உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

69

யாலான விபூதி மடல் வைத்துக் கொள்ளவும், பழனிக்குச் சென்று மூன்று பண்டாரத்துக்குச் சோறிடுவதற்குப் பதில், பழனி கோயில் படிக்கட்டுக்குத் தங்கத்தகடு அடிக்கவும், ஆக இவ்விதமாகவேதான், தனது பக்தியைப் பிரகாசிக்கச் செய்கிறான்.

இந்தத் தனி மனிதனின் சுபாவந்தான். நாட்டுக்கும் சுபாவமாகிறது.

இம்முறையிலே ஆதிநாட்களிலே, 'கண்ணப்ப நாயனார்' கதையில் கூறப்படுவது போல, காட்டு மலரையும் வேகவைத்த இறைச்சியையும் படைத்த பக்தன் பிறகு, பொன்னையும் மணியையும் பூஜைச் சமான்களாக்கினான்.

பல நாடுகளிலே, காணிக்கைகளைக் குவிக்கும் சுபாவம், பரவி, கோயில்கள் அரசர்களின் வீடுகளை விட அதிகமான செல்வத்தின் இருப்பிடங்களாயின.

அறிவுத் தெளிவும் அதன் பயனாக ஆண்டவனைப் பற்றிய தெளிவும் ஏற்பட்ட பிறகே உலகிலே, பலநாடுகளில், இப்படிப் பொருளை முடக்கி வைப்பது, ஏழையை உயர்த்தி வாழ்வை வளமாக்குவதற்குப் பயன்படக்கூடிய பொருளை வீணாக, கிரீடமாகவும், பதக்கமாகவும், கவசமாகவும், வட்டிலாகவும். பாதக்குறடாகவும், பல்லக்காகவும், நாக ரூபத்திலும் தேருருவிலும் முடமாக்கி வைப்பது பக்திக்கோ, பரமனின் பெருமையைப் பாரறியச் செய்வதற்கோ, பாமரரின் வாழ்வை வளமாக்குவதற்கோ, பயன்படுவதல்ல, எனவே, இந்த வீண் வேலையை நிறுத்திவிட வேண்டும், இந்தப் பொருள்களை பள்ளிக்கூடங்களாக , வைத்திய சாலைகளாக, ஏழை விடுதிகளாக இல்லாமை நோய்க்கு மருந்திடும் இதமபுரிச்சாலைகளாக மாற்றி அமைக்க வேண்டும், என்ற மாண்பு ஏற்பட்டது.

பற்பல நாடுகளிலும் வேக வேகமாக இந்தப் பண்பு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/70&oldid=1700713" இலிருந்து மீள்விக்கப்பட்டது