சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/16

விக்கிமூலம் இலிருந்து



[16]

நன்கே முடிந்தது!

“அந்த இரண்டு இளைஞர்களும், பெண்ணும் எங்கே?” என்று சப்-இன்ஸ்பெக்டர் அதட்டிக் கேட்டார். அந்த நால்வரும் திருதிரு என்று விழித்துக் கொண்டு தங்களுக்கு அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சாதித்தார்கள். ஒருவருமே உண்மையைச் சொல்லவில்லை. ஆனால் ஜின்கா இருட்டறைச் சிறைக்கூடம் இருக்குமிடத்தையும் அதற்குள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பலவிதமான சத்தங்களைச் செய்து போலீஸ்காரர்களுக்கு உணர்த்திவிட்டது. உடனே போலீஸ்காரர்கள் சிறைக்கூடத்தின் மேலே இருந்த மூடியைத் தூக்கினார்கள். உள்ளே எந்த விதமான சத்தமும் கேட்கவில்லை. ஆனால் ஜின்கா உள்ளே குனிந்து பார்த்து அவர்கள் இங்கு இருப்பதாகத் தெரியப்படுத்தியது. சப்-இன்ஸ்பெக்டர் தாம் கொண்டு வந்திருந்த டார்ச் விளக்கை உள்ளே செலுத்திப் பார்த்தார். மூவரும் உயிரே இல்லாதது போலப் படுத்துக் கிடந்தார்கள். நல்ல வேளையாக நூல் ஏணி கொண்டுவரும்படி தங்கமணி எழுதியிருந்தான். உள்ளேயிருந்த ஒரு கொக்கியில் மாட்டி போலீஸ் ஜவான் ஒருவன் உள்ளே வேகமாக இறங்கினான். மூவரையும் ஒவ்வொருவராக மேலே கொண்டு வந்து மற்ற போலீஸ்காரர்கள் வசம் கொடுத்தான்.

உள்ளே நல்ல காற்று இல்லாததால் அவர்கள் மயங்கிக் கிடந்தார்கள். வெளியில் கொண்டு வந்து அவர்களைப் போட்டுவிட்டுப் பக்கத்திலிருந்த சுனையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தார்கள். இவ்வாறு முதலுதவி செய்ததால் அவர்கள் மூவரும் உயிர் பிழைத்தார்கள்.