பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

முதற் குலோத்துங்க சோழன்

திருமஞ்சனக்குளம், கன்றுமேய்பாழ், சுடுகாட்டுக்குப் போகும் வழி, மனை, மனைப்படப்பை, கடை, கடைத் தெரு, மன்று, கிடங்கு, புற்று, காடு, உவர், ஆறு, ஆறிடு படுகை, உடைப்பு, மீன்பயில்பள்ளம், தேன்பயில் பொதும்பு என்பனவாம். வரி விதிக்கப்பெறாத மேலே குறித்துள்ள இடங்களை ஆராயுங்கால், அந்நாளில் விளை நிலங்களுக்கு மாத்திரம் நிலவரி வாங்கப்பெற்று வந்ததேயன்றி மற்றை நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை என்பது நன்கு அறியக்கிடக்கின்றது.

நம் குலோத்துங்கன் தன் நாட்டிலுள்ள குடிகளது உழவுத்தொழில் வளர்ச்சியுறுமாறு ஆங்காங்குப் பல ஏரிகளையும் குளங்களையும் வெட்டுவித்தான் ; காடுகளை யழிப்பித்து மக்கள் வாழ்தற்கேற்ற பல ஊர்களும் நகரங்களும் அமைத்தான்; மக்களது தெய்வபக்தி ஓங்குமாறு ஊர்கள் தோறும் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் பல புதிய கோயில்கள் எடுப்பித்ததோடு அவற்றின் பூசை, திருவிழா முதலியவற்றிற்கு நிபந்தங்களும் விட்டான் ; அன்றியும் நகரங்களிலுள்ள பழைய செங்கற் கோயில்களை இடித்து அவற்றைக் கற்றளிகளாக எடுப்பித்தான். இங்ஙனம் இவனது ஆட்சிக்காலத்தில் மக்கட்குண்டான நன்மைகள் பலவாகும்; விரிப்பிற் பெருகும்.

இக்குலோத்துங்கனது ஆட்சியின் 50-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள், திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலுள்ள காமரச வல்லியிலும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடித் தாலூகா-


5. The Historical Sketches of Ancient Dekhan pages.
358 & 359.