சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/8

விக்கிமூலம் இலிருந்து



[8]

சங்ககிரி மலை ஏற ஏற்பாடு!

இரவு படுக்கப்போகு முன்பு மூவரும் அன்றைய நிகழ்ச்சிகளைப் பற்றிக் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். குகையின் ரகசியப் பாதை எங்கு முடிகின்றதென்பதை முன்னதாகவே அறிந்து கொண்டது நல்லது என்றும் நினைத்தார்கள்.

மறுநாள் அதிகாலையிலேயே சங்ககிரி மலைமேல் ஏறிப் பார்க்க முடிவு செய்தார்கள். அதற்கு வேண்டியவாறு தங்களுக்கு உண்டி வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்படி கண்ணுப் பாட்டியிடம் கேட்டுக் கொண்டார்கள்.

“பாட்டி, காலை உணவை இங்கேயே முடித்துக்கொண்டு புறப்படுகிறோம். அதனால் மத்தியான உணவை மட்டும் செய்து கொடுங்கள்” என்று தங்கமணி கூறினான்.

“உங்களுக்குச் சிரமம் வேண்டாம் பாட்டி, நானும் சமையல் வேலையில் உங்களுக்கு உதவுகிறேன்” என்று கண்ணகி உற்சாகமாக முன் வந்தாள்.

“சரி, இனி எல்லாம் உப்புமயமாக இருக்கும் - கண்ணகி கை வைத்தால் அவ்வளவுதான்” என்றான் சுந்தரம்.

கண்ணுப் பாட்டி சிரித்தாள், “கண்ணகி கை வைத்தால் எல்லாம் கல்கண்டாக இருக்கும். நாளைக்குப் பாருங்கள்.” என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“நானும் காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன்” என்றான் தங்கமணி.

“உங்களுக்கு சிரமமே வேண்டாம். நானே எல்லாம் செய்கிறேன், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம்” என்று அடுக்கிக் கொண்டே போனாள் கண்ணுப்பாட்டி.

“ஜின்காவுக்கு வடை, வாழைப்பழம்” என்றான் சுந்தரம்.

இந்தக் கோமாளிக்குத்தான் வடையும் வாழைப்பழமும் - ஜின்காவின் பேரைச் சொல்லி இவன் சாப்பிடுவான்” என்று கண்ணகி கேலி செய்தாள்.

சுந்தரம் சிரித்துக் கொண்டான். பதில் பேசவில்லை.

“பாட்டி, அந்த வண்டிக்காரன் எங்களோடு வரவேண்டாம். நாங்கள் தனியாகவே எல்லாம் பார்த்து வருகிறோம்” என்று தங்கமணி கேட்டுக் கொண்டான்.

காலையில் இட்லி, தோசை, அடை எல்லாம் பாட்டி தயார் செய்து வைத்திருந்தாள். சாப்பிட்டதும் மலைக்குப் புறப்பட்டார்கள். வண்டிக்காரன், “நானும் வந்தால் உணவு மூட்டையை எடுத்துக் கொள்ள வசதியாக இருக்குமே” என்று, தலையைச் சொரிந்தான். இன்றும் நல்ல உணவு வகைகள் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்த்தானோ என்னவோ?

“இல்லை, அவர்களே போய்ப் பார்த்து வரட்டும். நீ வேண்டுமானால் தனியாக ஒரு நாளைக்குப் போய் வரலாம்” என்று கண்ணுப்பாட்டி கண்டிப்பாகக் கூறிவிட்டாள். அது அவனுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.