கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/வெள்ளிக்கிழமை

விக்கிமூலம் இலிருந்து

8. வெள்ளிக்கிழமை
—மு. கருணாநிதி—

பெண்களுக்கு மங்கல அணியும், மஞ்சள் குங்குமமும் எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது வெள்ளிக்கிழமை!

வைதிகப் பெருமகனார் சிவநேசனின் திருமகள் சிந்தாமணி. அவளைப் பெண் பார்க்கப் பெங்களுரிலிருந்து அழகப்பன் என்னும் நிதிமிகு செல்வப் பிள்ளை வருகிறான்.

இச்செய்தி கேட்டு, சிந்தாமணியின் மாமன், மகன் ராமகிருட்டிணன் வெகுண்டெழுகிறான். ராமகிருட்டிணனுக்கு ‘டைகர்’ என்று ஒரு பட்டப்பெயர். அவன், பண்பியல்பாலும் புலிதான்!

ஒருநாள், சிந்தாமணி நீராடித் திரும்ப முனையும் நேரத்தில் டைகர் குறிபார்த்து வீசிய கல் தப்பாமல் தவறாமல் சிந்தாமணியின் தோள் பட்டையில் விழ அவ்வதிர்ச்சியின் விளைவாக, அவள் குளத்தில் வழுக்கி விழுகிறாள். தந்தை சிவநேசரும் தாய் சிவகாமியும் சிந்தாமணியை டாக்டர் ஆனந்தியிடம் அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

பால கங்காதரத் தேவர் என்றொரு பணக்காரப் போக்கிரி. அவன் வலையில் மோசம் போனவள் இந்த ஆனந்தி. ஆனந்தியின் கற்பு சூறையாடப்பட்ட மர்மம் டைகருக்குத் தெரியும்.

இதற்கிடையில், மைனர் அழகப்பன் தன் உற்ற தோழனான நயினாவுடன் பெண்பார்க்க வருகிறான். மணப்பெண் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார்கள். சென்ற விடத்தில், நச்சுப்போன்ற தகவல் கிடைக்கிறது. சிந்தாமணி ஈன்றெடுத்த களைப்புடன் இருப்பதாக நர்ஸ் மூலம் செய்தி கிடைக்கிறது. அழகப்பன் மருள்கிறான்.

இதன் காரணமாகப் புயல் மூளுவது இயல்பே அல்லவா?

சூழ்ச்சி, வளை பின்னுகிறது.

சூழ்ச்சிக்கு வடிவமான டைகர். அழகப்பனைக் கோழையாக்கிக் குற்றவாளியாக்கிவிட்ட பெருமையுடன், டைகர் முன் வந்து சிந்தாமணியை மணப்பதாக உறுதி சொல்கிறான்.

இப்பொழுது, டாக்டர் ஆனந்தியை மணக்கக் கனவு காணும் உத்தியோகம் அழகப்பனுக்கு வாய்க்கிறது. ஆனால், பாவம், தன் தோழன் நயினாவும் தன்னைப் போலவே கனவு காணும் அந்தரங்கத்தை அறியான்! 

ஆனந்திக்குக் கற்புப் பங்கம் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

சிந்தாமணியை இன்பம் துய்க்கத் தொடர்கிறது டைகரின் மோகக் கிறக்கம். இரத்தம், துப்பாக்கி, மாறுவேடம், நாத்திகப் பிரசாரம் போன்ற பஞ்சமா பாதகங்களுக்குப் பஞ்சமில்லை!

சிந்தாமணியோ, தன்மீது சார்ந்த பழியென்னும் கறையினைத் துடைக்கக் கங்கணம் பூண்டு துயரக் கரைகள் பலவற்றை மோதிச் சாடுகிறாள்.

முடிவில், அபலை சிந்தாமணியின் சோக முடிவும் நிகழ்கிறது. புனிதம் மண்டிய அதே வெள்ளிக்கிழமையிலே!

நாவுக்கரசர் பாடுகின்றார், ‘நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதீர்’ என்று. இப்பாடலில் வேண்டுதல் பண்பைக் காட்டிலும், ஆணையின் குரலே அடிநாதம் பரப்புகிறது. அன்றைக்குத் தாம் கண்ட வாழ்வின் நடைமுறைச் சோதனைகள் அனைத்தையும் சாதனையாக்கி, அதன் விளைபயனாகக் கிடைத்த பக்குவத்தின் துணை கொண்டு புறப்பட்ட ஆணையை நாற்றிசை நெடுகிலும் ஒலிபரப்புகின்றார். ஆணையில் நல்லெண்ணம் இருக்கிறது; அன்பு உருக்காட்டுகிறது; உலகம் வாழ வழியும் கிடைக்கிறது. அதனால்தான் நாம் இப்பாட்டைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இன்றளவில், இது பயனுள்ள பாடல் வரியேயல்லவா?

சரி. 

இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கையோடு பொருந்தியதே இலக்கியம்; வாழ்க்கையோடு பொருத்தப் பட்டதும் இலக்கியம். பொருந்தியும் பொருத்தப்பட்டும் உருவாகின்ற-உருவாக்கப்படுகின்ற - உருவாகிக்கொள்ளுகின்ற ஒரு குறிக்கோள், குணம், பண்பு ஆகியவற்றின் முதிர்ச்சியை, சிந்தனை வடிவு கொண்ட எழுத்துக்களிலே நாம் காணும் நிலையில் இலக்கியம் பிறக்கிறது. இலக்கியத்தின் ஊனும் உயிருமான சதைப் பிண்டங்கள் உயிர் கொண்டு எழுகின்றார்கள்; உலகத்தைப் புத்தம் புதிய உணர்வுடனும் அனுபவத்துடனும் தரிசிக்கிறார்கள். உலகம் அவர்களை வியப்பு விரிய நோக்குகிறது; நோக்கியதுடன் மட்டும் நின்று விடுகிறதா? அம்மனிதர்ளை எடை போடவும் செய்கிறது. உடற்பருமனுக்கு எடை சொல்ல இயந்திரம் இருக்கிறது. மனித மனங்களை எடை போட்டுச் சொல்ல இயந்திரம் ஏது? ஏன் இல்லை? உலகமே ஓர் இயந்திரம், இல்லையா? இறைமை ஆற்றலுக்கு எடை போடத் தெரியாதா?

போகட்டும்.

வெள்ளிக்கிழமையைப்பற்றி உங்கள் கருத்து யாது?

‘புனிதமான நாள்!’

‘புண்ணியம் நிறைந்த தினம்!’

‘மங்கலமான நாள்!’

‘தெய்வ ஒளி பொருந்தியது!’

மூத்தகுடி நம்முடைய தமிழ்க்குடி. தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு விரிந்தது; சாத்திரம் பார்க்கும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை இன்றியமையாத நாள்தான். அட்டியில்லை. ஏன் தெரியுமா? சிந்தாமணிக்கு இந்த வெள்ளிக்கிழமை என்றால், நிரம்பவும் ஈடுபாடு. காரணம்: வரைந்த கனவுகளுக்கும், வளர்த்த ஆசைகளுக்கும் வடிவு கண்டு, வடிவு கொடுத்து, வடிவு காட்டப்போகும் திருப் பொழுது இது.

ஆமாம்: இந்தச் சிந்தாமணி யார்?

பெண். தமிழ்ச் சாதிப் பட்டியலில் இடம் பெற்ற வாலைக்குமரி.

அவளை இனம் காண விருப்பமா?

பொறுங்கள்.

கனிச்சாறு கோத்த பழமுதிர் சோலை எனலாமா?

வண்டு மொய்த்து ‘டூயட்’ பாடும் பூங்கா என்று புகலலாமா?

குமிழ் பறித்து விளையாடும் அழகி என்று கூறட்டுமா?

சிந்தாமணியின் அழகுக்குப் பதவுரை, பொழிப்புரை எதற்கு? அவள் தமிழ்க்குமரி. போதாதா?

இன்னுமோர் உண்மையையும் கூறவேண்டும். அவள் பகுத்தறிவுக் குமரி.

ஆமாம், பகுத்தறிவு என்றால் என்னவாம்?

தோழிமார் தலைவியைத் துயில் எழுப்ப வருகிறார்கள்; தலைவியோ துயில் காணாமல் புரண்டு கொண்டிருக்கின்றாள். வெள்ளிக்கிழமையின் மகத்துவத்தைப்பற்றி பூகோளம், சரித்திரம், நாடோடிப்பாடல் ஆகியவற்றின் துணையுடன் பொது அறிவுக் கண்கொண்டு அலசித் தீர்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது, ஒருத்தி ஆண்டாள் திருப்பாவையை உரைக்கிறாள். பெரியாழ்வாரின் திருப்புதல்வி ஆண்டாள் ஆழிமழைக்கண்ணனை நோக்கிப் பாடி, பக்தி சேர்த்த பாவனையைப் பாட்டின்மூலம் வெளிப்படுத்திக்கொண்ட கனிச்சாறு இது.

“குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்!”

“ஆண்டாள், இது என்ன விகாரமான பாட்டு? நிறுத்து, நிறுத்து...” என உத்தரவு போடுகிறாள் சிந்தாഥணி.

சபாஷ்!
சிந்தாமணி கெட்டிக்காரி!
***

சிந்தாமணி கெட்டிக்காரியா? யார் சொன்னர்கள்? நான்தான் சொன்னேன். ஏன்? அவள் விகாரமான பாட்டைப் பகுத்து அறிந்த பக்குவத்தைக் கண்டு மகிழ்ந்து கெட்டிக்காரி என்று சொன்னேன்.

ஆனால் நடந்தது என்ன?
நடந்தது ஒன்று.
நினைத்தது ஒன்று.

இந்த ‘ஒன்றும் ஒன்றும்’ ஒட்டுறவு சேர்க்கும் கதை இருக்கட்டும். முதலில் கதையைத் திருவாய் மலர்ந்தருளலாமா?

ஆகா!

சிந்தாமணியின் புகைப்படத்தைக் கண்டதுமே ‘பூந்தோட்டம் கண்ட பொன்வண்டானான்’ அழகப்பன். இவன் பெங்களூர் மாப்பிள்ளை. பெண்பார்க்க வரும் உளவு அறிந்து துடிக்கிறான் ஒருவன். அவனுக்குப் பெயர்: ‘டைகர்’. விலங்கல்ல; அசல் பகுத்தறிவு மனிதனே! டைகருக்கு முறைமைப் பெண் சிந்தாமணி. தான் மணம் நுகர வேண்டிய மலர் மாற்றானுக்கு உடந்தையாவதா என்று கொதிக்கிறான். சதி உருவாகிறது. ‘ஈரப் புடவையில் விளைந்த புதிய அழகுடன்’ குளத்தினின்றும் வெளியேறும் சிந்தாமணி டைகரின் கல்வீச்சுக்கு இலக்காகிறாள். துடிக்கிறாள். மருத்துவமனையில் டாக்டர் ஆனந்தி புகலளிக்கின்றாள். அவளும் தனக்கு அடைக்கலம் நல்க வேண்டுமென மனப்பால் குடிக்கிறான் டைகர். மாற்றான் தோட்டத்து மல்லிகையாகப் போகிற செய்தி அறிந்ததும், சிந்தாமணியின் வாழ்வில் விளையாடுகிறான் டைகர். சிந்தாமணி கள்ள வழியில் கருவுற்று மகவைப் பெற்றிருக்கிறாள் என்னும் பழி ஆனந்தியின் துணையினால் கிளப்பிவிடப் படுகிறது. மாப்பிள்ளை அழகப்பனும் மாப்பிள்ளைத் தோழன் நயினாவும் அதிர்ச்சியடைகிறார்கள். இடைவழியில் டாக்டர் ஆனந்தி, அவர்களது காரில் மோதி விழுகின்றாள். அவள் மீது மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனுக்கும் மையல். அந்தத் தையல்: சாறு சுவைக்கப்பட்ட நீலம். ஆக, விளைவு: மும்முனைப் போராட்டம். உதிரிச் சூழ்ச்சிகள் தலைவிரித்தாடுகின்றன. தான் ஒரு மாசற்ற மணிவிளக்கென உலகுக்கு உணர்த்த வேண்டுமென்று முடிவு செய்கிறாள் சிந்தாமணி. கனவு பலிக்கிறது. வாழ்வின் தொடக்கம் அழகப்பனின் கைத்தலத்தில் இணைய வேண்டிய நேரத்தில், அவன் அவளிடம் ஓடிவந்து மன்னிப்புக்கோரும் பரிபக்குவ நிலையில், ‘விதி’-தவறு, கதை விளையாடுகிறது. உம்மைவினை-அன்று, பகுத்தறிவு ‘சடுகுடு’ ஆடுகிறது!

“இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?” என்று கேட்டாள் சிந்தாமணி அவள் குரல் தழுதழுத்தது.

“நம்புகிறேன் சிந்தாமணி, என்னை மன்னித்துவிடு!” என்று அழுதான் அழகு-அமுகப்பன்.

“அப்படியானால், இப்போதே நமது திருமணம் நடை பெற்றாக வேண்டும்!”-சிந்தாமணி தேம்பியவாறு கூறினாள்.

அழகு தன் மோதிரத்தைக் கழற்றி அவள் கையில் அணிவித்தான். இருவரும் ஒருவரையொருவர் புன்னகை தவழப் பார்த்தனர். .

அழகப்பன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் தடாலெனத் தரையில் சாய்ந்தாள்.

“ஒரு நாள். வெள்ளிக்கிழமை...உங்களுடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்தேன். இன்றுகூட வெள்ளிக்கிழமைதான். அந்த ஆவல் பூர்த்தியாயிற்று!” என்றபடி அவன் முகத்தில் ஒரு முத்தம் இட்டாள் சிந்தாமணி. பிறகு அவள் கண்விழிக்கவில்லை.

நஞ்சை உண்ணக் கொடுத்து விட்டார்கள்!
பாவம் அந்தோ, பரிதாபம்!

சிந்தாமணி, உன்னைக் கெட்டிக்காரி என்று நினைத்தேனே? பகுத்தறியும் பண்புகொண்டவள் என்று எண்ணமிட்டேனே? ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டை முழுமையாகப் படித்து உட்பொருளை மனத்தில் வாங்கிக்கொள்ளாமல், ‘கொங்கை’ என்ற ஒரு சொல்லை வைத்து விகாரமான பாட்டென்று முடிவுகட்டியபோதே நினைத்தேன், நீ அவசரக்காரி என்று. நீ நெஞ்சுரத்தை வளர்த்துக்கொண்டிருந்தால், தொடக்கத்திலேயே நொடிப்பொழுதில் உன் துயர்களையெல்லாம் துடைத் தெறிந்து, ‘தமிழச்சி’யாக ஆகியிருக்கலாமே? பேதை நீ. உன் பேதைமை சூது ஆடிவிட்டது. உன் பெண்மையை பகடைக்காயாக்கிச் சூது ஆடி விட்டார்கள், சூதாடப் பழகியவர்கள்! நடப்பு வாழ்க்கையின் உண்மை நிலையை மெய்ம்மை நிலையை உய்த்துணராமல், நீ ஏமாந்துவிட்டாய் சிந்தாமணி, ஏமாந்துவிட்டாய்!...உன் ஆன்மா சாந்தியடைவதாகுக!...ஆன்மாவாவது, மண்ணாவது!...நீ இயற்கை எய்தியவள் ஆயிற்றே?

வெள்ளிக்கிழமையே!...நீ வீழ்க!
வெள்ளிக்கிழமை!...ஒழிக!
❖❖❖

'வெள்ளிக்ழமை' என்னும் புதினத்தில் நடமாடுகின்ற கதை உறுப்பினர்கள் யார், யார்?

அழகப்பன்: நாயகன்.
சிந்தாமணி: நாயகி.
டைகர்: தியோன்.

டாக்டர் ஆனந்தி, புலிக்கு உடந்தையாகி ஆடும் பதுமை

நயினா: அழகப்பனுக்குத் தோழன். ‘காம்ரேட்’ அல்லன்.

சிவநேசர்: சிந்தாமணியைப் பெற்றவர்— அன்று; தங்கை.

சிவசாமி: தில்லைக் கூத்தாடியின் மனையாட்டியா?

ஊஹீம், சிவநேசர் கோபித்துக் கொள்வார்! 
துணைப் பாத்திரங்கள் :

ஆண்டாள்
கிருஷ்ணபரமாத்மா
காரைக்கால் அம்மை
தசரதன்
சிவபெருமான்
சிறுத்தொண்டர்
இராவணன்
தேவேந்திரன்

அபலை சிங்தாமணி, லேடி டாக்டர் ஆனந்தி போன்றோர் உங்களுக்குப் புதியவர்கள். எனக்கோ, இவர்கள் மிக மிகப் பழையவர்கள். வாழமுடியாதவர்களாக, வழுக்கி விழுந்தவர்களாக, தூக்கு மேடையிலோ, அல்லது பராசக்தியின் திருச்சங்கிதானத்திலேயோ நான் இதற்கு முன்னம் பலமுறை கண்டது உண்டு. டைகர்!-பெயர் தான் புதிது. என்றாலும், பச்சைத் தமிழன், இரத்த வெறியன்! கதையை ஆட்டிப்படைக்கிறான், திரைப் படத்தில் வந்து மறையும் ‘வில்லன்’; ஆனால் ஆண்டவனல்லன்!

வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் இவர்களால் ஏதாவது பயன் இருக்கிறதா? ஊஹூம்...!

காரணம்: இதோ...! எழுதும் உள்ளத்தைச் சொன்னால், எழுதப்படும் கதையைச் சொல்லிவிட முடியும். இது ஒன்றும் கம்பசித்திரம் அன்று; இதை அறிய பஞ்சாங்கம் புரட்டி ஆரூடம் கணிக்கவேண்டிய நிர்ப்பந்தமோ, நியதியோ கிடையாது. இந்தப் பொய்ப் புதினத்தின் மகுடத்தைப் படித்தேன். மணிமகுடம்தான். மெய்யான செய்தி. புத்தகத்தை மூடிவிட்டேன். கதை உருவாயிற்று. எண்ணியது பொய்க்கவில்லை. எண்பத்தைந்து சதவிகித வெற்றி எனக்குக் கிட்டியது. ஏனென்றால், ‘வெள்ளிக்கிழமை’யை அறிமுகம் செய்து வைத்திருக்கும் பேனாவை நான் ஆண்டு பலவாக அறிந்தவன்; அறிந்து வருபவன்.

※※※

வாழ்க்கையை வாழ்க்கைக்காகவும், கலையை கலைக்காகவும், கட்சியை கட்சிக்காகவும், பிரசாரத்தை பிரசாரத்துக்காகவுமே பயன்படுத்தவேண்டும். இது என்னுடைய நினைவு.

தமிழ் இலக்கியச் சந்தையில் ‘வெள்ளிக்கிழமை’க்கு உரிய இடம் யாது? நவீனங்களின் பட்டியலில் இடம் பெறும் இந்நூல் கொண்டிருக்கக் கூடிய தனித்தன்மை, சிறப்பியல்பு, போற்றற்குகந்த பகுதிகள் யாவை? கதை உறுப்பினர்கள் என் இலக்கிய மனத்தில் ஒவ்வொருவராகத் தோன்றி மறையும்போது, அவரவர்களுக்கு நான் கொடுக்கும் மதிப்பீடு எத்தகையது?

கதையை மீண்டும் நினைவு கூர்ந்து நோக்குகிறேன். ஆழமற்ற கருவையும் அர்த்தமிழந்த நிகழ்ச்சிகளையும், ஒருதலைப்பக்கமான பிரசாரப் போக்கினையும் கொண்ட ‘நட்சத்திர மதிப்பு’ வாய்ந்த ‘பெரிய’ தமிழ்த்திரைப் படத்தைப் பார்த்து, உடனடியாக மறந்துவிட்டாம் போலிருக்கிறது.

※※※

அழகப்பன் கதைத்தலைவன். ‘அவன் எதையுமே ஆழ்ந்து சிந்திப்பவன்.’ மெய்யாகவே, அவன் சிந்திக்கத் தெரிந்தவன்தானா? யாரோ கிளப்பிவிட்ட அபவாதத்தை உண்மையென நம்பி, சிந்தாமணியைக் குற்றவாளிக் கூண்டிலே ஏன் நிறுத்தினான்?

‘செப்புச் சிலையே, செந்தமிழே!’ என்றெல்லாம் பாடக்கேட்டு வளர்ந்த பாவை சிந்தாமணி. ஆனால், மகளை ஐயுறுகின்றனர் பெற்றோர். நோய் தீர்க்கும் மருத்துவமனையில், கன்னிப்பெண் சிந்தாமணி தாயாகக் காட்சியளிக்கிறாளென்று அயலவர் சொன்னால், அதைக் கேட்டு நம்பவேண்டுமென்று ‘நூற்றி நாற்பத்து நான்கு’ உத்தரவுக்குக் கீழ்ப்பட்ட அழகப்பன் நம்பட்டும். அதற்காக, சிந்தாமணியின் தங்தை சிவநேசர் அந்த ஏச்சையும் பேச்சையும் நம்பவேண்டுமா? ஆம்; நம்பவேண்டும். இது நாவலாசிரியரின் ஆணை. ஏனென்றால், சிவநேசரை ஆட்டிப் படைக்கின்றார் ஆசிரியர். இல்லையென்றால், சிவபக்தரான சிவநேசர் இவ்வாறு சொற்பொழிவு செய்திருக்கக் கூடுமா?

“நாள், நட்சத்திரம், சாமி, கோயில், ஜெபம், தபம் இப்படி யெல்லாம் நம்பிக் கடைசியில் கெட்டுப்போனேன். நான் நம்பிய நாளோ, நட்சத்திரமோ, கோயிலோ, தெய்வமோ எதுவுமே என்னையும் என் குடும்பத்தையும் கெளரவமாக வாழ விடவில்லை. என் மகள் எப்படி விபசாரியானாள்? எப்படி கள்ள அபின் கடத்தும் கைகாரியானாள்? தெய்வம் ஊமையாகிவிட்டது! நான் உயிரோடிருந்தால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே மனத்தை அலட்டிக் கொண்டிருப்பேன். இந்தக் கேள்விகளிலிருந்து என் உள்ளத்தையும் தெய்வத்தையும் விடுவிப்பதற்காகவே பிணமாகிவிடுகிறேன். சிந்தாமணி மாசற்றவள் என்று எப்போதாவது உண்மையிலேயே நிரூபிக்கப்பட்டால், அவள் அழகான கரங்களால் என் சமாதிக்கு மலர் தூவட்டும். இது ஒரு வெறுங் கனவு என்பது எனக்குத் தெரியும். அவளாவது அழுக்கற்றவள் என்று நிரூபிக்கப் படவாவது! பாவி, பாதகி, என் குடும்பத்தைக் கெடுத்த குடிகேடி!’

தந்தைக்கும் மகளுக்கும் ‘பண்புப் பாலம்’ அமைத்துக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் இக்கோலத்திற்குப் பெயர் என்ன சூட்டலாம்?

❖❖❖

பெண்கள் வெறும் போகப் பொருள்களாகக் கூடாது; புது உலகை உருவாக்கும் சக்தி பெற்றவர்களாகவும் இயங்க வேண்டும்; இலங்க வேண்டும். மேதைகளின் வழி மிதிப்பவர் ஒவ்வொருவரும் காணும் நற்கனவு இது. இந்தக் கனவை ‘வெள்ளிக்கிழமை’ பலிக்கச் செய்ததா? வெள்ளிக்கிழமை என்னும் தலைப்புச் சூட்டப் பெறாமலிருந்திருந்தால், ஒருவேளை அக்கனவு ஓரளவாவது வெற்றி கண்டிருக்கக் கூடும் போலும்!

தண்ணிரில் கலந்த எண்ணெய் போன்று உருவாகியுள்ள நிகழ்ச்சித் துணுக்குகள், இப்புதினத்தின் உறுப்பினர்களிலே ஒருவரையேனும் காப்பாற்ற வலுவின்றி நிற்கின்றன.

அழகப்பனும், சிந்தாமணியும் பாத்திர அமைப்பின் பண்பிழந்த பாத்திரங்களாகவே (Characterless characters) பிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘...தனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வரவேண்டும் என்று சிந்தாமணியால் விடை காண முடியவில்லை. பூர்வ ஜன்ம பூஜாபலன் என்பார்கள் புத்தியைத் திட்ட மறுப்பவர்கள். சிந்தாமணி அந்த வேதாந்தக் கருத்துக்களால் சாந்தியடைய மார்க்கமில்லை!...”

சிந்தாமணிக்காக ‘வக்காலத்து’ வாங்கிக் கொண்டு ‘சொந்தக் குரலில்’ (own voice) பேசுகிறார் ஆசிரியர். அபலை சிந்தாமணியின் கற்பின் மீது கற்பிக்கப்பட்ட மாசைத் துடைக்க ஆசிரியரின் ‘தமிழ்ப் பற்று’ இடங் கொடுக்காமல் நழுவி விடுகிறது!

புதினத்தைப் படைக்கும் ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய அலுவல் என்ன?

அவன் பாத்திரங்களை ஆளக்கூடாது.

‘வெள்ளிக்கிழமை’யில் கதாசிரியர் பாத்திரங்களை மேளதாளத்துடன்... ஆளுகிறார்.

நாவலாசிரியன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு தான் படைக்கும் பாத்திரங்களைப் பயன்படுத்துவானேயாயின், வாழ்க்கையின் விதிமுறையும் நவீனத்தின் விதி வழியும் காடுமாறிப்போய்விடுவது இயல்பு. அப்பால், கதைப்பாத்திரங்களை ‘ஓட்டை உடைசல் பாத்திரக்கடை’யில் தான் ‘பேட்டி’ காணவேண்டும்!

❖❖❖

சமுதாயத்தின் குறைபாடுகளை (social evils) அம்பலப்படுத்தக் கருதும் முயற்சியை யாவரும் பாராட்டுவர். ஆனால், வெறும் நாத்திகப் பிரசங்கத்தைப் பேச்சாளன் பாணியில் நின்று ‘ஒப்பாரி’ வைக்கும்போது, காது புளித்துப் போய்விடுகிறதல்லவா? தெய்வத்தை ‘நைத்தியம்’ செய்ய வேண்டுமென்றால், ‘கடவுள் இல்லாக் கொள்கை’யை (atheism) நிலைநிறுத்த விழைந்தால் ஒரு திராவிடத் தமிழனை உண்டாக்கி, அவனுக்குள்ளே கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, கருத்துரைகளைப் பாய்ச்சி, இலக்கிய உலகத்தின் ஒப்புயர்வற்ற ‘இரண்டாவது இங்கர்சாலாக’ அறிமுகமாயிருக்கக் கூடுமே?...கெடுத்து விட்டார்கள்!

நாடகமுறை அமைப்புகளுடன் (dramatic method) நடமாடுகின்ற டைகர், நயினா, சிந்தாமணி, அழகப்பன், சிவநேசர் போன்றோர் இயல்பு பிறழ்ந்த இயல்புடைய (abnormal characters) உறுப்பினர்கள் போல மயக்கம் தருகின்றனர்; ‘வாழ்க்கை துன்பமயம்’ என்ற புத்தமக் கொள்கைதான் இறுதியில் எஞ்சுகிறது. இவர்கள் மூலமாக, நம் திருநாடு பயனுற, நம் மனம் விரிவுபெற, நம் வாழ்வு வளம் அடைய வழி உண்டா?

மேதை ஆர்னால்டு சொல்லுகிறார்: ‘உயிர் வாழ்வுக்கு வேண்டிய நல்லொழுக்கத்திற்கு மாறாக எழும் எந்த எழுத்தும் இலக்கியமாகாது!’

அறிவுக்குப் பொருத்தமற்ற நிகழ்ச்சிகளை (irrational elements) இந்நவீனத்தில் படிக்கும்போது, ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்!’ என்ற ‘புறம்’தான் நினைவில் தோன்றுகிறது. .

‘வெள்ளிக்கிழமை’ முடிவுகட்டிச் சொல்லும் ‘படிப்பினைத் தீர்ப்பு’ (moral judgement) என்ன?

மறுமொழி: மெளனம்!

மனச்சான்று இழந்த ‘வெள்ளிக்கிழமை’க்கு தமிழ்ப் புதின இலக்கிய வரலாற்றில் கொடுக்கட வேண்டிய ‘இலக்கிய அந்தஸ்து’ யாது? -

மறுமொழி: மெளனம்! 

இவ்விரு ‘மெளனங்க’ளுக்குப் பொருள் கை விரிப்பும் எள்ளிய நகையும்தான்!

❖❖❖

தமிழ் இலக்கியத்தில் ‘புரட்சி’ செய்தவர்கள் ‘விந்தன்’ போன்றோர் ஓரிருவர் இருக்கிறார்கள். அவர்களைப் படிக்க வேண்டும்; படித்து முடித்துச் சிந்திக்க வேண்டும். உண்மையான சமுதாயப் புதினங்கள் எழுதும் ஆற்றல் வளரும் சொந்த விருப்புவெறுப்புக்கள் குடியிருக்கும் மனித மனம், புனிதமான இலக்கிய மனத்திற்குக் கூடுவிட்டுக் கூடுபாயப் பழகிக் கொண்டால்தான்,உண்மையான ஆத்ம ஞானம் பெற வாய்ப்புக் கிட்டும். பார்த்தவர்களையும் பழகியவர்களையும் படித்தவர்களையும் சிறு பொழுதேனும் பிரிந்தால், தமிழ் எழுத்துக்களில் வாழக் கனவு காணலாம். அப்போதுதான் தமிழ்ப் புதின இலக்கியத்தின் நிறமும் கறுப்பு அன்று என்ற ‘உண்மை புலனாகும்!