உத்தரகாண்டம்/20

விக்கிமூலம் இலிருந்து

20

மார்கழிக்குளிர் என்பார்கள். எதிரே அரைகுறைக் கட்டிடம் ஒன்றில் ஐயப்ப பூசைக்கு பெரிய பந்தல், தீபாலங்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் தெருவில், பள்ளிக்கூட முக்கிலிருந்து வாழைத் தண்டு விளக்குகள்; முருகன், கணபதியின் தீபக்கோலங்கள் விளங்கும் தோரண வாயில்கள். கருப்பு வேட்டிகள், அச்சிட்ட தாள்கள், ரசீது புத்தகங்கள், உண்டியல்கள், சந்தன குங்குமக் கீற்றுகள், உருத்திராட்சமாலைகளின் பவனிகள் சூழலையே எப்போதும் இல்லாத வகையில் இந்த ஒதுக்குப் புறத்தைக் கலகலக்கச் செய்கிறது.

ஒலி பெருக்கியை இவர்கள் வீட்டுப் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார்கள். தேனினும் இனிய குரலில் வரும் பக்திப் பாடலும் இவளுக்கு நாராசமாக ஒலிக்கிறது. காலையில் வாழை மரங்களைக் கொண்டு வந்து வெட்டி, ‘ஐயப்பன் எழுந்தருளத்திருக்கோயில்’ அமைத்த பிறகு, அந்தக் கழிவுகளை இவர்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் குவியலாகப் போடுகிறார்கள். அங்கேயே எங்கோ அடுப்பு மூட்டியோ காஸ் கொண்டு வந்தோ காலைப் பலகாரம் செய்து சாப்பிட்டபின் அந்த எச்சில் இலைகளும் கழித்த வாழைக் குவியல்களில் விழுகின்றன. பின் பக்கமும், கிழக்கேயும் உருவாகும் குடியிருப்புகளுக்குச் செல்லும் வழித்தடம் அது. இன்னமும் அதிகார பூர்வமான வழித்தடமாகவில்லை.

எப்போதும் போல் ரங்கன், பின்புறம் மாட்டுக்கு வைக்கோல் உதறிப் போட்டுவிட்டுப் பின் கதவைப் பூட்டிக் கொண்டு சாவியை மாட்டுகிறான். பிறகு போகிறான். இப்போதெல்லாம் அவன் எதுவும் பேசுவதில்லை.

பாட்டொலியும் பஜனையின் சரணக் கூவலும் மண்டை கனக்கச் செய்கின்றன. அய்யா காலத்திலும் இது போன்ற பூசை உண்டு. மணிக் கூண்டுக்குப் பக்கத்தில் ஐயப்ப பக்த சமாஜம் கட்டுவதற்காக ஓமியோபதி டாக்டர், சிவராமன் அன்பளிப்பு வாங்கிச் சென்றதும் கூட நினைவிருக்கிறது. அவரே இங்கும்கூட வெள்ளிக்கிழமை பஜனைக்கு வருவார்... இப்போது அவர் குடும்பமே இங்கு இல்லை... காவி, கருப்பு, பக்தி, வாழ்வு, எல்லாமே, இலக்கு எது என்று தெரியாமலாகிவிட்டன...

ராதாம்மா சீக்காகப்படுத்திருந்த நாட்களில், அம்மாவும் அய்யாவும் இங்கே சேர்ந்தாற்போல் ஒரு மாதம் கூடத் தங்கியதில்லை. மாற்றி மாற்றி இரத்தம் கொடுக்கும் நோயாக இருந்தது. அவர்கள் ஒரு சமயம் அவசரமாக விமானத்தில் பம்பாய் கிளம்பும் நேரத்தில், பராங்குசம் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். முடியை முழுசாக வெட்டிக் கொண்டு காதில் ஒரு சிறு சிவப்பு நட்சத்திரம் மின்ன, மெலிதான ஒரு நூல் சேலை உடுத்திக் கொண்டிருந்தாள்... நெற்றியில் சிறு குங்குமப் பொட்டு. “என்னைத் தெரிகிறதா மாமா?...’ என்று இருவர் கால்களையும் தொட்டுக் கும்பிட்டாள்.

“ஏய், அநு இல்ல? எப்ப வந்தே?” நீ முடிய வெட்டிட்டாலும் சாடை மாறிடுமா?... கிரண் எப்படி இருக்கிறான்? குழந்தை... நிசா இல்ல? குழந்தையக் கொண்டு வரலியா?”

“ராதா பத்திக் கேள்விப்பட்டேன், கஷ்டமா இருக்கு மாமா, கிரன் பார்டர்ல இருக்கார். எனக்கு போரடிச்சிப் போச்சு. குழந்தையோட தான் வந்திருக்கேன். உங்க குருகுலத்துல எனக்கு இப்ப அவசியமா வேலை வேணும். தரீங்களா?...

“என்னம்மா இப்படிக் கேட்டுட்டு? உனக்கில்லாத வேலையா?”

“அப்பா எப்படி இருக்காங்க?...”

“இருக்காங்க. சின்னண்ணா, அக்கா யாரோடும் ஒத்து வரல. அம்மா எல்லாத்துக்கும் ஈடு குடுத்திட்டிருந்தா. இவரால யாரோடும் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது... சரி, மாமா, குழந்தைய அங்கேயே ஹோம்ல விட்டுட்டு வந்தேன்...”

“நீயும் அங்கேயே தங்கிக்கிறியா?...”

“ஆமாம். எனக்கு அந்தச் சூழல் புடிச்சிருக்கு...”

பேசிக் கொண்டே அவர்கள் காரிலேயே ஏறிக் கொண்டு போனாள்.

அந்தத் தடவை மகளை வாரிக் கொடுத்து விட்டுத்தான் அவர்கள் வந்தார்கள். சோலையில் பாய்ந்த மின்னல், இளநீர் குலுங்கும் மரத்தைக் கருக்கிவிட்டாற் போல் துயரம் படிந்தகாலம். துயரம் விசாரிக்க வருபவர்கள் மாற்றிமாற்றி சோகக் குழியைக் கிளர்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசியல் சூழலும் ஏதோ கிரகணம் பிடித்தாற்போலிருந்தது. இந்திரா காந்தி ஆண்ட நாட்களில் ஏற்பட்ட நெருக்கடிகளில் அவர்கள் மிகவும் மனம் நொந்து சோர்ந்தனர்.

அன்று காலை... ஆனி, ஆடி என்று நினைவு. விடியும் நேரத்தில் முன் வாசல் தெளித்துப் பெருக்கிக் கொண்டிருந்தாள். சோகம் சுமக்கும் வீடாதலால் கோலம் போடுவ தில்லை. அப்போது, மொட்டைத் தலையில் சிறுகுடுமியும், காவித்துணி ஜிப்பாவும் வேட்டியும், தோளில் மாட்டிய பையுமாக ஒருவர் வந்து நின்றார்.

“மாதாஜி, பாக்கி பாய் இருக்கிறாரா?” என்று கேட்டார். அவர் தமிழ் இந்திக்காரர் பேசுவதுபோல் இருந்தது.

அவள் தலை அசைத்தாள். ஆனால் அவர் இவள் எதுவும் பேசுவாள் என்பதை எதிர்பாராதவர் போல், விடுவிடென்று உள்ளே நுழைந்து விட்டார். அவள் கொஞ்சம் வெலவெலத்துப் போனாள். நாட்டு நடப்பு, அப்போதைய அரசியல் பின்னணி எதிலும் இவள் சிந்தை செல்லவில்லை. வீட்டின் ஒளியே மாய்ந்திருந்தது. வரமிருந்து பெற்ற மகள் கண்களை மூடி வீட்டை மீளாத் துயிலில் ஆழ்த்திவிட்டதாகவே இப்போதும் தோன்றுகிறது.

இந்த சாமியாரின் பின் அவளும் உள்ளே விரைந்தேகினாள். அம்மா அப்போது தான் எழுந்து பின் பக்கம் கிணற்றடியில் பல்துலக்கிவிட்டு அடுப்படிக்கு வந்து கொண்டிருந்தார். அய்யாவுக்குக் கொத்துமல்லி-- சுக்குக் காபிக்கு நீர் வைக்கையில் இவள் சேதியைச் சொல்ல சமையல் கட்டின் பின் புறமாக வந்தாள். ‘பால் கறந்திட்டு வரியா தாயம்மா?’

இவள் எதுவும் பேசாமல் கொட்டிலுக்குப் போனாள். கைகழுவிவிட்டு, மடிகழுவ நீரும், செம்புமாகப் பால் கறக்கப் போனாள். பாலைக் கறந்து கொண்டு வருகையில், அந்தச் சாமியார், கிணற்றடியில் நீரிழுத்து, பல்பொடியில் பல்துலக்குவதைப் பார்த்தாள். இப்போது மாடுகள் நின்ற அந்தப் பெரிய கொட்டில் இல்லை. கிணற்று முற்றத்தில் முன்பிருந்த துளசி மடம் மட்டும் இருக்கிறது.

குளிப்பறையில் பெரிய தண்ணீர் தொட்டி உண்டு. அதன் பக்கச் சுவரில், கிணற்றில் நீரிழுத்து, உள்ளே தொட்டி நிரப்பும்படி விடுவதற்கு ஒரு கோமுகம் போன்ற ‘வாய்’ உண்டு. குளிப்பறையில் சென்று தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு நடையைப் பெருக்கிச் சுத்தம் செய்தாள். அப்போது அவர் கிணற்றில் இருந்து நீரிறைத்து அங்கேயே நீராடலானார்.

“அம்மா, ரூமில் தொட்டில தண்ணீர் இருக்கே?” என்று மெதுவாகச் சமையலறையில் வந்து தெரிவித்தாள்.

அம்மா பேசவில்லை.

அவருக்கு அறுபது வயசுக்கு குறையாது. நல்ல உயரம். குளித்து முடித்து துண்டை உடுத்த கோலத்தில் தம் சட்டை, வேட்டி எல்லாம் சோப்புப் போட்டுத் துவைத்து ஓரமான கொடியில் உலத்தினார். பிறகு, நின்ற கோலத்தில், கண்களை மூடி தியானம் செய்தார். இவள் குளிப்பறை வாயிலிலேயே நின்றாள். முற்றத்துக்கு வராமல் பிறகு தண்ணீரை எடுத்து இரு கைகளாலும் சூரியனை நோக்கிக் காட்டி விழச் செய்தார்...

அம்மா உள்ளே காபி வடிகட்டிக் கொண்டிருந்தார். அய்யாவும் நடை வழியாகப் பின்புறம் சென்ற போது, இவள் கேட்டாள்.

“எதுக்கம்மா அப்படித் தண்ணியை மேலே காட்டி, விடுறாங்க?”

“சூரியனுக்கு அர்க்கியம் விடுவதாகச் சொல்வாங்க. வடக்கே பெண்கள்கூட இதைச் செய்வாங்க. தாயம்மா... சந்நியாசிகள் நெருப்பு மூட்ட மாட்டார்கள். ஏன்னா, அவங்களே நெருப்புன்னு அர்த்தம். அதுக்குத்தான் காவி உடுத்துறாங்க. எல்லா ஆசைகள், பந்தங்கள் பொசுங்கிய நெருப்பு...”

அவள் எதுவும் சொல்லவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. கூடத்தில் வந்து வானொலிச் செய்தியைக் கேட்டார் அவர். அம்மா, பின்பக்கம், அய்யாவிடம், “யாருன்னு தெரியல, இங்க வந்திருக்காரே?” என்று மெதுவாகக் கேட்டார். 

அய்யா, “இப்ப என்ன? பயமாயிருக்கா? என்ன பயம்? நடப்பது நடக்கட்டும், நாம் ஒரு சதியும் பண்ணல...” என்றார். பூடகமாகவே இருந்தது.

“யாருன்னு உங்களுக்கே தெரியலியா?” எந்த பதிலும் வரவில்லை.

“தாயம்மா, அவர் என்ன சாப்பிடுவார்னு தெரியல. கோதுமை வாங்கி வச்சிருக்கு. தட்டிப்புடைச்சிட்டு மிசினில கொண்டு போய் அரைச்சிட்டு வா!” என்றார் அம்மா.

“கேப்பை மா இருக்கில்ல? அதையே ரொட்டியோ, தோசையோ செய்யலாமே?” என்றார் அய்யா.

அப்போதெல்லாம், இப்போது போல் அரசியல் அன்றாட மனிதர் வாழ்க்கையில் மலினப்பட்டு இரைந்து கிடக்கவில்லை என்று தோன்றுகிறது. அவள் கோதுமை அரைத்து வந்தாள். சாமியாரும் அய்யாவும் இந்தியில் பேசிக் கொண்டார்கள். அம்மா ரொட்டி சப்ஜி செய்தார். சோறும் வடித்தார். நடையில் மெத்தைப்படி வளைவில் உள்ள அறை மிகப் பெரியது என்று சொல்லலாம். அங்கே ஒரு பெஞ்சு, அலமாரியில் புத்தகங்கள், கீழே உட்கார்ந்து எழுத படிக்க சாய்வு மேசை எல்லாம் உண்டு. சாமியார் பத்தரை மணிக்கே, ரொட்டியும் சப்ஜியும் சாப்பிட்டு விட்டு அந்த அறைக்குத் தூங்கப்போய்விட்டார்.

மாடிக்குச் செல்ல வெளிப்புறத்தில் ஒரு படி உண்டு. இப்போது அது இல்லை. அய்யா காலமாகு முன்பே, அது பத்திரமில்லை என்பது போல் தகர்த்து, வாசலைப் பூசிவிட்டார்கள்.

சாமியார், தூங்கினார், தூங்கினார், அப்பிடி! உள்ளே தாழ்போடவில்லை. அய்யாதான் பார்த்து விட்டுத் தூங்குவதை அறிந்து ஓசையின்றி வந்து கூடத்துப் பாயில் அமர்ந்தார்.

அந்த நேரத்தில் அநு பரபரப்பாக வந்தாள். அவள் வேலை ஒப்புக் கொண்டபின், இவர்கள் துயரப்பட்டிருந்த காலத்தில்தன் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அடிக்கடி வந்தாள். மகள் போன சோகத்துக்கு, இவள் வந்து பழகியது ஆறுதலாக இருந்தது. குழந்தை நிசா நல்ல அழகு. சுருண்ட முடி. கருவண்டுக் கண்கள். எல்லோரிடமும் மழலை சிந்திப் பழகும். இவள் விரலைப் பற்றிக் கொண்டு “போலாமா?” என்று கேட்கும்.

“நான் கடைக்குப் போறேன், நீ வரியாடா கண்ணு?” என்பாள்.

“தாயம்மா, அவ கடையில் வந்து கண்டதையும் வாங்கிக்குடுன்னு கேப்ப... எங்கும் போவாணாம். உக்காரு. பாட்டிக்கு காக்கா வட கத சொல்லு” என்று அநு பேச்சை மாற்றுவாள்.

ஆனால் அப்போது குழந்தை வரவில்லை... அவள் மட்டுமே வந்திருந்தாள்.

“அப்பா?...” என்றாள்.

“வாம்மா?...”

அவர் அருகில் பாயில் உட்கார்ந்தாள்.

“வெரி ஸாரி அப்பா, எனக்கு வழி தெரியல. அங்கே வந்திட்டார்.” கூடத்துத் தூணில் சாய்ந்தவாறு நின்ற அம்மாவுக்கு அப்போதுதான் புரிந்தது போலும்!

“அநு... உன் சித்தப்பாவா?”

“ஆமாம். சத்தம் போடாதீங்கம்மா. இவர் போலீசுக்குப் பயந்து வந்திருக்கிறார். காலேஜில படிக்கிறபோதே ஆர்.எஸ்.எஸ்.ல சேர்ந்திட்டாரு. எங்க பாட்டி, நினைச்சா கண்ணீர் விடுவா. அப்பவே சந்நியாசம் வாங்கிட்டாங்க. ருஷிகேசத்தில இருந்தார். இப்ப கிளம்பிட்டாரு...”

“ஏம்மா, உன் கல்யாணத்துல வந்திருந்தாரே? டில்லில... ராதா கூட வந்திருந்தா. எல்லாரும் காவி - சந்நியாசின்னா விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணினாங்க...” என்று அய்யா நினைவூட்டினார்.

“அம்மா பேரில தனி விசுவாசம். மாதாஜி, மாதாஜிம்பாரு... பெரியப்பா, அத்தை அவங்க வீட்டுக்கெல்லாம் போக மாட்டாங்க.”

“உங்கம்மாக்கு அந்தக் காலத்து தேசிய ரத்தம்...”

“இப்ப ஒண்ணும் பேச வாணாம்” என்பது போல் அய்யா சாடை காட்டினார்.

“அப்பா, நீங்க மொள்ள எதானும் சொல்லி அனுப்பிச்சிடுங்க. நீங்க என்னதான் அரசியல்லேந்து விலகிட்டாலும், அரசியல்கட்சி, தேசியம்னு ஊறினவர். அடிமரம். பழசு புதுசுன்னு முகத்துல போட்டுக்கலன்னாலும், இந்த நேரத்தில் என்ன நடக்கும், நடக்கிறதுன்னு தெரியாது. உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது அப்பா!”

அவர் கைகளைப் பற்றிக் கொண்டு சொல்லிவிட்டு அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நா வரேம்மா..!” எழுந்து நின்ற அம்மாவைத் தழுவிக் கொண்டாள். தாயம்மாளின் கையைப் பற்றி “வரட்டுமா தாயம்மா” என்று விடை பெற நின்றாள்.

“எதும் சாப்பிடாம போறீங்களே அநும்மா?”

“ரிக்ஷா நிக்குது வாசல்ல, குழந்தைய விட்டுட்டு ஓடி வந்தேன்... நீங்க நல்லா இருக்கணும்... எதும் வரக்கூடாது.”

விடுவிடென்று அவள் வாசலில் சென்று ரிக்‌ஷாவில் அமர்ந்தாள். அய்யாவும் அம்மாவும் பிடித்து வைத்த சிலை போல் அமர்ந்திருந்தார்கள். துயரம் கவ்வியபோது, அச்சம் தெரியவில்லை. இப்போது, இனம்புரியாத கருமை சூழ்ந்தாற்போல் இருக்கிறது.

எத்தனை முறைகள் சிறைக்குப் போயிருக்கிறார்கள்? போலீசே வந்து முன்னெச்சரிக்கை செய்தும் தடைமீறி அச்சமில்லை அச்சமில்லை என்று சிறை சென்றார்கள்.

இப்போது... நேரு மகள் ஆட்சியில்...

அவளுக்குப் புரியவுமில்லை; புரியாமலும் இல்லை. காந்தியைச் சுட்ட கட்சி. ஆனால் அப்போதெல்லாம், இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போதென்ன கெடுபிடி?... இவளுடைய பையன் வீட்டிலும் கூடச் சோதனைகள், அதிரடி நடவடிக்கைகள், சிறை என்று பராபரியாகக் கேள்விப் பட்டிருந்தாள். வானொலி இருபது அம்சத்திட்டப் பாடல்களும் கிளிப் பிள்ளைச் செய்திகளுமாக அவிழ்க்கின்றன. பட்டென்று மூடுகிறாள். அவள் மகன் வீட்டில் சோதனை, காவல், சிறை என்ற செய்தியில்கூட அவளுக்குச் சங்கடம் அழுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் உப்பைத் தின்பவர்கள், தண்ணீர் குடிக்கிறார்கள் என்று பதிவாகி இருக்கிறது. காலையில் நீராடி, சூரியனுக்கு அர்க்கியம் விட்டு... பிராமணர்... பிராமணர்களை அடி உதை என்று கட்சி கட்டிய நாட்களில்கூட, அதற்குச் செயல் வடிவம் வரவில்லை. அந்தப் பகுத்தறிவுப் பெரியாரும், எதிர்துருவமான ராஜாஜியும் இதயம் தொட்ட நண்பர்களாகத்தானே இருந்தார்கள்?... இந்த சந்நியாசி என்ன செய்துவிட முடியும்?

அவர் மாலை ஆறுமணிக்குத்தான் உறங்கி எழுந்து வந்தார். கிணற்றடிக்குச் சென்று தூய்மை செய்து கொண்டு கூடத்துக்கு வந்தார்.

“யார் வந்திருந்தார்...?” என்று அய்யாவிடம் கேட்டார். அங்கே அநு தவறவிட்டிருந்த வெள்ளைக் கைக் குட்டை கிடந்தது.

“நல்லாத் தூங்கிட்டீங்க போலிருக்கு ?”

“ஆமாம். ஒரு வாரமாத் தூங்காத, ஓய்வெடுக்க முடியாத நடை, அலைச்சல். உங்கள் மகள் தவறிவிட்டதைக் கேள்விப்பட்டேன்... அநுதான் சொன்னா. பாத்துட்டுப் போகலான்னு வந்தேன். கன்யாகுமரி போறேன்” என்றார்.

அம்மாவும் அய்யாவும் பேசவில்லை. 

இவள் சமையலறை வாசற்படியில் நின்றாள். அம்மா விளக்கேற்றினார். கீதை தியான சுலோகம் சொன்னார். கண்களை மூடி மவுனப் பிரார்த்தனை செய்தார்கள்.

இரவு கஞ்சி அருந்தும் போது,

“அநு வந்திருந்தாளோ?” என்று கேட்டார்.

இவர்கள் ஏதும் விடையளிக்கு முன் அவரே, “நான், நீங்கள் அங்கே இருப்பீர்கள் என்று போனேன். பிறகுதான் தெரிந்தது. இங்கே வந்தேன். ரெண்டு நாள்... தங்கலாமா?”

“தாராளமா... உங்களை அது கல்யாணத்தில் பார்த்தது.”

“ஆமாம்... அப்ப பங்களாதேஷ்... அது ரொம்ப விவேகமாகச் செய்தா... இப்ப இது விவேகம் இல்ல. பயம்... எல்லாம் பயம், ஆசை, அதீதமான ஆசை; பயம்...”

யாரைச் சொன்னார், எதற்குச் சொன்னார் என்று அவளுக்குப் புரியவில்லை...

“பாவம் அநு. இந்த வயசில் குழந்தையை வச்சிட்டுத் தனியாக...”

“அதென்னமோ, ராதா போனபிறகு, இப்ப இவ வந்து அம்மா, அப்பான்னு பழகுவது மனசுக்கு ஆறுதலாக இருக்கு.”

“அந்தப் பையன் நல்லவன். ஏர்ஃபோர்ஸ் எல்லை, நெருக்கடின்னு வாழ்க்கை. இளவயசுப்பிடிவாதம், வீம்பு. ரெண்டுபேருக்கும் பொருந்தல. அவன் அம்மா அப்பா ரெண்டு பேரும், ருஷிகேசத்திலதான் இருக்கா. இவ டிவேர்ஸ் அது இதுன்னு குழந்தையத் தூக்கிட்டு நாக்பூர் வந்திட்டா. எனக்கு இப்ப அவகிட்ட இதெல்லாம் பேச சந்தர்ப்பம் இல்ல. இங்க இருக்கட்டும். பத்திரம்தான்...”

யாருமே பேசவில்லை...

அந்த நெருக்கடி காலத்தின் ஒரு முகத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறாள்.

இரவு முழுவதும் துணுக்குத் துணுக்காக நினைவுகள், மயக்கமா, கனவா என்று புலராத காட்சிகள்.

ராதாம்மா பம்பாயில் ஸ்டேஷசனில் வாங்கிக் கொடுத்ததாகக் குழந்தை விக்ரம் ஒரு பூதக்கண்ணாடி கொண்டு வந்திருக்கிறான். அந்தக் குழாயில் பொருந்திய கண்ணாடியில் கண்ணை வைத்துத் திருப்பிக் கொண்டே இருந்தால், அழகழகாக, புதிசு புதிசாக கோல மாதிரிகள் வருகின்றன. வண்ண வண்ணக் கோலங்கள்.

“பாட்டி, பயாஸ்கோப் பாக்குறீங்களா ?...” அவள் கண்களில் பொருத்தி, குழந்தையே திரும்புகிறான்.

தொடர்ச்சியாகத் தெரியவில்லை. பையனில்லை. அவளே வைத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுகிறாள். குரு குலக்குடிலில், அது இருக்கிறது. அவள் பிள்ளை... படிப்பவன், “அக்கா, சோறு வை!” என்று வருகிறான்... பஞ்சமி தான் தையல் இலை போட்டு, பொங்கல் போன்ற சோற்றை வைக்கிறாள். அவன் எழுந்து காலால் இடறுகிறான்.

“இது என்ன சோறு? ஒரு முட்டை கிட்டை பொரிச்சு வய்க்கிறதில்ல? மனசுக்குள்ள பாப்பாரசாதின்னு நினப்போ? ஆதிக்க சாதி - திராவிடக் குடிமக்களை மிதித்துக் கொக்கரிக்கும் சாதி...” என்று அந்தக் குழாயைத் துாக்கி எறிகிறான். அது உடைந்து சிறுசிறுவெனும் கண்ணாடித் துண்டுகளாகச் சிதறுகிறது.

“அய்யோ...” என்று கண்விழிக்கிறாள்.

சட்டென்று எழுந்து உட்காருகிறாள்.

கனவா... கனவு...? பஞ்சமி இல்லை. ராதாம்மா இல்லை, குடில்வாழ்வு எதுவுமில்லை. அந்தக் குழாய் கண்ணாடி, குழந்தை வைத்து விளையாடியது உண்மை. அது கீழே விழுந்து உடையவில்லை. விக்ரமே காகிதங்களை உரித்து, கண்ணாடியை வெளிப்படுத்திவிட்டான். பிறகு பொருத்த முடியவில்லை. வெறும் கண்ணாடித் துண்டுகள்.

குழந்தை விளையாட்டுத் தனமாக அந்தப் பொருளை வீணாக்கிவிட்டு மறுபடியும் பொருத்த முடியாமல் அழுதான்.

“வேறு வாங்கிக் கொடுக்கிறேன்...” என்று சமாதானம் சொன்னார்கள்.

குழந்தை விளைவு தெரியாமல் விளையாடியது.

நல்லதொரு கோலம் காட்டிய பொருள் அழிந்தது.

குழந்தை அந்த ஒட்டுக்காகிதங்களை விளையாட்டாகப் பிரித்தது. இப்போது இவர்களும் அதே போன்ற விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களா? இந்திரா அம்மை அஞ்சிக் கரித்துக் கொட்டி சிறையில் தள்ளியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் என்னென்னமோ நடக்கிறது. கண்ணாடித் துண்டுகள் சிதறி விழுந்தாற் போல், அத்தனை வண்ணங்களும் இந்த தேச மக்களை, வாழ்க்கையை பொய், கபடு, சூது, வன்முறை இரத்தக்கறை என்றாக்கிவிட்டு அழிந்துவிட்டன.

அவள் இப்போது என்ன செய்ய வேண்டும்? குருகுலத்தில் அவர்கள் காட்டும் மூலையில் குடிபெயர வேண்டுமா? சந்திரி கூப்பிட்டதை ஏற்று, நீரடித்து நீர் விலகாது என்பதை நிரூபிக்க வேண்டுமா?...

ஒன்றும் புரியவில்லை. அந்தக் காலத்தில் தேசாந்தரம் போவது என்பார்கள். எல்லாவற்றையும் துறந்து காசிக்கு நடந்தே போனார்களாம்! கேதர்நாதம், பத்ரிநாதம் என்று போவார்கள், திரும்பி வரமாட்டார்கள் என்பார்கள். ஏன்? இந்த அய்யப்பர்கள் கறுப்பைக் கட்டிக் கொண்டு தொண்டை கிழிய காது செவிடு படச் சரணம் கூவுகிறார்கள். கோயிலுக்குப் புறப்படுமுன் வாய்க் கரிசி போடுகிறார்கள்... காரணம் அவ்வளவு அபாயங்களையும் கடந்து போகிறவர்கள் திரும்பி வரமாட்டார்கள்...

காலையில் இவள் வாசல் தெளிக்கும் போது, மாலை போட்ட பக்தர்கள் சுமையுடன் கிளம்பிவிட்டார்கள். கண் எரிச்சல் தீர இவள் நீராடுகிறாள். அடுப்பு மூட்டவோ சமைத்துச் சாப்பிடவோ மனமில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். ரங்கனிடம் பூட்டுக்கு வேறு சாவி உண்டு.

அவள் எங்கே போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், பெரிய சாலையில் நடந்து, போகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/20&oldid=1022832" இலிருந்து மீள்விக்கப்பட்டது