அடிமனம்/லிபிடோ

விக்கிமூலம் இலிருந்து

லிபிடோ


பாலுணர்ச்சியை பிராய்டு லிபிடோ என்று குறிப்பிட்டாரென்று முன்பே அறிவோம். பாலுணர்ச்சி என்ற தொடரை ஆண் பெண் உடலுறவை நாடி ஏற்படுகின்ற தூண்டுதல் என்ற குறுகிய பொருளில் பிராய்டு வழங்கவில்லை. அதற்கு இன்னும் விரிவான பொருளை அவர் கொடுத்தார். அதை உணர்ந்து கொள்ளாமலேயே பலர் அவருடைய கொள்கையை எதிர்த்தனர். லிபிடோ என்பது வெறும் கல்வி உணர்ச்சியல்ல; அது ஒருவன் அல்லது ஒருத்தியின் அன்பு வாழ்க்கையைக் குறிக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். அன்பு வாழ்க்கை என்பதில் உடல் சம்பந்தமான இன்பமும் அடங்கி யிருந்தாலும் அது அந்த இன்பத்தோடு முடிந்து விடுவதல்ல.

இவ்வகையான பரந்த பொருளில்தான் பாலுணர்ச்சியைக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் இப்பாலுணர்ச்சி யிருக்கின்றது என்கிற போதும் இப் பரந்த பொருளை மறந்து விடக்கூடாது.

ஒருத்தி தனது மணவாழ்க்கையிலே அதிகமான அன்பு காண முடியவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையால் அவளுடைய அன்பு வாழ்வு மலர்ச்சியடைந்தது. அவள் ஒருவிதமான கோளாறு மின்றி வாழ்க்கையை நடத்தி வந்தாள். ஆனால் அந்தக் குழந்தை நோய் கண்டு இறந்து விட்டது. அவளுடைய அன்பு வாழ்வு வறண்டுவிட்டது. விரைவிலே அவளிடத்தில் நரம்பு மண்டலக் கோளாறுகள் தோன்றலாயின. 

மேலே கூறிய உதாரணத்திலே கலவி விருப்பம் என்கிற அம்சமே இல்லை. இருந்தாலும் அவளுடைய நோய்க்கு அடிப்படையான காரணம் பாலுணர்ச்சியென்று தான் பிராய்டு கூறுவார். இதிலிருந்து அவர் பாலுணர்ச்சிக்குக் கொடுத்த விரிவான பொருளை நாம் யூகித்துக் கொள்ளலாம்.

குழந்தையிடமும் பாலுணர்ச்சி யுண்டு என்பதையும் இவ்வாறே விரிவான முறையில் பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீட்டிலே கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டு விட்டது. மனைவி கோபித்துக் கொண்டு, சொல்லாமல் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விட்டாள். கணவனும் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்து வர உடனே முயற்சி செய்யவில்லை. அவனும் கொஞ்சம் பிகுவாகவே இருந்தான். வீட்டிலுள்ள வயதான குழந்தைகள் தாயின் பிரிவினால் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்க்கையில் பலவிதமான இன்பங்களைக் காணப் பழகியிருந்தார்கள். வீதி விளையாட்டு, நண்பர்கள் சேர்க்கை என்றிப்படிப் பல வழிகளில் அவர்கள் சமாளித்துக் கொண்டார்கள். ஆனால் நான்கு வயது நிரம்பாத குழந்தைதான் தாயின் பிரிவால் பாதிக்கப் படலாயிற்று. தாய் இயல்பாகவே குழந்தைகளிடம் மிகுந்த அன்புடையவள். அந்த அன்பை இழந்த கடைசிக் குழந்தையின் நடத்தை சிலநாட்களில் மாறத் தொடங்கியது. ஒழுங்காகக் குளிப்பதும், உண்பதும், மற்ற காரியங்களைச் செய்வதுமாக இருந்த அந்தக் குழந்தை பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியது. குளிக்கச் செய்வதும், உண்ணச் செய்வதும் பெரும் பிரச்சினையாக முடிந்தது. ஏன் அப்படிச் செய்கிறதென்று யாருக்குமே புரியவில்லை. உடம்புக்கு சரியில்லையோ என்றுகூடச் சந்தேகித்து மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள். உடம்பிலே எவ்விதத் தொந்தரவும் இருக்கவில்லை. கடைசியில் தாய் பிணக்குத் தீர்ந்து திரும்பிய பிறகே குழந்தையின் பிடிவாதம் மறையலாயிற்று.

குழந்தையிடம் பாலுந்தல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பிராய்டு தமது மனப்பகுப்பியல் என்ற புதிய மனத்தத்துவப் பகுதியில் பாலுந்தலைப் பிரதானமாக வற்புறுத்திக் கூறுவதைப் பலர் ஆட்சேபித்தார்கள் என்பதை முன்பே கண்டோம். அவ்வாறு ஆட்சேபித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் அவரோடு பல காலம் ஒத்துழைத்த ஆட்லரும், யுங்குமாவர். வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் பிரதான சக்தி ‘உயர்வுந்தல்’ என்று ஆட்லர் கூறினார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் உளவியலில் ‘தனி நபர் உளவியல்’ (Individual Psychology) என்ற ஒரு புதிய கிளையைத் தோற்றுவித்தார்.

லிபிடோ என்பது பாலுந்தல் மட்டுமல்ல; அது வாழ்க்கைக்கு வேகங் கொடுக்கும் வேறு சக்திகளையும் தன்னகத்தே கொண்டது என்று யுங் கூறலானார். மேலும் அவர் நனவிலி உளத்திலே ஒருவனுடைய அநுபவங்களும் இச்சைகளும் அழுந்திக் கிடப்பதோடு மனித இனத்தின் அநுபவங்களும் அழுந்திக் கிடக்கின்றன என்று வியாக்கியானம் செய்தார். இவற்றைப்பற்றி முன்பே குறிப்பிட்டேன். ஒருவன் காணும் கனவுகளை ஆராயும் போது அவனுடைய வாழ்க்கை அநுபவங்களையும் இச்சைகளையுமே அவற்றில் மறைந்துகிடக்கக் காணமுயல்வது சரியல்ல என்பது அவருடைய கருத்து. கனவுகள் மனித இனத்தின் வாழ்க்கை அநுபவங்களையும் மறைமுகமாகக் காண்பிக்கும் என்று அவர் சொன்னார். நாடோடிக் கதைகளும், புராணக் கட்டுக்கதைகளும் இந்த மனித இன நனவிலி உளத்தின் தோற்றமே என்பது அவர் கருத்து. இவ்வாறு அவர் பிராய்டுடன் மாறுபட்டு ‘பகு முறை உளவியல்’ (Analytic Psychology) என்ற மற்றொரு உளவியற் கிளையைத் தோற்றுவித்தார்.

இவ்வாறு பலர் பிராய்டுடன் மாறுபட்டாலும் இவர்களுக்குள் அடிப்படையான ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நனவிலி உளம் என்று மனத்தில் ஒரு பகுதி யுண்டென்பதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை. பிராய்டு கண்டு வெளியிட்ட இந்தக் கருத்து உளவியலில் இன்று முக்கியமான இடம் பெற்றுவிட்டது. பாலுந்தல் என்னும் சக்தியானது வாழ்க்கையின் போக்கை நிறுவுவதில் பெரியதோர் பங்கு கொள்ளுகின்றது என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள்; அதுவே தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்பதை மறுத்தாலும் அதை அறவே ஒதுக்கிவிட யாரும் முற்படவில்லை. இன்றும் இது உளவியலில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.

பிராய்டு வகுத்த உளப்பகுப்பியலானது உளவியலில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு இன்று வெவ்வேறு துறைகளில் பெரிதும் பேசப்படுகிறது. இலக்கியம், கலைகள், சமூகம் முதலான துறைகளிலும் அது நுழைந்திருப்பதைக் காணலாம். நனவிலி மனக்கோளாறுகளை அடிப்படையாகக் கொண்டே புதியவகையான இலக்கியமும் கலையும் வளரத் தொடங்கியுள்ளன. குழந்தை வளர்ப்பு, மனநோய் மருத்துவம் முதலிய துறைகளில் இதன் முக்கியத்தை யாரும் இன்று மறுப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அடிமனம்/லிபிடோ&oldid=1004446" இலிருந்து மீள்விக்கப்பட்டது