சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/6

விக்கிமூலம் இலிருந்து

[6]

கலந்துரையாடல்!

“மலைமேல் ஏறுவதற்கு முன்னால் சங்ககிரியைச் சுற்றி ஆராய்வது நல்லது” என்று தங்கமணி ஒரு நாள் இரவு மற்றவர்களிடம் சொன்னான். “ஏன்? குகையின் ரகசியப் பாதையைப் பற்றி முதலில் தெரிய வேணுமோ?” என்று கேட்டான் சுந்தரம்.

“எனக்கென்னவோ அப்படி ஒரு ரகசியப் பாதை இருக்குமென்றே தோன்றவில்லை. இருந்தாலும் சுற்றிப்பார்ப்பது நல்லது” என்றான் தங்கமணி.

“சரி, ஷெர்லக் ஹோம்ஸ் வார்த்தைக்கு அப்பீல் இல்லை. நீ பிடித்தால் ஜின்கா பிடிதானே” என்றான் சுந்தரம்.

“என்னடா, குரங்குப் பிடி என்ற சொல்கிறாய்?” என்று கோபித்துக் கொண்டாள் கண்ணகி.

“அம்மா, கண்ணகி உனக்குக் கோபம் வந்தால் உலகமே தீப்பட்டு அழிந்து போகுமே - கொஞ்சம் கோபத்தைத் தணித்துக் கொள்” என்று கூறி நகைத்தான் சுந்தரம்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ரசித்துக் கொண்டே கண்ணுப்பாட்டி அவர்களிடம் வந்தாள்.

“நாளைக்கு கிரிவலம் வரப் போகிறோம்” என்று முந்திக் கொண்டான் சுந்தரம்.

“அப்படியா? சங்ககிரி மலையைச் சுற்றி வருவதென்றால் ரொம்ப தூரம் நடக்க வேண்டுமே - வழியும் சரியாக இராது வேண்டுமானால் காட்டு மாரியம்மன் கோயில்வரை போய் வரலாம்” என்றாள் பாட்டி.

“காட்டு மாரியம்மனா? அங்கே ஏதாவது விசேஷம் உண்டா?” என்று ஆவலோடு கேட்டான் தங்கமணி.

“அந்தக் கோயிலைப் பற்றி என்ன வெல்லாமோ சொல்லுவார்கள். அதற்குள்ளே ஒரு குகை இருக்கிறதாம். அந்தக் குகைக்கும் சங்ககிரி மலைமேலுள்ள குகைக்கும் வழி இருக்கிறதாம். ஆனால் இதை யெல்லாம் யாரும் பார்த்ததில்லை” என்றாள் பாட்டி. உடனே தங்கமணிக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. “கண்னுப்பாட்டி, நாளைக்கே அந்தக் கோயிலைப் பார்க்கவேனும்” என்று தங்கமணி உற்சாகத்தோடு சொன்ஞன்.

“ஆமாம் பாட்டி நாங்கள் மூன்று பேரும் போகவேனும்” என்று கூவினாள் கண்ணகி.

“ஜின்காவை மறந்துவிட்டாயா? அது இல்லாமல் உன் அண்ணன் அசையமாட்டானே?” என்றான் சுந்தரம்.

“சரிதாண்டா, கோமாளி, அண்ணன் வந்தால் . . . .” என்று அவள் முடிப்பதற்கு முன்பே “தம்பியும் வரும்” என்று நகைத்தான் சுந்தரம்.