தில் கடு
55. வாய்க்கரைத் தென்புத்தூருக்குப் பிறிதிநாம மாகிய

ஆண்டாங்கோவில்

56. செம்பிநாதசுவாமி சிவசேகரியம்மனுக்குச் சிறுவயலிலிருக்கும் சிவகோத்தி
57. ரத்தில் சுடலைமுத்தாபிள்ளை மகன் அட்டவணை மாயாண்டியாபிள்ளை கட்டளை!
58. காலசந்திப் பூசைக்குச் சறுவமாணிபமாகப் பூதான சாஸநம் பண்ணிக்கொடுத்த
59. க்ஷெந்திரமாவது பாண்டி தெச(த்★)தில்ச் சிவகெங்கைச் சீமைச் சாக்கைத் தாலூ
60. கா முத்துனாட்டு மாகாணத்தில் மீனாப்பூருக்கு பெருனான் கெல்கை கண்டபடி
61. எல்கையாவது கீழ்பாற்கெல்லையாவது சடையாமங்கலங் கணவாயுள் த்
62. தரவில் நிற்குங் கடப்பமரங்களுக்குங் கட்டைப்புளிக்கு மெற்குத் தென்பா
63. ற்கெல்கையாவது மெற்படி கணவாய்த் தென்கடைக் கொம்புக்குளக்காலு
64. க்கு வடக்கு மெல்பாற்கெல்லையாவது குணக்கரைச்சி கூறணியாக்கி மூலை
65. க்கும் வா(கா)ன் செய்க் கீழ்வரப்புக்குங் கிழக்கு வடபாற்க் கெல்லையாவது
66. மீனாப்பூர் திடல் பிள்ளையார் கோவிலுக்கும் மெல்ப்படியூரும் பளச்செய்
67. வடவரப்புளுந் தெற்கு இன்னான் கெல்கைக்குட் பட்ட மீனாப்பூர் ஊரது புர
68. வுக்குள்ள நஞ்சை புஞ்சை திட்டுத்திடல் குட்டங்குழி நத்தஞ் செய்த்தலை.
69. மாவடை மரவடை மேனொக்கிய மரங் கீள்னோக்கி யகிணறு பாசி படுகையா
70. ற்றுக்கால் நூற்றுக்கால் நீதிநிட்செப செலதரு பாஷாணா க்ஷிணகா(ஜி) சி
71. த்தசாத்திய மென்று சொல்லச் செய்த அஷ்ட்ட பொகதே சுவாமிய
72. ங்களும் .......... விக்கிறயங்களுக்குக்கும் யொ...மாகச் சறுவ
73. மாணிபமாய் ஷாநராவநம் பண்ணிக் கொடுத்து மாயாண்டியாபிள்ளை
74. யத்தானே கிறாமங் காடு கொண்டு பாளாயிருக்குறதைச்சுதை பண்ணி
75. வைய்த்து கொவிலுக்குத் தன் கட்டளைகால சந்திப் பூசையுந் திருப்பணியும்
76. நடப்பிவிச்சுக்கொண்டு கிறாமத்து விசாரணையுங் கட்டளைவிசாரணையும் பாரம்
77. பரையாகத் தானே விசாரித்துக் கொண்டு கிறாமவிசாரணை கடனைவிசாரணை 78. க்குக் கிறாமத்து மேல்வார ஊதியத்தில் நித்தியமொரு பணமுங் கிறாமத்து ந
79. ஞ்சை புஞ்சை நிலமெல்லாம் பண்ணை பாதி குடிபாதியாகப் பிறித்து பாதிநில
80. த்தில் தன் ஏர் வைத்து விவசாயஞ் செய்து அதில் வருகுற குடிவாரம்
81. கட்டளையாக வெடுத்து கொண்டு ஆசந்தராற்க ஸாயியாகச் சந்திரம
82. தித்தி சந்திரப் பிறவெசமுள்ளவரைக்குங் கல்லுங் வெரியும் புல்லும் பூமி
83. யும் உள்ளவரைகும் புத்திரபவுத்திரபாரம் பாரெயாகக் கொவில் கட்டளை
84. ப்பூச நெய்வதனமுந் திருப்பணியு நடப்பிவிச்சுக் கொள
85. க்கட்டளையிட்டொ மிந்தத் தன்மத்தை யாதொருமொருதர் பரிபாலனம் பண்
86. ண்ணினபேற்கள் காசியிலெயும் கெங்கைக் கரையிலெயும் இராமீசுரந்த
87. னுக்கொடிக் கரையிலெயூங் கொடி சிவலிங்கப் பிரதிட்டையும் கொடி
88. டி பிறமப்பிறதிட்டையுங் கோடி கோதான பூதானம் பண்ணின பல
89. னையு மடைவராகவூ யிந்தத் தன்மத்துக்கு யாதாமொரு (த★)தர் அகீதம்ப
90. ண்ணினபேர்கள் காசியிலேயும் கெங்கை கரையிலேயூ ராமெ.
91. சுரந் தனுக்கொடியருலயுங் கோடி பிரமத்தியும் மாதாபிதாவை
92. யுங் கொடி காராம்பசுவையுங் கொன்ற தொஷங்கிளிற் பொவா
93. ராகவூ ..................
94. ...................
95. யிருக்கு மன்னப்பத்தற் மகன் வீரப்பபத்தன் சுக லிகிதம் (11★)

7. வேட்டைக்காரன்பட்டி செப்பேடு

இந்தச் செப்பேட்டினை வழங்கியவர் சிவகங்கைச் சீமையின் இறுதி மன்னரான முத்து விசைய ரெகுநாத பெரிய உடையாத் தேவர் அவர்கள். 24.1.180 தேதியன்று வழங்கியது ஆகும். சிவகங்கைச் சீமையின் கிழக்கு கடற்கரையையொட்டி வடக்கு தெற்காக அமைந்துள்ளசேதுமார்க்கத்தில் வேட்டைக்காரன் பட்டியில் அமைந்துள்ள சின்னணமட தர்மத்திற்காக அமராவதி மாகாணத்தில் உள்ள தாணாவயல் என்ற ஊரினைச் சர்வமான்யமாக வழங்கியதைக் குறிக்கும் ஆவணம் இது.

1. ஸ்வஸ்திஸ்ரீமன் மஹாமண்டலேசுபரன் அரியராயர்தளவிபாடன்
2. பாசைக்கி தப்புவராயர் கண்டன் கண்ட னாடு கொ
3. ண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டிமண்டல பிரபனாசாரி
4. யன் சோளமண்டல பிரதிஷ்டாபனாசாரியன் தொண்டமண்ட
5. ல சண்டப்பிறசண்டன் ஈளமும் கொங்கும் யாப்பினராயன்
6. பட்டணமும் யெம்மண்டலமுங் கண்டு கெச வேட்டை கொண்ட
7. ருளிய ராசாதிராசன் ராசபரமேசுவரன் ராசமாத்தாண்டன் ராகுசகு
8. லதிலகன் ராசகெம்பீரன் ராசகண்டீரவன் ராசாக்கள் தம்பிரான் அரச
9. ராவணராமன் அந்தம்பிறகண்டன் ரற்றின் கிரீடாதிபதி ரற்றின. சி
10. ங்காசனாதிபதி சூரியகுலதுங்கன் சந்திரகுல திலகன் சிஷ்ட்டனா
11. வதாரன் புலிவாளவந்தோன்க் குளந்தை நகராதிபன் முல்லை மாவி
12. கையான் விபூதி ருத்திராச மாவிகையாபரணன் வீராவண்பாமாலைய
13. ன் சிவபூசை குருபூசை மறுவாதங்கிஷாரதியன் காளை நாயகர் கா
14. ரிய துரந்தரன் சேந்த வேதியன் வேதியர் காவலன் பரதநாடக விற்
15. ப்பன்னன் சங்கீத சாகித்திய வித்தியாவினோதன் கலைதெரியும் விற்ப்ப
16. னன் காமிநிகந்தர்ப்பன் கெவுளிவிலாசன் பொதியமாமலையான்
17. வய்கையாறுடையான் புறைபிரளயநாடன் பாண்டியவளநாடன் 18. தொண்டியந்துறை காவலன் துஷ்ட்டரில் துஷ்டன் துஷ்ட்ட நெட்டுர
19. ர் கண்டன் சிஷ்ட்ட பரிபாலன் பட்டமானங் காத்தான் பரதேசி காவலன் பஞ்ச
20. கதியிவுளியான் பஞ்சவற்ண பாவாடையான் மும்மத யானையா
21. ன் மும்முரசதிரு முன்றிலான் திக்கெங்கும் யானை செலுத்திய தேவ
22. ன் மேனாட்டுப்புலி மலைகலங்கினும் மனங்கலங்காதான் தாலிக்குவேலி
23. தண்டுவார் முண்டன் தளஞ்சிங்க மிளஞ்சிங்கம் பகைமன்னர் வண
24. ங்கு துரைராசன் அட்டபதிக்கும் விசையன் ரவிகுலசேகரன் யி
25. வுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் தொட்டவாரந்தவறாதான் வலியச்ச
26. ருவி வளியில்க் கால்நீட்டி வீரதண்டை சேமத்தலை விளங்குமி
27. பரதன விபான் பஞ்சவர்ணம் பரிராவுத்தர் கொட்டமடங்கிய சம
28. பரதன விபாடன் பஞ்சவர்ணம் பரிராவுத்தர் கொட்டமடக்கிய சம
29. ர கோலாகவன் சற்குண பாஷகன்ச் சாடிக்காரர் கண்டன் சாமத்து
30. ராசியன் மிண்டன் துரகரேவந்தன் அடைக்கலங்
31. காத்தான் ஏளைவர(ன்) தாளினான் எதிரிட்ட மருவயர்கள் சிரமுடிகள்
32. வெட்டி நிலையிட்டதீரன் பரராஜசேகரன் பரராஜ கேசரி பரதளவி
33. பாடன் அடியார்வேளைக்காரன் உபையசாமர உல்லாசன் நளின
34. க்காறன் கொட்டமடக்கி வையாளி நாராயணன் கலியுகாரமன் கர்
35. னாவுதாரன் கதிசெரிப் பூதவிஞொற்ககுவனா எருமாத்தின
36. குடன் அணிந்தோன் கொற்றவன் திரமுனிக்கி (கிக) ராசராசன் மறு
37. மன்னியர் கற்பம் விளங்கியராசன் மறுமன்னியர் வந்து வணங்
38. கியபாதன் மன்னியர்கேசரி மன்னியர் மதப்புவி பொருமன்னரஞ்சிப் பு
39. களிடந்தேடித் திருமலை காட்டில் செவ்வேலெடுத்தோன் கெடிமன்ன
40. ர்க் காலாந்தகன் கிரிதுற்க்கும் வனது ற்க்கும் செலதுற்க்கமுடையான் ஆற்றிற்
41. ப்பாச்சி கடலில் பாச்சிய மதப்புலி பகைமாளி தவாப்ப... 42. மயாய் செகாமல்லாம் புகளச் செங்கோல் நடத்துவோன் செங்காவி
43. க்குடை செங்காவிக்கொடி செங்காவிச் சிலிகையான் அனுமகேதனன்
44. கெருட கேதனன் வியாக்சிரமகேதனன் விற்கேதனன் மீன்கேதனன்
45. குக்குடகேதவன் நிமிலிகேதனன் பூலோகதேவேந்திரன் சக்தி அ
46. ரிச்சந்திரன் அன்னக்கொடி விளங்கிய தீரன் குடைக்கு கர்னன் பொறு
47. மைக்கு தர்மபுத்திரன் மல்லுக்கு வீமசேனன் வில்லுக்கு விசையன்
48. பரிக்கு நகுலன் சாஷ்த்திரத்துக்குச் சகாதேவன் தமிளுக்கு அகஷ்த்தியன் ஆக்
49. கிணைக்கு சுக்கிரீவன் அளகுக்கு வாலசீவகன் திலகநுதல் மடமாதர் ம
50. டாலளுதும் திருப்புயசுமுகன் வீரலெட்சுமி விசையலெட்சுமி
51. சவுபாக்கியலெட்சுமி தான்யலெட்சுமி செளமியாலட்சுமி காருண்ய
52. லெட்சுமி கீர்த்திபலெட்சுமி அஷ்ட்டலெட்சுமி பொருந்திய
53. வீரன் வீரகெம்பீரன் விசயமார்த்தாண்டன் சூறனிச சூறன் துணை
54. ரகன் சிகாமணி சேதுக்கு அரசு நிலையிட்டோன் சிவகெங்கை ஐ
55. ய பரிபாலகரான அசுபதி கெஷபதி தனபதி நரபதி ரவிகுலபதி அன்ன
55. தானகோம வாசுபேயராகிய காசிப் கோத்திரத்தில் ஸ்ரீமது அரசு
56. தானகோம வாசுபேயராகிய காசிப் கோத்திரத்தில் ஸ்ரீமது அரசு
57. நிலையிட்ட விசைய ரெகுனாத பெரிய உடையாத் தேவரவர்கள் பூமி
58. தான சாசனம் பண்ணிக்கொடுத்தபடி சாலியவாகன சகாத்தம்

இரண்டாம் பக்கம்

59. 1721 கலியுகம் 1900 யிதின்மேல் செல்லாநின்ற மங்கள
60. நாம சம்வத்சரத்தில் உத்திராயணத்தில் ஹேமந்தரிதுவில் து:"
61. 14தீ சுக்கிரவாரமும் சதுர்த்தெசியும் உத்திராட நச்செத்திரமும பரிநா
62. ம யோகமும் சகுனிவாகரணமும் யிப்படி கூடிய சுபதினத்தில் பூதா
63. ன சாதனம் பண்ணிக்கொடுத்தபடி பூதான சாதனமாவது சேது மாற்க்
64. கத்தில் வேட்டக்காரன்பட்டியில் சின்ணன மடமும் அக்கிராமு
65. ம் கட்டி திடாகம் பிறதிஷ்ட்டையும் செய்து தண்ணிர்ப்பந்தல் நந்தவ
66. ரனமும் வைய்த்திருக்கிறதுக்கும் சாதனம் செய்து கொடுத்த கிறாமமாவ
67. து பாண்டி தேசத்தில் கேரளசிங்க வளநாட்டுப் பாச்சலில் தேனா
68. த்துப் போக்கில் அமராபதி மாகாணத்தில் புதுவூர் உள்க்கடையில்தாணா
69. வயலுக்கு பெருநாங்கெல்கை கன்றபடி யெல்கையாவது கீள்பாற்கி
70. கல்கை செட்டி கன்மாய்க்கு மேற்கு தென்பாற்க்கெல்கை கலிப்பு
71. லி எல்லைக்கு வடக்கு மேல்பாற்க்கெல்கை புதுவூர் அடையவள
72. ஞசான் காலுக்கும் கங்கா பொய்கைக்கும் கிளக்கு வடபாற்க்கெல்கை உய்ய
73. கொன்டான் வயலுக்கும் தெற்க்கு இன்னாங்கெல்கைக்குள்ப்பட்ட தா
74. ணாவயல் நஞ்சை பிஞ்சை திட்டு திடல் குட்டங்குள நத்தர்

செய்த்தலை மாவ

75. டை மரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு பாசிபடுகை
76. ஆற்றுக்கால் ஊத்துக்கால் நிதி நிசேஷது ஜெயதரு பாஷனக்ஷ 77. ணியாகாம்ய சித்த சாத்தியமென்று சொல்லச் செய்த அஷ்ட்ட போக
78. தேஜ சுவாமி
79. யங்களிம் ம
80. டம் தண்ணீ 81. ர் பந்தல் நந்தவனம் பணிவிடைளுக்கு கிறாமம் ஆக தானா சா
82. சனம் பண்ணிக் கொடுத்ததுனாலே ஆச்சந்திராற்கத் தாயி ஆக சந்திர
83. ரதித்தவரை சந்திராதித் தம் பிரவேசமுள்ளவரைக்கும் புத்திராபவுத்
84. திர பாரம்பரையாக ஆச்சந்திரார்க்கமாக ஆண்டனுபவித்துக் கொள்
85. வாராகவும் யிந்த தற்மத்தை யாராமொருத்தர் பரிபாலனம் பண்ணின பே
86. ற்க்கு காசிலேயும் கெங்கைக் கரையிலேயும் ராமேசுபரந்தனுக்
87. காடியிலேயும் கோடி சிவலிங்கப் பிறதிஷ்ட்டையும் கோடி வி
88. றும்மப் பிரதிஷ்ட்டையும் கோடி விஷட்டுணு பிரதிஷ்டையும் கே
89. ரடி கோதானமும் பூதானம் கன்னிகா தானமும் பண்ணின பல
90. னையடைவாராகவும் யிந்த தற்மத்துக்கு யாதாமொருத்தர் அகிதம்
91. பண்ணின பேர்கள் காசியிலேயும் ராமேசுபரந்தனுக்கோ
92. டியிலேயும் கெங்கைக் கரையிலேயும் கோடி விறுமகத்தியு
93. ம் மாதா பிதாவையும் அனேகங்கோடி காறாம் பசுவை
94. யும் கொன்ற தோஷங்களிப் போகக் கடவராகவும் உ

8. காளத்தி ஏந்தல் செப்பேடு

மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் அவர்கள் கி.பி.1767-ல் திருவாவடுதுறை பண்டாரசன்னதியில் அம்பலவாணசுவாமி பூஜைக்கும் மகேஸ்வர பூஜைக்குமாக சிவகெங்கைச் சீமையில் உள்ள காளத்தி ஏந்தல் என்ற ஊரினை சர்வமான்யமாக வழங்கியதை குறிப்பிடுவது இந்த செப்பேடு)

1. சுவத்தி ஸ்ரீமன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தள
2. விபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராயி
3. ர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொ
4. டாதான் பாண்டிய மண்டல தாபனாச் சாரியன் சோளமண்
5. டல பிரதிட்ட பாணாசாரியன் தொண்ட மண்டல சண்டப்பி
6. ரசண்டன் ஈளமும் கொங்கும் யாள்ப்பானமும் எம்மண்டலமு
7. மழித்துக் கெசவேட்டை கொண்டருளிய ராசாதி ராசன்
8. ராச பரமேசுரன் ராசமார்த்தாண்டன் ராசகுல திலகன் ராய
9. ராகுத்த மிண்டன் மன்னரில் மன்னன் மருவலர் கேசரி
10. துட்டரில் துட்டன் துட்டநிட்டுரன் சிட்ட பரிபாலனன்
11. ஒட்டியர் மோகந்தவிழ்த்தான் துலுக்கர் தள 12. டனன் வலியச் சருவி வலியக் கால் நீட்டி தாலிக்கு
13. வேலி இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் வைகை வளநாடன் ஆ
14. ற்றுப் பாய்ச்சி கடலிற்பாய்ச்சி சேதுநகர் காவலன் சேதுமூ
15. லதுரந்தரன் இராமநாதசுவாமி காரிய துரந்தரன் சிவ
16. பூசா துரந்தரன் பரராசசிங்கம் பரராச கேசரி பட்டமா
17. னங்காத்தான் பரதேசிகாவலன் சொரிமுத்து வன்னிய
18. ன் கோடி சூரியப் பிரகாசனி தொண்டியந்துறைக் காவல
19. ன் இந்துகுல சர்ப்பகெருடன் இவளி பாவடி மிதித்தேறு
20. வார்கண்டன் நவகோடி நாராயணன் பஞ்சவர்ண
21. ப்பாவாடையுடையோன் துட்ட நிக்கிரக சிட்ட பரிபா
22.லனன் அஷ்டலெட்சுமி வாகன நித்திய கலியாணம் ம
23. னுகுல வங்கிசன் சாமித் துரோகியின் மிண்டன் கட்டா
24. ரி சாளுவன் அடைக்கலங்காத்தான் தாலிக்கு வேலி ரண
25. கேசரி ரணகிரீடி சங்கீத சாயுச்சிய வித்யா வினோதன்
26. செங்காலிக்குடையான் சேமத்தலை விருது விளங்
27. கு மிருதாளினான் நரலோக கண்டன் பொறுமைக்குத்த
28. ன்மர் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீமன்
29. பரிக்கு நகுலன் சாத்திரத்துக்கு சகாதேவன்
30. கொடைக்கு கர்ணன் அறிவுக்கு அகத்தியன்
31. தனத்துக்கு குபேரன் அனுமக்கொடி கெருடக் கொ
32. டி புலிக்கொடி யாளிக்கொடி சிங்கக் கொடி மகரக் கொடி
33. மதப்புலி காரியங்காத்தான் திருச்சிங்கா சனத்திலே
34. திருமகள் தலைபோற்றி ராச்சிய பரிபாலனம் பண்ணி
35. அருளா நின்ற சாலிவாகன சகாத்தம் 1689க்கு இதன்
36. மேல் செல்லாநின்ற சருவத்தி உளு வைகாசி ஸ்ரீ
37. 16 தீ சுக்குறவாரமும் சதுர்தசியும் அனுஷநட்செத்திரமு
38. சித்துக்கலதானமும் பெற்ற சுபதினத்தில் ஸ்ரீமது அரசுநி
39. லையிட்ட விசைய ரகுநாத சசிவர்ண பெரிய உடையாத்
40. தேவரவர்கள் புத்திரன் முத்து வடுகநாதபெரியஉ
41. டையாத் தேவரவர்கள், திருவாடுதுறை பண்டாரச்
42. சன்னதியில் அம்பலவாணசுவாமி பூசைக்கும் மகே
43. சுர பூசைக்கும் தருமசாதனப் பட்டயமும் குடுத்தபடி
44. பட்டயமாவது கிராமம் காளத்தியேந்தல் துவாபத்திக்
45. கு வடக்கு ஆலன்வயல் ஆய்குளத்து எல்கைக்கும்
46. தெற்கு ஆலன்வயல் நெடுங்கரைக்கு மேற்கு வண்
47. வடவாசிக்கும் கிளக்கு யிந்தப் பெருநாங்குயெல்கைக்கு
48. உள்பட்ட நிலம் நஞ்சை புஞ்சை மாவடை மரவடை
49. திட்டு திடல் நிதி நிச்சேபம் உள்ளிட்ட கிராமத்தில் வரி
50. யிறை உள்ளிட்ட பாளியமும் சறுவமானியமாக ச
51. ந்திராத்தித்த உள்ளவரைக்கும் பரம்பரையாகக்
52. கொண்டு தருமபரிபாலனம் பண்ணிக்கொண்டி 53. கொண்டு அரண்மனைக்குக் கட்டுக்குத்தகையாக ளு 1க்கு கலிப்பணம் 50
54. பொறுப்பு பணம் கொடுத்து சறுவமானியமாகக் கையாடிக்
55. கொண்டு தரும பரிபாலனம் பண்ணிக் கொண்டி
56. ருப்பார்களாகவும் யிந்த தருமத்தை யாதாமொருவன்
57. வர் பரிபாலனம் பண்ணின பேர்காசியிலேயும்
58. சேதுவிலேயும் ஆயிரம் சிவலிங்கப் பிரதிட்டை
59. யும் ஆயிரம் பிரம்ம பிரதிட்டையும் ஆயிரம் கன்னிகா தா
60. னம் கோதான புண்ணியமு பெறுவார்களாக
61. வும் யிந்த தருமத்துக்கு அயிதம் பண்ணின பேர்
62. காசியிலேயும் சேதுவிலேயும் ஆயிரம் காரான் பசு
63. மாதா குருயிவர்களை வதை பண்ணின தோசத்தி
64. லே போவாங்களாகவும்.

9. ஆச்சாங்குடி செப்பேடு

கி.பி.1742ல் மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் பெயரால் பொறிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டயமும் அரசுநிலையிட்ட சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் அவர்களால் வழங்கப்பட்டு இருத்தல் வேண்டும். ஏனெனில் சிவகங்கைச் சீமை தன்னரசின் முதல் மன்னரான இவர் கி.பி.1728 முதல் கி.பி.1749 வரை அரசு கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளார்.

இந்தப் பட்டயம், இராமேசுவரம் திருக்கோயில் இராமநாத சுவாமிக்கு நித்ய பூஜை செய்யும் பணியில் இருந்த பிரபாகர குருக்கள் என்பவருக்கு சிவகங்கைச் சீமையில் உள்ள ஆச்சாங்குடி என்ற கிராமத்தை தானசாசனம் பண்ணிக் கொடுத்ததாக தெரிவிக்கும் ஆவணம் இது.

1. உ ஸ்ரீமூன் மகா மண்டலேசுரன் அரியிர தள விபாட
2. ன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் கண்டனாடு கொண்டு கொ
3. ண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தாபனாசாரியன் சோ
4. ழ மண்டலப் பிறத்திட்டனாசாரியன் தொண்ட மண்டலச்ச
5. ண்டப் பிறசண்டன் பூறுவ தெக்ஷண பச்சிம உத்திர சமுத்தி
6. ர ஈளமுங் கொங்கும் யாள்ப்பாணம் எம்மண்டலமு
7. மளித்துக் கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராச க்ஷ
8. ன் இராசபரமேசுரன் இராசமாத்தாண்டன் இராசகெம்
9. பிரனான சொரிமுத்து வன்னியன் வன்னியராட்டந் தவந்தா
10. ன் பஞ்ச வற்னன் ராவுத்தர் கண்டன் விருது அந்தம்பிற கண்ட
11. ன் சாடிக்காறர் கண்டன் சாமித்துரோகியன் மிண்டன் துரகரே
12. வந்தன் துங்க ராவுத்தன் தேவை நகராதிபன் சேது மூலார
13. ட்சா துரந்தரன் இராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூ
14. சை குருபூசை மறவாத வங்கி மேற்படி நராதிபதி அடைக்கலங் காத்த 15. வன் விரையாத கண்டனில் விளங்கிய தீரன் எதிரிட்ட மரு
16. வலர்கள் சிரமுருள வெட்டி நிலையிட்ட தீரன் செங்காவி குடையா
17. ன் பரராசகேசரி இரவி குல சேகரன் புவநேக வீரன் அரச ராவண ரா
18. மன் அடியார் வேளைக்காறன் பரதள விபாடன் உரிகோல் சுரதா
19. ணன் கொட்டமடக்கி வய்யாளினாநாயணன் வீர வெண்பாமா
20. லை உபைய சரமாலை உல்லாச நளினக்காறன் இளஞ்சிங்கம் தள
21. ஞ்சிங்கம் மதுரைராயன் துரைகள் சிகாமணி ஆத்துபாச்சி கட
22. லில்ப் பாச்சி மதப்புலி சினப்புலி தாலிக்குவேலி செம்பி வ
23. ள நாடன் கெங்கையதிபன் தொண்டியந் துறை காவலன்
24. அனுமகேதநன் கருட கேதனன் வியக்கிற கேதனன் சிங்க கே
25. தனன் மீனகேதனன் காவாகேதனன் நெமிலி கேதன கருட
26. கேதனன் சத்திய அரிச்சந்திரன் சேமத்தலை விளங்குமிகு தாளினா
27. ன் அன்னகொடி விளங்கிய தீரன் செய்யதுங்க ராயர் விருபா
28. ட்சிராயர் கிஷ்டிணராயர் வங்கிசாதிபனான பிறதிவிராச்
29. சியம் பண்ணிச் செல்லா நின்ற சாலிவாகன சகாத்தம் 1616
30. 13 உ இதன் மேலது மேதி ளூ காற்த்திகை மீ 27 உ சுக்குறவார
31. மும் அம்மாவாசையும் சேட்டா நட்செத்திரமும் சூரிய கிரண புண்
32. ணிய காலத்தில் சுபயோக சுபகரணங்களும் பெற்ற சுபதின
33. த்தில் குலோத்துங்க சோழப் புனப்பிரளைய நாட்டிலிருக்கும்ெ
34. சயதுங்க வங்சாதிபனான குளந்தை நகராதிபதியான வடகரைப் புலி
35. அரசு நிலையிட்ட விசைய ரெகுனாத சசிவர்ண பெரி உடையாத் தேவ
36. ரவர்கள் புத்திரன் அரசு நிலையிட்ட முத்து வடுகனாத சசிவற்ண பெரி உ
37. டையாத் தேவரவர்கள் ராமீசுரம் ராமனாதசுவாமி பூசை
38. பண்ணுகிற பிரவாகர குருக்களுக்குத் தாறாபூறுவமாகக் குடுத்த ஆ
39. ச்சாங்குடி இந்த யேந்தலுக்கு பெருனாங்கெல்லை கூறுவ
40. து கீள்பாற் கெல்லை மறுச்சுகூட்டி கண்மாய்க் கரைக்கு மேற்கு
41. தென்பாற் கெல்லை வளந்தமுடையார் தற்மத்துக்கு வடக்கு மே
42. ல் பாற்கெல்லை சரவணப் பொய்கைக்கு கிளக்கு வடபாற்
43. கெல்லை மாலாண்டான் கண்மாய்க் கரைக்கு தெற்கு இன்
44. னான்கெல்கைக்கு உள்பட்ட நஞ்சை புஞ்சை மாவடை மர
45. வடை திட்டு திடல் சகலமும் சறுவ மானியமாக தானாதி
46. பூறுவமாகக் கட்டளையிட்டோம் இந்தப்படிக்கு சந்திராதித்தியவரை
47. சந்திரப் பிரவேசம் உள்ளமட்டும் ஆண்டனுபவித்துக் கொள்
48. வராகவும் இந்த தற்மத்தை பரிபாலனம் பண்ணின பேர்கள் காசி
49. யிலேயும் சேதுவிலேயும் கோடி சிவலிங்கப் பிறதிட்டையும்
50. கோடி பிறம்மப் பிறதிட்டையும் பண்ணின பயத்தை அடைவரா
51. கவும் இந்த தர்மத்துக்கு துரோகம் பண்ணின பேர்கள் காசியி
52. லேயும் சேதுவிலேயும் கோடி பிறுமகத்தி கோடி கோக
53. த்தியும் பண்ணின தோசத்திலே போவராகவும்.

இந்த அறக்கொடைகளை ஒருமுறை முழுமையாகப் படித்து முடித்த பிறகு, இந்த அறக்கொடைகளை வழங்கிய சிறந்த பண்பாளரான பரோபகாரியை, மன்னரை கும்பெனியார் நாடு கடத்தி தண்டனை அளித்துள்ளதை அறியும் பொழுது நெஞ்சத்தில் வேதனைதான் விஞ்சுகிறது.

ஆனால், கும்பெனியாரது கணிப்பு "வேங்கன் பெரிய உடையாத் தேவர் பெரியமருது சேர்வைகாரரது மகளை மறுமணம் செய்து கொண்டதன் மூலம் பெருமை மிகுந்த நாலுகோட்டை குடும்பத்திற்கும் சமய நீதிகளுக்கும் இழிவினை ஏற்படுத்தி தமது நலன்களை பிரதானி மருது சேர்வைக்காரர்களது சுயநலங்களுடன் இணைத்துக் கொண்டவர்" என்பதாகும். நாடு கடத்தல் தண்டனை பெற்று எழுபத்து இரண்டு பேரும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களது பயணம் பற்றி வேறொரு நூலில்[50] இடம் பெற்றுள்ள பகுதி அதன் பொருத்தம் கருதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பெற்ற நாட்டையும் பெண்டு பிள்ளைகளையும், பேணி வளர்த்த பெற்றோருடன், சுற்றத்தையும், பிரிந்த அவர்களின் கண்ணிர்க் கதையின் சிறுபகுதி அரசு ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. அன்றைய நிலையில் தூத்துக்குடிக்கும் மலேசியா நாட்டிற்கும் இடைப்பட்ட வங்கக் கடலைக் கடப்பதற்கு ஆறுவார காலம் கப்பல் பயணம் செய்ய வேண்டியதிருந்தது. ஆதலால் இந்த எழுபத்து இரண்டு கைதிகள், இருபது பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர் ஆகியோருக்குத் தேவையான குடிநீர் உணவுப் பொருட்கள் ஆகியன கொண்டு சேர்க்கப்பட்டன. பின்னர் அந்த எழுபத்து இரண்டு வீரர்களையும் இருவர் இருவராக இணைத்து கைவிலங்குகள் பூட்டி கப்பலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். 11.2.1801-ம் தேதியன்று கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பயணம் தொடங்கியது.


'உண்ணும் பொழுது மட்டும் இவர்களது கைவிலங்குகள் தளர்த்தப்பட்டன. மற்ற நேரம் முழுவதும் அந்த கைவிலங்குகள் அவர்களுக்கு மிகப்பெரும் இடர்பாடாக இருந்தன. கரை காணாத கடலுக்கு ஊடே பயணம் செய்யும்பொழுது கூட அவர்கள் தப்பித்து தாயகம் திரும்பிவிடக் கூடும் என்ற பயம், பயணம் தொடர்ந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆழமான கடல். அவர்களது கவலைகள் போல பரந்த வானம் முழுவதும் கவிழ்ந்துள்ள மேகத்தின் பயமுறுத்தல், பேரலைகளது ஆவேசம். கப்பலின் பாய்களை அலைக்கழிக்கும் காற்றின் சீற்றம் கப்பலைச் சுக்கு நூறாக சிதறடிக்க முற்படுவது போன்ற பெருமழை. பகல் இரவு வந்து போயிற்று. பயணம் தொடர்ந்தது.

"வழக்கமாக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி, குடிநீர் அனைத்தும் காலியாகி விட்டன. பசி, தாகம், பயணக் களைப்பு, பயணிகள் புழுப் போல் துடித்தனர். என்று முடியும் இந்தப் பயணம்" என்று முடியும் இந்த இன்னலின் தொடர்ச்சி. பயணிகளில் மூவர் கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர். அந்தக் கப்பல் பயணத்தைவிட அவர்களது சாவு கொடுமையாக இருந்தது..."

எண்பது நாட்களுக்குப் பிறகு அவர்களது கப்பல் 25.4.1802 பினாங்கு தீவை அடைந்தது.[51]

மரண தண்டனையை விடப் பன்மடங்கு கொடுமையான தண்டனை இது. வாழ்நாளெல்லாம் தன்னந்தனியாக வாழ்வது. வாழ்ந்த நாட்களை எண்ணி நைந்து நலிந்து வருந்துவது! இந்தக் கொடுமைக்கு ஈடாக வேறு கொடுமை எதுவும் உலகில் இருக்கவே முடியாது! வேறு வழியில்லாமல் வேங்கன் பெரிய உடையாத் தேவரும் அவருடன் பயணத்தில் எஞ்சிய அறுபத்து எட்டு விடுதலை வீரர்களும் 1.5.1802 அந்த தீவிலே கால் எடுத்து வைத்தனர்.[52] பசுமையும் வளமையும் நிறைந்த அந்த தீவிலே கவலையும் வேதனையும் கலந்த இதயத்துடன் தமிழக வீரர்கள் நடமாடி வந்தனர். அவர்களது சஞ்சலம் கலந்த பெருமூச்சு வீசிய காற்றிலே கலந்து விரைந்தது.

"நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதைக் காண்ப தென்றே
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மியழுங்குரல்...
கேட்டிருப்பாய் காற்றே..."

என்று பின்னர் மகாகவி பாரதி பாடியது போன்று, இதயத்தில் நிறைந்த வேதனை, சஞ்சலம், நாட்டைப் பற்றி, வீட்டைப் பற்றிய கவலைகளினால் பீறிட்டுப் பெருக்கோடிய இரத்தக் கண்ணிரில் காட்சியளித்த சுதந்திர மனிதராக, சோகமே வடிவாக அங்கு நடமாடிய நாலரை மாதங்கள் சசிவர்ணப் பெரிய உடையாத் தேவரது வீரசாகசத்தின் விளைவாக உருவாகிய சிவகங்கைத் தன்னரசின் கடைசி மன்னர், சக்கந்தி முத்து விசய ரகுநாத வேங்கன் பெரிய உடையாத் தேவர் 19.9.1802-ம் தேதியன்று அங்கே காலமானார்.

இந்த மன்னரது இறப்பை விட இன்னும் கொடுமையானது அவரது குடும்பத்தினர் - மனைவிகளும், குழந்தைகளும், பணியாட்களுமாக ஐம்பது பேர் வறுமையிலேயே வாடி வதங்கியது. அவரது மனைவி ரெங்காத்தாள் என்பவர் கும்பெனி கலெக்டருக்கு கொடுத்த மனு ஒன்றில்,[53]

"... மருதப்ப சேர்வைக்காரர் சீமை நிர்வாகத்தை நடத்தியபொழுது எங்களது கணவர் பெயரளவில் தான் மன்னராக இருந்தார். மருது சேர்வைக்காரரது அடாவடித்தனம் காரணமாக அவரைத் தண்டித்ததுடன், தவறான தகவலினால், எங்களது கணவரை பென்கோலனுக்கு தளபதி அக்னியூ அனுப்பிவிட்டார். அவர்கள் அங்கிருக்கும்பொழுது. அவர்களுக்கு வழங்கப்பட்ட படித்தொகையில் இருந்து ஒரு பகுதியை அனுப்பி வைத்தார். சக்கந்தி ஜமீன்தாரான எங்கள் கணவரது சகோதரர் மகனும் எங்களுக்கு சிறிது காலம் வரை தான்ய தவசங்களும் கிடைக்குமாறு செய்தார்.


"துரைச்சாமியும், சடைமாயனும் தண்டனையிலிருந்து நாடு திரும்பியவுடன், அவர்களுக்கு அலவன்ஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை. மனவருத்தம் காரணமாக, இறந்துபோன எங்களது கணவருக்குச் செய்ய வேண்டிய கருமங்களை, சிவகங்கை ஜமீன்தார் செய்யவில்லை. அவைகளைச் செய்வதற்கான வசதியும் எங்களிடம் இல்லை.

"சக்கந்தி ஜமீன்தார் எங்களுக்கு உதவுவதை நிறுத்தி விட்டார். எங்களது பராமரிப்பிற்கு அலவன்ஸ் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அல்லது நெருப்பில் பாய்ந்து எங்களது கஷ்ட ஜீவியத்தை முடித்துக்கொள்ள அனுமதிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம்."

இந்த வேண்டுகோளில் நாள் குறிப்பிடவில்லை. ஆதலின் எப்பொழுது இந்த மனு கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம் நெருப்பாகவும் நீராகவும் தானே துணை செய்ய முடியும் ஆதலால்தான் ரெங்கத்தாள் நாச்சியார் அவர்கள் கடைசியாக நெருப்பில் புகுந்து விடும் நாட்டத்தை தெரிவித்து இருக்கிறார்.

கணவனை இழந்து தீப்புகும் பெண்டிர்க்கு, தாமரைப் பொய்கையைப் போன்றது நெருப்பு என 'அரும்பு அற, இதழ் அவிழ்ந்த தாமரை, நன் இரும் பொய்கையும் தீயும் ஒரற்றே." (புறநானூறு பாடல் எண். 246) குறிப்பிடப்பட்டிருப்பதுபோல, நெருப்பில் பாய்ந்து விடுவதற்கு துணிந்துள்ளதை சிவகங்கை நாச்சியார், தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இவர்களது பராமரிப்புத் தொகையாக மாதத்திற்கு எவ்வளவு தேவை என்பதற்காக சிவகங்கை தாசில்தார், அப்பொழுது தயாரித்த ஒரு பட்டியலில் இருந்து சிவகங்கை இறுதி மன்னரது குடும்பத்தினர் மற்றும் பணியாட்கள் பற்றிய விவரம் கிடைத்துள்ளது.[54]

அரச பிராட்டிகள்

முதல் மனைவி
ரெங்காத்தாள் நாச்சியார் 45 வயது
இருளாயி (சுவீகார மகள்) 15 வயது
லெகஷ்மி (சுவீகார மகள்) 12 வயது
இரண்டாவது மனைவி
கருப்பாயி நாச்சியார் 40
உங்காத்தாள் (சுவீகார மகள்) 18

மூன்றாவது மனைவி

ராக்கு நாச்சியார் 50
(வேலு நாச்சியார் மகள்) 25

பெண் பணியாளர் - 2
தண்ணிர் எடுப்பவர்கள் (பெண்) -2
தோட்டி - 1
ஸ்தானாதிபதி (தாங்கிபிள்ளை) - 1
வக்கீல் (முத்துசாமிப் பிள்ளை) -1
கண்காணிப்பாளர் (அப்புராஜா) - 1
ஓவர்சீயர் (மீனாட்சி சுந்தரம்பிள்ளை) -1
வாயில் காப்போர் - 2
சலவைத் தொழிலாளி - 1

இவர்கள் அனைவருக்கும் உடை, உணவு, ஊதியம் என்ற வகையில் மாதச் செலவாக ரூ. 220 1/4 மாதம் என கணக்கிடப்பட்டது. ஆனால் இராமநாதபுரம் கலெக்டர் ரூ.100/- அலவன்ஸ் வழங்கலாம் என பரிந்துரைத்தார்.[55] அதன் பேரில் கும்பெனித் தலைமை அப்பொழுது இருந்த சிவகங்கை ஜமீன்தாரை இந்த அலவன்ஸ் தொகையை வழங்குமாறு கட்டளையிட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜமீன்தார், ஏற்கனவே மருது சேர்வைக்காரர் குடும்பத்திற்கு அலவன்ஸ் வழங்குவதைப் போல கும்பெனியாரே சிவகங்கை மன்னரது விதவைகளுக்கும் அலவன்ஸ் வழங்குதல் வேண்டும் என தெரிவித்து விட்டார்.[56] அடுத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பரிந்துரைக்கான காரணத்தை தெளிவாக விளக்க வேண்டும் என கலெக்டரை கும்பெனி தலைமை கோரியது.

இவ்விதம் கடிதப் போக்குவரத்து நீண்டதே தவிர நலிந்து வந்த மன்னர் குடும்பத்திற்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

இதிகாசம் பெருமைமிக்க புனித இராமேஸ்வரத்தின் அதிபதிகளாக விளங்கிய சேதுபதி மன்னர் கொடி வழியில் இருந்து பிரிந்த சிவகங்கைத் தன்னரசு மன்னர் கிளை தெய்வீக, ஆன்மிக அருஞ்செயல்களுக்கு அறக்கொடைகளை வழங்கி உடலும் உயிருமாக வாழ்ந்த இந்த உத்தமர்கள், உட்பகையினாலம் வெளிப்பகையினாலும் வீழ்த்தப்பட்டு வரலாற்றில் இருந்து மறைந்ததை நினைக்கும் உள்ளங்களில் வேதனைதான் எழுகின்றது.

விரைவாகவும், சீராகவும் சுழலும் காலச் சக்கரத்தை வழிநிறுத்துவதற்கு வரலாற்றுக்கு வலிமை ஏது? மாறாக திருமடங்களிலும், திருக்கோயில்களிலும் அன்ன சத்திரங்களிலும் தொடர்ந்து வரும் அவர்களது கட்டளைகள், நிபந்தனைகள் ஆகியவைகளில் தான் மறைந்து நிற்கும் அவர்களது காலத்தால் அழிக்கவொண்ணாத சுவடுகளைப் பார்க்க முடிகிறது.


  1. Pulick Consultations, Vol. 182 (A) 1793
  2. Rajayyan. Dr. K.-History of Madura (1974) P: 308
  3. Rajayyan. Dr. K. – History of Madura (1974) P: 308
  4. Carnatic Treaty 1787 AD
  5. Military Consultations Vol. 154/16.11.1791. P:5812.
  6. Governor Proclamation dt, 6.7.1801 (Secret Sundries Vol.26)
  7. Military Consultations. Vol. 154. dt. 16.11.1791. P: 5812
  8. Radhakrishna Iyer - General History of Pudukottai State (1931). P:191
  9. Nelson.J.H. - Manual of Madura Country (1868) Part IV. P. 113
  10. Military Country Correspondence - Vol.45 (1794) P: 101-104
  11. கமால் Dr. S.M. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக்:
  12. Political Despatches of England Vol. III (1794) P. 316 18
  13. Military Consultations Vol.185(B) / 29.8.1794. P: 4060
  14. Ford. St. George Diary Consultations. 21.6.1794, P: 2757
  15. Military Country Correspondence Vol. 45/1794. P; 177-178
  16. Raja Ram Rao.T. - Manual of Ramnad Samasthanam (1891)
  17. Ibid
  18. Rajayyan. Dr.K. History of Madura (1974). P: 318.
  19. Ibid - P:325
  20. James Welsh Military Reminiscenes (1868) Vol. I. P. 129-30.
  21. Military Country Correspondence Vol.45/25.10.1794. P. 357-86
  22. கமால். Dr. S.M. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக்: 2
  23. Military Consultations Vol. 189(A)/26.9.1794. P.3910
  24. Military Consultations Vol. 183, P.96-1004.
  25. Military Consultations Vol.105(A) P.2513-14
  26. Military Consultations Vol. 95/9.7.1799. P: 1-104.
  27. Board of Revenue Consultations Vol.229/10,6, 1799, P. 4853 91
  28. Board of Revenue Consultations Vol.2 (1.10, 1799] P:2-3
  29. Francis - Gazetteer of Madurai (1911) P: 186
  30. Secret Sundries - Vol.21 - P: 1080-81.
  31. Ibid - P: 1080 -81
  32. Ibid - P: 1045-48
  33. Secret Sundries - Vol.2:1. P: 1108-1110
  34. Revenue Consultations. Vol.98/9.11.1799. P: 2948-49
  35. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 356.
  36. Ibid - P: 356
  37. கமால்.எஸ்.எம். Dr. மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 40-41
  38. Military Consultations - Vol.290
  39. Selection from the History of Tamil Nadu (1978) P: 228
  40. Selections from the History of Tamil Nadu (1978) P: 228
  41. Papers relating to polegar war (selections)
  42. Ibid.
  43. Military Consultations Vol.285(A) 28.9.1801. P: 5043 44
  44. கமால்.எஸ்.எம். மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 136, 137
  45. Military Consultations Vol. 288(A) 1.10.1801. P: 6864-66
  46. Military Consultations Vol. 289 (21.10.1801) P: 7671-75
  47. Military Consultations Vol. 289 (24.10.1801) P: 7676-78
  48. Military Consultations Vol. 288 (A) (6.10.1801. P: 6886.
  49. சிவகங்கை சமஸ்தானப் பதிவேடுகள்.
  50. கமால் Dr. S.M. மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 180-181
  51. Military Consultations Vol. 304/4.11.1802/P: 7869-70
  52. Military Consultations Vol. 304/4. 11.1802/P: 7869-70
  53. Madura District Records Vol.4681/30. 1.1833. P:32-33
  54. Madura District Records. VoI.4681/30. 1, 1833. P. 32-33
  55. Madura District Records. VoI.8900/7. 2. 1833. P. 47
  56. Welsh.J. Col. - Military Reminiscencs (1881) Vol.IP: 116, 117.