சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/5

விக்கிமூலம் இலிருந்து

[5]

திப்புசுல்தான் கோட்டை!

திப்புசுல்தான் கோட்டை என்பது திப்புவின் காலத்தில் கட்டியது. கோட்டையின் மதில் சுவர்களை இன்றும் போய்ப் பார்க்கலாம். அந்த மலையில் எந்தெந்த இடத்தில் பகைவர்கள் சுலபமாக ஏற முடியுமோ அங்கெல்லாம் பெரிய பெரிய மதில் சுவர்களை திப்புசுல்தான் கட்டி வைத்திருந்தான். பெரிய பெரிய கல்லுகளையெல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்து அந்தக் கோட்டைச்சுவர்களைக் கட்டியதே ஓர் ஆச்சரியமாக இருக்கும். மேலே பீரங்கி வைத்துச் சுடும் படியான கொத்தளங்களும் உண்டு. ஆரஞ்சுப் பழம் அளவில் உள்ள பீரங்கிக் குண்டுகளை இன்றுகூட அங்கே காணலாம். மேலே தானியக் கிடங்குகளும் பகைவர்களை அடைத்து வைக்கும் இருட்டறைகளும் இருக்கின்றன. உச்சி வரையிலும் போவதற்கு வேண்டியவாறு அங்கங்கே படிகள் இருக்கின்றன. மலை ஏறும்போது பாதி வழியில் ஒரு பெரிய குகை உண்டு. அதற்குள் யாருமே போகப்பயப்படு வார்கள். உள்ளே ஒரே இருட்டாக இருப்பதோடு பெரிய பெரிய கருவண்டுகள் இருக்குமாம். அவை கொட்டினால் உயிருக்கே ஆபத்தாம். அந்தக் குகை எங்கு போய் முடிகின்றது என்பதை யாரும் இதுவரை ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் அது வெகு தாரம் செல்லுகின்றதாம். பகைவர்கள் கோட்டையைத் தாக்கும் போது அவர்கள் வெற்றிபெற்று விடுவார்கள் என்று தோன்றினால் திப்புசுல்தானோ அல்லது அவனுடைய முக்கியமான தளபதிகளோ அந்தக் குகை வழியாக வெளியே தப்பிச் சென்று விடுவார்களாம். அந்தக் குகைக்குள்ளேதான் திப்புசுல்தான் ஏராளமான தங்கக் காசுகளையும் நகைகளையும் மறைத்து வைத்திருப்பதாக எல்லாரும் பேசிக் கொள்வார்கள். அந்தப் பக்கத்தில் யாராவது எதிர்த்து வந்தால் அவர்களோடு போர் செய்ய வீரர்களைத் திரட்டப் பணம் வேண்டுமல்லவா? அதற்காக சுல்தான் முன் ஜாக்கிரதையாக அங்கே வைத்திருக்கிறானாம்.. ஆனால் திப்புசுல்தான் மைசூரிலிருக்கும் ஸ்ரீரங்கபட்டணத்திலே ஆங்கிலேயர்களோடு சண்டையிட்டு அதிலே இறந்து! போன பிறகு இந்தக் கோட்டைக்கு இருந்த பெருமை யெல்லாம் போய் விட்டது. அவன் மறைத்து வைத்திருந்த புதையலைக் கண்டுபிடிக்க எத்தனையோபேர் முயற்சி செய்தும் யாருக்கும் அது கிடைக்கவில்லை.

இந்த விவரங்களையெல்லாம் ஒன்று விடாமல் தங்கமணி தன் நாட் குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டான். இவற்றைச் சேகரிக்கப் பலபேரிடமிருந்து அவன் கேட்கும் போது ஏதோ துப்பறியும் நிபுணனைப் போல ஜின்கா பக்கத்திலிருந்து கவனமாகக் கேட்கும். தங்கமணியின் முகத்தையும் அவனோடு பேசியவர்களுடைய முகத்தையும் மாறிமாறி அது
உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தது. அப்படி அது பார்ப்பதைத் தங்கமணி மனத்திற்குள்ளாகவே நன்கு ரசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த வண்டிக்காரனும் எப்படியாவது கூடவே இருந்து இவற்றையெல்லாம் கேட்பதைத்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு இதில் ஏன் இவ்வளவு அக்கறை? ஒரு சமயம் கிராமப்புற மக்கள் இப்படித்தான் இருப்பார்களோ?

“வண்டிக்காரா, நீ போய் உன் வேலையைக் கவனி” என்று தங்கமணி ஒரு சமயம் சொன்னான்.

“எனக்கு இன்றைக்கு வேலையில்லை - எனக்கும் கதை கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது” என்று அந்த வண்டிக்காரன் பணிவோடும் கெஞ்சுவது போலவும் பதில் அளித்தான்.

“ஏன், நீ இந்த ஊருக்குப் புதிதா? இந்த ஊர்க்காரனாக இருந்தால் முன்பே இந்த விவரமெல்லாம் தெரிந்திருக்குமே?” என்று தங்கமணி திடீரென்று கேட்டான்.

வண்டிக்காரன் பதில் சொல்வதற்கு முன்னால் யாரோ ஒருவன் “ஆமாம், அவன் புதியவன்தான். இந்தப் பக்கத்து ஆளே இல்லை. கொஞ்ச நாளுக்கு முன்புதான் இங்கு வேலைக்கு வந்திருக்கின்றான். கதை கேட்பதிலே அவனுக்கு ரொம்ப ஆசை. எல்லாருக்கும் அப்படித்தான்” என்று தெரிவித்தான்.