சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/7

விக்கிமூலம் இலிருந்து

[7]

காட்டு மாரியம்மன் கோயில்!

அடுத்த நாள் மாலையில் வெய்யில் சற்றுக் குறைந்ததும் காட்டு மாரியம்மன் கோவிலைப் பார்ப்பதென்று ஏற்பாடாயிற்று.

அதன்படி மறுநாள் மாலை மூன்று மணிக்கே கிளம்பி விட்டார்கள். “சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறோம். அங்கே சுத்தமான தண்ணிர் கிடைக்குமா?” என்று தங்கமணி பாட்டியிடம் கேட்டான்.

“அங்கே நல்ல ஒடை ஒன்று ஒடுகிறது. அதில் ஒடும் தண்ணிரைக் குடிப்பதால் கெடுதல் வராது” என்ருள் பாட்டி.

சிற்றுண்டி டப்பாக்களை ஒரு துணியில் வைத்துக் கட்டினார்கள். “அதை நான் சுமந்துகொண்டு வருகிறேன். எனக்

19 கும் அந்தக் காட்டு மாரியம்மன் கோயிலைக் காண ஆசையாக, இருக்கிறது” என்றான் வண்டிக்காரன்.

அதுவும் நல்லதுதான் என்று நால்வரும் புறப்பட்டனர். ஜின்கா கொஞ்ச தூரத்திற்குத் தங்கமணியின் தோளின்மீது அமர்ந்து சென்றது. பிறகு காட்டுத் தடம் வரவே மரங்களில் தாவித்தாவி அது முன்னால் போகலாயிற்று.

சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து காட்டு மாரியம்மன் கோயிலை அவர்கள் அடைத்தனர். “முதலில் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விடுங்கள்” என்றான் வண்டிக்காரன், அவனுக்குப் பசி எடுத்துவிட்டது போலும். மேலும் பாட்டி வீட்டுப் பலகாரங்கள் அவனுக்கு எப்பொழுதும் கிடைக்காதல்லவா?

பாட்டி கோதுமை ஹல்வா அவர்களுக்கென்று ஸ்பெஷலாகச் செய்து வைத்திருந்தாள், அத்துடன் முறுக்கு, வடை எல்லாம் இருந்தன.

ஜின்காவுக்கு ஹல்வா பிடிக்கவில்லை. ஆனால் வடையை வாயில் போட்டுக் குதப்பிக் குதப்பி நன்றாகச் சாப்பிட்டது.

வண்டிக்காரன் பாடுதான் கொண்டாட்டம். மற்ற மூவரும் அவசரம் அவசரமாக ஏதோ சாப்பிட்டார்கள். மீதி இருந்ததையெல்லாம் அவன் ஒரு கை பார்த்துவிட்டான்!

“பாவம், அவனாவது நன்றாகச் சாப்பிடட்டும்” என்று கண்ணகி அவனுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

ஓடையில் தண்ணீர் அருந்திவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தார்கள்.

அங்கிருந்த பூசாரி இவர்களையெல்லாம் உற்சாகமாக வரவேற்றான். அம்மனுக்குப் பூஜை செய்துவிட்டுப் பிரசாதம் வழங்கினான். அதற்குமேல் அவன் அந்தக் காட்டு மாரியம்மன் கோயில் ரகசியத்தைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்தான்.
"அம்மனுக்குப் பின்னலே சுரங்கப் படிகள் இருக்கின்றன. அவை எங்கு போகின்றனவென்று யாருக்குமே தெரியாது. ஆனால் திப்புசுல்தான் கோட்டையில் உள்ள குகைக்கும் இதற்கும் வழியுண்டு என்று எங்கள் பாட்டனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றான் பூசாரி.

“நான் அங்கே இறங்கிப் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான் தங்கமணி.

“ஐயோ வேண்டாம். அதற்குள்ளே கருவண்டுகள், பாம்புகள் எல்லாம் உண்டு” என்று பூசாரி சட்டென்று பதில் சொன்னான்.

“இந்தச் சுரங்க வழியில் தான் எங்கேயோ திப்புசுல்தான் புதையல் இருக்கிறதாமே?” என்று மேலும் கேட்டான் தங்கமணி.

“ஆமாம் - அதெல்லாம் ரொம்ப ரகசியம். காட்டு மாரியம்மன் அதற்குக் காவல் தெய்வம். அதனாலேதான் இந்த தேவதை சக்தியுள்ள தெய்வமாக இருக்கிறது” என்றான் பூசாரி.

பூசாரிக்கு அவன் எதிர்பார்த்ததற்கு மேல் தட்சிணை கொடுத்துவிட்டு எல்லாரும் பாட்டி வீட்டை நோக்கித் திரும்பினர்கள். ஜின்கா பூசாரி கொடுத்த வாழைப்பழத்தை இரண்டு கன்னத்திலும் அடக்கிக் கொண்டு புறப்பட்டது. பழம் கிடைத்ததுபற்றி அதற்கு அளவில்லாத மகிழ்ச்சி.

வரும்போதே இருட்டி விட்டது. நல்ல வேளை, சுந்தரம் தன்னுடைய டார்ச் விளக்கைக் கொண்டு வந்திருந்தான்.